search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    சூரியகாந்திகளை சேதப்படுத்தும் கிளிகள்- ஓசை எழுப்பி விரட்டும் விவசாயிகள்

    தற்போது அறுவடைக்குப் போதிய ஆட்கள் கிடைக்காததால் எந்திரங்கள் மூலமே அறுவடை மேற்கொள்ள வேண்டியது உள்ளது.
    உடுமலை:

    உடுமலை பகுதியில் ஒருசில இடங்களில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சூரியகாந்தி சாகுபடியை பொறுத்தவரை ஆடிப் பட்டம், கார்த்திகை பட்டம் ஆகிய இரு பட்டங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யலாம்.

    இதுதவிர இறவை பாசனத்தில் மார்கழி பட்டம் மற்றும் சித்திரை பட்டங்களில் சாகுபடி மேற்கொள்ளலாம். அந்தவகையில் ஆண்டுக்கு 4 பட்டங்களில் சூரியகாந்தி சாகுபடி மேற்கொள்ள முடியும்.

    அதேநேரத்தில் பட்டத்துக்கு தகுந்தாற் போல விதைகளை தேர்வு செய்வது அவசியமாகும். தற்போது வீரிய ஒட்டு ரகங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் அவை நோய் எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும், அதிக மகசூல் தரக்கூடியவையாகவும் உள்ளன.

    ஆனாலும் விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்வது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும், முளைப்புத் திறனை மேம்படுத்தவும் உதவும்.
    மேலும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையில் உயிர் உரமாக தழை, மணி, சாம்பல் சத்துக்களை தேவையான அளவில் வழங்க வேண்டும்.
      
    சூரியகாந்தி பூக்களை பொறுத்தவரை மகரந்த சேர்க்கை மிக முக்கிய இடம் பிடிக்கிறது. நன்றாக மணிகள் பிடிப்பதற்கு மகரந்த சேர்க்கை உதவுகிறது.தற்போது தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால்  செயற்கையாக மகரந்த சேர்க்கை செய்ய வேண்டும்.அதற்கு பூக்கொண்டைகளை ஒன்றோடொன்று லேசாக தேய்த்து விடுவது
    நல்ல பலன் தரும். சூரியகாந்தியை பொறுத்தவரை 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும்.

    ஆனால் மணிகள் முற்றும் தருணத்தில் கிளிகளிடமிருந்து பாதுகாப்பது
    மிகப்பெரிய சவாலாக உள்ளது.கிளிகளுக்கு மிகவும் பிடித்த உணவாக சூரியகாந்தி விதைகள் உள்ளது.

    எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்டம் கூட்டமாக கிளிகள் படையெடுப்பதால் அவற்றை தட்டுகள் மற்றும் தகரங்களில் தட்டி ஓசையெழுப்பி  விவசாயிகள் விரட்டி வருகின்றனர்.

    விவசாயிகள் கூறுகையில், தற்போது அறுவடைக்கு  போதிய ஆட்கள் கிடைக்காததால் எந்திரங்கள் மூலமே அறுவடை மேற்கொள்ள வேண்டியது உள்ளது.

    ஒரு ஏக்கருக்கு 750 கிலோ முதல் 900 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.தற்போது செய்துள்ள சாகுபடி இன்னும் 20 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும் என்றனர்.
    Next Story
    ×