என் மலர்
சென்னை
- கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
- அச்சு ஊடகத்தின் மேல்நோக்கிய வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது.
சென்னை:
நமது நாட்டில் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்களின் வினியோகத்தை தணிக்கை செய்து சான்றளிக்கும் பணியை ஏ.பி.சி. என்று அழைக்கப்படும் பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு செய்துவருகிறது.
அந்தவகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்துக்கான தணிக்கை அறிக்கையை பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பின் பொதுச்செயலாளர் ஆதில் கசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் 2 கோடியே 89 லட்சத்து 41 ஆயிரத்து 876 பிரதிகள் விற்பனையாகி இருந்தது.
நடப்பு ஆண்டின் முதல் பாதியான கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையுள்ள காலக்கட்டத்தில் 2 கோடியே 97 லட்சத்து 44 ஆயிரத்து 148 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது. இது முந்தைய 6 மாதத்தோடு ஒப்பிடுகையில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 272 பிரதிகள் அதிகம்.
மேலும் கடந்த ஆண்டின் 2-ம் பாதியை விட 2.77 சதவீதம் உயர்வு ஆகும். இது அச்சு ஊடகத்தின் மேல்நோக்கிய வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது.
நாளிதழ்களின் விற்பனை அதிகரித்திருப்பது நம்பகமான, உறுதிப்படுத்தப்பட்ட, ஆழமான தகவல்களுக்காக வாசகர்கள் செய்தித்தாள்களை தொடர்ந்து நம்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. நாளிதழ்களின் விற்பனை எழுச்சியடைந்திருப்பது அச்சு ஊடகத்தின் வலுவான செயல்திறனை குறிப்பதோடு, செய்தி பயன்பாடு மற்றும் விளம்பர ஈடுபாட்டுக்கான வலிமையான ஊடகமாக அதன் நிலையையும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும்.
- பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் இன்று 10 வார்டுகளில் நடைபெற உள்ளது.
மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், அடையாறு உள்ளிட்ட 10 வார்டுகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெறும்.
பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
- கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்கிறது.
- நகை வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகையை பொறுத்தமட்டில் ரூ.1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை வரம்பு ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.
சென்னை:
யு.பி.ஐ. மூலம் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கும், பங்குச்சந்தை முதலீடு, கடனை திரும்ப செலுத்துதல் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்காகவும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தொகையை பரிவர்த்தனை செய்யலாம் என அமலில் இருந்த விதிமுறையை மாற்றி ஏற்கனவே இருந்து வரும் பணபரிவர்த்தனை தொகையை உயர்த்தி இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (என்.பி.சி.ஐ.) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி பங்குச்சந்தை முதலீடு, காப்பீட்டு பிரிமீயம், கடன் மற்றும் கடன் தவணை, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை போன்ற நிறுவனங்களுக்கான பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் யு.பி.ஐ. மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அனுப்பலாம் என இருந்ததை ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகையை பொறுத்தமட்டில் ரூ.1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை வரம்பு ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.
தனிநபர் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொருவரின் கணக்கிற்கு அனுப்பும் பண பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் ஏற்கனவே அமலில் இருப்பது போன்று ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது. கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம், ஐ.பி.ஓ. (முதல் பங்கு வெளியீடு) போன்றவற்றுக்கான பரிவர்த்தனையும் ஏற்கனவே இருப்பது போன்று ரூ.5 லட்சமாக தொடர்கிறது.
இந்த உயர்த்தப்பட்ட பரிவர்த்தனை வரம்பு வருகிற 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- வரும் 18-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை தஞ்சாவூாில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படும்.
- கொல்லத்தில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு காலை 5.20 மணிக்கு வந்தடையும்.
சென்னை:
எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணி காரணமாக எழும்பூர்-தஞ்சாவூர், எழும்பூர்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16865), வரும் 17-ந்தேதி முதல் நவம்பர் 9-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும். மறுமார்க்கமாக, தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16866), வரும் 18-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை தஞ்சாவூாில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும். மறுமார்க்கமாக, தஞ்சாவூரில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்தடையும்.
எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20635), வரும் 17-ந்தேதியில் இருந்து நவம்பர் 9-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636), வரும் 18-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரையில் கொல்லத்தில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு காலை 5.20 மணிக்கு வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இளையராஜா பொன்விழா கொண்டாட்ட விழா தமிழக அரசு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது. சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.
இளையராஜா பொன்விழா கொண்டாட்ட விழா, தமிழக அரசு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 13-ம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்த விழா நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடக்கிறது. இதில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், தனது சினிமா பயணம் அரை நூற்றாண்டை எட்டியுள்ளதை ஒட்டி கொல்லூர் மூகாம்பிகா தேவிக்கும், வீரபத்ர சுவாமிக்கும் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம், வைர மாலை மற்றும் தங்க வாள் காணிக்கையாக செலுத்தினார் இளையராஜா.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்துக்கு உட்பட்ட கொல்லூருக்கு வந்த இளையராஜா கோவிலுக்குச் சென்று வழிபட்ட பின், நகைகளை காணிக்கையாக செலுத்தினார். நகைகளைச் சமர்ப்பிக்கும் முன், கோயில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்களுடன் இளையராஜா ஊர்வலத்தில் கலந்துகொண்டார். நன்கொடைகளை வழங்கிய இளையராஜாவுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
பிரபல இசையமைப்பாளரிடமிருந்து கோவிலுக்கு இவ்வளவு பெரிய நன்கொடை கிடைத்தது பக்தர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லூர் தாய் மூகாம்பிகையின் தீவிர பக்தர் இளையராஜா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- செப். 11 முதல் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே அறிவிப்பை திரும்பப் பெற்றது.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம் அமைத்தல், அடிப்படை வசதிகள் மேம்படுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால், செப். 11 முதல் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது.
