search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரியுங்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மக்கள் வேண்டுகோள்
    X

    ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரியுங்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மக்கள் வேண்டுகோள்

    ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரியுங்கள் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கும் போஸ்டர்களை ஒட்டி தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளானர்.


    முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையே ஆட்சி அமைப்பதில் போட்டி ஏற்பட்டு இருக்கிறது.

    ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக தங்களது தொகுதி எம்.எல்.ஏ. ஆதரவு அளிக்க கோரி வாக்காளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.இது தொடர்பாக அவர்கள் எஸ்.எம்.எஸ் அனுப்பியும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஆதரவு கேட்டு வருகிறார்கள்.


    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பஸ்நிறுத்தத்தில் வாக்காளர்கள் சார்பில் ஒரு கோரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ., எட்டிமடை சண்முகம் அவர்களே, அம்மாவால் தமிழக முதல்வராக அடையாளம் காட்டப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக தொடர ஆதரவை தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. விடமும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க கோரி சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ.வுக்கு வணக்கம். நாங்கள் அம்மாவிற்காக அவரின் ஆட்சிக்காக உங்களை நம்பி வாக்களித்தோம். தற்போது தாங்கள் அம்மா ஒதுக்கி வைத்த சசிகலா குடும்பத்துடன் அரசியல் செய்ய அவர்களை முதல்வராக தேர்ந்தெடுக்க துணை போவதாக அறிந்து வேதனை அடைகிறோம்.

    நீங்கள் லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதி. சசிகலா யார்? மக்களின் உன்னதமான அதிகாரம் உங்கள் கையில். அதை அவர்கள் அபகரிக்க நினைக்கிறார்கள். மக்களின் மன நிலை உங்களுக்கு நன்றாக தெரியும். மாற்றி யோசியுங்கள். என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    வேடசந்தூர் தொகுதி மக்கள் தங்களது எம்.எல். ஏ.வுக்கு செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி உள்ளனர்.

    அதில் நீங்கள் தொகுதி மக்களின் நலன் கருதி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெ. தீபாவை ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

    தொகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டி உள்ளனர். தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் ஆக வேண்டும். அ.தி.மு.க.வுக்கு ஜெ. தீபா தலைமை ஏற்க வேண்டும். இவண் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை விசுவாசிகள் மற்றும் வாக்காள பெருமக்கள் என்ற வாசகம் இடம் பெற்று உள்ளது.


    ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் போடி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கிய சசிகலாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் அவரை தமிழக முதல்வராக நியமிக்க வேண்டும். அவருக்கு ஆதரவாக செயல்படுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முதல் அமைச்சர் பன்னீர்செல்வம், சசிகலா இவர்களில் யாருக்கு வேலூர் எம்.எல்.ஏக்கள் ஆதரவு தர போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அ.தி.மு.க.வை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கூறியதாவது:-

    சட்டபையில் மெஜாரிட்டி நிரூபிக்க வாக்களிக்க வாய்ப்பு கிடைத்தால் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மனசாட்சியோடு வாக்களிக்க வேண்டும். தொண்டர்கள்தான் அ.தி.மு.க.வின் ஆணிவேர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தொண்டர்களிடம் தான் கட்சியை விட்டு சென்றிருக்கிறார்கள். அவர்கள் லட்சியம் நிறைவேற அடிமட்ட தொண்டர்களின் நிலை அறிந்து எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×