search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    டிரைவரை கழுத்தை நெரித்து கொன்றதாக புகார்- கள்ளக்காதல் ஜோடியை கைது செய்ய தீவிரம்

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே டிரைவரை கழுத்தை நெரித்து கொன்றதாக அளித்த புகாரின் பேரில் கள்ளக்காதல் ஜோடியை கைது செய்ய போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த நீர்முள்ளிக்குட்டை பகுதியை சேர்ந்த கார் டிரைவர் வேல்முருகன் (வயது 45), இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 15 மற்றும் 13 வயதில் 2 மகள்கள் உள்ளனர். உடல் நலக்குறைவால் கடந்த 4 மாதங்களுக்கு முன் வேல்முருகன் உயிரிழந்தார்.

    இந்தநிலையில் வேல்முருகனின் தாயார் காவேரியம்மாள் (62) காரிப்பட்டி போலீஸ் ஸ்டே‌ஷனில் நேற்று முன்தினம் அளித்த புகாரில், தாண்டானூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருடனான கள்ளத்தொடர்பை கண்டித்ததால் தனது மகனை மருமகள் சங்கீதா கழுத்தை நெரித்து கொன்றதாகவும், தற்போது 8-ம் வகுப்பு படிக்கும் தனது 13 வயது மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வதாகவும் கூறியிருந்தார்.

    அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார் வேல்முருகனின் சடலத்தை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யவும் முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் சங்கீதாவும் அவரது கள்ளக்காதலன் ஆனந்தகுமாரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வேல்முருகனின் உறவினர்கள் நேற்று மீண்டும் புகார் மனு அளித்தனர். நேற்று அரசு விடுமுறை என்பதால் இன்று (29-ந்தேதி) அல்லது நாளை உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதனிடையே 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்ய முயற்சி செய்ததாக மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் சிறுமியிடம் குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது உறுதி செய்யப்பட்டதால் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் ஆனந்தகுமார் மற்றும் சங்கீதாவை கைது செய்ய தீவிர நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர். அவர்களது செல்போன் எண்ணை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×