என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வேத மந்திரம் முழங்க பிரமோற்சவம் கொடியேற்றம் நடைபெற்றது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச் சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரமோற்சவ விழா விமர்சையாக நடை பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரம் முழங்க பிரமோற்சவம் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கும் சாமிக்கும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் பல்லக்கில் சாமி வீதியுலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினந்தோறும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. வருகிற 7-ந் தேதி இரவு கருட சேவை விமர்சையாக நடைபெற உள்ளது. பின்னர் விமானத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனம், மங்களகிரி வாகனம், 10-ந்தேதி காலை வெண்ணைத் தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் விழா வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். இதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்து தேரில் கம்பீரமாக எழுந்தருள்வார். பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாடவீதியில் சென்று வந்து நிலை அடையும்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்கிறார்கள். அன்று இரவு தீர்த்த வாரி அவரோகணம், 12-ந்தேதி மட்டையடி உற்சவம், இரவு இந்திர விமானத்தில் வீதியுலா, 13-ந் தேதி புஷ்ப யாகம், 14-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) வேல்விழி மற்றும் நிர்வாகத்தினர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • சென்னை மாநகர பேருந்துகளில் மட்டும் 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
    • கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3.65 கோடி முறை பெண்கள் நகரப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

    தமிழ்நாடு அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கிய திட்டமாக மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மகளிர் விடியல் பயணம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரை 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை மாநகர பேருந்துகளில் மட்டும் 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    மகளிர் விடியல் பயணத்திட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3.65 கோடி முறை பெண்கள் நகரப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக ஏப்ரல் மாதத்தில 28-ந்தேதியில் மட்டும் சென்னை மாநகரப் பேருந்துகளில் 13.59 லட்சம் முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர்.

    மகளிர் விடியல் பயணத்திட்டத்தில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

    • அணையின் நீர்மட்டம் 107.95 அடியாக உயர்ந்து உள்ளது.
    • தற்போது அணையில் 75.52 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.

    மேட்டூர்:

    கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 2323 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 3619 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 107.95 அடியாக உயர்ந்து உள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 75.52 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.

    • தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும்.
    • இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உணரமுடிகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான 25 நாட்களுக்கு 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது.

    கோடை காலத்தையொட்டி வரும் கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும்.

    அந்தவகையில் நடப்பாண்டில் கோடைகாலம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உணரமுடிகிறது.

    தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 100°F க்குமேல் வெப்பம் பதிவாகிவரும் நிலையில், நாளை முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெயிலை நினைத்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு நேற்று நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் கர்நாடகா, தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்து உள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 6 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.70,040-க்கு விற்கப்பட்டது.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 22-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 23-ந்தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கியது. அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.72,120-க்கு விற்கப்பட்டது.

    மறுநாள் தங்கம் விலை ரூ.72,040 ஆக குறைந்தது. தொடர்ந்து 4 நாட்கள் அதே விலையே நீடித்தது. கடந்த 28-ந்தேதி தங்கம் விலை மேலும் குறைந்து ரூ.71,520-க்கு விற்கப்பட்டது. 29, 30-ந்தேதிகளில் சற்று உயர்ந்து ரூ.71,840-க்கு விற்பனையானது.

    அட்சய திருதியை முடிவடைந்த நிலையில் தங்கம் விலை நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.1,640 குறைந்து ரூ.70,200-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.70,040-க்கும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,755-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.8,755-க்கும் சவரன் ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது. 

    அதே நேரத்தில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.108-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    02-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    01-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,200

    30-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    29-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    28-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    02-05-2025- ஒரு கிராம் ரூ.109

    01-05-2025- ஒரு கிராம் ரூ.109

    30-04-2025- ஒரு கிராம் ரூ.111

    29-04-2025- ஒரு கிராம் ரூ.111

    28-04-2025- ஒரு கிராம் ரூ.111

    • மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது கனவு.
    • எனது பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்

    கோவை:

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற கல்வியாண்டுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது.

    கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு 14 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை கோவை சாய்பாபாகாலனியை சேர்ந்த திருநங்கை இந்திரஜா (வயது 22) உள்பட 6,994 பேர் எழுதுகிறார்கள். இந்திரஜா தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதும் முதல் திருநங்கை ஆவார்.

    இதுகுறித்து திருநங்கை இந்திரஜா கூறும்போது, மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது கனவு. கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்தேன். நான் கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை எழுதினேன். அதில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன்.

