என் மலர்tooltip icon

    சென்னை

    • சிவானந்தா சாலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின்பேரில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சென்னை சிவானந்தா சாலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், SIR நடவடிக்கையில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • கர்நாடகாவில் வேலையின்மை விகிதம் 2.8 சதவீதம் என இருக்கிறது.
    • தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    சென்னை:

    ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமான அளவீடுகளில் ஒன்றாக வேலையின்மை விகிதம் இருக்கிறது. இந்த வேலையின்மை விகிதம் என்பது வேலை செய்யத் தகுதி மற்றும் விருப்பம் இருந்தும், வேலை கிடைக்காமல் இருப்பவர்களில் சதவீதத்தை குறிக்கிறது.

    பொருளாதார மந்தநிலை, கணினி மயமாக்கல், குறிப்பிட்ட தொழிற்சாலை மூடப்படுவது, சிறந்த ஊதியத்துடன் வேலையை தேடுவது, விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் இருப்பது போன்ற நிகழ்வுகளால் இந்த வேலையின்மை விகிதம் ஒவ்வொரு மாநிலங்களிலும் அவ்வப்போது அதிகரிக்கும், குறையும். இதனை சரியாக கையாளும் மாநிலங்கள் வேலையின்மை விகிதத்தை சமநிலை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஏற்றவாறு வைத்திருக்கும்.

    இதற்கான புள்ளி விவரங்களை தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்.எஸ்.ஓ.), காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (பி.எல்.எப்.எஸ்.) வாயிலாக ஒவ்வொரு காலாண்டுக்கும் அதாவது ஆண்டுக்கு 4 முறை அறிக்கையாக வெளியிடுகிறது.

    அதன்படி, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டுக்கான புள்ளி விவர அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் வேலையின்மை விகிதம் குறித்த விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன.

    அந்தவகையில், கடந்த ஜூலை-செப்டம்பர் வரையிலான 3-வது காலாண்டுக்கான தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் என்பது 5.7 சதவீதமாக இருக்கிறது. வேலையின்மை விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 11-வது இடத்தில் இருக்கிறது.

    அதில் முதல் இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. அங்கு வேலையின்மை விகிதம் 2.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதற்கடுத்தபடியாக கர்நாடகாவில் வேலையின்மை விகிதம் 2.8 சதவீதம் என இருக்கிறது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    அதற்கு உதாரணமாக, நடப்பாண்டின் 2-வது காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வேலையின்மை விகிதம் 5.9 சதவீதமாக இருந்து, அது 3-வது காலாண்டில் குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு (2024) இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வேலையின்மை விகிதம் பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வருவதும் நல்லதல்ல. ஆனால் தமிழ்நாடு போன்ற அதிக தொழில்மயமாக்கப்பட்ட மற்றும் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலத்தில் வேலையின்மை விகிதம் 3 முதல் 5 சதவீதம் வரை என்பது உகந்த வரம்பாக பார்க்கப்படுகிறது.

    அதாவது, பொருளாதாரத்தை அதிக பணவீக்கத்திற்கு கொண்டு செல்லாமல், நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் வேலையின்மை விகிதமே சரியாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

    • அனைத்து சேவைகளிலும் ஆதார் அட்டை தவிர்க்க முடியாத ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்த செயலியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    இந்தியர்களின் வாழ்க்கையில் ஆதார் அட்டை அத்தியாவசிய அடையாள ஆவணமாக மாறியுள்ளது. அரசு வழங்கும் பல நலத்திட்டங்கள் முதல் வங்கி கணக்கு தொடங்குதல், பான்கார்டு பெறுதல், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், செல்போன் நம்பர் வாங்குதல் வரை அனைத்து சேவைகளிலும் ஆதார் அட்டை தவிர்க்க முடியாத ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை பொதுமக்கள் ஆதாரை பயன்படுத்துவதற்கு அதனை தங்களுடன் பிளாஸ்டிக் கார்டு வடிவில் எடுத்துச் செல்ல வேண்டி இருந்தது. அல்லது ஆதார் இணையதளத்தில் உள்ள ஆதார் 'பிடிஎப்' பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. சில சமயங்களில் ஆதார் அட்டை இல்லாமல் இருந்தால் அல்லது இணையதளம் இல்லாத சூழலில் அதனை பதிவிறக்கம் செய்ய முடியாவிட்டால், நமது அடையாளத்தை ஆதார் மூலம் உறுதி செய்வது பிரச்சனையாக இருந்தது.

    இந்த நிலையை மாற்றி, டிஜிட்டல் ஆதார் பயன்படுத்த இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் (Aadhaar App) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆதார் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை நாம் பதிவிறக்கம் செய்து, அதில் நமது ஆதார் எண்ணை பதிவு செய்து முக அங்கீகாரம் முறை செய்ய வேண்டும். அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் நமது ஆதார் விவரங்கள் அதில் வந்துவிடும்.

