என் மலர்tooltip icon

    சென்னை

    • விஜயின் பிரசார சுற்றுப்பயணம் 15 கட்டங்களாக நடக்கிறது.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    சென்னை:

    2026- தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) முதல் தமது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

    அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் நாளை காலை 10.30 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து தொடங்குகிறது.

    இதற்காக விஜய் நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார். பின்னர் விமான நிலையத்திலிருந்து பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ள திறந்தவெளி பிரசார வாகனத்தில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் அலுவலகம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா வழியாக மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை செல்கிறார். அங்கு திறந்த வேனில் நின்றபடி அரை மணிநேரம் உரையாற்றுகிறார்.

    முன்னதாக பிரசார வாகனம் இன்று மாலைக்குள் சென்னையில் இருந்து திருச்சிக்கு கொண்டுவரப்படுகிறது. திருச்சி பிரசாரத்தை முடித்துக் கொண்டு காந்தி மார்க்கெட் தஞ்சாவூர் ரோடு வழியாக பால் பண்ணை சென்று சிதம்பரம் பைபாஸ் வழியாக அரியலூர் புறப்பட்டு செல்கிறார்.

    பின்னர் அரியலூர் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் மதியம் 12 மணியளவில் திறந்த வெளி வாகனத்தில் மக்களை சந்தித்து பேசுகிறார்.

    அதன் பின்னர் அங்கிருந்து மருதையான் கோவில் வழியாக பெரம்பலூர் மாவட்டம் குன்னம் புறப்பட்டு செல்கிறார். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு இடங்களில் 21 நிபந்தனைகளுடன் ஒரு மணி நேரம் பேச காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. குன்னம் பஸ் நிலையத்தில் மாலை 4 மணிக்கு பிரசாரம் செய்கிறார். அதன் பின்னர் பேரளி வழியாக பெரம்பலூர் நான்கு ரோடு பாலக்கரை சங்குப்பேட்டை வழியாக மேற்கு வானொலி திடல் செல்கிறார். அங்கு மாலை 5 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறார்.

    திருச்சியில் ஸ்ரீரங்கம், சத்திரம் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள அக்கட்சியினர் அனுமதி கோரினர். ஆனால் மரக்கடை பகுதியில் ஓரிடத்தில் மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. விஜய் வருகையை முன்னிட்டு திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. விஜய்யை வரவேற்று ஆங்காங்கே பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளது.



    சாலைகளில் கட்சிக் கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் நடைபெறும் முதல் பிரசாரக் கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    மேலும் வார இறுதி நாள் என்பதால் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் பல்லாயிரக்கணக்கில் திரளாக பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

    விஜய் வருகையால் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரது இந்த சுற்றுப்பயணம் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமையும் என நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விஜய் வருகையை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கடந்த 2 நாட்களாக மூன்று மாவட்டங்களிலும் முகாமிட்டு முன்னேற்பாடு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். பெரம்பலூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார். நாளை தொடங்கும் விஜயின் பிரசார சுற்றுப்பயணம் 15 கட்டங்களாக நடக்கிறது. டிசம்பர் 20-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதனிடையே, விஜய்யின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு லோகோ வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுப்பயண லோகோவில் உங்க விஜய் நா வரேன் என்ற வாசகத்துடன் விஜய் நிற்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்று உள்ளது. மேலும் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு போன்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

    அண்ணா அட்சி அமைத்த 1967, எம்ஜிஆர் ஆட்சி அமைத்த 1977 ஆண்டுகளுடன் 2026-ஐ குறிப்பிட்டு லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

    • அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் கேட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
    • மாநில அரசு உடனடியாக தலையிட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கூடுதல் கட்டாய கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.மக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    22 தனியார் மருத்துவ கல்லூரிகளிலும், 4 மருத்துவ பல்கலைக் கழகங்களிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே நடைபெற்ற கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டில் இடங்களை பெற்ற மாணவர்களிடம் அரசு நிர்ணயித்ததை விட ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாகவும், இதனை வெளியில் சொன்னால் மருத்துவ கல்வியில் தொடர முடியாது என்று அச்சுறுத்தவதாகவும் பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    எனவே, ஏழை, நடுத்தர குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவக் கனவையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, மாநில அரசு உடனடியாக தலையிட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கூடுதல் கட்டாய கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    சென்னை:

