என் மலர்tooltip icon

    கடலூர்

    • மூதாட்டியிடம் கொடுத்து வீட்டை சரி செய்து கொள்ளுமாறும், அரிசி உள்ளிட்ட மளிகை ஜாமான்களை வாங்கி கொள்ளுமாறும் கூறினார்.
    • சம்பவ இடத்திற்கு வராத கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய திட்டக்குடி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி ஊராட்சியில் உள்ள கொட்டாரம் போத்திரமங்கலத்தில் உள்ள பொது மக்களின் குறைகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் கேட்டறிந்தார்.

    அப்போது கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியால் தனது வீடு பாதிக்கப்படுவதாக கொளஞ்சி என்ற மூதாட்டி அமைச்சரிடம் அழுத படி முறையிட்டார். அவரை அழைத்து கண்களை துடைத்து விட்டு, அழ வேண்டாமென கூறிய அமைச்சர், அதிகாரிகளை அழைத்து இந்த இடத்தை முறையான அளவீடு செய்து, பின்னர் கழிவுநீர் வாய்க்கால் கட்டுமாறு உத்தரவிட்டார்.

    மேலும் அதே பகுதியில் வைரம் என்ற மூதாட்டியின் ஓட்டு வீடு முற்றிலும் சேதமானதை கண்ட அமைச்சர், உடனடியாக ரூ.50 ஆயிரம் பணத்தை மூதாட்டியிடம் கொடுத்து வீட்டை சரி செய்து கொள்ளுமாறும், அரிசி உள்ளிட்ட மளிகை ஜாமான்களை வாங்கி கொள்ளுமாறும் கூறினார். பொதுமக்கள் கூறிய புகார்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு நேரில் வரவழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சம்பவ இடத்திற்கு வராத கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய திட்டக்குடி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் பட்டூர் அமரலிங்கம், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு ஆகியோர் உடனிருந்தனர்.

    • குழந்தை ரக்சின் வேனின் முன் சக்கரத்தில் சிக்கிக்கொண்டான்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் இருந்து தனியார் பள்ளி வேன் ஒன்று இன்று காலை மாம்பட்டு கிராமத்துக்கு சென்றது. வேனை மாம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்த கயலங்குமார் (வயது 35) என்பவர் ஒட்டி வந்தார்.

    மேல் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் என்ற சவுந்தர்ராஜன். முந்திரி வியாபாரி. இவர் வீட்டின் முன்பு வேன் நின்றது. முந்திரி வியாபாரியின் மனைவி வசந்தி யு.கே.ஜி. படிக்கும் தனது மூத்த மகன் ரவிக்குமாரை வேனில் பத்திரமாக ஏற்றினார். ரவிக்குமார் ஏறியவுடன் பள்ளி வேன் அங்கிருந்து புறப்பட்டது.

    அப்போது எதிர்பாராத விதமாக தாயாரோடு அங்கு நின்று கொண்டிருந்த 2-வது மகன் ஒன்றரை வயது குழந்தை ரக்சின் வேனின் முன் சக்கரத்தில் சிக்கிக்கொண்டான். இதில் படுகாயமடைந்த சிறுவன் ரக்க்ஷினை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தன் கண்முன்னே உடல் நசுங்கி பலியான குழந்தையை பார்த்து தாய் கதறி அழுத காட்சி அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
    • உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம் பட்டினம், தாழங்குடா, அக்கரைகோரி உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிரா மங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

    இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி பரபரப்பாக காணப்பட்டு வரும். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியா பாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்படும்.

    அதன்படி ஞாயிற்றுக் கிழமையான இன்று அதிகாலை முதலே துறைமுகத்தில் மீன் விற்பனை தொடங்கியது. வழக்கமாக 250 ரூபாய்க்கு விற்கப்படும் சங்கரா மீன் இன்று 450 ரூபாய்க்கும், சீலா மீன் 400 ரூபாய்க்கும், பாறை மீன் 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைக்கும், வஞ்சிரம் மீன் 800 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்கப்படும் கானாங்கத்தை கிலோ 200 ரூபாய்க்கும், 150 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படும் நெத்திலி மீன் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீன் விலை அதிகரித்து காணப்பட்டாலும் விலை யை பொருட்படுத்தாமல் வியாபாரிகளும், பொது மக்களும் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.

    • முதலமைச்சர் வெளிநாடு பயணம் முடிந்து தமிழகத்திற்கு வந்த பிறகு எங்களுக்கான பதில் கிடைக்கும் என நம்புகிறோம்.
    • தேர்தல் தொடர்பாக எந்த முடிவு எடுக்க வேண்டுமானாலும் பொதுக்குழு மற்றும் முக்கிய நிர்வாகிகளை கலந்தாலோசித்து முடிவுகள் வெளியிடப்படும்.

