search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    எட்டயபுரத்தில் ஆட்டோ மீது கார் மோதல்- வியாபாரி பலி

    எட்டயபுரத்தில் ஆட்டோ மீது கார் மோதியதில் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எட்டயபுரம்:

    எட்டயபுரம் அலங்காரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காளிராஜன் (வயது 52). இவர் பொரி வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி புனிதவதி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று மாலையில் காளிராஜன் ஆட்டோவில் பொரி மூட்டைகளை ஏற்றி கொண்டு எட்டயபுரம் அருகே சிந்தலக்கரைக்கு புறப்பட்டார். அந்த ஆட்டோவை எட்டயபுரம் அருகே இளம்புவனத்தைச் சேர்ந்த கருப்பசாமி (35) ஓட்டிச் சென்றார்.

    எட்டயபுரம் மின்வாரிய அலுவலகம் அருகில் நான்கு வழிச்சாலையில் சென்றபோது, தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக ஆட்டோவின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது.

    இதில் பலத்த காயம் அடைந்த காளிராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கருப்பசாமி படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று, படுகாயம் அடைந்த கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இறந்த காளிராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×