    அரசு விரைவு போக்கு வரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வார விடுமுறை தினங்களான நாளை (சனிக்கிழமை), ஞாயிற்றுக் கிழமை மற்றும் முகூா்த்த தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன் படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு (வெள்ளிக்கிழமை) 355 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    இதுபோல சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 55 பஸ்களும், நாளை 55 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும், மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் 20 பஸ்கள் என ஆக மொத்தம் 980 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிஎம்ஆர்எல் மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு போன்ற முறைகள் மூலம் டிக்கெட்டுகளை பயணிகள் பெறலாம்.
    • தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரில் டிக்கெட்டுகளை பெறலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

    சிஎம்ஆர்எல் மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு, சிஎம்ஆர்எல் பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை பெற்று பயணிக்குமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரிலும் டிக்கெட்டுகளை பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • நெல்லூர் சென்ற போலீசார் பேருந்தை மீட்டதுடன், கடத்தி சென்ற ஒடிசாவை சேர்ந்தவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரசு பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு பணிமனையில் இருந்து திருப்பதிக்கு செல்ல இருந்த அரசுப் பேருந்தை மர்ம நபர் கடத்தி சென்றதால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், நடத்துநர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில், தமிழ்நாட்டு பேருந்தை பிடித்து வைத்துள்ளதாக ஆந்திர மாநிலம் நெல்லூர் போலீசார் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின்பேரில், நெல்லூர் சென்ற போலீசார் பேருந்தை மீட்டதுடன், கடத்தி சென்ற ஒடிசாவை சேர்ந்தவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    பேருந்து நிலைய மேலாளர் ராம்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் ஒடிசாவை சேர்ந்த ஞானராஜன் சாகு (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலரும் தங்கள் பகுதிக்கு மினி பஸ்களை இயக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • மலைப் பகுதிகள் மற்றும் குறுகிய சாலைகள் கொண்ட கிராம பகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மக்கள் தொகை, வாகன நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவை படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளதால் அதற்கேற்ப பொது போக்குவரத்து வசதியையும் அரசு கூடுதலாக செய்து வருகிறது.

    இதையொட்டி சிறிய தெருக்களிலும் பஸ்கள் செல்வதற்காக மினி பஸ் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் அரசு அறிமுகம் செய்தது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    தமிழக அரசின் திட்டத்தின்படி 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயங்கும் வகையில் குறைந்தது 5 ஆயிரம் மினி பஸ்கள் இப்போது தேவைப்படுகிறது.

    இந்த சூழலில் மினி பஸ் சேவைக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. பலரும் தங்கள் பகுதிக்கு மினி பஸ்களை இயக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    குக்கிராம மக்களுக்கும் போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

    அதன்படி மினி பஸ்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தனியார் வேன்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வேன்களை மினி பஸ்களாக இயக்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் பஸ்களை போன்று இந்த வேன்களில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பஸ்களில் 200 செ.மீ. உயரமும், அமர்ந்து கொண்டு மட்டுமே பயணம் செய்யும் வாகனங்களில் 150 முதல் 200 செ.மீ உயரமும் இருக்கலாம்.

    இப்போது வேன்களை மினி பஸ்களாக இயக்குவதற்காக பொதுப் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச உயரம் 185 செ.மீ. என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.

    இனி நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கும் பஸ்கள் 200 செ.மீ. உயரமும், அமர்ந்து கொண்டு மட்டுமே பயணிக்கும் வாகனங்கள் 150 முதல் 200 செ.மீ. உயரமும் இருக்கலாம்.

    இந்த தளர்வு மேக்சி-கேப்ஸ் போன்ற சிறிய 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வாகனங்கள் மினி பஸ் திட்டத்தில் இணைய உதவும்.

    இதுபற்றி போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் ஆர்.கஜலட்சுமி கூறுகையில், 'இதன் மூலம் இம்மாத இறுதிக்குள் 2000 வேன்கள் பொதுப்போக்குவரத்து சேவையில் இணையும் என எதிர்பார்க்கிறோம். முக்கியமாக இந்த வகை வேன்களின் உயரம் குறைவாக இருக்கும் என்பதால் நின்று கொண்டு பயணிக்க அனுமதி கிடையாது.

