என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
    • நிலத்தில் இருந்த புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகன் பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தமிழகத்தில் அதிக அளவு பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையானதாக உள்ளது. மேலும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை பக்தர்களால் தானமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆன்மிக பெரியவர்கள் பலரும் பழனி கோவிலுக்கு பல்வேறு சொத்துக்களை தானமாக வழங்கி உள்ளனர்.

    இவற்றில் ஏராளமான விவசாய நிலங்கள் மற்றும் இடங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தன. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 4 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் பழனி பூங்கா ரோடு பகுதியில் கோவிலுடன் இணைந்த தண்டபாணி சுவாமி மடத்திற்கு பாத்தியப்பட்ட சுமார் 1.40 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. தற்போது அந்த நிலத்திற்கு பழனி கோவில் ஆணையரை தக்காராக நியமனம்செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் தண்டபாணி மடத்தின் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மடத்தை மீட்டனர்.

    தொடர்ந்து நிலத்தில் இருந்த புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த இடத்தில் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்த ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டது பக்கதர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல தி.மு.கழகம்.
    • கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து இலட்சிய வீரர்களாகப் புறப்படுவோம்.

    கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு மடல் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் முப்பெரும் விழா அழைப்பு மடல்.

    பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் - தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாள் – பெரியாரின் இலட்சியங்களை வென்றெடுத்திட அண்ணாவால் நம் இதயத்துடிப்பான திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் - இந்த மூன்றும் நிகழ்ந்தது செப்டம்பர் மாதம் என்பதால் முப்பெரும் விழாவாக -உடன்பிறப்புகளின் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தைத் தொடங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்.

    கொள்கை முழக்கமிடும் கருத்தரங்குகள் – பட்டிமன்றங்கள் - கவியரங்குகள்-பொதுக்கூட்டம் என மூன்று நாள் திருவிழாவாக முப்பெரும் விழாவை முன்னெடுத்து, பெரியார் – அண்ணா – பாவேந்தர் - கலைஞர் பெயர்களில் கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கும் வழக்கத்தையும் முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கினார். அப்போதைய முப்பெரும் விழாக்களின் போது, இளைஞரணிச் செயலாளராக வெண்சீருடை அணிந்த பட்டாளத்துடன் பேரணியை வழிநடத்தியவன்தான், உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நம் கழகத்தின் தலைமை நிலையமாக - உடன்பிறப்புகளின் தலைமைச் செயலகமாகத் திகழும் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற முப்பெரும் விழாவின்போதுதான்.

    சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது 1990-ஆம் ஆண்டு செப்டம்பரில் முப்பெரும் விழாவுடன் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள், மண்டல் கமிஷன் வெற்றிவிழா ஆகியவற்றையும் இணைத்து ஐம்பெரும் விழாவாக நடத்தியதும், தேசிய முன்னணியின் தலைவர்கள் மேடையிலிருந்து பார்வையிட, சென்னை அண்ணாசாலை குலுங்கிட இளைஞரணியின் பேரணியை வழிநடத்தியதும் இன்னமும் என் மனதில் நிழலாடுகின்றன.

    முப்பெரும் விழா என்பது நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் திருவிழா. அரிமா நோக்கு போல 75 ஆண்டுகாலக் கழகத்தின் வரலாற்றுத் தடத்தைப் பெருமிதத்துடன் திரும்பிப் பார்த்து, உன்னத இலட்சியப் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்வதற்கான பாசறை. பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று உங்களில் ஒருவனான நானும், என்னுள் கலந்திருக்கும் உடன்பிறப்புகளான நீங்களும் சூளுரைக்கும் திருநாள்.

    நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரை இயற்கை சதி செய்து நம்மிடமிருந்து பிரித்த பிறகு, கழகத்தின் தலைமைப் பொறுப்பை உங்களில் ஒருவனான நான் ஏற்றுக்கொண்டது முதல், சென்னைக்கு வெளியே ஏதேனும் ஒரு மாவட்டத்தில் முப்பெரும் விழாவைக் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டு 2025 செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் கோடாங்கிப்பட்டி எனும் இடத்தில் முப்பெரும் விழா எனும் கொள்கைத் திருவிழா நடைபெற இருக்கிறது. எதைச் செய்தாலும் எல்லாரும் அதிசயிக்கும் வகையில் பிரம்மாண்டமாகவும், 'இப்படியும் செய்ய முடியுமா?' என்ற நேர்த்தியுடனும், 'இவரால்தான் இது முடியும்' என்று அனைவரின் பாராட்டையும் பெறும் வகையிலும் செயல்படக்கூடிய கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் - மேற்கு மண்டலக் கழகப் பொறுப்பாளர் அன்பு இளவல் செந்தில்பாலாஜி அவர்கள் இரவும் பகலும் ஓய்வின்றி விழா ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். ஒவ்வொரு கட்டத்தின் முன்னேற்றத்தையும் என்னிடம் காண்பித்து, ஒப்புதலும் ஆலோசனைகளும் பெற்று நிறைவேற்றி வருகிறார்.

