search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூசூர் ஏரி பாசன பகுதிக்கான வரைபடத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டபோது எடுத்தபடம்.
    X
    தூசூர் ஏரி பாசன பகுதிக்கான வரைபடத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டபோது எடுத்தபடம்.

    நாமக்கல் மாவட்டத்தில் 30 ஏரிகள் நிரம்பின - 3,318 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும்

    நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 30 ஏரிகள் நிரம்பி இருப்பதால், 3,318 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 79 ஏரிகள் உள்ளன. இதில் தற்போது பெய்த மழை காரணமாக 30 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் 3,318.47 ஹெக்டேர் நிலம் நேரடியாக பாசன வசதிபெறுகிறது. மீதமுள்ள 49 ஏரிகள் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் தூசூர் ஏரியும் ஒன்று. தற்பொழுது தூசூர் ஏரி நிரம்பி உபரி நீரானது வளையப்பட்டி வழியாக சென்று அரூர் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது. எனவே அரூர் ஏரி விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தூசூர் ஏரியில் நீர் நிரம்பி, கலிங்கு வழியாக உபரி நீர் வழிந்தோடுவதை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று நீர்வளத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது தூசூர் ஏரி மூலம் எந்தெந்த பகுதிகள் பாசன வசதி பெறுகிறது என்பதற்கான வரைபடத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அதனைத்தொடர்ந்து என்.புதுப்பட்டி கிராமம் கோவிந்தம்பிள்ளை ஏரியில் கலிங்கு பகுதியில் அருகில் உள்ள குட்டைகளில் நீர் உள்ளதையும், மோகனூர் தாலுகா பேட்டப்பாளையத்தில் குளம் சீரமைக்கும் பணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருவதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வுகளின் போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் ராஜாராம் உள்பட நீர்வளத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×