search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் மரத்தில் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 2 பேர் பலி
    X

    கார் மரத்தில் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 2 பேர் பலி

    கல்பாக்கம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 2 பேர் பலியானார்கள்.
    கல்பாக்கம்:

    சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் முகமது மீரான் அலி (வயது 25). சென்னை மேட்டுக்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர்களான சென்னை பூங்கா நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (28), விருகம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (27), சைதாப்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் (25) மற்றும் சென்னையில் வசித்து வந்த வினோ (24) ஆகியோருடன் காரில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு, விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பரை பார்க்க சென்றார்.

    பின்னர் அங்கிருந்து அவர்கள் 5 பேரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை சீனிவாசன் ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் பாலத்தை கடந்தபோது அந்த கார் எதிர்பாராதவிதமாக சாலை ஓரம் நின்ற மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சதுரங்கப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமந்தன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் முகமது மீரான் அலி மற்றும் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகி காருக்கு இடையில் சிக்கி இருந்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி இறந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர்.

    படுகாயம் அடைந்த விக்னேஷ், ராஜேஷ், வினோ ஆகியோர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 
    Next Story
    ×