    இருந்தபோதிலும் எனக்கு மருத்துவ சீட்டுக்கான இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத உள்ளேன். இதில் எனக்கு 1.1 சதவீதம் இட ஒதுக்கீட்டின் படி மருத்துவ சீட்டு கிடைக்கும் என்று நம்புகிறேன். எனக்கு கோவை தடாகம் ரோடு அரசு தொழில்நுட்ப கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன். எனது பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவலர் கதிரவன் மார்க்ஸூக்கு மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • த.வெ.க. கட்சி துண்டை அணிந்துகொண்டு விஜயின் வரவேற்பு கொண்டாட்டத்தில் காவலர் கலந்து கொண்டுள்ளார்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை பார்க்க சென்ற காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலரான கதிரவன் மார்க்ஸ், விளக்குத்தூண் காவல் நிலையத்தில் மாற்றுப்பணியில் இருந்தார்.

    காவலர் கதிரவன் மார்க்ஸூக்கு மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.

    அந்த நேரத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்ல சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து இருந்தார்.

    த.வெ.க. தலைவர் விஜயை பார்ப்பதற்காக காவலர் கதிரவன் மார்க்ஸ் வேறு காரணம் கூறி, முன் அனுமதி (Permission) கேட்டு மதுரை விமான நிலையம் வந்துள்ளார்.

    சீருடை இல்லாமல், த.வெ.க. கட்சி துண்டை அணிந்துகொண்டு விஜயின் வரவேற்பு கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

    இதுதொடர்பான வீடியோ மாநகர காவல் ஆணையாளர் லோகநாதனுடைய பார்வைக்கு சென்ற நிலையில், காவலர் கதிரவன் மார்க்ஸை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளர்.

    • சென்னையில் மட்டும் 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

    அந்த வகையில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. தேர்வை, நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுத இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 1½ லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட 7 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    சென்னையில் மட்டும் 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. செல்போன் உள்பட மின்னணு சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட வழிமுறைகளை தேர்வர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்திருக்கிறது. மாணவர்கள், கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    • பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 16 பெட்டிகளாக மாற்றப்பட்டது.
    • தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. சேவை தொடங்கப்பட்டபோது 8 பெட்டிகள் மட்டுமே இருந்தது. பின்னர் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 16 பெட்டிகளாக மாற்றப்பட்டது.

    இதற்கிடையே, தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.

    இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்க எழும்பூர்-நாகர்கோவில் இடையில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது. தற்போது 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில் மொத்தம் 20 பெட்டிகளாக மாற்றப்பட இருக்கிறது.

    வரும் 8-ந் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • காவலரை தாக்கியதாக பெண்ணின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • மதுபோதையில் இருந்த காவலர் மீது புகார் அளித்த பெண்ணின் கணவர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    சென்னை அயனாவரத்தை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகியான 33 வயது பெண் கடந்த 30-ந்தேதி நள்ளிரவு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலையில் சென்றபோது, இவர்களின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், தேவையின்றி 'ஹாரன்' அடித்தும், அப்பெண்ணிடம் ஆபாச சைகையும் காட்டியுள்ளார்.

    இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். மேலும் ஓட்டேரி காவல் நிலையம் அருகே அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில், மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தவர் ஓட்டேரி காவல் நிலைய குற்றப்பிரிவைச் சேர்ந்த காவலர் தினேஷ் என்பது தெரியவந்தது. மேலும், மது போதையில் இருந்துள்ளார்.

    இது தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரி விசாரணை நடத்தினார். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட தினேஷ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். பெண்ணை நோக்கி ஆபாச சைகை செய்த காவலர் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், காவலரை தாக்கியதாக பெண்ணின் கணவர் மீது போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தன்னை தாக்கியதாக காவலர் தினேஷ் அளித்த புகாரின்பேரில் புகாரளித்த பெண்ணின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுபோதையில் இருந்த காவலர் மீது புகார் அளித்த பெண்ணின் கணவர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஆபாசமாக பேசுதல், தாக்கி காயத்தை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று நள்ளிரவு சென்னை வந்தடைந்தார்.
    • அவரை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

    சென்னை:

    தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா மே 3-ம் தேதி சென்னைக்கு வருகை தரவுள்ளாா். அப்போது மாநில நிா்வாகிகளுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தவுள்ளாா் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று நள்ளிரவு சென்னை வந்தடைந்தார். அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

    எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவானதைத் தொடா்ந்து கூட்டணியை விரிவாக்கம் செய்து பலப்படுத்துதல், கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், பா.ஜ.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது தொடா்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    ×