    செப்டம்பர் 17 மாலை 5 மணியளவில் தொடங்கும் முப்பெரும் விழாவுக்குக் கழகத்தின் பொதுச்செயலாளர் - மொழிப்போர்க்கள வீரர் - அண்ணாவிடமும் கலைஞரிடமும் பெற்ற நீண்ட அரசியல் அனுபவத்தால் எனக்குத் துணையாக இருக்கின்ற அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமை தாங்குகிறார். கழகப் பொருளாளர் - கழக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    இந்த இலட்சிய விழாவில் பெரியார் விருது கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் - கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் - இந்திய நாடாளுமன்றத்தில் பெரியாரின் பெண்ணியக் குரலாக இன எதிரிகளை நடுங்கவைக்கும் கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. அண்ணா விருது கழகத்தின் மூத்த முன்னோடி - தணிக்கைக்குழு உறுப்பினர் -பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் - அண்ணா காலத்திலிருந்து கழகப் பணியாற்றி வரும் சுப.சீதாராமன் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. கலைஞர் விருது கழகத்தின் நூறு வயது தொண்டர் - அண்ணாநகர் தொகுதி இடைத்தேர்தலில் அன்றைய ஆளுங்கட்சியின் சதிகளை முறியடித்து வென்ற வீரர் - அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளர் -சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சோ.மா.இராமச்சந்திரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    பாவேந்தர் பாரதிதாசன் விருது கழக மூத்த முன்னோடி - தலைமைச் செயற்குழு உறுப்பினர் - மிசா காலத்தில் தலைவர் கலைஞருக்கு உறுதுணையாக நின்று கழகத்தைக் கட்டிக்காத்த அண்ணன் குளித்தலை சிவராமன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக அவர் நம்மை விட்டுப் பிரிந்து துயரத்தில் ஆழ்த்தினாலும், என்றும் நினைவில் வாழும் அந்த மாவீரரின் தியாகத்தைப் போற்றி அவரது குடும்பத்தாரிடம் வழங்கப்படவிருக்கிறது. பேராசிரியர் விருது கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவர், சட்டப்பேரவை முன்னாள் கொறடா - கழக செயல்மறவர் மருதூர் இராமலிங்கம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. உங்களில் ஒருவனான என் பெயரிலான மு.க.ஸ்டாலின் விருது ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளர் - எந்நாளும் கழகப் பணியைத் தொய்வின்றி ஆற்றும் முன்னாள் அமைச்சர் சகோதரர் பொங்கலூர் ந. பழனிசாமி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    முப்பெரும் விழா நிகழ்வுகளில் முத்தாய்ப்பாகத் தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கழகப் பணியைச் சிறப்பாகச் செய்து வருபவர்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் நற்சான்றிதழும் பணமுடிப்பும் வழங்கப்படும். முரசொலி அறக்கட்டளை சார்பில், தலைவர் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டு -என் அரசியல் பணிகளில் ஆலோசகராகவும் ஆசானாகவும் திகழ்ந்தவரும் - என்றும் நம் நெஞ்சில் வாழ்பவருமான அண்ணன் முரசொலி செல்வம் அவர்கள் பெயரிலான முதல் விருது மூத்த பத்திரிகையாளர் திரு.ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை வழங்கிச் சிறப்புரை ஆற்றும்படி தலைமைக் கழகம் உங்களில் ஒருவனான என்னைப் பணித்துள்ளது.

    நான் எப்போதும் விரும்புவது ஓய்வில்லாக் கழகப் பணிதான். உடன்பிறப்புகளான உங்களிடம் எதிர்பார்ப்பதும் அத்தகைய பணிகளைத்தான். கரூரில் செப்டம்பர் 17-ஆம் நாள் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவில் அலைகடலென ஆர்ப்பரித்து உடன்பிறப்புகளாகிய நீங்கள் கூடுவீர்கள் என்பதும், உங்கள் முகம் கண்டு நான் உற்சாகம் பெறுவேன் என்பதும் உறுதியானது. அதுபோலவே செப்டம்பர் 15 பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாளில்,

    * ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக் குடும்பத்தினரும் சேர்ந்து, "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!" என உறுதி ஏற்கிறோம்!

    * நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் #SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், 'பெண்கள் - விவசாயிகள் - மீனவர்கள் - நெசவாளர்கள் - தொழிலாளர்கள்' என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்." என்று,

    ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் மாநிலம் முழுவதுமுள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் உறுப்பினராக சேர்ந்துள்ள ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினரை, அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதியில் ஒன்றுதிரட்டி, உறுதிமொழியேற்றிட வேண்டும்.

