search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சம்பள பணத்தை எடுக்க முடியாமல், அரசு - தனியார் நிறுவன ஊழியர்கள் திணறல்
    X

    சம்பள பணத்தை எடுக்க முடியாமல், அரசு - தனியார் நிறுவன ஊழியர்கள் திணறல்

    அரசு ஊழியர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் போடப்பட்டு விட்ட நிலையில், தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கான சம்பள பணத்தை வங்கியில் போட்டுள்ளன. இந்த பணத்தை எடுக்க முடியாமல் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் திணறி வருகின்றனர்.
    சென்னை:

    கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கடந்த மாதம் 8-ந் தேதி பிரதமர் மோடி, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்.

    இதனை தொடர்ந்து கடந்த 25 நாட்களாக பொதுமக்கள் வங்கிகள் முன்பும், ஏ.டி.எம் மையங்கள் முன்பும் பணம் எடுப்பதற்காக காத்துக் கிடக்கிறார்கள்.

    ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் சில நாட்கள் மட்டுமே 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற முடிந்தது. அதன் பின்னர் பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு, ஏ.டி.எம். மையங்களில் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. வங்கிகளில் சேமிப்பு கணக்கில் இருந்து வாரம் ரூ.24 ஆயிரம் எடுக்க முடிகிறது. ஏ.டி.எம்.களில் ரூ.2 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது.

    இதனால் ஏ.டி.எம். மையங்களில் தினமும் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று, அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடியே கிடக்கும் நிலையில் திறந்திருக்கும் ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் ரூ.2 ஆயிரம் எடுப்பதற்கு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.

    ஒரு சில ஏ.டி.எம். மையங்களில் மட்டும் பணம் ஓரளவுக்கு தாராளமாக கிடைக்கிறது. இதனால் அந்த ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான ஏ.டிஎ.ம் மையங்கள் எப்போதும் மூடியே கிடக்கின்றன. இதனால் திறந்திருக்கும் ஏ.டி.எம். மையங்களை தேடி மக்கள் அலையும் சூழ்நிலையே இருக்கிறது.

    அரசு ஊழியர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் போடப்பட்டு விட்ட நிலையில், தனியார் நிறுவனங்களும் அடுத்தடுத்த நாட்களில் தங்களது ஊழியர்களுக்கான சம்பள பணத்தை வங்கியில் போட்டுள்ளன. இந்த பணத்தை எடுக்க முடியாமல் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

    சென்னையில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் பலர் வாடகை வீடுகளில் தான் குடியிருக்கிறார்கள். இவர்களும் வாடகை கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள். மளிகை மற்றும் காய்கறி கடைகளில் ஒரு சிலர் கடனுக்கு வாங்கிவிட்டு ஒவ்வொரு மாதமும் கொடுப்பது உண்டு. அவர்களும் அந்த கடன் தொகையை உடனடியாக கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பலர் குடும்பத்தோடு வெளியில் செல்ல திட்டமிடுவார்கள். ரூபாய் நோட்டு மற்றும் சில்லரை பிரச்சனை காரணமாக அவர்களும் தங்களது விடுமுறை கொண்டாட்டங்களை தள்ளி வைத்துள்ளனர்.

    ரூபாய் நோட்டு பிரச்சினை 2 வாரங்களையும் தாண்டி நீடித்து வருவதால் சிறிய வணிக நிறுவனங்களிலும் ஸ்வைப் மிஷினை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பெரிய ஓட்டல்கள், சூப்பர் மார்க் கெட்டுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்வைப் மிஷினை சிறிய காய்கறி கடைகளிலும், ஒரு சில பெட்டிக்கடைகளிலும் காணமுடிகிறது.

    ரூபாய் நோட்டு அறிவிப்பால் ஏற்பட்டுள்ள இந்த அவதி எப்போது தீரும் என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு முடிவு காணும் வகையில் மத்திய அரசு ஏ.டி.எம் களில் கூடுதல் தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×