என் மலர்tooltip icon

    சென்னை

    • சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு வணிக வளாகத்திற்கும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரித்து டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், போர் பதற்றம் நிலவுவதால் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ், வி.ஆர். மால், ஸ்பென்சர் பிளாசா, விஜயா மால் உள்ளிட்ட இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வணிக வளாகத்திற்கும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்ற சூழல் எதிரொலியால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மால்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழ்நாட அரசு அறிவித்துள்ளது.
    • புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    தமிழ்நாடு முழுவதும் புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    15ம் தேதி முதல் புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழ்நாட அரசு அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1,842 புதிய மினி பேருந்துகளை இயக்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

    அதன்படி, புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    • மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    சென்னையில் நாளை (10-ந்தேதி) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அண்ணாசாலை: ஒயிட்ஸ் சாலை ஒரு பகுதி, அண்ணாசாலை ஒரு பகுதி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.சி. ஓட்டல், வாசன் அவென்யு, அண்ணாசாலை ஒரு பகுதி, ரஹேஜா டவர், ஜி.பி. சாலை, சத்தியமூர்த்தி பவன், இ.பி. காம்ப்ளெக்ஸ், இ.பி. லிங்க் சாலை, கிளப்ஹவுஸ், சிட்டி டவர், பட்டுலா சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யு, கலைக்கல்லூரி, பின்னி சாலை, வி.சி. சாலை, ஓட்டல் காஞ்சி, இந்தியன் வங்கி, டி.எல்.எப்., பாகன் பில்டிங், எத்திராஜ் கல்லூரி, சக்தி டவர்ஸ், சிட்டி வங்கி, மதுரா வங்கி, ஐ.ஓ.பி. வங்கி, ராணிமெய்யம்மை ஹாஸ்டல், ஏர்இந்தியா, அப்போலோ மருத்துவமனை, மார்ஷல் சாலை, மான்டியத் சாலை, கனரா வங்கி, கன்னிமாரா ஓட்டல், டேட்டா சென்டர், தாஜ் ஓட்டல்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பி.காம் கட்-ஆப் குறைய வாய்ப்பு.
    • நர்சிங், வேளாண்மை, கால்நடை, மீன்வள படிப்புகளுக்கு போட்டி அதிகரிக்கும்.

    பிளஸ்-2 தேர்வில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவ-மாணவிகள் வணிகவியல் பாடப்பிரிவு மதிப்பெண்களை விட அறிவியல் பாடங்களில் அதிகளவில் மதிப்பெண் பெற்று உள்ளனர்.

    கடந்த சில வருடங்களை விட இந்த ஆண்டு நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

    வணிகவியல் பாடத்தில் கடந்த வருடம் 6,142 பேர் சென்டம் பெற்று இருந்த நிலையில் இந்த ஆண்டு 1,624 பேர் மட்டுமே வாங்கி உள்ளனர். இந்த ஏற்றுத் தாழ்வுதான் பி.காம் கட்-ஆப் குறைவுக்கான வாய்பை உருவாக்கி உள்ளது.

    பொறியியல் படிப்பில் சேருவதற்கான கட்-ஆப் அதிகரிக்கும். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதன் கட்-ஆப் கூடும் என்றும் இதனால் டாப் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கு கடுமையான போட்டி இருக்கும் என்று கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறினார்.

    அண்ணா பல்கலைக் கழக வளாகக் கல்லூரிகள், பி.எஸ்.சி. தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு கடுமை யான போட்டி ஏற்படக் கூடும். 5 முதல் 10 கட்-ஆப் மதிப்பெண் வரை உயர்வ தற்கு வாய்ப்புள்ளது.

    டாப் கல்லூரிகளில் கடந்த வருடம் பி.காம் படிப்பில் சேருவதற்கு 100 சதவீத கட்-ஆப் மார்க் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது ஒன்று அல்லது 2 மதிப்பெண் குறைய வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர் தெரிவித்தார்.

    என்ஜினீயரிங் பாடப் பிரிவுகளுக்கு கட்-ஆப் மதிப்பெண் உயரும் நிலையில் வேளாண்மை, கால் நடை, மீன்வளம், வனத்துறை படிப்புகளுக்கான கட்-ஆப் ஒன்று அல்லது 3 மதிப்பெண் கூடும் என்று கருதப்படுகிறது.

    கடந்த சில வருடங்களாக பி.காம் பாடப்பிரிவுகளுக்கு கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில் இந்த ஆண்டு சற்று குறையக்கூடும். அதே நேரத்தில் என்ஜினீயரிங் படிப்புக ளுக்கு மவுசு அதிகரித்து உள்ளது.

    கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு இருப்பதால் அதற்கு போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கலை அறிவியல் பாடங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று இருப்பதால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் உயர்கல்வியில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

    • ராயப்பேட்டை பைகி ராப்ட் சாலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.12.37 கோடி மதிப்பீட்டில் 3 தளத்தில் பல்நோக்கு மையம் கட்டப்படுகிறது.
    • திருவல்லிக்கேணியில் 12 குடியிருப்புகள் கொண்ட கட்டிடம் மற்றும் ரூ.1.87 கோடியில் புதிய குடியிருப்பு கட்டிடங்களை துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.

    ராயப்பேட்டை பைகி ராப்ட் சாலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.12.37 கோடி மதிப்பீட்டில் 3 தளத்தில் பல்நோக்கு மையம் கட்டப்படுகிறது.

    அதே போல் திருவல்லிக்கேணி ஜானிபாட்ஷா தெருவில் ரூ.1.87 கோடி மதிப்பில் முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், பாரதி சாலையில் ரூ.1.37 கோடி செலவில் முதல்வர் படைப்பகம் கட்டும் பணிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனைக்கு எதிரே உள்ள பார்த்தசாரதி கோவில் ரூ.77.50 லட்சம் செலவில் 3 குடியிருப்புகள் மற்றும் திருவல்லிக்கேணி பி.பி.கோவில் தெருவில் ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் 12 குடியிருப்புகள் கொண்ட கட்டிடம் மற்றும் ரூ.1.87 கோடியில் புதிய குடியிருப்பு கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினிடம் போர் பதற்றம் சூழலில் காஷ்மீரில் சிக்கிய 41 தமிழக வேளாண் பல்கலைக்கழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று கேட்டனர்.

    அதற்கு உதயநிதி பதில் கூறும்போது, காஷ்மீரில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்டு கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.

    தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை முதல் 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    13-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    14 மற்றும் 15-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

    அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:

    நாளை முதல் 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

    இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

    நாளை முதல் 12-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:-

    12 மற்றும் 13-ந்தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக நடத்தப்படும் துணைத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
    • துணைத்தேர்வு எழுத விரும்புவோர் வரும் 14-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அவரவர் படித்த பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக நடத்தப்படும் துணைத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    ஜூன் 25-ந்தேதி தொடங்கி ஜூலை 2-ந்தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    துணைத்தேர்வு எழுத விரும்புவோர் வரும் 14-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அவரவர் படித்த பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.

    தனித்தேர்வர்கள் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக வரும் 14-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மாவட்ட வாரியான சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • ஜாமின் உள்ளிட்ட குற்ற வழக்குகளை நீதிபதி விக்டோரியா கவுரி விசாரித்தார்.
    • இரவு 9 மணி வரை வழக்குகளை விசாரித்த நீதிபதிகளுக்கு வக்கீல்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க வாரத்துக்கு 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் முதல் வாரம் நீதிபதிகள் என்.மாலா, எல்.விக்டோரியா கவுரி, ஜி.அருள்முருகன் ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், ஜாமின் உள்ளிட்ட குற்ற வழக்குகளை நீதிபதி விக்டோரியா கவுரி விசாரித்தார். இவர் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் வரை 700 வழக்குகளை விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்தார்.

    அதேபோல, நீதிபதிகள் என்.மாலா, ஜி.அருள்முருகன் ஆகியோர் காலை 10.30 மணி முதல் டிவிசன் பெஞ்ச் வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். இந்த வழக்குகள் எல்லாம் மாலை 5 மணிக்கு விசாரித்து முடித்தனர்.

    பின்னர், தனித்தனியாக விசாரிக்க வேண்டிய வழக்குகளை சுமார் 5.30 மணிக்கு விசாரிக்க தொடங்கி, இரவு 9 மணிக்கு விசாரித்து முடித்தனர். இதனால் கோடைக்கால வழக்கு விசாரணை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடந்தது.

    இதற்கு வக்கீல்களும் ஒத்துழைப்பு வழங்கினர். இரவு 9 மணி வரை வழக்குகளை விசாரித்த நீதிபதிகளுக்கு வக்கீல்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • பொது பிரிவு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் 600 ரூபாய் ஆகும்.
    • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 6971 இடங்கள் இந்த கல்வி ஆண்டில் நிரப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக இளம் அறிவியல் வேளாண் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவை வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் இன்று முதல் 8.6.2025 வரை இணையதளத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    பொது பிரிவு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் 600 ரூபாய் ஆகும்.

    ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் 300 ரூபாய் ஆகும்.

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 6971 இடங்கள் இந்த கல்வி ஆண்டில் நிரப்பட உள்ளது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, தொழில்முறை கல்வி பாட பிரிவினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான ஐந்து சதவீத இட ஒதுக்கீடு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு என்று சிறப்பு இட ஒதுக்கீடுகள் பின்பற்றப்பட உள்ளது.

