என் மலர்
வழிபாடு

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் பிரமோற்சவ விழா
- வேத மந்திரம் முழங்க பிரமோற்சவம் கொடியேற்றம் நடைபெற்றது.
- பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த ரெட்டிச் சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரமோற்சவ விழா விமர்சையாக நடை பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரம் முழங்க பிரமோற்சவம் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கும் சாமிக்கும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பல்லக்கில் சாமி வீதியுலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினந்தோறும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. வருகிற 7-ந் தேதி இரவு கருட சேவை விமர்சையாக நடைபெற உள்ளது. பின்னர் விமானத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனம், மங்களகிரி வாகனம், 10-ந்தேதி காலை வெண்ணைத் தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் விழா வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். இதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்து தேரில் கம்பீரமாக எழுந்தருள்வார். பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாடவீதியில் சென்று வந்து நிலை அடையும்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்கிறார்கள். அன்று இரவு தீர்த்த வாரி அவரோகணம், 12-ந்தேதி மட்டையடி உற்சவம், இரவு இந்திர விமானத்தில் வீதியுலா, 13-ந் தேதி புஷ்ப யாகம், 14-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) வேல்விழி மற்றும் நிர்வாகத்தினர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.