என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட ஒன்று.
- தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
திருச்சி:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்திற்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரீகம். 234 தொகுதிக்கும் இன்னும் 2 நாட்களில் கூட்டம் நடத்தப்பட்டு, பொறுப்பார்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அதில் எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை.
இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுப்பதை விட வாக்குறுதி தான் முக்கியம் என்று எடப்பாடி பழனிசாமி எங்களிடம் தெரிவித்துள்ளார். 2026-ல் தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து விஜய் கட்சியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, இந்தக் கேள்விக்கு விடையை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதற்கு அவர் தான் பதில் சொல்லவேண்டும்.
2026-ல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான். அப்போதுதான் தப்பு நடந்தால் ஒரு எதிர்க்கட்சியாக இருந்து சுட்டி காட்ட முடியும். கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை, 24 மணி நேரம் மது விற்பனை, கள்ள லாட்டரி விற்பனை, கனிமவளக் கொள்ளை அதிகமாக நடக்கிறது.
இதை முதல்வர் சரி செய்ய வேண்டும். குறிப்பாக தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வடக்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணித்து விட்டார்கள்.
- சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 98.5% நிறைவேற்றி விட்டோம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அமித்ஷாவை பார்த்தால் எங்களுக்கு ஏன் ஷாக் அடிக்க வேண்டும். தி.மு.க.வை பார்த்து ஷாக் அடித்து தானே அமித்ஷா தமிழகம் வந்துள்ளார்.
* பிரதமர் எதற்காக 5 முறை தமிழகம் வர வேண்டும்.
* கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கையை திருப்பி அனுப்பியது ஏன்?
* தமிழ் குறித்து தமிழர்கள் குறித்தும் பேசும் மத்திய பா.ஜ.க. அரசு கீழடி ஆய்வை ஏற்க மறுப்பது ஏன்?
* வடக்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணித்து விட்டார்கள்.
* இல்லாத சரஸ்வதி நதி, சமஸ்கிருதம் மொழிக்கு எதற்காக நிதி ஒதுக்கீடு.
* பா.ஜ.க.வின் இந்துமத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. அவர்களை பார்த்தால் எங்களுக்கு சிரிப்பாகத்தான் உள்ளது.
* நேரடி வரி வருவாய் மூலம் மத்திய அரசுக்கு 4 மடங்கு வருவாய் உயர்ந்துள்ளது.
* அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட வாக்குறுதி ஒன்றுதான் பாக்கி.
* பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஒரு திட்டம் உள்ளது.
* சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 98.5% நிறைவேற்றி விட்டோம்.
* மத்திய அரசு நிதி வழங்காத நிலையிலும் மாநில நிதியில் இருந்து வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அருவெறுப்பான, வஞ்சனம் நிறைந்த, மாநிலத்தை பிளவுப்படுத்தும் நோக்கத்துடன் அமித்ஷா பேசி உள்ளார்.
- அமித்ஷா வகிக்கும் பதவிக்கு அழகல்ல, அரசியல் சித்து விளையாட்டுகளை நிறுத்த வேண்டும்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து அப்பட்டமான பொய்களை அமித்ஷா பேசி உள்ளார்.
* தி.மு.க. அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமித்ஷா சுமத்தி உள்ளார்.
* அருவெறுப்பான, வஞ்சகம் நிறைந்த, மாநிலத்தை பிளவுப்படுத்தும் நோக்கத்துடன் அமித்ஷா பேசி உள்ளார்.
* தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டமிட்டு பேசி உள்ளார்.
* அமித்ஷாவின் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லது கிடையாது.
* அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் மதவாத பிளவை உண்டாக்கும் வகையில் அமித்ஷா பேச்சு உள்ளது.
* அமித்ஷா வகிக்கும் பதவிக்கு அழகல்ல, அரசியல் சித்து விளையாட்டுகளை நிறுத்த வேண்டும்.
* அரசியலுக்காக மிகவும் கீழ்த்தரமாக பேசி உள்ள அமித்ஷாவின் கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அணை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 64.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
- கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது.