    வேளாண்மை தகவல் தொழில்நுட்பம், உயிர் தகவலியல் என்ற இரண்டு புதிய படிப்புகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 80 மாணவர்கள் இந்த பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட உள்ளனர். இளம் அறிவியல் படிப்புகளுக்கு ஜூன் 16-ந்தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.

    வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் செய்ய தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது.
    • சமூக நலச் செயற்பாட்டு நிகழ்வுகளை மட்டும் மேற்கொண்டிட அறிவுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடத்திய பிறகு, இந்தியாவின் பல நகரங்களை தாக்க பாகிஸ்தான் முற்பட்ட நிலையில், அதனை முறியடித்து நம் நாட்டு மக்களை காத்து வரும் மேன்மைமிகு ராணுவப் படைகளுக்கு எனது வாழ்த்துகள்.

    மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது.

    இச்சூழலில், எதிர்வரும் எனது பிறந்தநாளை முன்னிட்டு என் உயிருக்கு உயிரான அன்பு கழக உடன்பிறப்புகள் யாரும் என்னை நேரில் சந்திப்பதையும், எந்த விதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    அதே சமயம், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த எளியோர்க்கான இரத்த தானங்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலச் செயற்பாட்டு நிகழ்வுகளை மட்டும் மேற்கொண்டிட அறிவுறுத்துகிறேன்.

    நமக்காக எல்லையில் போர் புரியும் நம் இராணுவ வீரர்கள் , நலமுடன் இருக்கவும், வெற்றி பெற்றிடவும் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களில், இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    • மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை.
    • மாணவர்களுடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.

    சென்னை:

    இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து எல்லை பகுதியில் உள்ள மக்கள் குறித்து உறவினர்கள் கவலை கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், கல்வி பயில காஷ்மீருக்கு சென்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 41 மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், உதவி தேவைப்படும் மாணவர்கள் 75503 31902 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ 80690 09901, 80690 09900 என்ற டோல்-ஃப்ரீ எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். nrtwb.chairman@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • கடந்த 1996-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தாா்.
    • மருத்துவக் குழுவினா் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனா்.

    சென்னை:

    மூத்த அமைச்சா் துரைமுருகன் வசமிருந்த கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை பறிக்கப்பட்டு, அவரிடம் சட்டத்துறை கூடுதலாக அளிக்கப்பட்டு உள்ளது. கனிம வளத்துறை பொறுப்பானது சட்டத்துறையை கவனித்து வந்த எஸ்.ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை பல்வேறு தரப்பிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த தி.மு.க. ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் பொதுப்பணி, சட்டத்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தாா். 2009-ம் ஆண்டு ஜூலையில் அவரது இலாகா அதிரடியாக மாற்றப்பட்டது.

    தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறதோ அப்போதெல்லாம் பொதுப்பணித்துறையை தனது வசம் வைத்திருந்த துரைமுருகனிடம் இருந்து அந்தத் துறையை திடீரென பறித்த கருணாநிதி, தனது வசமே அதை வைத்துக் கொண்டாா். அதன்பிறகு, சட்டத்துறை மட்டுமே துரைமுருகன் வசம் இருந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியிலும் அதே போன்ற அதிரடி மாற்றத்தை மூத்த அமைச்சரான துரைமுருகன் சந்தித்து உள்ளாா். நீா்வளத்துறையுடன் முக்கியத் துறையான கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை அவா் வசம் இருந்தது. இந்நிலையில், அவரிடம் இருந்து அந்தத் துறை பறிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 1996-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தாா். அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவா் மீது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஊழல் தடுப்புத் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சமீபத்தில் ஐகோர்ட்டு தீா்ப்பு அளித்தது. இந்தத் தீா்ப்பு துரைமுருகனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், கனிமம் மற்றும் சுரங்கத்துறையில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளும் அரசுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

    குறிப்பாக, குவாரிகளுக்கான குத்தகை காலத்தை அதிகரித்தது, பசுமை வரி செலுத்தி அண்டை மாநிலங்கள் மணல் எடுத்துச் செல்லும் நடைமுறை, இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குவாரிகளை மீண்டும் இயக்க அனுமதி அளித்தது போன்ற செயல்பாடுகள் அரசு மீது கடுமையான விமா்சனங்களை முன் வைத்தன. இந்த நிகழ்வுகளின் பின்னணி காரணமாகவே துரைமுருகனிடமிருந்து கனிமம் மற்றும் சுரங்கத்துறை பறிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே அமைச்சா் துரைமுருகன் (86) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்நோக்கு மருத்துவத்துறையினா் சிகிச்சை அளித்தனர்.

    அவருக்கு நெஞ்சகப் பகுதியில் அசவுகரியம் மற்றும் சளி பிரச்சனை இருப்பதாக தெரிய வந்து உள்ளது. மருத்துவக் குழுவினா் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனா்.

    ×