search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னை லாட்ஜில் 2 நாட்கள் 5 வாலிபர்களுடன் தங்கி இருந்த பிளஸ்-1 வகுப்பு மாணவிகள்

    இன்றைய சிறு பிள்ளைகளுக்கு பாடம் தெரிகிறதோ இல்லையோ இணைய தளங்களை கையாள்வதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் கருதி இணையதளங்களுக்கு கடிவாளம் அவசியம்.
    சென்னை:

    இந்த தலைமுறை மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் தேவையில்லை ஒரு ஸ்மார்ட் போன் மட்டும் போதும் என்றாகிவிட்டது.

    காரணம் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் தான். இதன் காரணமாக படிப்பறிவே இல்லாமல் தினமும் உழைத்தால் தான் சோறு என்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் சாதாரண மக்கள் கூட தன் பிள்ளைகன் நன்றாக படித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவுகளுடன் பட்டினி கிடந்தாவது பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்கிறார்கள்.

    இதே செல்போன்கள் தான் அவர்களை சீரழிக்கும் கருவியாகவும் மாறி வருகிறது. இதற்கு அனகாபுத்தூரை சேர்ந்த பிளஸ்-1 மாணவிகள் சாட்சி.

    வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவிகள் இருவரையும் காணாமல் பெற்றோர்கள் தவித்து போனார்கள். இது பற்றி போலீசில் புகார் செய்யவே போலீசாரும் தங்கள் புலன் விசாரணையை துரிதப்படுத்தினார்கள்.

    அப்போது அந்த மாணவிகள் இருவரும் சென்ட்ரல் அருகே பெரியமேட்டில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை மீட்ட போலீசார் அவர்களுடன் தங்கி இருந்த 5 வாலிபர்களையும் கைது செய்தனர். போக்சோ சட்டத்தில் அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒருவன் சிறுவன் என்பதால் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.

    தகவலை அறிந்ததும் அந்த மாணவிகளின் குடும்பமே உடைந்து நொறுங்கி போய் கண்ணீர் வடிக்கிறது.

    அந்த மாணவிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அனகாபுத்தூர் பகுதியில் பிளஸ்-1 படிக்கும் 5 மாணவிகள் தோழிகள். இவர்கள்அனைவரும் ‘டிக்-டாக்’ ரசிகைகள். தினமும் வித்தியாசமாக வீடியோ பதிவு செய்து அதை ‘ஷேர்ஷாட்’ மூலம் வலைத்தளத்தில் வலம் வர பதிவேற்றுவது வழக்கம்.

    இவர்களுடைய பதிவுகளை பார்த்து பலர் ‘லைக்’ செய்துள்ளனர். இதனால் உற்சாகம் அடைந்த மாணவிகள் புது புது வீடியோக்களை ஆர்வத்துடன் பதிவேற்றினார்கள்.

    ஆனால் வெளி உலகில் ரசிப்பவர்கள் மட்டும் இருக்க மாட்டார்கள். தங்களை ருசிக்க விரும்புபவர்களும் இருப்பார்கள் என்பதை அறியா பருவத்தில் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    அந்த டிக்-டாக் மூலம் திருவொற்றியூரை சேர்ந்த சுரேன் என்கிற அப்பு (23). பழக்கமாகி இருக்கிறார். அந்த மாணவிகளின் வீடியோ பதிவுகளை புகழ்ந்து தள்ளியவன் எண்ணூர் பக்கம் வாருங்கள். கடல் அழகுடன் வீடியோ எடுத்தால் இன்னும் பிரமாதமாக இருக்கும்’ என்று அளந்து விட்டுள்ளான்.

    டிக்-டாக் மோகத்தால் பின்விளைவை பற்றி யோசிக்காமல் 5 பேரும் எண்ணூருக்கு சென்றுள்ளார்கள். அங்கு அவர்கள் வருகைக்காக காத்திருந்த அப்பு அவர்களை வரவேற்று அன்பாக பேசி இருக்கிறார்.

    மாணவிகளும் அவரை ‘டிக்-டாக்’ ரசிகராக நினைத்து கொண்டார்கள். எண்ணூரில் பல இடங்களில் வீடியோ எடுத்துள்ளார்கள். அதையும் பதிவேற்றம் செய்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்கள்.

    அப்போது அவர்களில் ஒரு மாணவியின் செல்போனை நைசாக எடுத்து வைத்துக் கொண்டார் அப்பு.

