என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தோட்டத்து வீட்டில் வைத்து மர்மநபர்கள் கொலை செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
- தோட்டத்து வீடுகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும்.
திருப்பூர்:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி மற்றும் பாக்கியம் ஆகிய இருவரும் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து சிவகிரி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த தம்பதி அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும், நகைகளுக்காக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
ஈரோடு கொலை சம்பவம் போன்று பல்லடம் சேமலைகவுண்டம்பாளையத்திலும் சில மாதங்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தில் தந்தை,தாய், மகன் ஆகியோரை தோட்டத்து வீட்டில் வைத்து மர்மநபர்கள் கொலை செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்களை குறி வைத்து கொலை சம்பவம் நடைபெற்று வருவதால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் தோட்டத்து வீடுகளில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். 44 போலீசார் அடங்கிய 22 குழுக்கள் தோட்டத்து வீடுகள் அமைந்துள்ள பகுதியில் துப்பாக்கி ஏந்தியவாறு ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பி.ஏ.பி. கால்வாய் வழியாக கொள்ளையர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் அங்கேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தோட்டத்து வீடுகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும். தனியாக பாதுகாப்பற்ற முறையில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வசிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
- சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒரு சில பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் லேசான மழைக்கு வாய்ப்பு.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி, கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, விருதுநகர், தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வருகிற 5-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு.
கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வருகிற 6-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் லேசான மழைக்கு வாய்ப்பு. அதேநேரம் மதியவேளையில் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும்.
- எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன.
- உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்துவிடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த மாதம் 15-ந்தேதி முதல் தடை அமலுக்கு வந்து உள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 15-ந்தேதி முதல் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்படுகிறது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வள்ளம் மற்றும் கட்டுமரங்களில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கிறார்கள்.
இதனால் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கவில்லை. இந்த உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த உயர்ரக மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த மீன்பிடி தடை காலத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மீன்பிடி தடை காலத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அந்நிய செலாவணி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
- திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர்.
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.
திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர். திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் கரைக்கு திரும்பினர்.
மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர்.
மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- அடுக்கடுக்கான சாதனைகளால் தமிழ்நாடு இன்றைக்கு முன்னிலையில் இருக்கிறது.
- பா.ஜ.க. அரசுக்கு இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க.-பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே 4 முனை போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களுக்கு மேல் இருந்தாலும் இப்போதே தேர்தல் பணிகளை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தொடங்கி விட்டன. குறிப்பாக பூத் கமிட்டி ஏஜெண்டுகளை தயார்ப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
நடிகர் விஜய்யும் பூத் கமிட்டி மாநாடுகளை நடத்தி தமிழக வெற்றிக்கழக தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இதனால் தேர்தல் களம் விறுவிறுப்பாக தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா.
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் அனைவருக்கும் இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.
* முற்போக்கான சிந்தனைகளுடன் கடமையாற்றிய கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கும் இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி-ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் தொடர்ந்து குரல் எழுப்பி-சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது என்பதை நாட்டு மக்களுக்கும்-ஒன்றிய அரசுக்கும் உணர்த்தி-தற்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பை பெற்றிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, அரசியல் சட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக ஆளுநரின் கையெழுத்தின்றி உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்துச் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தனது சட்டப் போராட்டம் மூலம் பெற்று, ஆளுநர் அடாவடியாக நிறைவேற்ற மறுத்த பத்து மசோதாக்களைச் சட்டமாக்கி சகாப்தம் படைத்து, "சட்டமியற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கே"-"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே-நிச்சயமாக ஆளுநருக்கு இல்லை" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பெற்று, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது மட்டுமின்றி, இந்தத் தீர்ப்பின் மூலம், இந்தியக் கூட்டாட்சி வரலாற்றில் அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்.
அதோடு, வரலாற்றில் மீண்டும் மாநில சுயாட்சிக்காக உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவினை நியமித்துள்ள கழகத் தலைவரும்-முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு, மாவட்ட செயலாளர்களின் இந்த கூட்டம் உவகையுடனும்-பெருமை பொங்கவும் பாராட்டுதலைப் பதிவு செய்து கொள்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2022-இல் முதலிடம், ஏற்றுமதித் தயார் நிலைக் குறியீட்டில் முதலிடம்; மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மை மாநிலம்; தோல் பொருட்கள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் முதன்மை மாநிலம்; நாட்டிலேயே காவல்துறையில் அதிக பெண் அதிகாரிகள் பணிபுரியும் மாநிலம்; அதுமட்டுமல்ல-சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று திராவிட மாடல் அரசின் மணிமகுடத்தை அலங்கரிக்கும் அடுக்கடுக்கான சாதனைகளால் தமிழ்நாடு இன்றைக்கு முன்னிலையில் இருக்கிறது.