    இது மலைப் பகுதிகள் மற்றும் குறுகிய சாலைகள் கொண்ட கிராம பகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    இந்த புதிய திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில், வேன்களை மினி பேருந்துகளாக மாற்றி பயன்படுத்தும் திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்யுங்கள். இதுபற்றி விரிவான அறிக்கையை அடுத்த ஒரு மாதத்தில் சமர்பிக்க வேண்டும். எந்தெந்த பகுதிகளில் மினி பஸ் வசதிகள் தேவைப்படுகின்றன என்பது பற்றி விவரங்கள் சேகரித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். வேன்களை மினி பஸ்களாக மாற்றும் திட்டத்தின் மூலம் பள்ளி வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவை பொதுப் போக்குவரத்து வசதிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேசமயம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகப்படியானோரை ஏற்றி செல்லக் கூடாது. தொங்கி கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். இவற்றை எல்லாம் ஒழுங்குபடுத்தி முறைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

    • பா.ம.க.வின் தாய் அமைப்பு வன்னியர் சங்கம்.
    • அரசியல் ரீதியாக அன்புமணியை ஒரு கைபார்த்து விடுவது என்ற ரீதியில் ராமதாஸ் களம் இறங்கி உள்ளார்.

    சென்னை:

    பா.ம.க.வில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிவித்ததோடு பிரச்சனை முடிந்து விடவில்லை. கட்சி தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக அன்புமணி தரப்பு அறிவித்துள்ளது.

    அடுத்த கட்டமாக அன்புமணியை எதிர்கொள்ள அதிரடி வியூகங்களை ராமதாஸ் வகுத்துள்ளார். அரசியல் ரீதியாக அன்புமணிக்கு ஆதரவு இருப்பதாக கூறப்பட்டாலும் கள நிலவரத்தை ராமதாஸ் ரகசியமாக ஆய்வு செய்து வருகிறார்.

    பா.ம.க.வின் தாய் அமைப்பு வன்னியர் சங்கம். அதில் இருந்துதான் அரசியல் இயக்கமாக பா.ம.க. உருவானது. எனவே வன்னியர்கள் ஆதரவை பெற ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். வன்னியர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் ராமதாஸ். இதனால் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களின் ஆதரவு ராமதாசுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதேநேரம் இளைய தலைமுறையினரும் புதிதாக அரசியலுக்கு வந்தவர்களும் அடுத்தகட்டமாக பா.ம.க.வை அன்புமணி தான் வழி நடத்த முடியும் என்று கருதுகிறார்கள். எனவே அவர்கள் மத்தியில் அன்புமணிக்கு ஆதரவு இருக்கிறது.

    இந்த சூழலில் அரசியல் ரீதியாக அன்புமணியை ஒரு கைபார்த்து விடுவது என்ற ரீதியில் ராமதாஸ் களம் இறங்கி உள்ளார். வருகிற 14-ந்தேதி முதல் வன்னியர்கள் பகுதியில் கிராமம் கிராமமாக செல்ல திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக வடதமிழக மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.

    இந்த மாவட்டங்களில் செல்லும்போது வன்னியர்களுக்கான தனது உழைப்பை எடுத்து சொல்லி அனுதாப அலையை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றுகிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி விழாத் தலைமை உரை ஆற்றுகிறார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், அன்புமிளிர இசைஞானி என அழைத்துப் போற்றப்பட்டவர் இளையராஜா. தேனி மாவட்டம் பண்ணைபுரம் என்னும் பழைமையான கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து ஞானதேசிகன் எனும் இயற்பெயர் பெற்றவர்.

    இவர் இசை மீது கொண்ட இயல்பான ஆர்வம் இவரை கருணாநிதி போற்றியது போல், இசைஞானி என உலகிற்கு உயர்த்தியுள்ளது. இவர் பிறந்து வளர்ந்த கிராமிய சூழ்நிலைகளோடு கிராமப்புறப் பாடல்களைப் பாடி, புகழ் பெறத் தொடங்கியவர்.

    முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசையமைத்து, பதிவு செய்து, நேரடியாக நிகழ்த்திய முதல் ஆசியர், முதல் இந்தியர், முதல் தமிழர் ஆவார் . அவர் சிம்பொனியில் திருவாசகத்தையும் இயற்றிய பெருமைக்குரியவர்.

