search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நாகர்கோவிலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை- ஆர்.டி.ஓ. விசாரணை

    நாகர்கோவிலில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வட்ட விளையை சேர்ந்தவர் அனந்தரூபன். தச்சு தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் நந்தினி (வயது 27). இவர்கள் இருவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறும் ஏற்பட்டு வந்தது. நேற்றிரவு வழக்கம்போல் கணவன்-மனைவி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்பு ஆனந்தரூபன் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார்.

    அப்போது நந்தினி தூக்கில் தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தரூபன் தூக்கில் தொங்கிய நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் நந்தினி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் அங்கு வந்து நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நந்தினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் நந்தினி, தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆன்லைன் வியாபாரம் செய்ய முடிவு செய்தார். அதற்காக தனது கணவரிடம் புதிய செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனந்தரூபனும் அவருக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து ஆன்லைன் வியாபாரம் தொடர்பாக நண்பர்களுடன் நந்தினி அடிக்கடி பேசியபடி இருந்துள்ளார். கணவரையும் தன்னுடன் சேர்ந்து ஆன்லைன் வியாபாரத்தில் ஈடுபடுமாறு அழைத்தார். ஆனால் ஆனந்தரூபன் அதற்கு சம்மதிக்கவில்லை.

    மேலும் ஆன்லைன் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் நந்தினி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    திருமணமாகி 2½ வருடமே ஆவதால் நந்தினி தற்கொலைக்கான காரணம் குறித்து நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட நந்தினியின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
    Next Story
    ×