    நாம் இனி செல்போன் எண் பெறுவது, வங்கி கணக்கு தொடங்குவது, ஓட்டலில் தங்குவதற்கு ஆதார் அட்டை நகல் கொடுப்பது அல்லது கைரேகை எல்லாம் இனி வைக்க வேண்டாம். அந்த செயலியில் உள்ள 'கியூஆர்' கோடு காண்பித்தால் போதுமானது அல்லது அவர்கள் காட்டும் 'கியூஆர்' கோட்டினை ஸ்கேன் செய்தால் போதும். அதன் மூலம் நமது ஆதார் எண்ணை கூட அவர்களால் பார்க்க முடியாது.

    இந்த செயலியில் நமது ஆதார் மட்டுமின்றி ஒரே செல்போன் எண் உள்ள நமது குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 5 பேர் ஆதார் விவரங்களை அதில் பதிவு செய்து கொள்ள முடியும். இந்த செயலியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முக அங்கீகாரம், 6 இலக்க பின் டிஜிட்டல் பாஸ்வேர்டு, ஆதார் பயோ மெட்ரிக்கை லாக் செய்யவும், ஆன் செய்யவும் வசதிகள் ஆகியவையும் உள்ளன. இணையதள வசதிகள் இல்லாத நேரங்களில் கூட இந்த செயலியை பயன்படுத்த முடியும். இந்த புதிய செயலி, ஆதார் சேவைகளை பொதுமக்களுக்கு மேலும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்தும் வழியை திறந்து இருக்கிறது.

    • தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின்பேரில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

    சென்னை சிவானந்தா சாலையில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட செயலாளர்கள் தி.நகர் க.அப்புனு, அம்பத்தூர் பால முருகன், இ.சி.ஆர்.சரவணன், பூக்கடை குமார், பழனி, கட்பீஸ் விஜய், சபரிநாதன், தாமு உள்ளிட்ட 13 மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரள்கிறார்கள்.

    பின்னர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    இதே போல் தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

    • மீண்டும் வடகிழக்கு பருவகாற்று முழுவதுமாக தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளது.
    • இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) தொடங்கிய நிலையில், இந்த மாதத்தில் பருவமழை சற்று இடைவெளியைக் கொடுத்தது. தற்போது மீண்டும் வடகிழக்கு பருவகாற்று முழுவதுமாக தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

    இதன் காரணமாக இன்று முதல் வருகிற 19-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, இன்று கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் 10 மணி மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் சீனா உள்ளது.
    • தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    சென்னை:

    உலக நீரிழிவு தினத்தையொட்டி சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு பதாகை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் சீனா உள்ளது. 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஆண்டிற்கு 34 லட்சம் பேர் நீரிழிவு நோயினால் உயிரிழக்கிறார்கள். ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் ஒருவர் மரணத்தை தழுவுகிறார்.

    இந்தியாவில் 20 முதல் 79 வயது வரை உள்ள முதியவர்கள் 9 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    தமிழக அரசின் பாதம் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 9 லட்சம் பேர் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. நீரிழிவு, வாதம் நோயினால் 72 லட்சத்து 70 ஆயிரத்து 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய் ஏற்பட்டு 33 ஆயிரத்து 185 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 26,448 பேர் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். 3169 பேருக்கு உறுப்புகள் நீக்கப்பட்டு உள்ளன.

    எனவே தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இதற்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதியும் தற்போது செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நீரிழிவு நோயை அலட்சியமாக கருதாமல் கவனமாக கையாள வேண்டும். இதனால் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. எனவே மீண்டும் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் நல வாழ்வு குழு இயக்குனர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தர, மருத்துவ கல்வி இயக்குனர் ராஜ குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விளம்பர மாடல் நிகழ்ச்சிகளும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவிடுமா?
    • தொழில் துறைக்கு வாய்த்திருக்கும் அமைச்சரோ, வெள்ளைப் பேப்பரைக் காட்டும் அமைச்சராக தான் இருக்கிறார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கொரிய நாட்டைச் சேர்ந்த ஹ்வாசங் நிறுவனம், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தை விட்டு, ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

    பொம்மை முதல்வர் , நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என "ஷோ" காட்டியதால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்?

    வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது.

    இதற்கு ஆன காரணங்கள் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்,

    சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு,

    படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு,

    விண்ணை முட்டும் கமிஷன் ஊழல்கள்,

    என அடிப்படையே சீர்குலைந்த இந்த ஸ்டாலின் ஆட்சி, விளம்பர மாடல் நிகழ்ச்சிகளும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவிடுமா?