    இசைஞானி இளையராஜா தமது இசைவாழ்வில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 2012-ம் ஆண்டில், இசைத்துறையில் அவரது படைப்பு மற்றும் சோதனைப் பணிகளுக்காக, இயல் இசை நாடக விருதைப் பெற்றுள்ளார்.

    2010-ம் ஆண்டில், பத்ம பூஷண் விருதையும், 2018 ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதையும் பெற்றவர்.

    ஒரு குக்கிராமத்தில் பிறந்து இசைத்திறனால் உலகப் புகழ் குவித்துள்ள இளையராஜாவின் இல்லத்திற்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, 8.3.2025 அன்று லண்டன் மாநகரில் முதல் நேரடி சிம்பொனி இசைநிகழ்ச்சி நடத்தவிருந்த நிலையில் அவரைப் பாராட்டி, அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து, லண்டன் மாநகர் சென்று சிம்பொனி சாதனை நிகழ்த்தி வெற்றியுடன் சென்னை திரும்பிய நிலையில் 13.3.2025 அன்று இளையராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று நன்றி தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பிய இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை தமிழக அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்." ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

    அதன்படி நாளை (சனிக்கிழமை)மாலை 5.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    இந்தப் பாராட்டு விழாவின் தொடக்கத்தில் இளையராஜாவின் சிம்பொனி-இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றுகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி விழாத் தலைமை உரை ஆற்றுகிறார்.

    நடிகர்கள் கமல்ஹாசன் எம்.பி., ரஜினிகாந்த் வாழ்த்துரை வழங்குகிறார்கள். இதில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைக் கலைஞர்கள், திரைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ்த் திரையுலக முக்கிய பிரமுகர்கள் முதலானோரும் பங்கேற்கிறார்கள்.

    நிறைவாக இசைஞானி இளையராஜா எம்.பி., ஏற்புரை வழங்குகிறார். இறுதியில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நன்றி கூறுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக சிம்பொனி கலைஞர்கள் 86 பேர் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இன்று சென்னை வந்துள்ளனர்.

    • கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    அந்த வகையில் கடந்த செவ்வாய்கிழமை இதுவரை இல்லாத உச்சமாக சவரன் ரூ.81,200-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,240-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 142 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    11-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    10-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    09-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480

    07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    11-09-2025- ஒரு கிராம் ரூ.140

    10-09-2025- ஒரு கிராம் ரூ.140

    09-09-2025- ஒரு கிராம் ரூ.140

    08-09-2025- ஒரு கிராம் ரூ.140

    07-09-2025- ஒரு கிராம் ரூ.138

    • தமிழ்நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 6 முறை டெட் தேர்வு நடத்தப்பட்டு இருக்கிறது.
    • முந்தைய ஆண்டு (2013) 6 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

    சென்னை:

    மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியக் கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

    இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தாள்-1 தேர்விலும், பி.எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தாள்-2 தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடந்து முடிந்து இருக்கிறது.

    அந்த வகையில் டெட் தேர்வுக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 6 முறை டெட் தேர்வு நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் கடந்த 2014-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வை எழுத சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் முதல் 7 லட்சம் பேர் வரை விண்ணப்பித்து இருந்தார்கள். அதற்கு முந்தைய ஆண்டு (2013) 6 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

    மற்ற ஆண்டுகளில் நடந்த 4 தேர்வுகளிலும் விண்ணப்பப் பதிவு 4 லட்சத்தை தாண்டவில்லை. ஆனால் இந்த ஆண்டு இதற்கு முன்பு நடந்த 4 டெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவை காட்டிலும் அதிகம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

    சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து ஏற்கனவே பணியில் இருந்து, டெட் தேர்வை எழுதாதவர்களும் அதை எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்தது. இதனையடுத்து தற்போது நடைபெற உள்ள இந்த டெட் தேர்வை எழுதுவதற்கு இந்த ஆசிரியர்களும் போட்டி போட்டு விண்ணப்பித்ததால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கான தேர்வு வருகிற நவம்பர் மாதம் 15 மற்றும் 16-ந்தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தனது கொள்கை தலைவர்கள் பற்றி 10 நிமிடம் விஜய் உரையாற்றுவாரா?
    • த.வெ.க. தலைவர் விஜய்க்கு அடிப்படையே தெரியவில்லை.

