என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கோவை, நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தேனி, ஆகிய மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
    • சூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக 2 முறை சாம்பியனான இந்தியா, 7 தடவை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி, 2 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ் நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி, பிரான்ஸ் அணியுடன் மோதியது. இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

    இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து, ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணியுடன் மோதிய இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

    சென்னையில் நடைபெற்ற இந்த கால் இறுதி போட்டியில் சூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.  

    • குறுகிய காலத்தில் SIR பணிகளை முடிக்க வேண்டிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
    • அவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

    பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நடந்து வருகின்றன.

    குறுகிய காலத்தில் SIR பணிகளை முடிக்க வேண்டிய அழுத்தத்தால் தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் திடீர் மரணமும், தற்கொலையும் நாடு முழுவதும் தொடர்ந்து வருகிறது.

    இந்த சூழலில் தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வந்த சரவணன் (வயது 35) நேற்று காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

    பி&டி காலனியை சேர்ந்த சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். 

    • இன்று வழக்கமாக பயணிகள் வந்து சென்றுகொண்டிருந்தனர்.
    • இந்த சம்பவத்தால் விமான நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ் அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இன்று வழக்கமாக பயணிகள் வந்து சென்றுகொண்டிருந்த நிலையில் டிராலியல் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் நீண்டநேரமாக கேட்பாரற்று இருந்துள்ளது.

    இதனால் சந்தேகமெழுந்த நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதனை மோப்ப நாய் உதவியுடன் பரிசோதனை செய்தனர். ஆனால் அதில் ஆபத்தான பொருள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்த சம்பவத்தால் விமான நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சூட்கேஸ் அங்கு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

    • 14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
    • இன்று நடந்த காலிறுதியில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறியது.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது.

    2 முறை சாம்பியனான இந்தியா , 7 தடவை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி, 2 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ் நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி, பிரான்ஸ் அணியுடன் மோதியது.

    இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    இதையடுத்து, ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    • தீபத்தூண் என்பது கோவில் சொத்து என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
    • இதுதொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மத மோதலில் ஏற்படுத்தும் முயற்சியில் தி.மு.க. அரசு இறங்கியுள்ளது.

    ஐகோர்ட் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு குறித்து தமிழக அமைச்சர் ரகுபதி வேண்டும் என்றே பொய் சொல்லியுள்ளார். நீதிபதி தவறான தீர்ப்பு கொடுத்துள்ளார் என ரகுபதி தவறான வாதத்தைவைக்கிறார்.

    தீபத்தூண் என்பது கோவில் சொத்து என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. இதனை எதிர்த்து செயல் அலுவலர் ஏன் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதுவும் சரியாக செய்யவில்லை. செயல் அலுவலரை திமுக அரசு தூண்டிவிட்டு மேல்முறையீடு செய்ய வைத்துள்ளது.

    திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மோசடி என நீதிபதிகள் அமர்வு கண்டுபிடித்தனர். திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்ற உத்தரவில் எந்த தவறும் இல்லை.

    நீதிபதி தீர்ப்புக்கு எதிராக சட்டவிரோதமாக மோதல் போக்கை தி.மு.க. அரசு கடைபிடித்துள்ளது. ஒரு தலைபட்சமாக இந்து மதத்தை நம்பும் பக்தர்களுக்கு எதிராக உச்சபட்சமாக திருப்திப்படுத்தும் அரசியலை தி.மு.க. செய்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய சட்டத்துறை அமைச்சர் பழைய தீர்ப்புகளை திரித்து பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.

    • மழை காரணமாக 2ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய பள்ளி இயக்கம்.
    • புதன்கிழமை பாட அட்டவணையை பின்பற்றி பள்ளிகள் இயக்கம்.

    சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக 2ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதன்கிழமை பாட அட்டவணையை பின்பற்றி சென்னையில் நாளை பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சமூக அமைதியை சீர்கெடுக்கும் நோக்கோடு செய்யப்படும் இத்தகைய சதிச்செயல்கள் ஒருபோதும் ஏற்புடையதல்ல.
    • பல நூறு ஆண்டுகளாக இருக்கக்கூடிய இந்த வழிபாட்டுத்தலங்களால் எந்தச் சமயத்தவரிடையேயும் எந்த மோதலும் இதுவரை நிகழ்ந்ததில்லை.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா? மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இனஉணர்வோடு மண்ணின் மக்கள் ஓர்மைப்படுவோம்!

    மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் கலவரத்தை தூண்ட முயலும் மதவாத கும்பல்களின் பிரித்தாளும் அரசியல் வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே, திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு சிக்கலாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுநாள்வரை பின்பற்றாத ஒரு நடைமுறையைச் சட்டத்தின் வாயிலாகப் புகுத்தி, தர்காவுக்கு அருகாமையில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற பிரிவினைகளுக்கே வழிவகுக்கும். இராமஜென்ம பூமியை வழிபடத்தான் போகிறோமென உச்ச நீதிமன்றத்தில் கூறிய இதே மதவாத கும்பல், பாபர் மசூதியை அயோத்தியில் என்ன செய்தது என்பதை நாடறியும். அதுபோல, மதுரை மண்ணை இன்னொரு அயோத்தியாக மாற்றும் சூழ்ச்சிக்கு நீதித்துறையே துணைநிற்பது வெட்கக்கேடானதாகும்.

    சமூக அமைதியை சீர்கெடுக்கும் நோக்கோடு செய்யப்படும் இத்தகைய சதிச்செயல்கள் ஒருபோதும் ஏற்புடையதல்ல. மதம் கடந்த ஒற்றுமையைப் போற்றிக் காத்து வரும் மகத்துவம் மிகுந்த மதுரை மண்ணில் மதமோதலை உருவாக்குவதற்காகக் குறிவைத்து நடத்தப்படும் இந்துத்துவ அமைப்புகளின் மதவாத அரசியல் செயல்பாடுகள் யாவும் தொடக்கத்திலேயே முறியடிக்கப்பட வேண்டியதாகும்.

    முப்பாட்டன் முருகன் திருக்கோயில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் சிவன் கோயிலும், மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. பல நூறு ஆண்டுகளாக இருக்கக்கூடிய இந்த வழிபாட்டுத்தலங்களால் எந்தச் சமயத்தவரிடையேயும் எந்த மோதலும் இதுவரை நிகழ்ந்ததில்லை. 'உன் மதம் சிறந்ததென்றால் வழிபடு! என் மதமும் சிறந்ததது; வழிவிடு' எனும் மதநல்லிணக்கக் கோட்பாட்டைப் பின்பற்றி, ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாகச் சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் மதுரை மண்ணின் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் சிக்கந்தர் தர்காவைக் குறிவைத்து, 'சிக்கந்தர் மலை' எனப் புதிய பெயரைப் புனைந்து, இசுலாமியர்கள் மலையை ஆக்கிரமிக்க முயல்வதாக அவதூறைப் பரப்பி, மதவுணர்வுகளைத் தூண்டக்கூடிய வேலையை இந்துத்துவ அமைப்புகள் செய்வது மிக ஆபத்தான அரசியலாகும். சிக்கந்தர் மலை என எந்த இசுலாமிய இயக்கமும் கூறாத சொல்லாடலை வலியத் திணித்து, திருப்பரங்குன்றம் மலைக்காகப் போராடுவதாகக் கூறும் பெருமக்களே! 'குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்று கூறும் நிலையில், தமிழ்நாட்டிலுள்ள மலைகள் எல்லாம் வேட்டையாடப்பட்டு, கனிமவளங்களாக அண்டை மாநிலங்களுக்கு அள்ளிச் செல்லப்படும்போது எங்கே போனீர்கள்? அப்போதெல்லாம் முருகன் மீதான உங்கள் இறைப்பற்று எங்கே போனது? தமிழ் வழிவந்த முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பல நூறு கோயில்களில் குடமுழுக்கும், வழிபாடும் செய்யக்கூட வழியற்ற நிலை தாய்த்தமிழ்நாட்டில் இருக்கிறதே? அதற்கெதிராக ஒருநாளும் நீங்கள் வீதிக்கு வந்து போராடியதில்லையே ஏன்? வாக்குவேட்டைக்காக சமூக அமைதியைக் கெடுக்க முயல்வதுதான் உங்களது ஆன்மீகப்பற்றா? வழிபாட்டுணர்வா? பேரவலம்!

    சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு வழிபடும் முறை இசுலாமியச் சொந்தங்களிடையே பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதனைச் சிக்கலாக்கி, அரசியல் ஆதாயம் தேட முற்படும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளை உரிய நேரத்தில் கட்டுப்படுத்தத்தவறிய திமுக அரசு, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடச் சென்ற அபுதாஹீரைத் தடுத்து நிறுத்தி, அனுமதி மறுத்த காவலர்கள் மீது துறைசார்ந்து நடவடிக்கை எடுத்து, அங்கு பல ஆண்டுகளாக ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு செய்யும் முறை இருக்கிறதென்பதை அரசுத்தரப்பு மக்களுக்கு எடுத்துரைத்திருந்தால் மதவெறியர்களின் அரசியல் சூழ்ச்சிகள் நடந்தேறியிருக்குமா? தும்பை விட்டுவிட்டு இப்போது வாலைப் பிடிக்கிற வேலையைச் செய்கிறது ஆளும் திமுக அரசு. 'இந்துக்களின் விரோதி' என மதவாதிகள் செய்யும் அரசியல் பரப்புரைக்குப் பயந்து, சமரசம் செய்துகொள்ளும் திமுக அரசின் கையாலாகாத்தனமே இந்தளவில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

    • தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
    • அதற்கான ஆயத்த பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    தொகுதிகள், வேட்பாளர் தேர்வு, கூட்டணி உள்ளிட்ட ஆயத்த பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சீமான் அறிவித்தார்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட உள்ள 234 வேட்பாளர்களையும் ஒரே நிகழ்வில் அறிமுகப்படுத்தும் மக்களின் மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருச்சியில் நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழக சட்டசபையில் போட்டியிட உள்ள 100 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் சீமான் இன்று வெளியிட்டார்.

    • வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.10 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    நேற்று இரவு முதல் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியிலும், கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் 64 அடியை நெருங்கி வருவதால் அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உபவடி நிலத்திற்கு தேவைக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வைகை அணையில் இருந்து இன்று காலை முதல் மேற்கண்ட 3 மாவட்டங்களுக்கு 650 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. 8 நாட்களுக்கு 450 மி.கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 63.85 அடியாக உள்ளது. வரத்து 1346 கன அடி. திறப்பு 1319 கன அடி. இருப்பு 4378 மி.கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.10 அடியாக உள்ளது. வரத்து 1147 கன அடி. திறப்பு 1400 கன அடி. இருப்பு 6899 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 என முழு கொள்ளளவில் தொடர்ந்து நீடிப்பதால் அணைக்கு வரும் 100 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.40 அடி. வரத்து 98 கன அடி. இருப்பு 310 மி.கன அடி. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.10 அடி. வரத்து 15 கன அடி, திறப்பு 14.47 கன அடி.

    கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் இன்று 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேகமலை அருவியிலும் தொடர்ந்து பக்தர்கள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மேகதாதுவில் அணைகட்ட விட மாட்டோம் என கோஷமிட்டனர்.

    தஞ்சாவூா்:

    கர்நாடகா அரசிற்கு மேகதாதுவில் அணைக்கட்ட வரைவு திட்ட அறிக்கைக்கு அனுமதி அளித்து தமிழ்நாட்டை பாலைவனமாக்க நினைக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும், மத்திய அரசையும் கண்டித்து இன்று தஞ்சையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

    இதையொட்டி இன்று தஞ்சை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் ரெயில் நிலையம் முன்பு திரண்டனர்.

    பின்னர் ஊர்வலமாக கோஷங்கள் எழுப்பியவாறே தடைகள், தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தனர்.

    அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்றம், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேகதாதுவில் அணைகட்ட விட மாட்டோம் என கோஷமிட்டனர்.

    இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இந்துக்களை ஏமாளியாக நினைத்து ஓட்டு வாங்கலாம் என நினைக்கின்றனர்.
    • இந்த நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து.

    திருப்பூர்:

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கூடாது என காவல் துறையை வைத்து தடுப்பது இந்துக்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மனுதாரரையும் தடுத்து அரசு இரட்டை வேடம் போடுகிறது. தி.மு.க. இந்து விரோத அரசாக செயல்படுகிறது. 178 கோவில்களை தி.மு.க. அரசு இடித்துள்ளது. சிறுபான்மையினர் ஓட்டுக்காக இப்படி செய்கின்றனர். இந்துக்களை ஏமாளியாக நினைத்து ஓட்டு வாங்கலாம் என நினைக்கின்றனர். காவல் துறையும் கூலிக்காரர்கள் போல நடத்தப்படுகிறார்கள். இதனை கண்டித்து வருகிற 7-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சட்டத்துறை அமைச்சர் தவறான தகவல்களை சொல்கிறார்.

    இந்த நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து. ஆனால் மற்ற மதத்தை போல இந்துக்களை நடத்துவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×