search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தான்குளம் அருகே விபத்து: மினி வேன் மோதி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலி
    X

    சாத்தான்குளம் அருகே விபத்து: மினி வேன் மோதி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலி

    சாத்தான்குளம் அருகே மினி வேன் மோதி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலியானார்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகே உள்ள தாமரைமொழி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் (வயது 50). முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவர் தற்போது கட்டிடவேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் முத்துப்பாண்டியன் தனது மனைவி முத்துலெட்சுமியுடன் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார்சைக்கிளில் திசையன்விளைக்கு சென்றார். பின்னர் பொருட்கள் வாங்கி விட்டு இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    சாத்தான்குளம் அருகே உள்ள பூச்சிக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது முத்துப்பாண்டியன் செல்போனில் பேசியபடி மோட்டார்சைக்கிளை ஓட்டி சென்றார். அப்போது முத்துப்பாண்டியன் அப்பகுதியில் திடீரென வலது பக்கமாக மோட்டார்சைக்கிளை திருப்பினார்.

    அந்த சமயத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த மினிவேன் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துப்பாண்டியன் மற்றும் அவரது மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

    வெகு நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு திசையன்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துப்பாண்டியன் பரிதாபமாக இறந்தார். முத்துலெட்சுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×