    கடலூர்:

    கடலூர் நீதிமன்றத்தில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று காலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நேரில் ஆஜரானார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு கூட்டணி கட்சி தலைமையுடன் சேர்ந்து வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடுவோம். கடலூர் நாடாளுமன்ற தொகுதியை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

    முதலமைச்சர் வெளிநாடு பயணம் முடிந்து தமிழகத்திற்கு வந்த பிறகு எங்களுக்கான பதில் கிடைக்கும் என நம்புகிறோம். மேலும் சட்டமன்றத்தில் எங்கள் கட்சியின் குரலாக எனது குரல் ஒலித்து வரும் நிலையில், பாராளுமன்றத்திலும் எங்கள் கட்சி குரல் ஒளிரட்டும் என்ற அடிப்படையில் வாய்ப்பு கேட்டுள்ளோம். அது கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    தற்போது தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த குழுவில் கலந்து பேசுவோம். இந்தியா கூட்டணியில் இருந்து தற்போது நிதீஷ் குமார் வெளியேறி உள்ளார். ஆனால் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வரும் வரை அரசியலில் எது வேண்டுமானால் நடக்கலாம்.

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பன்முகத் தன்மையாக உள்ள சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு ஆபத்து ஏற்படும் என தொடர்ந்து வலுவான கருத்து வந்து கொண்டிருக்கிறது.

    மேலும் சர்வாதிகாரம் நோக்கி பா.ஜ.க. இந்தியாவை அழைத்து செல்கிறது என குற்றச்சாட்டு உள்ளது. பா.ஜ.க. அரசு பல்வேறு நடவடிக்கையை சர்வாதிகாரம் மூலம் எடுத்து வருகிறது.

    பன்முக தன்மை கொண்ட இந்தியாவை ஒரு மதத்தின் அடையாளத்தின் கீழும், ஒற்றை மொழியான இந்தி ஆட்சியின் கீழும் வரவேண்டும் என பா.ஜ.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக வருமானவரித்துறை அதிகாரிக்கு இந்தி தெரியாது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட காரணத்தினால் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    மேலும் விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி.க்கு இந்தி தெரியாது என கூறியதால் வட மாநிலத்தினர்கள் விமர்சித்து உள்ளனர். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகத்தில் தமிழ் அலுவல் மொழி இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உள்ளது. வேறு எந்த கட்சியுடன் கூட்டணி பேசவில்லை. தேர்தல் தொடர்பாக எந்த முடிவு எடுக்க வேண்டுமானாலும் பொதுக்குழு மற்றும் முக்கிய நிர்வாகிகளை கலந்தாலோசித்து முடிவுகள் வெளியிடப்படும். ஆனால் தற்போது வரை தி.மு.க.வின் தலைமையின் கீழ் வெற்றி கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளது.

    இவ்வாறு கூறினர்.

    அப்போது அமைப்புக்குழு கண்ணன், ஆனந்த், மாவட்ட செயலாளர் லெனின், கவுன்சிலர் அருள் பாபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

    • டாக்டர் நெய்வேலியில் தங்கி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவமனையில் பணிபுரிவதாக தெரிவித்தார்.
    • ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர், உங்கள் பணிக்கான நேரம் என்ன, உங்கள் வீடு எங்கே உள்ளது என்றார்.

    விருத்தாசலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாலை உளுந்தூர்பேட்டையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலக்கொல்லை வரை நடைபயிற்சி மேற்கொண்டார்.

    பின்னர் அவர், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கு பணியில் இருந்த ஒரு சில செவிலியர்களிடம் குறைகள் பற்றி கேட்டறிந்ததுடன் டாக்டர்கள் எத்தனை பேர் பணியில் உள்ளனர் எனவும் கேட்டார். அதற்கு 2 டாக்டர்கள் பணியில் உள்ளதாக செவிலியர் கூறினார்.

    தொடர்ந்து அவர், வட்டார மருத்துவ அதிகாரி யார், அவர் எத்தனை முறை இந்த மருத்துவமனைக்கு வருவார், மாவட்ட துணை சுகாதார இயக்குனர் யார், அவர் எத்தனை முறை வருவார் எனவும் செவிலியரிடம் கேட்டறிந்தார்.

    இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரைசெல்போன் மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் உங்கள் பணிக்கான நேரம் என்ன, உங்கள் வீடு எங்கே உள்ளது என்றார். அதற்கு டாக்டர் நெய்வேலியில் தங்கி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவமனையில் பணிபுரிவதாக தெரிவித்தார்.

