என் மலர்tooltip icon

    சென்னை

    • அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் 2023 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
    • 2024 இல் பாஜகவில் இருந்து விலகி மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.

    அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

    அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் 2023 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் 2024 இல் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.

    தற்போது மைத்ரேயன் அதிமுகவில் இருந்தும் விலகி தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

    முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நேற்று சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 6-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதிக்கு பிறகு விலை சரிவடைந்து வந்த நிலையில் மீண்டும் இந்த உச்சத்தை தொட்டது.

    அதன் தொடர்ச்சியாகவும் விலை குறைந்தபாடில்லை. மீண்டும் ஏறுமுகத்திலேயே பயணித்தது. இதனால் கடந்த 8-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.75,760-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.

    இதனைத் தொடர்ந்து விலை சற்று குறையத் தொடங்கியது. அந்தவகையில் நேற்றும் விலை சரிந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,295-க்கும், சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360

    11-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,000

    10-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560

    09-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560

    08-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-08-2025- ஒரு கிராம் ரூ.126

    11-08-2025- ஒரு கிராம் ரூ.127

    10-08-2025- ஒரு கிராம் ரூ.127

    08-08-2025- ஒரு கிராம் ரூ.127

    09-08-2025- ஒரு கிராம் ரூ.127

    • 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார்.
    • சகோதரர் ரஜினிகாந்துக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இப்பொன்விழா ஆண்டில் #Superstar நடிப்பில் நாளை வெளியாகவுள்ள #Coolie திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
    • அரசு அலுவலர்களுக்கான தொடர் விடுமுறை நாளாக உள்ளது.

    சென்னை சைதாப்பேட்டையில், தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்கள் வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் வாரத்தில் 44,418 பேரும், 2-வது வாரத்தில் 48,418 பேரும் பயன்பெற்றுள்ளனர். வரும் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி அன்று அரசு விடுமுறை என்பதுடன், அரசு அலுவலர்களுக்கான தொடர் விடுமுறை நாளாக உள்ளது. எனவே, வரும் வாரம் சனிக்கிழமை அன்று, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

    அடுத்த வாரம் சனிக்கிழமை, 38 மாவட்டங்களிலும் முகாம் நடத்தப்படும். ஆறு மாதங்களில், 1,256 இடங்களில் முகாம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாட்டின் சுதந்திர தின விழா ஆகஸ்டு 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • தேசியக் கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது.

    சென்னை:

    பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாட்டின் சுதந்திர தின விழா ஆகஸ்டு 15-ந்தேதி (நாளை மறுதினம்) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும்.

    இதுதவிர ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், புரவலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்குபெற செய்ய வேண்டும். பிளாஸ்டிக் வகை தேசியக் கொடிகளை கண்டிப்பாக விழாவில் பயன்படுத்தக் கூடாது. அதேபோல், தேசியக் கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது.

    இதுசார்ந்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சீமான் மீதான வருண் குமார் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு.
    • சீமான் மனு மீதான இறுதி விசாரணை வருகிற 20ஆம் தேதி நடைபெறும்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கிற்கு தடைகோரி சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து சீமானுக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

    இந்த தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீட்டித்துள்ளது. மேலும், வழக்கின் இறுதி விசாரணை வரும் 20ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் நாளை மறுதினம் ரிலீசாக உள்ளது.
    • கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    கூலி திரைப்படம் நாளை மறுதினம் ரிலீசாக உள்ளது.

    இந்நிலையில், கூலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

    அதன்படி, ரிலீஸ் நாளில் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகளைத் திரையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    • கூட்டணியில் இருப்பதால் தவறுகளை கம்யூனிஸ்டுகள் சுட்டுகாட்டாமலும் இல்லை. இதை நான் ஏற்க மறுப்பதும் இல்லை.
    • நமக்குள் இருப்பது தேர்தலுக்கான நட்பு அல்ல. கொள்கை நட்பு.

    சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது எனக்கு கிடைத்த பெருமை.

    * ஏகாதிபத்திய சதியை முறியடிக்க வேண்டிய தேவை தற்போது உருவாகியுள்ளது.

    * அமெரிக்கா விதித்த பொருளாதார தடையை மீறி கியூபாவில் ஆட்சி நடத்தினார் ஃபிடல் காஸ்ட்ரோ.

    * இந்தியா மீது 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்திருப்பதற்கு மத்திய அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.

    * இந்தியா- பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என டிரம்ப் கூறுகிறார். இதுகுறித்து பிரதமர் பதில் கூறவில்லை.

    * அடிமைத் தனத்தை பற்றி பழனிசாமி பேசலாமா?. இங்கு யாருக்கும் யாரும் அடிமையில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு தீக்கதிர் படிக்கும் பழக்கம் இருக்காது. நான் தினந்தோறும் தீக்கதிர் படிக்கிறேன்.

