என் மலர்tooltip icon

    சென்னை

    • அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு பத்திரப்பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தான செட்டில்மென்ட் பதிவை பொறுத்தமட்டில் சொத்து மதிப்பில் ஒரு சதவீதம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

    சென்னை:

    சமூகத்தில் மட்டுமன்றி அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்திடும் வகையில், வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகள் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

    இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில், 'தற்போதைய பதிவுகளில் 75 சதவீதம் மகளிர் இந்த சலுகையை பெற தகுதியை பெறுவார்கள். இந்த சலுகையின் மூலம் பெண்களின் தன்னம்பிக்கை, நிதி சுதந்திரம் மேலும் வலுப்பெறும் என அரசு உறுதியாக நம்புகிறது' என கூறப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து அனைத்து பத்திரப்பதிவு அலுவலர்களும், இந்த அரசாணைப்படி செயல்பட பத்திர பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    இதன்மூலம் பத்திர பதிவு மேற்கொள்ளும் மகளிருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து ஓய்வுபெற்ற பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு பத்திரப்பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பதிவு கட்டணமாக 2 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் அதிகபட்சம் ரூ.10 லட்சத்துக்கு ரூ.20 ஆயிரம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

    தற்போதைய புதிய அறிவிப்பின் மூலம் பெண்கள் பெயரில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டால் பதிவு கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்தினால் போதும். இதன்மூலம் ரூ.10 ஆயிரம் மிச்சமாகும்.

    ரூ.10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு மட்டுமே இந்த பதிவு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை பதிவு செய்யும் மகளிர் இந்த சலுகையை பெற முடியாது.

    தற்போது கிராமப்புறங்களில் கூட நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. சென்னை, கோவை போன்ற நகரங்களில் வெறும் ரூ.10 லட்சத்துக்கு சொத்துகள் வாங்க முடியாது.

    எனவே, ரூ.10 லட்சத்துக்கு அதிகமான சொத்துகளை பதிவு செய்யும் மகளிரும் இந்த சலுகையை பெறும் வகையில் இந்த திட்டத்தை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும்.

    தான செட்டில்மென்ட் பதிவை பொறுத்தமட்டில் சொத்து மதிப்பில் ஒரு சதவீதம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். தான செட்டில்மென்டை பொறுத்தமட்டில் அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.40 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட சொத்தின் மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடியாக இருந்தாலும் பதிவு கட்டணமாக ரூ.40 ஆயிரம் செலுத்தினால் போதும்.

    அதிக மதிப்புள்ள சொத்துகளை கொண்ட பெரும் செல்வந்தர்களுக்கு சலுகை அளிக்கும்போது மகளிருக்கு சலுகை அளிப்பதில் உச்சவரம்பை நிர்ணயித்து இருப்பது சரியானது அல்ல.

    உச்சவரம்பை நீக்கி விட்டு எவ்வளவு மதிப்பிலான சொத்துகள் என்றாலும் பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் கட்டணம் அளிக்கும்போதுதான் அனைத்து தரப்பு மகளிரும் பயன்பெற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் சாலையோரங்களில் 24 மணி நேர ஏசி ஓய்வறை ஏற்பாடு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
    • அண்ணாநகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்க திட்டம்.

    சென்னையில் உணவு டெலிவரி ஊழியர்களுக்காக சாலையோரங்களில் 24 மணி நேர ஏசி ஓய்வறை ஏற்பாடு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏசி ஓய்வறை அமைக்க திட்டமிட்டுள்ளது.

    கழிவறை, குடிநீர், ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை அடங்கிய அறை மூலம் பெண் தொழிலாளர்கள் அதிக பயனடைவர்.

    • கடந்த ஆண்டு இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தியதற்காக பிரதமர், மத்திய அமைச்சரிடம் இருந்து விருது பெற்றோம்.
    • ஊராட்சி எண்ணிக்கை என வேறுபாடு இன்றி வேலை கேட்கும் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பது சட்டம்.

    100 நாள் வேலை திட்டத்தை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுத்துவதாலேயே தமிழகம் கூடுதல் நிதி பெறுகிறது என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரித்துள்ளார்.

    மேலும், கடந்த ஆண்டு இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தியதற்காக பிரதமர், மத்திய அமைச்சரிடம் இருந்து விருது பெற்றோம்.