சேலம்:
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் இந்த அணைகளில் இருந்து தமிழக காவிரியிலும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மழையின் தீவிரத்தை பொறுத்து ஆற்றில் தண்ணீர் அதிகரித்தும், குறைந்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. அதே போல் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.16 அடியை எட்டியது. வழக்கமாக ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் தான் அணையில் இந்த அளவுக்கு தண்ணீர் இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் ஜூன் மாத தொடக்கத்திலேயே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் அணைக்கு இன்று காலை முதல் வினாடிக்கு 5 ஆயிரத்து 980 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 64.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 12-ந் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க உள்ளார். இதனால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- ஆம்பூர் பஜார் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நாகநாத சாமி கோவில் உள்ளது.
- திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பஜார் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நாகநாத சாமி கோவில் உள்ளது.
இங்கு, தலைமை அர்ச்சகராக பணியாற்றி வருபவர் தியாகராஜன். கோவிலில் உழவார பணி மற்றும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வந்த இளம்பெண்ணிடம் அவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசார் அர்ச்சகர் தியாக ராஜன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த தகவலறிந்த அர்ச்சகர் தியாகராஜன் தலைமறைவானார். இந்த நிலையில் அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர்.
இந்த நிலையில் புதுச்சேரியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த கோவில் அர்ச்சகர் தியாகராஜனை இன்று அதிகாலை கைது செய்தனர். இதனால் ஆம்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இனிமேல் அவர் கோவில் அர்ச்சகராக தொடர்வதில் பக்தர்களுக்கு விருப்பமில்லை. அவர் கோவில் அர்ச்சகராக தொடர்ந்தால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்" என இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.
- நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.
- அதிகபட்சமாக 05.05.2025 அன்று 3,23,899 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2025-ம் ஆண்டு மே மாதத்தில் 89,09,724 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 87,89,587 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 05.05.2025 அன்று 3,23,899 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2025, மே மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 5,86,430 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 1,268 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 169 பயணிகள், கியூஆர் கோடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 42,33,865 பயணிகள், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 40,87,992 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து கடந்த ஏப்ரல் வரை 39 கோடி பயணிகள் பயணம் செய்ததாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் பெருமிதமாக தெரிவித்துள்ளது. மாதம் 1 கோடி பயணிகளை நோக்கி மெட்ரோ பயணிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், எங்களை தேர்ந்தெடுத்ததற்காக எங்கள் அனைத்து பயணிகளுக்கும் நன்றி. சென்னை மெட்ரோ ரெயில் உங்கள் நம்பகமான பயண கூட்டாளியாக இருப்பதில் பெருமை கொள்கிறது என்று தெரிவித்துள்ளது.
- பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் இந்த மு.க.ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு இன்னும் திருந்தவில்லை!
- சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இனியேனும் அடக்க முயலுமாறு பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
மறைந்த சாமியாத்தாள் அவர்களின் குடும்பத்தாருக்கு அ.தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
சாமியாத்தாள் வெட்டப்பட்டு, கோவை KMCH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு இரத்தம் தேவைப் படுவதாகவும் நேற்று காலை தகவல் வந்ததும், நம் அ.தி.மு.க.வை சார்ந்த இளைஞர்கள் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டும், அதற்குள் சிகிச்சைப் பலனின்றி சாமியாத்தாள் உயிரிழந்துவிட்டார் என்பது மிகவும் வேதனைக்குரியது .
மாநிலத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் இந்த மு.க.ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு இன்னும் திருந்தவில்லை!
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் , தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளை குறி வைத்து நடத்தப்படும் இந்த கொலை- கொள்ளை சம்பவங்களை தடுக்க இந்த தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
பல்லடம், சிவகிரி வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மட்டுமே இந்த குற்றங்களை செய்தவர்களா? என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்கனவே உள்ள நிலையில், இச்சம்பவம் அச்சந்தேகத்தை வலுப்பெறவே செய்துள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக கடப்பதையே ஒரு அக்னிப் பரீட்சையாக மாற்றிய ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.