    பொம்மை முதல்வர் தான் இப்படி என்றால், அவர் அரசில் தொழில் துறைக்கு வாய்த்திருக்கும் அமைச்சரோ, வெள்ளைப் பேப்பரைக் காட்டும் அமைச்சராக தான் இருக்கிறார்.

    இத்தகைய வெறும் Show-off ஆட்சியாளர்கள் நடத்தும் ஆட்சியில், எப்படி தொழில்கள் தமிழகத்திற்கு வரும்?

    புதிய தொழில்களால் தங்களுக்கு வேலை கிடைக்கும் என நம்பிய தமிழக இளைஞர்களை ஏமாற்றிய கையாலாகாத ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    இன்று நம்மை விட்டுச் சென்ற தொழில் நிறுவனங்கள், 2026 அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், மீண்டும் தமிழ்நாட்டைத் தேடி வரும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜேந்திர பாலாஜி போன்றவர்களை இ.பி.எஸ். அடக்கி வைக்க வேண்டும்.
    • சிறுபான்மை மக்களை ஆதரித்தால் பயங்கரவாதியா?

    விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள். காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை. காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசியல் நாகரிகம் இல்லாதவர்.

    * காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடலாம் என்று பேசிய ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் வேண்டும்.

    * கடந்த 1996-ம் ஆண்டில் அ.தி.மு.க. எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது.

    * எங்களது சொந்த தந்தையை தான் டாடி என அழைப்போம். ஆனால் அ.தி.மு.க.வினர் யாரையோ டாடி என்கின்றனர்.

    * ராஜேந்திர பாலாஜி போன்றவர்களை இ.பி.எஸ். அடக்கி வைக்க வேண்டும்.

    * சிறுபான்மை மக்களை ஆதரித்தால் பயங்கரவாதியா?

    * ராகுல் காந்தி பற்றி ராஜேந்திர பாலாஜிக்கு என்ன தெரியும்.

    * தனிநபர் செய்த தவறுகளுக்கு ஒரு சமூகத்தை குறை கூறுவது கொடுமையானது.

    * காங்கிரஸ் குறித்த தனது கருத்தை ராஜேந்திர பாலாஜி திரும்ப பெற்று மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடகிழக்கு பருவமழை வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
    • வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நேரத்தில் சுமார் 10 நாட்களுக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு கடந்த 2 வாரமாக பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

    தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இனிவரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், வடகிழக்கு பருவமழை வேகமெடுக்க தொடங்கியுள்ளது எனவும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நலையில், தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • சென்னை மாநகரில் மொத்தம் 165 இடங்களில் இந்த ஏ.ஐ. சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது.
    • அடுத்த மாதம் இந்த போக்குவரத்து சிக்னல்கள் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகமும் சென்னை மாநகர போலீசாரும் இணைந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் போக்குவரத்து நெரிசல்களை தானே கண்டறிந்து செயல்படும் ஏ.ஐ.சிக்னல்கள் சென்னை மாநகர சந்திப்புகளில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஈ.வே.ரா. பெரியார் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிக்னல் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோன்று சென்னை மாநகர் முழுவதும் 50 சிக்னல்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகின்றன. தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக அளவிலும் வடசென்னையில் சில இடங்களிலும் இந்த சிக்னல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஏ.ஐ.மூலமாக செயல்படும் இந்த போக்குவரத்து சிக்னல்கள் வாகன நெரிசலுக்கு ஏற்ப தாமாகவே சிக்னல்களை மாற்றி அமைக்கும் தன்மை கொண்டதாகும்.

    ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் போக்குவரத்து சந்திப்புகளில் நிறுவப்பட்டிருப்பதன் மூலம் குறிப்பிட்ட சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தால் அந்த வாகனங்கள் எல்லாம் முதலில் செல்லும் வகையில் பச்சை நிற சிக்னல் நீண்ட நேரம் இயங்கும்.

    இப்படி குறிப்பிட்ட சாலையில் வாகன நெரிசல் சரியானவுடன் அருகில் உள்ள சாலைகளில் எங்கு வாகனங்கள் அதிகமாக நிற்கிறதோ அந்த சாலையில் உள்ள வாகனங்கள் செல்லும் வகையில் பச்சை நிற சிக்னல் விழும். இப்படி போக்குவரத்து சிக்னல்களை போலீசார் இல்லாமலேயே செயல்படும் வகையில் ஏ.ஐ. தொழில் நுட்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மாநகரில் மொத்தம் 165 இடங்களில் இந்த ஏ.ஐ. சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது. இவற்றில் ஏற்கனவே 50 இடங்களில் சிக்னல்கள் செயல்படும் நிலையில் மீதமுள்ள 115 இடங்களிலும் இந்த சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன என்றும் அதற்கான பணிகள் தீவிரபடுத்தப்பட்டு இருப்பதாகவும் சென்னை மாநகர போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    அடுத்த மாதம் இந்த போக்குவரத்து சிக்னல்கள் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சென்னை மாநகரில் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜ.டி.எஸ் சிக்னல்கள் என்று அழைக்கப்படும் இந்த போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பழைய சிக்னல்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

    • தமிழ்நாடு, கேரளா, புதுவை மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
    • காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுத்து கையை சுட்டுக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணம் தி.மு.க.வினரிடம் உள்ளது.