    கட்டுமான பொருட்கள் மற்றும் பணிகளுக்கான பொருட்கூறு 75 சதவீதம் மத்திய அரசு, 25 சதவீதம் மாநில அரசு வழங்குகிறது. அண்ணாமலை கூறிய 60:40 என்பது தவறான தகவல்.

    ஊராட்சி எண்ணிக்கை என வேறுபாடு இன்றி வேலை கேட்கும் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பது சட்டம் எனத் தெரிவித்துள்ளார்.

    • கொலையுண்ட வெங்கடேசனின் உடல் முழுவதும் கத்துக்குத்து காயங்கள் இருந்தன.
    • நிலப்பிரச்சனை தொடர்பாக வெங்கடேசனுக்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

    வேளச்சேரி, அடுத்த ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது43). வக்கீலானா இவர் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராக இருந்தார்.

    இவர், விருகம்பாக்கம் கணபதிராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து அலுவலகம் நடத்தி அங்கேயே தங்கி இருந்தார். கடந்த 2 நாட்களாக பூட்டி கிடந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு தலைமையில் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது, வக்கீல் வெங்கடேசன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் வெட்டிய கத்தியை அப்படியே விட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்று இருப்பதும் தெரியவந்தது.

    கொலையுண்ட வெங்கடேசனின் உடல் முழுவதும் கத்துக்குத்து காயங்கள் இருந்தன. அவரை கொலையாளிகள் சித்ரவதை செய்து கொடூரமாக வெட்டி கொலை செய்து இருப்பது தெரிந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சம்பவத்தன்று 4 பேர் கும்பல் வெங்கடேசனை கொலை செய்து விட்டு அவரது வீட்டில் இருந்து தப்பி செல்வது பதிவாகி உள்ளது. இதனை வைத்து அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    கொலையுண்ட வெங்கடேசன் மீதும் குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனது நண்பரான சேதுபதி என்பவருடன் சேர்ந்து வக்கீல் அலுவலகம் நடத்தி வந்து உள்ளார். கடந்த மாதம் சேதுபதி மர்ம கும்பலால் நெல்லையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் நிலப்பிரச்சனை தொடர்பாக வெங்கடேசனுக்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக வெங்கடேசனின் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்கள்.

    கொலை தொடர்பாக வெங்கடேசனின் நண்பர்கள் உள்பட 4 பேர் மீது போலீசாருக்கு சந்கேதம் ஏற்பட்டு உள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட வக்கீல் வெங்கடேசன் மனைவி சரளா விருகம்பாக்கம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது கணவர் கொலையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உடன் இருந்த நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில் வழக்கறிஞர் வெங்கடேசன் கொலை வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வெங்கடேசனிடம் ஓட்டுநகராக இருந்த கார்த்திக் மற்றும் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வைத்து இருவரையும் போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.
    • அன்று முதல் இன்று வரை நான் வெளிப்படையாகவே இருக்கிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. கட்சிக்கு புதிய மாநில தலைவர் யார் என்ற அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மீண்டும் அண்ணாமலையே நியமிக்கப்படுவார் என்று கட்சி வட்டாரத்தில் உறுதியாக கூறப்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசிய பிறகு சூழ்நிலைகள் மாறி வருவதாக கருதப் படுகிறது.

    பா.ஜ.க.வுடன் கூட் டணி அமையும்போது தமிழகத்தில் இரு கட்சிகள் இடையேயும் நெருடல் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டு உள்ளார்.

    இதை அடுத்து அமித்ஷா தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து விவாதித்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் பற்றி அண்ணாமலை அமித்ஷாவிடம் எடுத்து கூறி இருக்கிறார்.

    டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலையிடம் கோவை விமான நிலையத்தில் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக தமிழக பா.ஜ.க. தலைமையில் மாற்றம் வருமா? அ.தி.மு.க.வை ஏற்கனவே கடுமையாக விமர்சித்த உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அண்ணாமலை கூறியதாவது:-

    நான் 2020-ல் பா.ஜ.க.வில் சேர்ந்தது முதல் எந்த பதவியையும் எதிர்பார்த்து வேலை செய்யவில்லை. என்னை பொறுத்தவரை தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும். தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். பா.ஜ.க.வின் வளர்ச்சி தங்கு தடை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

    எந்த தலைவர் மீதும், எந்த கட்சியின் மீதும் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் கிடையாது.

