search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகையை பறிகொடுத்த சாந்தி
    X
    நகையை பறிகொடுத்த சாந்தி

    பாவூர்சத்திரத்தில் வாக்கிங் சென்ற பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

    பாவூர்சத்திரத்தில் இன்று அதிகாலையில் வாக்கிங் சென்ற பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்துச்சென்ற பைக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    பாவூர்சத்திரம்:

    நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி. ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி சாந்தி (வயது52). இவர் தினமும் அப்பகுதியில் வாக்கிங் செல்வது வழக்கம். இன்று அதிகாலை சாந்தி அப்பகுதி பெண்களுடன் வழக்கம் போல வாக்கிங் சென்றார்.

    பாவூர்சத்திரம்- குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் அதிகாலை 6 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென சாந்தி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வாக்கிங் சென்றவர்கள் மற்றும் பொதுமக்கள் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் கொள்ளையர்கள் பிடிபடாமல் தப்பி விட்டனர். இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அப்பகுதியில் ஒரு டைல்ஸ் கடையில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×