search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை-ஆரணியில் வி‌ஷ வண்டு கடித்து 2 பேர் பலி
    X

    திருவண்ணாமலை-ஆரணியில் வி‌ஷ வண்டு கடித்து 2 பேர் பலி

    திருவண்ணாமலை-ஆரணியில் வி‌ஷ வண்டு கடித்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆரணி:

    திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடி காலனியை சேர்ந்தவர் குமார் (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவர், சம்பவத்தன்று இரவு தன்னுடைய வீட்டு வாசலில் படுத்து தூங்கினார். அப்போது, வி‌ஷ வண்டு ஒன்று குமாரை கடித்தது.

    இதனால் தூக்கத்தில் இருந்து அவர் திடுக்கிட்டு எழுந்தார். வலியால் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் குமார் மயக்கமடைந்தார்.சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்தனர். குமாரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மகேஸ்வரி (வயது35). இருவரும் கூலித் தொழிலாளர்கள். கடந்த 22-ந் தேதி மகேஸ்வரி, மெய்யூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்துச் சென்றார்.

    அப்போது ஆற்காடு- ஆரணி சாலை மெய்யூர் கூட்ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி கட்டிடத்தில் இருந்த தேன் கூட்டை மர்ம நபர்கள் கல்வீசி கலைத்தனர்.

    தேன் கூட்டில் இருந்த குளவிகள் கலைந்து, சாலையில் சென்ற பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்தது. இதில் மகேஸ்வரி உள்பட 7 பேர் குளவி கொட்டி காயமடைந்தனர். சிகிச்சைக்காக அவர்கள் மீட்கப்பட்ட ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். இவர்களில் மகேஸ்வரி மட்டும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி இறந்து விட்டார்.

    இதுகுறித்து மகேஸ்வரியின் அண்ணன் பன்னீர், ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×