    கூட்டணி பற்றி எல்லாம் தலைவர்கள்தான் முடிவு எடுப்பார்கள். எனது கடமை நடுநிலையாக இருந்து தமிழகத்தின் களநிலவரத்தை உள்ளதை உள்ளபடியே கட்சி மேலிடத்துக்கு தெரிவிக்க வேண்டும். அந்த கடமையை செய்து இருக்கிறேன். அது சரியாக இருந்தால் தான் அதற்கேற்ப தலைவர்கள் முடிவெடுக்க முடியும்.

    என்னால் யாருக்கும் பிரச்சனை வராது. நான் கடுமையாக விமர்சித்தேன் என்பது சரியல்ல. தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. கருத்துக்களைத்தான் கருத்துக்களால் எதிர்கொண்டு வருகிறேன்.

    அன்று முதல் இன்று வரை நான் வெளிப்படையாகவே இருக்கிறேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பிசிறு கூட மாற்றம் கிடையாது.

    எல்லா சூழ்நிலைகளையும் ஆய்ந்து தமிழக தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை கட்சி தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். விரைவில் பார்ப்பீர்கள்.

    அண்ணாமலையை பொறுத்தவரை எதையும் மாற்றி பேசுபவன் கிடையாது. அதை வருங்காலத்திலும் பார்ப்பீர்கள். எதற்காக அரசியலுக்கு வந்தேனோ? அந்த வெறியும், நெருப்பும் என் உள்ளத்தில் எரிந்து கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாமலை இப்படி சூசகமாக பேசியது தலைவர் பதவியில் இருந்து அவர் மாற்றப்படலாம் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் அண்ணாமலையின் அதிரடி கருத்துக்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் இரு கட்சி மேலிட தலைவர்களும் உறுதியாக இருக்கிறார்கள்.

    இந்த விவகாரம் பற்றி அண்ணாமலையிடம் அமித்ஷா தெளிவுபடுத்தியதோடு அவரது கருத்தையும் கேட்டு உள்ளார். அப்போது தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். எந்த பதவியையும் எதிர்பார்த்து நான் கட்சிக்கு வரவில்லை. கட்சியின் சாதாரண தொண்டராக இருந்து கட்சி பணியாற்றவும் தயாராக இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இந்த வார்த்தையை பயன்படுத்தியது உண்மை என்பதையும் அண்ணாமலை தனது பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார். எனவே தலைவர் மாற்றம் என்பது உறுதியாகி விட்டதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    புதிய தலைவருக்கான ரேசில் வானதி சீனிவாசன், எச்.ராஜா, டாக்டர் தமிழிசை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் இருந்தார்கள்.

    ஆனால் இப்போது மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது மத்திய மந்திரி எல்.முருகன், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், கோவை முருகானந்தம் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது.

    இதில் கோவை முருகானந்தம் அண்ணாமலை நடத்திய 'என் மண் என் மக்கள்' யாத்திரையை சிறப்பாக நடத்தியதில் முக்கிய பங்காற்றியவர். ஆனால் புதிதாக ஒருவரை தலைவராக நியமித்தால் சரிப்பட்டு வராது என்று மேலிடம் யோசிப்பதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் புதிதாக ஒரு வரை தலைவராக நியமித்து வெற்றி பெற முடியாமல் போனதே அதற்கு காரணம் என்கிறார்கள்.

    எனவே முருகனா? தமிழிசையா? என்றுதான் மேலிடம் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் தலைவர்களாக இருந்தவர்கள். இந்த இருவரில் ஒருவரைத்தான் தலைவராக நியமிப்பார்கள் என்று கட்சியினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

    • பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது.
    • தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது ஒன்றிய அரசு.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது.

    இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, புயல், வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, தமிழ்நாட்டிற்கு பள்ளிக்கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது, உயிர்கொல்லி நீட் தேர்வால் அன்றாடம் தற்கொலைகள் அதிகரித்து கொண்டுள்ளது, இந்த கொடிய தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்காதது, மாநில திட்டங்களுக்கு ஒன்றிய நிதி ஒதுக்கீட்டில் பாராபட்சம் காட்டுவது, தமிழ்நாட்டிலிருந்து அதிகமான ஜி.எஸ்.டி வரி வருவாய் கிடைத்த போதும் நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது,

    பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெருக்கடியை கொடுப்பது, சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கான நிதியை தாமதப்படுத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, மகாத்மா காந்தி அவர்களது பெயரில் இருப்பதால் என்னவோ இத்திட்டதை முடக்க நினைக்கின்றது.