மக்களை முன்னேற்றும் முத்திரைத் திட்டங்களான 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்', 'மகளிர் விடியல் பயணத் திட்டம்', 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்', 'புதுமைப்பெண் திட்டம்', 'தமிழ் புதல்வன் திட்டம்', 'நான் முதல்வன் திட்டம்', 'அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்', 'இல்லம் தேடிக் கல்வி', 'மக்களைத் தேடி மருத்துவம்' என அனைத்துத் திட்டங்களும்-தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும்-தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும் முன்னோடியாகத் திகழ்வதை மற்ற மாநிலங்கள்கூட இன்று திரும்பிப் பார்க்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழக அரசின் இந்தச் சாதனைகளைப் பகுதி, ஒன்றிய, நகர அளவில், இளைஞர் அணியின் மூலம் வரப்பெற்ற 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 பேச்சாளர்களின் பங்கேற்புடன், 868 ஒன்றியங்கள்-224 பகுதிகள்-152 நகரங்கள் என மொத்தம் 1,244 இடங்களில் "நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு!" சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்திடுவதென மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், நம் நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவும், சமத்துவம், சமூகநீதி, சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன் காக்கும் மாபெரும் இயக்கமாக முன்வரிசையில் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழுக் கூட்டம் நம் ஒப்பற்ற கழகத் தலைவர் அறிவுறுத்தலின்படி, வருகின்ற ஜூன் 1-ம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறும் என்று இம்மாவட்டச் கழக செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
மக்கள் மன்றத்திலும்-சட்டத்தின் துணைக் கொண்டும்; தி.மு.க. எதிர் கொள்ளும்!
நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளிலும் அத்துமீறிக் குறுக்கிட்டு-அந்த அமைப்புகளின் சுதந்திரத்தைப் பறித்து வருவதோடு-தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மட்டுமே வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் ரெய்டுக்கும், சோதனைகளுக்கும் இலக்காகும் வகையில் அதிகார அத்துமீறல் செய்து-அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை உருவாக்கி வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற நடுநிலை தவறாது செயல்பட வேண்டிய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளதன் விளைவாக இன்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு இந்த அமைப்புகளை ஆளாக்கி, அ.தி.மு.க. போன்ற கட்சிகளை மிரட்டி கூட்டணிக்கு அமைக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்த அமைப்புகளை ஈடுபடுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட நடவடிக்கையை "பழிவாங்கும் நடவடிக்கை" எனக் கூறிய அமலாக்கத்துறையைப் பார்த்து; இப்போது டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அந்த அமைப்புகளில் நடக்கும் ஊழல்களை கண்டித்துக் கொண்டு இருப்பதையும் மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது.
- நாம் எல்லா காலக்கட்டத்திலும் இதுபோன்ற சோதனைகளை எதிர் கொண்ட இயக்கம்தான்.
- அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதை விடவும் மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிடுங்கள்.
சென்னை:
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
நம்முடைய பலமே, நம்முடைய கழக கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாக கட்டமைப்பு எந்த கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறோம், இருக்க வேண்டும். தடங்கல் என்பது எப்போதும் இருக்கும். அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
பா.ஜ.க. தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அ.தி.மு.க.வை அடக்கி விட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால் பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்.
நாம் எல்லா காலக்கட்டத்திலும் இதுபோன்ற சோதனைகளை எதிர் கொண்ட இயக்கம்தான். அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், இதுபோன்ற மிரட்டல்கள் மூலமாக அசிங்கப்படுத்த நினைப்பார்கள். அவர்களது அரட்டல், மிரட்டல், உருட்டல் அனைத்துக்கும் உண்மையான காரணம் என்ன என்பது மக்களுக்கு தெரியும். எனவே பா.ஜ.க.வின் அச்சுறுத்தலை அரசியல் ரீதியாக நாம் எதிர்கொள்வோம்.
அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதை விடவும் மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாக செல்ல வேண்டும். நகர, ஒன்றிய அளவில் பூத் கமிட்டி கூட்டங்களை நடத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கி வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வினியோகிக்க வேண்டும். உள்ளூர் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடுத்த ஓராண்டு காலம் மிகவும் மிக முக்கியமானது.
சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பதை தி.மு.க. தலைமை தான் முடிவு செய்யும். வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை சட்டமன்றத்துக்கு தகுதியுள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது மாவட்ட செயலாளர்களின் கடமையாகும்.
பவள விழாவை கொண்டாடிய கழகம், 6-வது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்க காரணம், கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள்தான் என்பதை நான் அனைத்து இடங்களிலும் சொல்லி வருகிறேன்.
