search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பு பண ஒழிப்பு திட்டம் பயனற்றதாக போய் விட்டது: ராமதாஸ்
    X

    கருப்பு பண ஒழிப்பு திட்டம் பயனற்றதாக போய் விட்டது: ராமதாஸ்

    மத்திய அரசின் கருப்புப் பண ஒழிப்புத் திட்டம் பயனற்ற பாதிப்பு நிறைந்த திட்டம் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைகளால் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை கருப்புப் பணம் பிடிபடும் என்பது தான் மத்திய அரசின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், களநிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

    கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளை கடந்த நவம்பர் 8-ந்தேதி அறிவித்த போது, இந்திய ரிசர்வ் வங்கியிடம் கையிருப்பாக இருந்த ரொக்கத்தின் மதிப்பு ரூ.4,06,966 கோடி ஆகும்.

    அன்றாட பரிமாற்றத்திற்காக நவம்பர் 8-ந்தேதி வங்கிகளிடம் இருந்த தொகை ரூ.70,000 கோடி ஆகும். இதில் ரூ.500, ரூ.1000 தாள்களின் மதிப்பு மட்டும் ரூ.50,000 கோடி இருக்கலாம். ஆக மொத்தம் ரூபாய் தாள்கள் செல்லாது அறிவிப்பு வெளியிடுவதற்கு முன் வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம் இருந்த தொகை ரூ.4.57 லட்சம் கோடி ஆகும்.

    அதன்பின்னர் நவம்பர் 28-ந்தேதி வரை வங்கிகளில் திருப்பிச் செலுத்தப்பட்ட பழைய தாள்களின் மதிப்பு ரூ. 8.44 லட்சம் கோடியாகும்.

    அதாவது நவம்பர் 28-ந்தேதி வரை புழக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட பழைய தாள்களின் மதிப்பு ரூ.13 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    கடந்த ஒரு வாரத்தில் வங்கியில் திருப்பிச் செலுத்தப்பட்ட பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு ரூ.50,000 கோடி என வைத்துக் கொண்டால் ஒட்டுமொத்தமாக திரும்பப் பெறப்பட்ட பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு ரூ.13.50 லட்சம் கோடி ஆகும்.

    இந்திய ரிசர்வ் வங்கியால் ஒட்டுமொத்தமாக புழக்கத்தில் விடப்பட்ட அதிக மதிப்பு கொண்ட ரூபாய் தாள்களின் மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடி என்று கடந்த 29-ந்தேதி நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மேக் வால் தெரிவித்திருக்கிறார்.

    அதன்படி பார்த்தால் வங்கி வளையத்திற்கு வெளியில் உள்ள பழைய தாள்களின் மதிப்பு ரூ.1.94 லட்சம் கோடி தான். இம்மாத இறுதிவரை வங்கிகளிலும், மார்ச் இறுதிவரை ரிசர்வ் வங்கியிலும் பழைய தாள்களை மாற்ற அவகாசம் இருப்பதால் மேலும் 94 ஆயிரம் கோடி பணம் திரும்பப்பெறப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

    அதற்குப் பிறகு வெளியில் இருக்கும் பழைய தாள்களின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி மட்டுமே. இந்தியப் பொருளாதாரத்துடன் ஒப்பிடும் போது இது ஒரு பெரிய தொகையல்ல. தானாக முன் வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டத்தின் கீழ் எந்த சிரமும் இன்றி ரூ.65,000 கோடி கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதைவிட சற்று அதிக கருப்புப்பணத்தை மீட்பதற்காக ஒட்டுமொத்த ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய சூறாவளியை ஏற்படுத்தியது தேவையா? என்பதை மத்திய அரசு சிந்தித்து பார்க்க வேண்டும்.

    ரூபாய் தாள் செல்லாது அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு ஏற்பட்ட வணிகம் மற்றும் உற்பத்தி இழப்புடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இது மிகவும் குறைந்த தொகையாகும். இதை மூடி மறைப்பதற்குத்தான் வங்கியில் போடப்பட்ட பணம் எல்லாம் வெள்ளையல்ல என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி சப்பைக்கட்டு கட்டி வருகிறார்.

    மத்திய அரசின் நடவடிக்கையால் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் காத்திருந்த போது மட்டும் 70 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

    தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வங்கியில் பணம் எடுப்பதற்காக வந்திருந்த 70 வயது முதியவர் உயிரிழந்திருக்கிறார். மத்திய அரசின் திட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயன்களை ஒப்பிட்டு பார்க்கும் போது கருப்புப் பண ஒழிப்பு திட்டம் என்பது எலியைப் பிடிக்க மலையை தகர்த்து அழித்த செயலுக்கு ஒப்பானதாகவே தோன்றுகிறது. பணப்புழக்கம் இன்று வரை சரி செய்யப்படாத நிலையில் ஏழைகள், வணிகர்களின் துயரம் மேலும் நீடிக்கும் என்றே தெரிகிறது.

    மொத்தத்தில் மத்திய அரசின் கருப்புப் பண ஒழிப்புத் திட்டம் பயனற்ற பாதிப்பு நிறைந்த திட்டம் என்பது உறுதியாகியிருக்கிறது.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
    Next Story
    ×