search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    குழந்தையை கொன்று தற்கொலை செய்த இளம்பெண்- கணவருக்கு எழுதிய 3 பக்க கடிதம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த பல்லவராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு திருமணமாகி தர்ஷினி என்ற 8 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது.

    முனீஸ்வரன் பரமக்குடியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் குழந்தை தர்ஷினிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. வலிப்பு நோயால் அந்த குழந்தை மிகவும் அவதிப்பட்டு வந்தது.

    பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் குழந்தைக்கு உடல்நலம் ஏற்படவில்லை. இது திவ்யா மனதை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. இதனால் அவர் கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திவ்யா குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தனது கணவருக்கு உருக்கமான‌ கடிதம் எழுதி வைத்துள்ளார். அதன் பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்று தனது மனதை கல்லாக்கிக் கொண்டு குழந்தைக்கு விஷம் கலந்த உணவை கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட குழந்தை சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தது.

    அதனைத்தொடர்ந்து அவரும் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அறியாத முனீஸ்வரன் வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது மனைவியையும் குழந்தையையும் காணாததால் அதிர்ச்சி அடைந்த அவர் பக்கத்தில் உள்ள இடங்களில் தேடி பார்த்தார். அருகில் உள்ள தோட்டத்தில் பார்த்தபோது அங்கு குழந்தையும் மனைவியும் பிணமாக கிடப்பதை கண்டு அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நயினார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தாய் திவ்யா, குழந்தை தர்ஷினி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சம்பவ இடத்தில் திவ்யா தனது கணவருக்கு எழுதிய 3 பக்க கடிதம் ஒன்று சிக்கியது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சிறுவயது முதல் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். உன்னை திருமணம் செய்து நல்லாத்தான் இருந்தேன். அதில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. குழந்தைக்கு வலிப்பு நோய் வந்து விட்டது. இது நாளுக்கு நாள் கவலையாக இருந்ததால்தான் இந்த முடிவை எடுத்துவிட்டேன். நான் இந்த முடிவை எடுக்க நான்தான் காரணம். முனீசுக்கு கஷ்டத்தைக் கொடுக்க வேண்டாம். நான் உனக்கு கஷ்டத்தை கொடுத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு. இனி நீ இங்கு இருக்க வேண்டாம். உனது அக்கா வீட்டுக்கு சென்றுவிடு. அங்கு நல்ல பெண் பார்த்து திருமணம் செய்துக்கொள்.

    என்னையும், உன் குழந்தையையும் உன் இடத்தில் அடக்கம் செய். என்னால வாழ்க்கையே போச்சு என்று நினைக்காதே. நீ வேறு திருமணம் செய்து கொள். சத்தியமாக நல்லா இருப்பாய்.

    உன்னுடைய பொருளை (குழந்தை) நான் எடுத்து செல்கிறேன். என்னுடைய பொருளை (தாலி) விட்டுச் செல்கிறேன். அதனை எனது ஞாபகமாக இடுப்பில் அணிந்து கொள். நான் காலம் முழுவதும் உன் இடுப்பில் தாலி கயிறாக இருப்பேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×