சித்தம்பூண்டி சாமியாத்தாள் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இனியேனும் அடக்க முயலுமாறு பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,955-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.
கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. கடந்த 7-ந்தேதி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 980-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் வந்துவிட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.71 ஆயிரத்து 640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,955-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.118-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
07-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
06-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040
05-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040
04-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,720
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
08-06-2025- ஒரு கிராம் ரூ.117
07-06-2025- ஒரு கிராம் ரூ.117
06-06-2025- ஒரு கிராம் ரூ.118
05-06-2025- ஒரு கிராம் ரூ.114
04-06-2025- ஒரு கிராம் ரூ.114
- மாணவிக்கு விடுதி காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
- விடுதி காவலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் கைது செய்யப்பட்டார்.
அரசு விடுதியில் தங்கியிருந்து 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு விடுதி காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவி கால் முறிவு ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் மேத்யூவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.
- நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.
பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி இம்மாதம் (ஜூன்) 19-ந்தேதி மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது.
தி.மு.க. சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் கடந்த 6-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல, அ.தி.மு.க. சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இன்றுடன் மனுதாக்கல் நிறைவடைகிறது. நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.
வரும் 12-ந்தேதி மாலை வரை மனுக்களை திரும்பப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் போட்டியிருந்தால் வரும் 19-ந்தேதி தேர்தல் நடைபெறும்.
- தலைமை செயலகத்தில் இன்று காலை பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.
- துறை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழக அரசின் நலத்திட்டங்களை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.
நெடுஞ்சாலை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை, உணவுத்துறை மற்றும் கூட்டுறவு துறை ஆகிய துறைகளின் சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துறை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
- கோடை காலத்தில் இதுவரை இல்லாத வகையில் மழை பெய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- மொத்தம் 260 பேர் உயிரிழந்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டியிருக்கிறது.
சென்னை:
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என 2 மழை காலங்கள் இருக்கின்றன. இதில் தென் மேற்கு பருவமழை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், வடகிழக்கு பருவமழை தென் இந்தியாவிலும் மழையை கொடுக்கிறது.
இதுதவிர, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைக்கக்கூடிய காலமாக இருக்கிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் ஆங்காங்கே தென்பட்டாலும், இந்தியாவில் பல இடங்களில் கோடை மழையும் கைக்கொடுத்து இருக்கிறது.
அந்த வகையில் கோடை காலத்தில் இதுவரை இல்லாத வகையில் மழை பெய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் கடந்த மாதம் (மே) இந்தியாவில் இயல்புக்கு அதிகமாக மழை கொட்டியிருப்பதாகவும், 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மழை பதிவாகி இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மாதத்தில் 30 அதி கனமழை நிகழ்வுகளும், 155 மிக கனமழை நிகழ்வுகளும், 514 கனமழை நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளது. அப்படி பெய்த மழையினாலும், மழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்வுகளாலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.
அதன்படி, இடி-மின்னல் தாக்கி மட்டும் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா, சத்தீஷ்கார், கர்நாடகா, ஜார்கண்ட், பீகார், டெல்லி, அரியானா, மத்திய பிரதேசம், தெலுங்கானா, அசாம், குஜராத், கேரளா, பஞ்சாப், சண்டிகர், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 199 பேர் இறந்துள்ளனர்.
மேலும் கனமழை, பெருவெள்ளத்தினால் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, அசாம், டெல்லியில் 58 பேரும், காற்றினால் ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆக மொத்தம் 260 பேர் உயிரிழந்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டியிருக்கிறது.
பொதுவாக மே மாதத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இந்த காலங்களில் வெப்ப அலையினால் (ஹீட் வேவ்) பலருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டு அதனால் உயிரிழப்புகள் பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் அப்படியே தலைகீழாக மாறி, வெப்ப அலையால் உயிரிழப்பு என்பதைவிட மழை நிகழ்வுகளால் இறப்பு என்பதே அதிகளவில் ஏற்பட்டு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்தார்.






