என் மலர்
சென்னை
- கரூர் சம்பவம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது
- நடந்ததை முழுமையாக புரிந்து கொள்ளவும், அதை ஜீரணிக்கவும் எனக்கு நேரம் தேவைப்பட்டது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். கரூர் சம்பவம் குறித்து த.வெ.க. தலைவர் விஜய் இதுவரை பேசாமல் இருந்தநிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து அவரது மனநிலையை தெரிவித்துள்ளார்.
என்டிடிவி நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* கரூர் சம்பவம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.
* கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தற்போது வரை என்னை துரத்தி கொண்டிருக்கிறது
* நடந்ததை முழுமையாக புரிந்து கொள்ளவும், அதை ஜீரணிக்கவும் எனக்கு நேரம் தேவைப்பட்டது.
* எல்லாவற்றிற்கும் நான் உடனடியாக எதிர்வினை ஆற்றுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ததில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் அதில் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.
- சிறப்பு வாய்ப்பாக பெயர்களை சேர்ப்பதற்கான அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
சென்னை:
பிறப்பு சான்றிதழ்களில் பெயர்களை சேர்ப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ப.செந்தில்குமார் பொது சுகாதாரத் துறை இயக்குனருக்கும், அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுவாகவே பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ததில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் அதில் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.
அதன் பின்னர் அத்தகைய வாய்ப்பு வழங்கப்படாது. இந்த நிலையில் கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன்னதாக பிறந்தவர்களும், அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக பெயர்களை சேர்ப்பதற்கான அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
தற்போது இறுதி வாய்ப்பாக வருகிற செப்டம்பர் 26-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அனைவரும் பெயர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதுதொடர்பான பரிந்துரைகளை பிறப்பு, இறப்பு பதிவு தலைமை பதிவாளர் அரசுக்கு அனுப்பியிருந்தார். அதனை பரிசீலித்த அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை அறிவிக்கின்றன.
- இதுபோன்ற அறிவிப்புகளால் மாநில அரசுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுகிறது.
சென்னை:
நாடு முழுவதும் வாக்காளர்களைக் கவரும் நோக்கில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சிகரமான திட்டங்களையும், இலவச அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் தாக்கம் குறித்து ஏற்கனவே பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் ஜெயசுகின், நரேந்தர்குமார் வர்மா ஆகியோர் தாக்கல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது.
அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதி திட்டங்களால் ஏற்படும் நிதிசார் பாதிப்புகள், அதற்கான நிதி முதலீடு குறித்து அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.
எனவே, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடுக்க தேர்தல் நடத்தை விதிகளைத் திருத்தவேண்டும்.
இலவச வாக்குறுதி திட்டங்களின் சாத்தியக் கூறுகளை ஆராய நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி போன்றவற்றின் நிபுணர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை கொண்டு ஆராய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இதே கோரிக்கைகள் கொண்ட வழக்குகளுடன் இந்த மனுவை இணைத்து விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.
- சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மேலும் நீட்டிக்கப்படுகிறது.
சென்னை:
இந்தியாவில் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே வாரியம் சார்பில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 3 எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 4-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, தஞ்சாவூர்-எழும்பூர் இடையிலான உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், கேரளா மாநிலம் கொல்லம்-எழும்பூர் இடையிலான அனந்தபுரி எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை பிப்ரவரி 3-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
எழும்பூர்-தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூர்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை பிப்ரவரி 4-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
எழும்பூர்-மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற எச்.ராஜானுக்கு உடல்நலக்குறைவு.
- எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் எச்.ராஜாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- அதிமுக பலமான கூட்டணி அமைத்துள்ளது, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
- தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
எம்ஜிஆரின் 109வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இவ்வாறு அவர் கூறினார்:-
காங்கிரஸ் கை கொடுக்கும் என்றார் உதயநிதி. ஆனால், இப்போது காங்கிரஸ் கை நழுவிவிட்டது.
அதிமுக பலமான கூட்டணி அமைத்துள்ளது, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வராக பதவியேற்றதும், 10 நாள் கூட ஆட்சி நிற்காது என்றார்கள், சிறப்பான ஆட்சியை கொடுத்தோம்.