    எல்லோரும் விடை பெற்று வீடு திரும்பினார்கள். மாலையில் செல்போனில் தொடர்பு கொண்ட அப்பு ஒரு போனை விட்டு சென்று விட்டீர்கள் என்று கூறி இருக்கிறார்.

    அதை கேட்டதும் ‘தொலைந்து விட்டதாக நினைத்தோம்’ என்ற அந்த மாணவி யாராவது ஒருவர் நேரில் வந்து போனை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அழைத்துள்ளார்.

    அதன் பேரில் துணைக்கு இன்னொரு மாணவியையும் அழைத்துக் கொண்டு மீண்டும் சென்ட்ரல் வந்துள்ளார்கள்.

    அங்கு காத்திருந்த அப்பு அவர்களிடம் செல்போனை கொடுத்துவிட்டு இரவாகி விட்டதே வாருங்கள் ‘டின்னர்’ சாப்பிட்டு போகலாம் என்று அழைத்துள்ளார்.

    அந்த மாணவிகளும் அப்பாவித்தனமாக பாசத்துடன் அழைக்கிறார் என்று நினைத்து சாப்பிட ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். உயர்தர ஓட்டலுக்கு அழைத்து சென்று விதவிதமாக உணவுகளை வாங்கி கொடுத்துள்ளார். மாணவிகளும் அதை ருசித்து சாப்பிட்டுள்ளார்கள். நேரம் போவதே அவர்களுக்கு தெரியவில்லை.

    அதற்குள் அப்பு தனது நண்பர்களையும் அழைத்துள்ளார். ஜெரால்டு (18), சஞ்சய் (19), வினித் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரும் வந்துள்ளார்கள். அவர்கள் தனது நண்பர்கள் என்று அப்பு அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவர்களும் இரவு விருந்தில் கலந்து கொண்டார்கள்.

    விருந்து முடிந்து நேரத்தை பார்க்கும் போது தான் இனி பஸ் பிடித்து செல்ல முடியாது என்பதை உணர்ந்துள்ளார்கள்.

    அவர்களிடம் ‘ஒன்றும் பிரச்சனை இல்லை. கவலைப்படாதீர்கள். பக்கத்தில் தெரிந்த லாட்ஜ் இருக்கிறது. எங்களோடு தங்கி விட்டு காலையில் செல்லுங்கள் என்று கூறி இருக்கிறார்.

    தயங்கிய அந்த மாணவிகளும் வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். லாட்ஜில் இரண்டு அறை எடுத்து ஆளுக்கொரு அறையில் தங்க வைத்து விட்டு 5 பேரும் அவர்களுடன் தங்கி இருந்துள்ளார்கள்.

    முதல் நாள் இரவு முடிந்த பிறகும் மறுநாளும் அவர்களின் அன்பு கட்டளைப்படி அங்கேயே தங்க சம்மதித்து இருக்கிறார்கள்.

    அதற்குள் பெற்றோர் புகாரால் போலீஸ் தேட தொடங்கியது. மாணவியின் செல்போன் சிக்னலை ஆராய்ந்த போது அது போலீசாரை சம்பந்தப்பட்ட லாட்ஜில் கொண்டு விட்டது.

    அங்கு போலீசார் சோதனையிட்ட போது அவர்கள் சிக்கி இருக்கிறார்கள். மீட்கப்பட்ட அந்த மாணவிகளிடம் அந்த வாலிபர்கள் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டார்களா? என்று கேட்ட போது இல்லை என்று மறுத்துவிட்டனர்.

    மாணவிகள் பயந்து சொல்ல மறுக்கலாம் என்பதால் பெற்றோர்கள் மூலம் உண்மையை கேட்க சொல்லி இருக்கிறார்கள்.

    செல்போன்.... செல்போன்... என்று எங்கோ செல்கிறோம். ‘டிக்-டாக்’ பார்க்க முடியாது. தடை செய்யப்பட்டு விட்டது. ஆனால் வெளிநாட்டு தளங்களை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் பார்க்கிறார்களாம்.

    இன்றைய சிறு பிள்ளைகளுக்கு பாடம் தெரிகிறதோ இல்லையோ இணைய தளங்களை கையாள்வதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் கருதி இணையதளங்களுக்கு கடிவாளம் அவசியம்.


    Next Story
    ×