    அப்போது மா.சுப்பிரமணியன், டாக்டரிடம் மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க கடிதம் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறேன், காலை 9 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து விடுங்கள் எனவும் கூறினார்.

    • சித்தி வளாகத்தில் (மேட்டுக்குப்பத்தில்) பல சன்மார்க்க சங்கத்தின் சார்பில் சன்மார்க்க சொற்பொழிவுகள், அன்னதானமும் நடைபெற்றன.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை தெய்வநிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார், மற்றும் மேட்டுக்குப்பம்கிராம மக்கள் செய்து இருந்தனர்.

    வடலூர்:

    வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 153-வது ஆண்டு தைப்பூச திருவிழா ஜோதி தரிசனம் கடந்த 25-ந்தேதி நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருவறை தரிசனத்தையொட்டி வடலூர் சத்திய ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட பெட்டி (பேழை) மற்றும் உருவப்படத்தை பூக்களால் அலங்கரித்து வள்ளலார் நடந்து வந்த பாதை வழியே மேளதாளம் முழங்க ஊர்வலம் தொடங்கியது.

    இதனை கருங்குழி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சமூகத்தினர் தோளில் சுமந்து கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் கொண்டு சென்ற போது வழியில் வடலூர், பார்வதிபுரம் கிராம மக்களும் இதைத்தொடர்ந்து செங்கால் ஓடையில் நைனார்குப்ப கிராமத்தை சேர்ந்தவர்களும், பூக்கள், பழங்களுடன் வரவேற்றனர்.

    இவர்கள் செல்லும் வழியில் கருங்குழி கிராமத்தினரும் பழங்களுடன் வரவேற்றனர். கருங்குழியில் வள்ளலார் வழிபட்ட விநாயகர் கோவிலிலும், பொதுமக்கள் சார்பில் வழிபாடு செய்யப்பட்டது.

    தொடர்ந்து வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரித்த ரெட்டியார் இல்லத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு பின்னர் வள்ளலார் வழிபாடு செய்த லட்சுமி நாராயணபெருமாள் கோவிலிலும் வரவேற்பளிக்கப்பட்டது.

    மேட்டுக்குப்பம் தீஞ்சுவை ஓடையில் உள்ள மண்டபத்தில் கருங்குழி ஜெம்புலிங்கம் படையாட்சி குடும்பத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட் டது. பின்னர் மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை உள்ள சித்திவளாக திருமாளிகை கொண்டு செல்லப்பட்டது. அங்கு கிராம மக்கள் தாம்பாளதட்டில் பழம் பூக்களுடன் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.

    பின்னர் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறையினுள் கொண்டு செல்லப்பட்டது. அறைக்கும் முன்வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் தொடங்கியது,

    பகல் 12 மணி அளவில் தொடங்கிய தரிசனம் மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இதனை பல ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.

    திரு அறை தரிசனத்தை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நெய்வேலி போலீஸ் சரகத்தின் சார்பில் டி.எஸ்.பி. சபிபுல்லா, மேற்பார்வையில் வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் கள், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சித்தி வளாகத்தில் (மேட்டுக்குப்பத்தில்) பல சன்மார்க்க சங்கத்தின் சார்பில் சன்மார்க்க சொற்பொழிவுகள், அன்னதானமும் நடைபெற்றன.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தெய்வநிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார், மற்றும் மேட்டுக்குப்பம்கிராம மக்கள் செய்து இருந்தனர்.

    • தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
    • தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்.

    பண்ருட்டி:

    என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். கடலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அவர், 3-வது நாளான நேற்று பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் அருகில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக வந்து பஸ் நிலையம் அருகில் நடைபயணத்தை முடித்தார். அங்கு திறந்த வேனில் நின்றபடி அண்ணாமலை பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். தமிழகத்தில் சாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள். மதத்தை மையப்படுத்தி அரசியல் நடக்கிறது. ஆனால் மத்திய பா.ஜனதா ஆட்சி நேர்மையான முறையில் நடக்கிறது. ஆகவே 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடியை 3-வது முறையாக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    திராவிட கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தும் பண்ருட்டியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை கொண்டு வரவில்லை. சேமிப்பு கிடங்கு அமைக்கவில்லை. குளிர்பதன கிடங்கு அமைக்கவில்லை. மதிப்புக்கூட்டு பொருள் தயாரிக்க நடவடிக்கை எடுக்க இல்லை.