    பேச்சை மனப்பாடம் செய்வதற்காகவே சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் சுற்றுப்பயணம் செய்கிறார் என்று த.வெ.க. தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது:

    * தனது கொள்கை தலைவர்கள் பற்றி 10 நிமிடம் விஜய் உரையாற்றுவாரா?

    * மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தில் 15 நிமிடங்கள் தான் உரையாற்ற அனுமதி கேட்டுள்ளனர்.

    * சங்கி என்றால் நண்பன் என பொருள் வருகிறது, திராவிடம் என்றால் திருடன் என்றே வருகிறது.

    * த.வெ.க. தலைவர் விஜய்க்கு அடிப்படையே தெரியவில்லை.

    * ஆண் சிங்கம் வேட்டைக்கு செல்லாது என்ற அடிப்படை கூட விஜய்க்கு தெரியவில்லை.

    * விஜய் வேட்டைக்கு வந்த சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வந்த சிங்கம்.

    * தி.மு.க அரசியல் எதிரி என்றால் அ.திமு.க. அரசியல் எதிரி இல்லையா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல சிக்கல்கள் நிறைந்த நடைமுறையை எளிதாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.
    • பாதுகாப்பு கருதி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் அனுமதி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில், தற்கொலை, சாலை விபத்து, சந்தேக மரணங்களில் உயிரிழப்பவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும், ஆஸ்பத்திரியில் இருந்து கோர்ட்டுக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை மூடிய நிலையில் 'சீல்' வைத்து அனுப்பப்படுகிறது. போலீசார் நேராக வந்து அறிக்கையை பெற்றுக்கொள்வார்கள். இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை போலீசாருக்கும், கோர்ட்டுக்கும் அனுப்புவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

    அறிக்கையில், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் தான் கையொப்பமிட வேண்டும். ஒருவேளை அந்த டாக்டர் வேறு மாவட்டத்திற்கோ அல்லது வேறு ஆஸ்பத்திரிக்கோ பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டாலும் அவர் அறிக்கையில் கையொப்பமிட்டு பார்சல் மூலம் போலீசாருக்கு அனுப்பும் சூழல் ஏற்படுகிறது. மேலும், ஆஸ்பத்திரி தரப்பில் இந்த பிரேத பரிசோதனை அறிக்கை 24 மணி நேரத்தில் தயார் செய்யப்படுகிறது. ஆனால், போலீசார் தங்கள் பணிகளுக்கு இடையில் இந்த அறிக்கையை சென்று வாங்கி வர காலதாமதம் ஆகிறது என கூறப்படுகிறது.

    இவ்வாறு பல சிக்கல்கள் நிறைந்த இந்த நடைமுறையை எளிதாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.

    அதன்படி, கோர்ட்டு உத்தரவின் பேரில், தமிழக அரசு ஒரு புதிய வசதியை கொண்டு வர உள்ளது. அதன்படி, ஆஸ்பத்திரி சார்பில் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த அறிக்கைகளை கோர்ட்டு மற்றும் போலீசார் மட்டும் பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், தாமதம், ஊழல், சட்டவிரோத செயல்கள் என அனைத்தும் தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:-

    பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் சோதனை முறையில் நடைபெற்று வருகிறது. இதற்காக, ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். விரைவில் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் உடனுக்குடன் பதிவிறக்கம் செய்யும் வசதி பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் 24 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கப்படும். இந்த அறிக்கையை கோர்ட்டு மற்றும் போலீசார் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும்.

    பிரேத பரிசோதனை அறிக்கை இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவைப்பட்டால் அவர்கள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு நேரடியாக சென்று தங்கள் சான்றிதழ்களை காண்பித்து அறிக்கையை பெற்றுக்கொள்ளலாம்.

    பாதுகாப்பு கருதி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் அனுமதி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. இந்த புதிய வசதியின் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கை பெறுவதில் உள்ள தாமதம் முற்றிலும் தவிர்க்கப்படும். இந்த வசதி நடைமுறைக்கு வந்த பிறகு தற்போது போலீசார் நேரில் வந்து பிரேத பரிசோதனை அறிக்கை வாங்கும் நடைமுறை முற்றிலும் நிறுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×