search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள் வேலைநிறுத்தம்
    X
    மீனவர்கள் வேலைநிறுத்தம்

    4வது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தம்: ராமேசுவரத்தில் மீன்வர்த்தகம் பாதிப்பு

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ.1½ கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
    ராமேசுவரம்:

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை இலங்கை அரசுடமையாக்குவதை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரவை மீன்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 24-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் 4 ஆயிரம் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்த 10 ஆயிரம் பேர் என 14 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    இன்று 4-வது நாளாக வேலைநிறுத்தம் நீடிக்கிறது. இதன் காரணமாக ராமேசுவரம் பகுதியில் மட்டும் ரூ. 1½ கோடி அளவிலான மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும் போதும் இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்படுகிறோம். இதனால் மீன்பிடி தொழிலில் முழுமையாக ஈடுபட முடியவில்லை.

    தற்போது சிறைபிடிக்கப்பட்ட படகுகளை அரசுடமையாக்கப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி நடக்கும் வேலைநிறுத்தம் காரணமாக எங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

    இதனிடையே மத்திய-மாநில அரசுகள் மீனவர்கள் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெறும் என மீனவ சங்கங்கள் அறிவித்துள்ளன.

    Next Story
    ×