search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
    X

    சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்ததும், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
    சென்னை:

    கடந்த 5-ந் தேதி நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பொது செயலாளர் சசிகலா முதல் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்தில் சசிகலா பெயரை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்மொழிந்து இருந்தார். அவர் முன்மொழிந்த தீர்மானத்துடன் கவர்னருக்கு கடிதம் தயாரித்து வைக்கப்பட்டது. கவர்னர் ஊரில் இல்லாததால் அந்த கடிதம் கவர்னரிடம் கொடுக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் திடீர் என்று சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதனால் அவர் அ.தி.மு.க பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப்பதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கவும் அ.தி.மு.க தலைமை முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மீண்டும் கூடியது. ராயப்பேட்டை தலைமை கழகத்தில் நடந்த இக்கூட்டத்தில், மொத்தம் உள்ள 134 அ.தி.மு.க எம்.எல்.ஏக்களில் 131 பேர் கலந்து கொண்டனர். 2 எம்.எல்.ஏக்கள் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் கூட்டத்துக்கு வரவில்லை.

    இக்கூட்டத்தில் சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன், சசிகலாவை முதல்வர் பதவியில் அமர்த்தும் கோரிக்கையுடன், எம்.பி.க்கள் அனைவரும் குடியரசு தலைவரை சந்திக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டம் முடிந்ததும் சசிகலா போயஸ் கார்டனுக்கு சென்றுவிட்டார்.

    அதனையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். விமான நிலையம் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓ.பன்னீர்செல்வம் பக்கம் செல்வதை தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், குடியரசு தலைவரை சந்திப்பதற்காக அனைவரும் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

    இது ஒருபுறமிருக்க, ஆளுநர் முடிவு எடுக்கும் வரையில், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சுற்றுப்பயணத்தில் இருக்கும்படி கட்சி தலைமை உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×