இன்னும் 2 அமாவாசைகள் தான் உள்ளது. திமுகவின் ஆட்சிகாலம் முடியப்போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக அரசு, யாருக்காக ஆட்சி நடத்துகிறது? கடத்தல்காரர்களுக்கும், ரவுடிகளுக்குமா?
- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதைச் சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவத்திற்குத் வன்மையான கண்டனங்கள்.
தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் மீது தாக்குதல் நடந்த சம்பவத்திற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் தவெக கண்டனம் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் நடைபெறும், சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற NewsTamilTV24x7 செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல், கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கனிமச் சுரண்டலை கேள்வி கேட்டதற்காக, ஊடகவியலாளர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த ரவுடிகள், முழுக்க முழுக்க திமுகவின் பாதுகாப்பிலேயே செயல்படுகிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். திமுக அரசு, யாருக்காக ஆட்சி நடத்துகிறது? கடத்தல்காரர்களுக்கும், ரவுடிகளுக்குமா?
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக்குப் பின்னால் உள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவெக துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள கண்டன பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் பத்திரிகையாளர்கள் மீது திமுக எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்குக் கடும் கண்டனம்!
கிருஷ்ணராபுரம் பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கனிம வளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற 'நியூஸ் தமிழ்' செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்பட்ட கோரமான தாக்குதல் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
சட்ட விரோத முறைகேடுகள் நடப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற ஊடகவியலாளர்களை, ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி அவர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கியிருப்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் போற்றப்படும் ஊடகத்துறையின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதைச் சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவத்திற்குத் வன்மையான கண்டனங்கள். ஊடகச் சுதந்திரத்தை நசுக்கும் எந்தச் சக்தியையும் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மறக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதில், பொன்னியின் செல்வன்-1 படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருது அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பொன்னியின் செல்வன் -1 படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு திரைப்பட விருது பெறுவதில் பெருமை கொள்கிறேன்.
இந்த அங்கீகாரம் அளித்த தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி. விருது பெறும் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.600 குறைந்து ரூ.16,200-க்கு விற்பனை செய்யப்பட்டனது.
தங்கம், வெள்ளி விலை தினமும் புதிய உச்சம் என்ற பாணியை கையில் எடுத்துவிட்டது. விலை உயர்ந்தாலே உச்சம் என்ற போக்கிலேயே 'கிடுகிடு'வென அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.5,200 அதிகரித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து காணப்பட்டது.
நேற்றும் தங்கம் கிராமுக்கு ரூ.1,190-ம், சவரனுக்கு ரூ.9 ஆயிரத்து 520-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்த நிலையில் சவரன் ரூ.1,26,000-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்து ரூ.1,29,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.600 குறைந்து ரூ.16,200-க்கு விற்பனை செய்யப்பட்டனது.
சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்த நிலையில் தற்போது மேலும் ரூ.2,800 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்க ரூ.950 குறைந்த நிலையில் ரூ.15,850க்கு விற்பனையாகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை காலை மற்றும் மாலை என இருவேளையும் தலா ரூ.10,000 ஒரு கிலோ ரூ.405 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
- 2011-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து அந்த கட்சி தோல்வியையே தழுவி வந்துள்ளது.
- வருகிற சட்டமன்றத் தேர்தல் அந்த கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும்.
சென்னை:
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக தே.மு.தி.க. தீவிரமாக தயாராகி வருகிறது.
கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த் அடுத்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலேயே களமிறங்கினார்.
இந்த தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. 8.4 சதவீத வாக்குகளை பெற்றது. முதல் தேர்தலிலேயே விஜயகாந்த் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. சாதித்து காட்டியது. அந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் பாராளுமன்ற தேர்தலில் 10 சதவீதமாக கூடியது.
இப்படி 2 தேர்தல்களில் பெரிய அளவில் வாக்குகளைப் பெற்ற தே.மு.தி.க. 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. இந்தத் தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 இடங்களில் வெற்றி பெற்றது. தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் அப்போது 7.9 சதவீதமாக இருந்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் அமர்ந்தார்.
இப்படி கட்சியை தொடங்கிய பிறகு தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் கவனம் ஈர்த்த தே.மு.தி.க. இதன் பின்னர் நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் வெற்றி பெறவில்லை. 2011-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து அந்த கட்சி தோல்வியையே தழுவி வந்துள்ளது.