கடந்த 7 ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிக்கு காரணம், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தான். இத்தகைய நன்றி உணர்வோடுதான் நாம் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- நேற்று மாலை கடுமையான மழை பெய்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- இன்று 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்:
தமிழகத்தின் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் 2023ம் ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் 15 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு 30 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்த நிலையில் தற்போது 15 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
நேற்று மாலை கடுமையான மழை பெய்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இன்று அதே கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், குடைகளை பிடித்தும் தங்களது சேலையால் தலையை மூடியும் கடும் வெயிலிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்தும், கும்மியடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அ.தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படும்.
- பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி உருவாவதை தி.மு.க. விரும்பவில்லை.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார்.
அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சீட்டுக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று நிர்வாகிகளை எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவள்ளூரில் ஒருவர் சீட்டிற்காக ரூ.3 கோடி ஏமாந்ததாகவும் எழுந்த தகவலையும், முன்னாள் அமைச்சர் ஒருவர் சட்டசபை தேர்தல் சீட்டிற்காக ரூ.3 கோடி அளித்து ஏமாந்ததையும், சரவணன் என்ற நபர் ஒருவர் இ.பி.எஸ்.-க்கு நெருக்கமானவர் என கூறி பணம் பெற்றதையும் சுட்டிக்காட்டி அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
அ.தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படும். பணம் பெற்றுக்கொண்டு சீட் வழங்குவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ரகசியமாக சென்று பா.ஜ.க.வுடன் கூட்டணியை இறுதி செய்தது ஏன் என்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி உருவாவதை தி.மு.க. விரும்பவில்லை. கூட்டணி விவகாரம் குறித்து அ.தி.மு.க.வினர் பொதுவெளியில் பேட்டி கொடுக்க வேண்டாம். அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணியாக மாறும். கூட்டணிக்கு வரும் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும்.
பூத் கமிட்டி மிக மிக முக்கியம், அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பூத் கமிட்டியை முறையாக அமைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- காப்புரிமை ஆலோசகர் ப்ரீத்தி நாராயண் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
- காப்புரிமை விண்ணப்பச் செயல்முறை மற்றும் வணிகமயமாக்கல் உத்திகள் குறித்த நடைமுறை வழிகாட்டுதலை வழங்கினார்.
எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முது வணிகவியல் துறை அறிவுசார் சொத்துரிமை பற்றிய கருத்தரங்கு 'அறிவுசார் சொத்துரிமைகள் : புதுமைகளை வளர்ப்பதில் முக்கியத்துவம், வகைகள் மற்றும் நோக்கம்' என்ற தலைப்பில் நடைபெற்றது.
புதுமைகளை ஊக்குவிப்பதிலும் படைப்புப் பணிகளைப் பாதுகாப்பதிலும் அறிவுசார் சொத்துரிமைகளின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த அமர்வின் நோக்கமாகும். சிறப்பு விருந்தினராகக் காப்புரிமை தாக்கல், அறிவுசார் சொத்துரிமை மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆகியவற்றில் சிறந்த அனுபவமுள்ள புகழ்பெற்ற காப்புரிமை ஆலோசகர் ப்ரீத்தி நாராயண் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
காப்புரிமைகள், பதிப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள் மற்றும் தொழில்துறை வடிவமைப்புகள் உட்பட அறிவுசார் சொத்துரிமைகளின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஒரு நுண்ணறிவை ப்ரீத்தி நாராயண் வழங்கினார். ஆராய்ச்சி, வணிகம் மற்றும் தொழில்முனைவோர் ஆகியவற்றில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கை அவர் வலியுறுத்தினார்.
மேலும் காப்புரிமை விண்ணப்பச் செயல்முறை மற்றும் வணிகமயமாக்கல் உத்திகள் குறித்த நடைமுறை வழிகாட்டுதலை வழங்கினார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கல்வி மற்றும் தொழில்முறை முயற்சிகளில் அறிவுசார் சொத்துகளைப் பாதுகாப்பதன் மதிப்பைக் கருத்தில் கொள்ள இக்கருத்தரங்கம் பெரிதும் ஊக்கமளித்தது.
- தமிழ்நாட்டின் உட்புறப் பகுதிகளில் மழைபெய்யும்.