    இங்குள்ள எம்.பி. மீது கொலை வழக்கு உள்ளது. அவருக்கு எந்த தகுதியும் இல்லை. இங்குள்ள எம்.எல்.ஏ. தன்னை தி.மு.க. அமைச்சர்கள் மதிப்பதில்லை. கூட்டணி கட்சியை மதிக்கவில்லை என்கிறார். பிறகு எதற்கு தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வேண்டும்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். பண்ருட்டி தொகுதியில் உள்ள கோரிக்கையையே நிறைவேற்றவில்லை. பிறகு எப்படி 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்.

    மறைந்த விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தவர் பிரதமர் நரேந்திரமோடி. ஆனால் தி.மு.க.வினர் அவருக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தனர்.

    கடந்த 9 ஆண்டுகளில் ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடியை தமிழக வளர்ச்சிக்கு மத்தியஅரசு வழங்கி உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் ஒரு மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் பா.ஜனதா உங்கள் அன்பை பெற்று ஆட்சிக்கு வரும்போது, முதல் நாள் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்.

    இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

    குடியரசு தினத்தையொட்டி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை படைவீட்டம்மன் கோவில் தெருவில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    முன்னதாக அண்ணா மலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியா கூட்டணி சீட்டு கட்டு போல், ஒவ்வொரு முறை குலுக்கிபோடும் போதும் ஜோக்கர் வெளியே வருவது போல, ஒவ்வொரு தலைவர்களாக வெளியேறி வருகிறார்கள். நிதிஷ்குமாரும் வெளியேறுகிறார். மோடியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காக மக்கள் மனநிலைக்கு எதிராக நடந்தால் இதுதான் நடக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் நடைபெற உள்ளது.
    • தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களால் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் வடலூரில் நடைபெறுகிறது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் கிராமத்தில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு 153-வது தைப்பூச விழா நடைபெற்றது. இதன் தொடக்கமாக கடந்த 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடைபெற்றது.

    20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.

    நேற்று (24-ந்தேதி) காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழியிலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமச்சாலையிலும் சன்மார்க்க கொடி ஏற்றம் நடைபெற்றது.

    ஞானசபையில் கொடி ஏற்றம் காலை 10 மணிக்கும், பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது. இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    தைப்பூச திருவிழா இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.

    அப்போது சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன் "அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி" என்கிற மகாமந்திர ஒலி ஞானசபை திடல் எங்கும் ஓங்கி ஓலித்தது.

    இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள், லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு வந்து ஜோதி தரிசனம் பார்த்தனர். மேலும், வெளிநாட்டினரும் வடலூருக்கு வந்து ஜோதி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்ச்சிகள் மாவட்ட அறநிலையத்துறையின் அதிகாரி முன்னிலையில் சன்மார்க்க அறிஞர்கள் பேசினார்கள்.

    இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி, 1 மணிக்கு ஜோதி தரிசனம் நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணி, 10 மணி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கும் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது.

    வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் நடைபெற உள்ளது. அப்போது வடலூர் ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.

    தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களால் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் வடலூரில் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம் செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் மற்றும் பார்வதிபுரம், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் வடலூரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டன.

    • சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் 12 பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
    • புதுச்சேரியில் இருந்து தியாகதுருகத்திற்கு மது பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார், நேற்று நள்ளிரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த காரில் இருந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் 12 பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவர், தியாகதுருகத்தை சேர்ந்த கோவிந்தன் மனைவி விஜயா (43) என்பதும், புதுச்சேரியில் இருந்து தியாகதுருகத்திற்கு மது பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து விஜயாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறும்.
    • ஞானசபையில் கொடி ஏற்றம் நடந்தது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச விழா இந்த ஆண்டு 153-வது ஆண்டு தைப்பூச விழாவாக நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக கடந்த 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடைபெற்றது. 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.

    இன்று காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி மற்றும் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப் பத்திலும், தருமச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றமும், காலை 10 மணிக்கு ஞானசபையில் கொடி ஏற்றமும் நடந்தது.

    நாளை (25-ந்தேதி) தைப்பூச திருவிழா வையொட்டி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் (வெள்ளிகிழமை) காலை 5.30 மணி என 6 காலம், 7 திரை விலக்கி ஜோதிதரிசனம் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு வருவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பபடுகிறது. வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் உள்ள, வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.

    முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.

    • சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
    • ஏராளமானோர் சுருளிகிழங்கு வாங்குவதற்காகவே ஆற்றுத் திருவிழாவிற்கு வருகின்றனர்.

    கடலூர்:

    பொங்கல் திருவிழா கடந்த 15-ந் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கடலூர் தென்பெண்ணையாற்றில் ஆற்று திருவிழா இன்று நடந்தது.

    இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கடலூர் வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், ஆனைக்குப்பம், குண்டு உப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நானமேடு உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன. சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.

    கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபட்டனர். இதில் ஒரு சிலர் ஆற்றில் புனித நீராடினர். ஆற்று கரையோரம் கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இங்கு பொருட்கள், குழந்தைகளுக்காண விளையாட்டு பொருட்கள், உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டன. ஏராளமானோர் சுருளிகிழங்கு வாங்குவதற்காகவே ஆற்றுத் திருவிழாவிற்கு வருகின்றனர். இந்த கிழங்கினை ஏராளமானோர் வாங்கிச்சென்றனர். . ஆற்று திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ம் நாள் ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஆற்று திருவிழா இன்று நடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 20,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
    • போக்குவரத்து தொழிலாளர்கள் உடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஆவினங்குடியில் உள்ள வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதை கண்டித்து கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிவசங்கரன் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடலூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற சிவசங்கரன் எம்.எல்.ஏ. போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

    கடலூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆஜர் ஆனார். வழக்கு விசாரணை அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த அமைச்சர் சிவசங்கரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் பொதுமக்கள் பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடத்தியதில் பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. இந்த வழக்கை எதிர்நோக்கும் வகையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளேன்.

    இந்த நிலையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். இந்த பேச்சுவார்த்தையில் முடிவுகள் தெரியவரும்.

    தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்து வரும் நிலையில் அனைத்து பிரச்சனைக்கும் முதலமைச்சர் நேரில் பேசுவது என்பது சிரமம் ஆகும். அதற்காகத்தான் ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்கள், செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளனர்.

    ஏற்கனவே தற்போது உள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. போராட்டத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையான ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கையானது ஒரு துறைக்கு சம்பந்தப்பட்ட கோரிக்கையாக இல்லாமல் பல்வேறு துறை சேர்ந்த ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக உள்ளதால் அரசின் நிதி சுமை எவ்வளவு கூடுதலாகும் என்பதை கணக்கிட்டு தான் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் இது சம்பந்தமாக முடிவெடுத்தால் மற்ற துறை சார்ந்த ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பாதிப்பாகும் என்ற காரணத்தினால் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தற்போது போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகள் வைத்துள்ள நிலையில், ஏற்கனவே 2 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு தற்போது வேலையில் இருந்து வருகின்றனர். பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்குவதற்கு எழுத்து தேர்வு நடைபெற்று வருவதால் 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 4 கோரிக்கைகளில் தற்போது 2 கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்று வரும் நடவடிக்கை குறித்து விரிவாக தெரிவித்து உள்ளோம். மேலும் இவர்கள் வைத்த கோரிக்கைகள் நிதித்துறை சம்பந்தப்பட்டது என்பதால் உடனடியாக நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது. ஆனால் அரசியல் காரணத்தினால் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் போக்குவரத்து தொழிலாளர்களின் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. ஆனால் அகவிலைப்படி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    தற்போது நிதி நிலை சரியான பிறகு அகவிலைப்படி வழங்கப்படும். மேலும் தேர்தல் நேரத்தில் கலைஞர் உரிமை திட்டம் தொகை வழங்கப்படும் என்பது தொடர்பாக கூறியபடி நிதி நிலைமையை சரி செய்து தற்போது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்காக இந்த ஆண்டு கூடுதலாக ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்து இருந்தனர். இந்த ஆண்டு முதலமைச்சர் தலைமையில் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுவதை தொடர்ந்து பொதுமக்கள் அரசு பஸ்களில் அதிகளவில் பயணம் செய்து வந்தனர்.

    இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் தமிழக அரசு திட்டமிட்டதை விட அதிக அளவில் பயணிகள் சென்று வந்ததால் பல்வேறு இன்னல்களுக்கு இடையே கண்டக்டர்கள், டிரைவர்கள் பயணிகளை பாதுகாப்பாக தங்களது ஊர்களுக்கு அழைத்துச் சென்று வந்தனர். சென்னை நோக்கி வெளியூரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வரும் காரணத்தினால் 1000-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இன்னும் 2 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஏற்கனவே அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட மற்ற போக்குவரத்துக் கழகம் பஸ்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் கிளாம்பக்கம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டது.

    மேலும் படிப்படியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். சொந்த ஊரிலிருந்து திரும்பி செல்பவர்கள் சென்னை கோயம்பேடு செல்வதற்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் கிளாம்பாக்கத்தில் இருந்து அனைத்து பஸ்கள் இயக்கப்படுவதற்கும், போக்குவரத்து நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் படிப்படியாக கண்டறிந்து தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, தொ.மு.ச. பழனிவேல், தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், பகுதி துணை செயலாளர் வக்கீல் பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×