2016-ம் ஆண்டு தேர்தலில் அமைக்கப்பட்ட மக்கள் நல கூட்டணி தே.மு.தி.க.வுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
அந்த தேர்தலில் விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை களமிறங்கின. 103 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் 2.4 ஆக குறைந்தது.
இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் நடத்தப்பட்ட கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதன் காரணமாக டி.டி.வி. தினகரனுடன் கூட்டணி அமைத்து தே.மு.தி.க. தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் மொத்தம் 60 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. வாக்கு சதவீதம் 0.43 ஆக அடியோடு சரிந்தது.
இப்படி தமிழக தேர்தல் களத்தில் தே.மு.தி.க. எப்படி எழுச்சி பெற்றதோ அதே போன்று வீழ்ச்சியையும் சந்தித்திருக்கிறது.
இது போன்ற சூழலில் தான் வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தே.மு.தி.க. தயாராகி வருகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அந்தக் கட்சிக்கு மீண்டும் தோல்வியே பரிசாக கிடைத்தது. மேல் சபை எம்.பி. பதவியை தருவதாக அ.தி.மு.க. உறுதி அளித்திருந்த நிலையில் அதனை அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் அ.தி.மு.க. மீது தே.மு.தி.க. கடும் கோபத்திலேயே உள்ளது.
இது போன்ற சூழலில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தே.மு.தி.க.வுக்கு பெரும் சவாலாக மாறி இருக்கிறது. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று இன்னும் முடிவெடுக்காத அந்த கட்சி தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
வருகிற சட்டமன்றத் தேர்தல் அந்த கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். இதனை கருத்தில் கொண்டு சட்டமன்றத் தேர்தலில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் தே.மு.தி.க. என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அ.தி.மு.க, தி.மு.க. 2 கட்சிகளிடமும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும், ஒரு மேல் சபை எம்.பி. பதவியை ஒதுக்கி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தே.மு.தி.க. பிரதானமாக முன் வைத்திருக்கிறது. இதுவே 2 கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதற்கு தடைக்கல்லாகவே இருந்து வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
தே.மு.தி.க.வுக்கு 10 இடங்கள் வரையில் ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. முன் வந்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும் தே.மு.தி.க.வோ, பா.ம.க.வுக்கு இணையாக தங்களுக்கு 17 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் பல்வேறு சிறிய கட்சிகள் இடம் பெற்றிருப்பதால் அவற்றுக்கெல்லாம் தொகுதிகளை ஒதுக்கி கொடுக்க வேண்டி இருப்பதால் 10 தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொள்ளுமாறு தே.மு.தி.க.விடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அதனை அந்த கட்சி ஏற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகள் வரை ஒதுக்கி தருவதாக தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள தே.மு.தி.க. தயங்குவதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒரே நேரத்தில் தே.மு.தி.க. 2 கட்சிகளுடனும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாலேயே தே.மு.தி.க. இன்னும் கூட்டணி முடிவை எடுக்காமல் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் பலரும் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.
இதன் காரணமாக வருகிற சட்டமன்றத் தேர்தலில் பிரேமலதா எடுக்கும் முடிவு அந்த கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லுமா? என்கிற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இது தொடர்பான கேள்விகளுக்கெல்லாம் தொடர்ந்து ஒரே வரியிலேயே பிரேமலதா பதில் அளித்து வருகிறார்.
இன்னும் கூட்டணிக்கு கால அவகாசம் உள்ளது. பொறுத்திருந்து பாருங்கள் என்பதே அவரது பதிலாக இருந்து வருகிறது.
- இந்தியாவிலேயே ஆவின் நிறுவனம் தான் மிகக் குறைந்த விலைக்கு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து வருகிறது.
- ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் குறைவான விலையில் பால் கிடைக்கும்போது, அதை முழுமையாக கொள்முதல் செய்யாமல், கர்நாடகத்திலிருந்து அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக பால் உற்பத்தியாளர் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. தமிழ்நாட்டு உழவர்களுக்கு துரோகம் செய்து விட்டு, அண்டை மாநிலத்திலிருந்து அதிக விலை கொடுத்து பால் வாங்குவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
பால் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களின் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டில் தினமும் 1.70 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இதில் தினமும் 30 லட்சம் லிட்டர் முதல் 34 லட்சம் லிட்டர் வரை தான் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது தமிழகத்தின் மொத்த பால் உற்பத்தியில் 17.60% முதல் 20% வரை தான். ஆவின் நிறுவனம் நினைத்தால் தமிழ்நாட்டில் அதன் பால் கொள்முதல் அளவை இரட்டிப்பாக்குவது கூட சாத்தியம் தான். ஆனால், அதைச் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்து பால் கொள்முதல் செய்யும் முயற்சியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
இந்தியாவிலேயே ஆவின் நிறுவனம் தான் மிகக் குறைந்த விலைக்கு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து வருகிறது. இதை பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்ததைத் தொடர்ந்து பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 , எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என்ற கொள்முதல் விலையுடன் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் கூட கட்டுபடியாகக்கூடிய விலை அல்ல.
அதே நேரத்தில் கர்நாடகத்தில் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42 கொள்முதல் விலையுடன், ரூ.5 ஊக்கத் தொகை சேர்த்து ரூ.47 வழங்குகிறது. தமிழ்நாட்டில் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ரூ.38-க்கும் ஒரு லிட்டர் பசும்பால் கிடைக்கும் நிலையில், அதைக் கொள்முதல் செய்யாமல் கர்நாடகத்தில் லிட்டருக்கு ரூ.2 அதிக விலை கொடுத்து பசும்பாலை கொள்முதல் செய்வதும், அதை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர போக்குவரத்துச் செலவாக லிட்டருக்கு ரூ.3 செலவழிப்பதும் வணிகரீதியாக அறிவார்ந்த செயல் அல்ல. ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் பாலை கர்நாடகத்திலிருந்து ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்வதாக வைத்துக் கொண்டால் தினமும் ரூ.50 லட்சமும், மாதத்திற்கு சுமார் ரூ.15 கோடியும் ஆவின் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படும்.
ஏற்கனவே ஆவின் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.525 கோடிக்கும் கூடுதலாக இழப்பை சந்தித்து வரும் நிலையில், கர்நாடகத்திடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டால், ஆண்டு இழப்பு மேலும் ரூ.200 கோடி வரை அதிகரிக்கக் கூடும். அதுமட்டுமின்றி ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தமிழக பால் உற்பத்தியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி, ஆவின் நிறுவனத்திற்கும் இழப்பை ஏற்படுத்தும் வகையில் இப்படி ஒரு முடிவை ஆவின் நிறுவனமும், தமிழ்நாடு அரசும் எதற்காக எடுத்தன? என்பதை உழவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒருவேளை ஆவின் நிறுவனத்திற்குத் தேவையான பால் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை என்றால், அதற்கான காரணங்கள் என்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றை சரி செய்வது தான் பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தான் பால் கொள்முதலை அதிகரிப்பதற்கு வகை செய்யும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே ஒரு முறை தான் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. அதன்பின் 2023-ஆம் ஆண்டு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஊக்கத்தொகையும் கூட முறையாக வழங்கப்படுவதில்லை. கடைசியாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு 25 மாதங்களாகும் நிலையில், அதன்பின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை.
அதேநேரத்தில் ஆவின் நிறுவனத்தை விட தனியார் பால் நிறுவனங்கள் அதிக கொள்முதல் விலை வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுவும் கூட ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவு குறைந்ததற்கு காரணமாக இருக்கக்கூடும். சிக்கலுக்குத் தீர்வு என்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக அண்டை மாநிலத்திற்கு சென்று அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்வது சிக்கலைத் தீர்ப்பதற்கு பதிலாக மேலும் சிக்கலாக்கவே வகை செய்யும். எனவே, கர்நாடகத்தில் இருந்து பால் கொள்முதல் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்; மாறாக, பசும் பால் கொள்முதல் விலையை கர்நாடகத்திற்கு இணையாக லிட்டருக்கு ரூ.45 வீதம் உயர்த்தி வழங்குவதன் மூலம் கொள்முதலை அதிகரிக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- 4 மற்றும் 5-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
1-ந்தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
2-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
3-ந்தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
4 மற்றும் 5-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.