    அவ்வகையில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது ஒன்றிய அரசு.

    இதுபோன்ற காரணங்களால் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 6-ந்தேதி வருகை தரும், பாரத பிரதமர் மோடியை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட தலைவர்கள் மற்றும் எனது தலைமையில் சென்னையில் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சம்பவ இடத்தில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்து ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுன்டிங் மிஷினை பறிமுதல் செய்தனர்.
    • தலைமறைவான செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வத்திற்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்த நபர்கள் அங்கு கள்ளநோட்டுகள் அச்சடித்துள்ளனர்.

    காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்தில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்து ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுன்டிங் மிஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் தலைமறைவான செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் வி.சி.க. கடலூர் மாவட்ட பொருளாளர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.

    கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் செல்வத்தை நீக்கி திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.

    • சென்னையில் 3 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
    • வானகரம் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    இந்த நிலையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

    அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு ஆகிய 3 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கு கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.75 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.110 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.120 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.180 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.255 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.380 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.275 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.415 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.400 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.595 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.485 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.725 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    வானகரம் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கு கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.55 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.80 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.90 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.130 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.185 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.275 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.200 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.290 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.435 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.350 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.525 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.75 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.115 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.120 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.185 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.255 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.385 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.280 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.420 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.400 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.600 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.490 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.730 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    மேலும் சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் உள்ள உள்ளூர் வணிகம் சாராத வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.350 ஆகும்.

    • பிரேசில் லெஜண்ட்ஸ் அணியும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியும் மோதிய கால்பந்து போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றதைக் காண மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
    • பிள்ளைகளே, நன்கு படியுங்கள், தைரியமாக விளையாடுங்கள், நியாயமான முறையில் வெல்லுங்கள்.

    சென்னை:

    சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த காட்சி கால்பந்து போட்டியில் பிரேசில் ஜாம்பவான்கள்-ஆல் ஸ்டார் இந்தியா அணிகள் மோதின. இதில் பிரேசிலின் ஜாம்பவான்களான ரொனால்டினோ, ரிவால்டோ, எட்மில்சன், காபு உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடினார்கள். இந்த போட்டி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரேசில் லெஜண்ட்ஸ் அணியும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியும் மோதிய கால்பந்து போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றதைக் காண மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு பெருமிதத்தோடு நேற்று இரவு ஆர்ப்பரித்துள்ளது. ஒரு விளையாட்டுப் போட்டி என்பதைத் தாண்டி, நினைவில் கொள்ளத்தக்க, அடுத்து பல தலைமுறையினரிடம் கனவுகளை ஊக்குவிக்கும் தருணமாக இப்போட்டி அமைந்திருந்தது. பிள்ளைகளே, நன்கு படியுங்கள், தைரியமாக விளையாடுங்கள், நியாயமான முறையில் வெல்லுங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தைப் புறக்கணித்து தெலுங்கானாவுக்கு சென்றிருப்பது கவலை அளிக்கிறது.
    • முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழ்நாடு எங்கு பின் தங்கியிருக்கிறது?

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சீனாவைச் சேர்ந்த மின் சார மகிழுந்து நிறுவனமான பி.ஒய்.டி ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியாவில் அதன் முதலாவது மகிழுந்து உற்பத்தி ஆலையை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

    தமிழ்நாட்டிற்கு இந்த மகிழுந்து ஆலையைக் கொண்டு வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் கூட, அந்த வாய்ப்புகளை தமிழக அரசு கோட்டை விட்டிருக்கிறது.

    பி.ஒய்.டி மகிழுந்து ஆலையை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் போட்டியிட்டன.

    இந்த மாநிலங்களில் தமிழ்நாட்டுக்குத் தான் அதிக வாய்ப்புகள் இருந்தன.

    ஆசியாவின் டெட்ராய்ட் சென்னை தான் என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய மின்னனு வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் தமிழகத்தைப் புறக்கணித்து விட்டு தெலுங்கானாவுக்கு சென்றிருப்பது உண்மையாகவே கவலை அளிக்கிறது.

    தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழ்நாடு எங்கு பின் தங்கியிருக்கிறது? முதலீடுகளை ஈர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் தமிழக அரசு ஆராய வேண்டும். அதனடிப்படையில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான தமிழ்நாட்டின் திறனை அரசு அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அனிமே என்று அழைக்கப்படும் இவ்வகை அனிமேஷன் படங்கள் ஜப்பானை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜிப்லி ஸ்டூடியோ பாணியை சேர்ந்தவை.
    • ஓபன் ஏஐ மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி இவ்வகை அனிமேஷன் புகைப்படங்களை பலர் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

    எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிரபல இணைய தளங்களை திறந்தால் சமீப நாட்களாக ஒரே மாதிரியான அனிமேஷன் வகை புகைப்படங்கள் டிரெண்டிங்கில் இருப்பதை காணலாம்.

    கிரிக்கெட், கால்பந்து வீரர்கள் தொங்கி திரைபிரபலலங்கள், அரசியல்வாதிகள் வரை இந்த டிரெண்டில் இணைந்துள்ளனர். அவர்களின் அனிமேஷன் படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

    அனிமே என்று அழைக்கப்படும் இவ்வகை அனிமேஷன் படங்கள் ஜப்பானை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜிப்லி ஸ்டூடியோ பாணியை சேர்ந்தவை. தற்போது ஓபன் ஏஐ மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி இவ்வகை அனிமேஷன் புகைப்படங்களை பலர் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஜிப்லி டிரெண்டில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டின் இதயத்திலிருந்து ஸ்டுடியோகிப்லி உலகம் வரை எனது மிகவும் மறக்க முடியாத சில தருணங்களை காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • கட்சி கட்டுப்பாடு என்பது மிக முக்கியமானது.
    • யார் பேட்டிக்கு அழைத்தாலும் தலைமையின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    கட்சி கட்டுப்பாடு என்பது மிக முக்கியமானது. கட்சி வளர்ச்சி அடையும் போது, முன்னணி தலைவர்கள் இடையே முதிர்ச்சி வெளிப்பட வேண்டும்.

    கட்சியில் ஒவ்வொரு வரும் கட்டுப்பாடுகளோடு செயல்பட வேண்டும்; அந்த கட்டுப்பாடு, பிறருக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால், முன்னணி பொறுப்பாளர்களே சமூக வலைதளங்களில், இஷ்டத்துக்கும் பதிவிடுகின்றனர்.

    அது கட்சிக்கும், தலைமைக்கும் களங்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், கடும் மன வேதனையில் இருக்கிறேன். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், கட்சியினரின் செயல்பாடுகள் உள்ளன. கட்சி முன்னணியினரின் செயல்பாடுகளால் காயம் பட்டிருக்கிறேன்.

    கட்சிக்குள், ஒருவருக்கு மற்றொருவர் முரண்பாடு களுடன் இருக்கலாம். அதற்காக, முரண்பட்ட கருத்துகளையெல்லாம் சமூக வலைதளங்களில் பகிர்வது, கட்சிக்கு நல்ல தல்ல. அப்படிப்பட்ட கருத்துகளை இனி, கட்சி யினர் யாரும் பதிவு செய்யக் கூடாது.

    எல்லா விஷயங்களிலும் கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும். யு டியூப் சேனலில் பேச அழைக்கின்ற னர் என்றதும், சுய விளம் பரத்துக்காக எதைப் பற்றியும் கவலைப்படாமல் போய் விடக்கூடாது.

    பேச அழைப்பவர்கள், என்ன நோக்கத்திற்காக அழைக்கின்றனர் என பார்க்காமல், வாய்ப்பு கிடைக்கிறதே என்று செல்வதும், அங்கு சென்று இஷ்டத்துக்கு பேசுவதும் கவலைக்குரியது.

    யார் பேட்டிக்கு அழைத்தாலும், கட்சித் தலைமையின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.

    என்னை பொறுத்த வரை, வரும் 2026-ல் நடக்கவிருக்கும் சட்ட சபைத் தேர்தல் வரை, கட்சி முன்னணியினர், யூ-டியூப் சேனல்களுக்கு பேசச் செல்லாமல் இருப்பதோடு பேட்டி கொடுக்காமலும் இருப்பது நல்லது. வாய்ப்பு வந்தாலும் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×