- ஆந்திராவுக்கு அருகில் உள்ள வேலூர் பகுதியில் தொடர்ந்து 39-40 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
சென்னை:
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் நடமாட முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், நாளை முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. நாளை தொடங்கி 28-ந்தேதி வரை என 24 நாட்கள் வெயில் வாட்டி வதைக்கும் என்பது நினைத்து மக்கள் இப்போது கலக்கத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், கத்திரி வெயில் நாளை தொடங்கினாலும், மழை காரணமாக அடுத்த ஒரு வாரத்துக்கு வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாள் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தைப் போலல்லாமல், இந்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டிற்கு மிகவும் நல்லதாக இருந்தது. தமிழ்நாட்டின் உட்புறப் பகுதிகளில் மழைபெய்யும். ஆந்திராவுக்கு அருகில் உள்ள வேலூர் பகுதியில் தொடர்ந்து 39-40 டிகிரி செல்சியஸ் இருக்கும். இது இப்பகுதிக்கு இயல்பானது. அங்கும் மழை தொடர்ந்து பெய்யும் என்றார்.
- அம்பை சுற்றுவட்டாரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
- முழங்கால் அளவிற்கு தேங்கிய தண்ணீரால் பக்தர்கள் பெரும் அவதி அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 1 மாதத்திற்கும் மேலாக கோடை மழையானது அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஓரளவுக்கு பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும், பிற்பகலில் பரவலாக மழை பெய்வதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நேற்று சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை சிறிது நேரம் பெய்தது. அங்கு அதிகபட்சமாக 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லையில் 2.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து எஸ்டேட் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. காக்காச்சியில் 10 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 8 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அம்பை சுற்றுவட்டாரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மின்தடை பாதிக்கப்பட்டு ஏராளமான கிராமங்கள் இருளில் மூழ்கின. கல்லிடைக்குறிச்சி அருகே வெள்ளாங்குளியில் சுடலைமாடசுவாமி கோவில் அருகே உள்ள மரம் சாலையில் முறிந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக சென்ற காரின் முன்பகுதி கண்ணாடி உடைந்தது. காரில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கடனாநதி, ராமநதி மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மெல்ல அதிகரித்தது.
அதிகபட்சமாக கருப்பாநதியில் 40 மில்லிமீட்டரும், கடனா நதி நீர்பிடிப்பு பகுதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது. சங்கரன்கோவிலில் 28 மில்லிமீட்டர் மழை பெய்தது. சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழையால் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவிலில் தண்ணீர் புகுந்தது. முழங்கால் அளவிற்கு தேங்கிய தண்ணீரால் பக்தர்கள் பெரும் அவதி அடைந்தனர்.
தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால் உடனடியாக தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து தண்ணீர் தேங்கி கிடந்ததால் இன்று 2-வது நாளாக தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான சிவன் தெரிவித்தபோது, 1 மணி நேரம் பெய்த கனமழைக்கு சங்கரன்கோவிலில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதற்கு காரணம் வாறுகால்களின் அளவு சுருங்கி விட்டது.
கோவிலை சுற்றி உள்ள சாலைகளின் உயரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கோவில் இருக்கும் இடம் தாழ்வான இடம் ஆகி விட்டது. ஒவ்வொரு முறை புதிய சாலை போடும்போது சாலையை தோண்டி போடாமல் உயரமாக்கிக் கொண்டே செல்வதால் இந்த நிலை ஏற்படுகிறது. இதை அரசும் கண்டு கொள்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான ஆய்வு செய்து வடிகால் வசதியை சரி செய்ததால் கோவிலுக்குள் மழை நீர் தேங்காத நிலை உருவாகும் என்றார்.
- சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
- ஜெயக்குமார் கடிதத்தில் எழுதியிருந்த அனைவரையும் போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்(வயது 60).
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் 4-ந்தேதி வீட்டின் பின்புறம் உடலில் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த கொலையில் அவர் எழுதியதாக போலீஸ் நிலையத்தில் அவரது மகன் ஒப்படைத்த கடிதத்தில் வள்ளியூர், திசையன்விளை பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்கள், நண்பர்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், தனக்கு பணம் தரவேண்டியவர்கள், பணம் கொடுக்க வேண்டியவர்கள் என ஏராளமான நபர்களின் பெயர்களை எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில் எழுதியிருந்த அனைவரையும் போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தும் தடயம் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் அறிவியல் பூர்வ விசாரணையும் மேற்கொண்டனர். ஆனால் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. இதனிடையே அவரது பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவிலும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதை கூட தீர்மானிக்க முடியவில்லை.
இதனால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றினர். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். தென் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும் நாளையோடு ஓராண்டு முடிவடையும் நிலையில் இன்னும் ஜெயக்குமார் கொலை வழக்கு ஆரம்ப நிலையிலேயே இருந்து வருகிறது. எவ்வித துப்பும் துலங்கவில்லை. அவரது மரணம் குறித்து விசாரிப்பதில் போலீசார் காட்டும் ஆர்வத்தை கூட அவரது குடும்பத்தினரோ, அரசியல் கட்சியினரோ காட்டவில்லை. இதனால் கொலைவழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழாமல் நீர்த்து போய் இருக்கிறது.






