search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டை காலி செய்வதில் பிரச்சினை: கூட்டுறவு வங்கி அதிகாரியை கொலை செய்த பெண் கைது
    X

    வீட்டை காலி செய்வதில் பிரச்சினை: கூட்டுறவு வங்கி அதிகாரியை கொலை செய்த பெண் கைது

    கூட்டுறவு வங்கி அதிகாரியை கொலை செய்ததாக பழனியம்மாள் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பழனியம்மாளின் மகள்களுக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை பி.என்.புதூர் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது 62). கூட்டுறவு வங்கி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவருக்கு சொந்தமாக மும்மநாயக்கன்வீதியில் உள்ள வீட்டை பழனியம்மாள் (36) என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். பழனியம்மாள் கணவரை இழந்தவர். இவர் தனது மகள்கள் பிரியங்கா, அனிதா ஆகியோருடன் வசித்து வந்தார்.

    பிரியங்கா குடும்பத்திற்குள் அடிக்கடி சண்டை நடந்ததால் ராமமூர்த்தி அவரை வீட்டை காலி செய்யுமாறு கூறினார். ஆனால் பிரியங்கா வீட்டை காலி செய்ய மறுத்தார். இந்த பிரச்சினை தொடர்பாக ராமமூர்த்தி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்திருந்தார்.

    நேற்று ராமமூர்த்தியின் மனைவி சாந்தகுமாரி, மகள் மோகனா ஆகியோர் பழனியம்மாள் வீட்டிற்கு தேங்காய் பறிக்க சென்றனர். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு பழனியம்மாள் தகாத வார்த்தைகளால் சாந்த குமாரியையும், அவரது மகளையும் திட்டி உள்ளார்.

    இதுகுறித்து ராமமூர்த்தி கேட்ட போது பழனியம்மாள் அவரை கீழே தள்ளி விட்டார். இதில் நிலைதடுமாறி சாக்கடையில் விழுந்த ராமமூர்த்தி படுகாயமடைந்தார். அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராமமூர்த்தி இறந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இன்ஸ்பெக்டர் வீரம்மாள் விசாரணை நடத்தி பழனியம்மாள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

    இதற்கிடையே பழனியம்மாள் தாக்கியதில் ராமமூர்த்தியின் மகள் மோகனா காயமடைந்தார். அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் பழனியம்மாளின் மகள்களுக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×