search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    கொள்ளிடம் பழைய பாலத்தை இடித்து அகற்ற முடிவு

    2018-ம் ஆண்டு பெருவெள்ளத்தில் 2தூண்கள் அடித்துச் செல்லப்பட்ட கொள்ளிடம் பழைய பாலத்தை முற்றிலுமாக உடைத்து அப்புறப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
    திருச்சி: 

    2018-ம் ஆண்டு பெருவெள் ளத்தில் 2தூண்கள் அடித்துச் செல்லப்பட்ட கொள்ளிடம் பழைய பாலத்தை முற்றிலுமாக உடைத்து அப்புறப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.3.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி திருவானைக்காவல், நம்பர் 1 டோல்கேட் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1928&ம் ஆண்டு 12.5 மீ அகலம், 792 மீ நீளத்தில் 24 தூண்களுடன் பாலம் கட்டப்பட்டது. நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்து வந்த இப்பாலம் வலுவிழந்ததால், இப்பாலத்தில் 2007&ம் ஆண்டு முதல் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தர வின் பேரில் கொள்ளிடம் பழைய பாலத்துக்கு மாற் றாக அதன் அருகில் ரூ.88 கோடியில் சென்னை நேப்பியர் பால வடிவத்துடன் புதிய பாலம் கட்டப்பட்டு, 14.02.2016 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதற்குப்பின் அனைத்துவாகனங்களும் புதிய பாலத்தில் சென்று வரத் தொடங்கியதால், பழைய பாலத்தை பொதுமக்கள் நடை பயிற்சி செல்ல பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில், கனமழை காரணமாக 2018 &ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி கொள்ளிடத்தில் பெருக்கெடுத்த பெருவெள் ளத்தில், கொள்ளிடம் பழைய பாலத்தின் 18,19-வது தூண்கள் அடித்துச் செல்லப்பட்டன, அதன்பின், இப்பாலத்தின் உறுதித்தன்மை குறித்து ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை கொடுத்தனர். 

    இதனைத் தொடர்ந்து, பாலத்தை முற்றிலுமாக அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டனர். ஆனால் சிலர் இப்பாலத்தை பழைமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்றும், 90 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை மறுசீரமைப்பு செய்வது வீண் செலவு என்று வேறு சிலரும் கருத்து தெரிவித்தனர், இதையடுத்து இந்த விவகாரம் நீண்டகாலமாக கிடப்பிலேயே போடப்பட்டிருந்தது.

    இந்த சூழலில் திருச்சி சிந்தாமணி திருவானைக்காவல் காவிரி பாலம் வலுவிழந்த விவகாரம் அண்மையில் பெரிதாக உருவெடுத்த நிலையில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை கருதி கொள்ளிடம் பழைய பாலத்தை முற்றிலுமாக உடைத்து அப்புறப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்காக ரூ.3.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய காலங்கில் புதிய பாலம், பழையபாலத்துக்கு இடைப்பட்ட பகுதியிலான நீரோட்டத்தில் தேக்கம் மற்றும் சுழற்சி ஏற்பட்டு, அதன் காரணமாக புதிய பாலத்தின் தூண்கள் அமைந்துள்ள பகுதியில் மண் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நாளடைவில் புதி பாலம் வலுவிழந்து ஆபத்தைச் சந்திக்க வேண்டிய நிலை வரும். 

    மேலும், இப்பழைய பாலத்தை அப்படியே வைத்திருந்து காலப்போக்கில் ஒவ்வொரு தூணாக இடிந்து விழுந்தால், அருகிலுள்ள புதிய பாலத்தின் உறுதித்தன்மை கேள்வி க்குறியாகி விடும், எனவே பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை கருதி பழைய பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    இப்பணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, அடுத்த மழைக் காலம் வருவதற்குள், அதிகபட்சம் 6 மாதத்துக்குள்ளாக இப்பணிகளை முடிக்க திட்டமிட்ப்பட்டுள்ளது’’ என்றனர்.
    Next Story
    ×