search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணமான 10 நாளில் மாயமான பெண் போலீஸ் சென்னையில் மீட்பு
    X

    திருமணமான 10 நாளில் மாயமான பெண் போலீஸ் சென்னையில் மீட்பு

    கோவில்பட்டி அருகே திருமணமான 10 நாளில் மாயமான பெண் போலீசை தனிப்படை போலீசார் சென்னையில் மீட்டனர்.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர்குளத்தை சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகள் காளீசுவரி (வயது 26). இவர் 10-ம் வகுப்பு முடித்து விட்டு கடந்த 2011-ம் ஆண்டு போலீசில் பணியில் சேர்ந்தார். தற்போது சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கும் மதுரை மாவட்டம் குதிரைகுத்தி கிராமத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 9-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடந்தது. சிவராமகிருஷ்ணன், மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு காளீசுவரி தன்னுடைய கணவருடன் மதுரையில் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுமண தம்பதியினர் ஜமீன் தேவர்குளத்துக்கு வந்தனர். இதற்கிடையே சிவராமகிருஷ்ணனின் தாயாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சிவராமகிருஷ்ணன், காளீசுவரியை அவரது பெற்றோரின் வீட்டில் விட்டு விட்டு, அவர் மட்டும் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

    கடந்த 19-ந் தேதி காலையில் காளீசுவரி, தன்னுடைய கணவரிடம் செல்போனில் பேசினார். அப்போது அவர் சிவராமகிருஷ்ணனின் தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக தெரிகிறது. அதன்பிறகு சிறிது நேரத்தில் காளீசுவரி வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காளீசுவரியின் பெற்றோர் மகளை அக்கம் பக்கம் தேடினர். எங்கும் அவர் கிடைக்கவில்லை.

    இதையடுத்து காளீசுவரி மாயமானது குறித்து மூக்கையா நாலாட்டின்புத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.

    மேலும் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் உத்தரவின் பேரில் காளீசுவரியை கண்டு பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜுடி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் காளீசுவரியை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் மாயமான காளீசுவரி சென்னை எழும்பூர் பகுதியில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை விரைந்து சென்று காளீசுவரியை மீட்டனர். இன்று பிற்பகலில் காளீசுவரி நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்படுகிறார்.

    பின்னர் அவரிடம் நடத்தப்படும் விசாரணையை தொடர்ந்தே அவர் ஏன் வீட்டை விட்டு வெளியேறினார்? என்ற விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×