இதனால், சென்னை எழும்பூர்-திருச்சி ராக்போர்ட், எழும்பூர்-மதுரை பாண்டியன், எழும்பூர் - திருச்சி சோழன் ஆகிய 3 விரைவு ரெயில்கள் எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை.
- 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வட தமிழகம் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- கோயம்பேடு - அசோக் நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை இருக்காது.
- சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் கோயம்பேடு வரை மட்டுமே செல்லும்.
சென்னை வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மேல் 2ம் கட்ட வழித்தட கட்டுமானப் பணிகளால் வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதிகள் வரை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 நாட்களில், காலை 5 மணி முதல் 6 மணி வரை கோயம்பேடு - அசோக் நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை இருக்காது.
மேற்குறிப்பிட்ட நேரத்தில், விமான நிலையம்/ செயிண்ட் தாமஸ் மவுண்டில் இருந்து புறப்படும் ரயில்கள் அசோக் நகர் வரை மட்டுமே இயங்கும்.
அதேபோல, சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் கோயம்பேடு வரை மட்டுமே செல்லும். பயணிகள் வசதிக்காக அந்த நேரத்தில் மட்டும் கோயம்பேடு - அசோக்நகர் இடையே 10 நிமிட இடைவேளையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மற்ற நேரங்களில் வழக்கமான ரெயில் சேவை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விலைவாசியை மட்டும் உயர்த்தி மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா?
- திமுகவின் ஆட்சிக் கனவு இனி ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 -ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4 -ம் குறைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?
மக்களுக்கு போலி நம்பிக்கைகள் கொடுத்து எப்படியெல்லாம் வித விதமாக ஏமாற்றலாம் என ஒரு போட்டி வைத்தால் அதில் திமுக மட்டும் தான் தனித்து வெற்றி பெறும். அந்தளவிற்கு நாள்தோறும் பொய்களிலும் புரளிகளிலும் புரண்டு கொண்டிருக்கும் தில்லுமுல்லு திமுகவின் அடுத்த போலி தேர்தல் வாக்குறுதி தான், வாக்குறுதி எண் 504.
அதாவது, மக்கள் நலனுக்காக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 -ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4 -ம் குறைக்கப்படும் என வாய்க்கூசாமல் வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் கடந்தும் அதைப்பற்றி வாயைத் திறக்காமல் தப்பித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்காமல் விலைவாசியை மட்டும் உயர்த்தி மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா? இந்த லட்சணத்தில் நாடு போற்றும் நான்காண்டு என வெற்று விளம்பரங்கள் வேறு.
கொடுத்த வாக்கின்படி பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டின் விலையையும் இன்று வரை குறைக்காத திமுக
அரசு, இனியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றப் போவதில்லை என்பதும், வரும் சட்டமன்றத் தேர்தலில் இதற்கு என்ன எதிர்வினையாற்ற வேண்டும் என்பதும் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். திமுகவின் ஆட்சிக் கனவு இனி ஒருபோதும் பலிக்கப் போவதில்லை!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அமித் ஷா- செங்கோட்டையனின் ரகசிய சந்திப்பு தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.
- இபிஸ் முதல் செங்கோட்டையன் வரை பாஜகவிடம் சரண் அடைந்துவிட்டனர்.
அதிமுகவில் எந்த பிரச்னை என்றாலும் அமித்ஷாவை சந்திக்கிறார்கள்; அதிமுக டெல்லியில் இருந்து நடத்தப்படுகிறது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆ.ராசா கூறியதாவது:-
மத்திய அமைச்சர் அமித் ஷாவும், செங்கோட்டையனும் சந்தித்தது ஒரு மறைமுகமான செயல்.
செங்கோட்டையன் அதிமுகவில் இருக்கக்கூடியவர். பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்திருக்கிறார்.
ஆனால், இருவரும் மவுனமாக உள்ளனர். எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்த ரகசிய சந்திப்பு தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.
பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் அதிமுக எப்போதோ சென்றுவிட்டது. இபிஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் தற்போது செங்கோட்டையன் என பாஜகவிடம் சரண் அடைந்துவிட்டனர்.
அதனால், இபிஎஸ்., அல்லது தமிழ்நாடோ அதிமுகவை இயக்கவில்லை. டெல்லியில் இருந்து அதிமுக இயக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எதிர்கால நியமனங்களுக்கு டெட் கட்டாய தேர்வாக இருக்க வேண்டும் என்பதை அரசு ஆதரிக்கும்.
- தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
ஆசிரியர்கள் பணியில் தொடர TET தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதைதொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும்,"எதிர்கால நியமனங்களுக்கு டெட் கட்டாய தேர்வாக இருக்க வேண்டும் என்பதை அரசு ஆதரிக்கும்" என்றார்.
இதுகுறித்த அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பதிவில்," TET தேர்வு! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
- இரண்டு வருடத்திற்கும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
- இல்லையென்றால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.
இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் ஆகும்.
தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் 2011-12 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
ஆனால் 2012-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? என்ற கேள்வி இருந்தது. அதற்கு விடையளிக்கும் வகையில்தான் உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதாவது கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக தமிழ்நாடு அரசின் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது என கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தை சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.