    பீகார் மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கூட்டணியை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பா.ஜ.க கூட்டணி இமாலய வெற்றியை ருசித்து உள்ளது.

    அதே நேரம் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியது தவறு என்ற குரல் அங்கும் ஒலிக்கிறது.

    அடுத்ததாக தமிழ்நாடு, கேரளா, புதுவை மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் மேற்கொள்ளப் போகும் கூட்டணி வியூகம் என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    தமிழகத்தை பொறுத்த வரை தி.மு.க. கூட்டணியில் நீண்ட காலமாக காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. தேர்தல் நேரங்களில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினைகள் உருவாகும். கடைசியில் சமாதானமாகி விடுவார்கள்.

    கடந்த காலங்களில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால்தான் தி.மு.க. ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது என்ற குற்றச்சாட்டும் உண்டு. இதனால் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் கணிசமாக குறைக்கப்பட்டன. கடந்த தேர்தலில் 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.

    ஆனால் வருகிற தேர்தலில் 25 தொகுதிகளை ஏற்கமாட்டோம். கூடுதல் தொகுதிகளை கேட்போம். ஆட்சியிலும் பங்கு கேட்போம் என்று காங்கிரசார் குரல் எழுப்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பீகார் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுத்து கையை சுட்டுக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணம் தி.மு.க.வினரிடம் உள்ளது. இதை வெளிப்படையாகவே சமூக வலைத்தளங்களில் விவாதிக்கிறார்கள்.

    பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், தமிழகத்தில் காங்கிரஸ் எந்த மாதிரி முடிவுகளை மேற்கொள்ளும் என்பது பற்றி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மாணிக்கம் தாகூர் கூறியதாவது:-

    பீகாரில் எஸ்.ஐ.ஆரால் பா.ஜ.க வெற்றி பெற்று உள்ளது. கடந்த தேர்தலில் எங்கெல்லாம் காங்கிரஸ் ஆர்.ஜே.டி. உள்ளிட்ட எதிர்கட்சிகள் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனவோ அங்கெல்லாம் சுமார் 30 ஆயிரம் வாக்குகளை தந்திரமாக நீக்கி இருக்கிறார்கள்.

    இதை தேர்தல் ஆணையம் சிஸ்டமேடிக்காக செய்து இருக்கிறது. இந்தநிலையில் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆரை அ.தி.மு.க. ஆதரிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

    பல மாநிலங்களில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை மூலம் நெருக்கடிகளை கொடுத்து கட்சிகளை உடைத்தது பா.ஜ.க. அதுபோல் நடந்துவிட கூடாது என்பதற்காக 2021-ல் தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டிய அவசியம் இருந்தது. அதற்காக அப்போது காங்கிரஸ் தியாகம் செய்தது. இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது.

    காங்கிரஸ் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும். காங்கிரஸ்காரர்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன்.

    கூட்டணி முடிவு, கூடுதல் தொகுதி, ஆட்சியில் பங்கு போன்ற முடிவுகளை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கு விசாரணையின் போது, புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • சென்னை ஐகோர்ட்டில் ராஜசேகரன் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை:

    2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நடநத அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டப்பட்டன.

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவ கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை. மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார்.

    2021-ம் ஆண்டு ஜூலை மாதம் அளிக்கப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த ஐகோர்ட், வழக்கை முடித்து வைத்திருந்தது.

    இந்த சூழ்நிலையில், புகார் அளித்து 5 ஆண்டுகள் கடந்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தனது புகார் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராஜசேகரன் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், தனது புகார் குறித்து விசாரணையை தொடங்கி உள்ளதாக கூறிய லஞ்ச ஒழிப்புத்துறை, எந்த முடிவையும் எட்டவில்லை என்பதால், தமிழக காவல்துறையினர் மீது நம்பிக்கை இழந்து விட்டேன்.

    மேலும், மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்றும் சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய புலன் விசாரணை அமைப்புகள் விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது நீதி பரிபாலனத்தில் குறுக்கிடுவது போல் உள்ளது.

    சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் விசாரணைக்கான அனுமதியை திரும்ப பெற்ற அரசாணையை ரத்து செய்து, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×