    * கூட்டணியில் இருப்பதால் தவறுகளை கம்யூனிஸ்டுகள் சுட்டுகாட்டாமலும் இல்லை. இதை நான் ஏற்க மறுப்பதும் இல்லை.

    * கம்யூனிஸ்டுகள் என்னில் பாதி, ஏனெனில் என்னுடைய பெயரே ஸ்டாலின்.

    * எடப்பாடி பழனிசாமிக்கு அண்மையில் கம்யூனிஸ்டுகள் மேல் பாசம் பொத்துக்கொண்டு வருகிறது.

    * நமக்குள் இருப்பது தேர்தலுக்கான நட்பு அல்ல. கொள்கை நட்பு.

    இவ்வாறு முலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

    • தமிழக வனப்பகுதிகளில் 3,063 யானைகள் உள்ளது.
    • யானைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி உலக யானைகள் தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக வனப்பகுதிகளில் 3,063 யானைகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது

    யானைகள் இருந்தாலும் ஆயிரம் பொன், செத்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் யானைகள் வாழ்வதற்கான உகந்த இடமாக உள்ளது. யானைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது

    இந்நிலையில், தண்டவாளத்தைக் கடக்கும்போது ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க உதவும் AI தொழில்நுட்பம் இணைக்கப்பட்ட கேமராக்கள் கொண்ட நுண்ணறிவு எச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த கேமராக்கள் பயன்பாடு தொடங்கிய நவம்பர் 2023-ம் ஆண்டு முதல் ஒரு யானை கூட உயிரிழக்கவில்லை என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.



    • நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் தலைவரின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • தலைவர் பதவிக் காலத்தை நீட்டித்தது கட்சி விதிகளுக்கு முரணானது.

    பா.ம.க. பொதுக்குழுவை அன்புமணி ராமதாஸ் கூட்டியதற்கும், அதில் அவர் தலைவராக நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கும் எதிராக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

    கட்சியின் நிறுவனரான தனக்கு அழைப்பு விடுக்காமல் அன்புமணி பொதுக்குழுவை நடத்தியுள்ளார். அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதம். நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் தலைவரின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக் காலத்தை நீட்டித்தது கட்சி விதிகளுக்கு முரணானது. அன்புமணி மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.

    • டெல் நிறுவனம் ஒரு மடிக்கணினி (15.6 இன்ச் ஸ்கிரீன்) ரூ. 40826 என விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது.
    • ஏசர் நிறுவனம் ஒரு மடிக்கணினி (14 இன்ச்) ரூ. 23,385 என சமர்ப்பித்துள்ளது.

    கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் சுமார் 20 லட்சம் மடிக்கணினி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விலைகளை கோர ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது.

    அதன்படி பல நிறுவனங்கள் தங்களது விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது. இதில் டெல் நிறுவனம் ஒரு மடிக்கணினி (15.6 இன்ச் ஸ்கிரீன்) ரூ. 40826 என விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது. ஏசர் நிறுவனம் ஒரு மடிக்கணினி (14 இன்ச்) ரூ. 23,385 என சமர்ப்பித்துள்ளது.

    இம்மாத இறுதிக்குள் லேப்டாப் கொள்முதல் ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

    2025-26 தமிழக பட்ஜெட்டில் கல்லூரி மாணவிகளுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவிப்பட்டது. முதற்கட்டாக 10 லட்சம் மடிக்கணினி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரவு அறிவித்தார்.

    • மூத்த மகள் சஞ்சி ஸ்ரீ டாக்டருக்கு படித்து வருகிறார்.
    • கடந்த 2 மாதங்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்த மதன ஸ்ரீ சோகத்துடனேயே காணப்பட்டார்.

    பெரம்பூர்:

    சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் தெருவில் வசித்து வருபவர் ஹரிஷ் குமார். இவர் தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சஞ்சி ஸ்ரீ டாக்டருக்கு படித்து வருகிறார். அக்காவை பார்த்து 2-வது மகள் மதன ஸ்ரீயும் டாக்டருக்கு படிக்க விரும்பினார்.

    இதற்காக அவர் நீட் தேர்வு எழுதி இருந்தார். கடந்த ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியானபோது குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வி அடைந்திருந்தார். இதனால் கடந்த 2 மாதங்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்த மதன ஸ்ரீ சோகத்துடனேயே காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு 11 .30 மணி அளவில் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று மதன ஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் போலீ சார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    நீட் தேர்வால் மாணவிகள் பலர் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொண்டு உள்ள நிலையில் சென்னை கொடுங்கையூரிலும் நேற்று மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×