    'ஏ..தாழ்ந்த தமிழகமே' என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அன்றைய தமிழ்நாட்டின் நிலையை எடுத்துக்காட்டிச் சொற்பொழிவாற்றினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அதன்பின், அவரே இந்த மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தமிழ்நாடு என்று பெயர் சூட்டி, இருமொழிக் கொள்கையை நிலைநாட்டி, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி, இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தி தமிழரின் மானத்தையும் தமிழ்நாட்டின் பெருமையையும் மீட்டார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சரான நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 5 முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்து, இன்று நாம் காணும் நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்துத் தந்தார். இடையில் ஒரு சில முறை தமிழ்நாட்டு அரசியலில் விபத்து ஏற்பட்டு, ஆட்சி மாற்றத்தினால் மாநிலத்தின் வளர்ச்சி படுபாதாளத்திற்குச் சென்ற நிலையில், கடந்த 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு இலக்குகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

    ஒன்றிய பா.ஜ.க அரசின் வஞ்சகத்தாலும், அதனிடம் அடிமையாக இருக்கின்ற அ.தி.மு.க.வின் துரோகத்தாலும் நாம் இழந்தவற்றை மீட்கும் முயற்சியில் கடந்த நான்காண்டுகளில் பெருமளவு முன்னேறியுள்ளோம். பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்திலான வளர்ச்சி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் உயர்ந்த நிலை, மருத்துவத்துறையில் மக்களின் நலன் காக்கு சிறந்த கட்டமைப்பு, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம், அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற மாநிலம், பெண்களின் முன்னேற்றத்திற்கும் தற்சார்பு நிலைக்கும் வழிவகுக்கும் மாநிலம் என்று ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே தமிழ்நாட்டின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் அளவுக்குத் திராவிட மாடல் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

    அண்மையில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்த நிலையில், அங்கு வாழும் தமிழர்கள் நம் மாநிலத்தின் நிலைகண்டு பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தனர். உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை அவரது கொள்கை வாரிசாகத் திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தபோது நம் ஆட்சியின் சாதனைகள் யாவும் பெரியார் – அண்ணா -கலைஞர் ஆகியோரின் வழித்தடத்தில் தொடர்வதை உணர்ந்தேன். திராவிடத்தை உலக நாடுகள் அறிந்துகொண்டு ஆய்வு செய்கின்ற காலத்தில் நாம் இருக்கிறோம்.

    உலகம் போற்றும் திராவிடத்தின் பெருமை தொடர்ந்திட, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நீடித்து நிலைத்திட, ஏழாவது முறையாகக் கழக ஆட்சி மலர்ந்திட கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா வெற்றிப்பாதையாக அமையட்டும். கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல தி.மு.கழகம். நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து இலட்சிய வீரர்களாகப் புறப்படுவோம்.

    பேரறிஞர் பெருந்தகை அண்ணா போதித்த கட்டுப்பாட்டை முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்து, இன்று உங்களில் ஒருவனான என் தலைமையிலும் அதே கட்டுப்பாட்டுடன் கொள்கைக் கூட்டமாக உடன்பிறப்புகள் திரள்வதை கரூரிலும் காண இருக்கிறேன். இலட்சிய வீரர்களாக 2026 தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் இந்த முப்பெரும் விழா.

    இருவண்ணக் கொடியேந்தி கொள்கைக் குடும்பமாக அணிதிரள்வீர்! இலட்சியத்தை நெஞ்சில் ஏந்தி, பாதுகாப்பாகத் திரும்பிச் செல்வீர். பெரியார் – அண்ணா - கலைஞர் புகழ் நிலைக்கட்டும்! கழகத்தின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் மனுக்கள் திருட்டு போனதாக புகார் கொடுத்திருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சுற்று வட்டார கிராமங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தன. இந்த முகாம்களில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களை அதிகாரிகள் வாங்கி விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்தன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக அப்போது இருந்த தாசில்தார், திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் மனுக்கள் திருட்டு போனதாக புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஒருவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    • அரசுத்துறைகளில் 5000-க்கும் மேற்பட்ட அரசு வேலைகளை வன்னியர்கள் இழந்திருக்கின்றனர்.
    • 15 சதவீத இட ஒதுக்கீடு தான் உண்மையான சமூகநீதியாக அமையும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    38 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் 17-ந்தேதி தொடங்கிய ஒரு வார தொடர்சாலை மறியல் போராட்டத்தில் 21 பாட்டாளிகளும் மார்பில் துப்பாக்கிக் குண்டுகளையும், உடல் முழுவதும் காவல்துறை தடியடிகளையும் வாங்கிக் கொண்டு தங்களின் இன்னுயிரை சமூகநீதிக்காக தியாகம் செய்தனர். அவர்களின் ஈகம் என்ற உரம் தான் நமது சமூகநீதிப் போராட்டத்தை தழைக்க வைக்கிறது. அவர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் அவர்களின் 38-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றுவதுடன், வீர வணக்கங்களையும் செலுத்துகிறேன்.

    தி.மு.க. அரசுக்கு உண்மையாகவே சமூகநீதியில் அக்கறை இருந்திருந்தால், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான ஓரிரு மாதங்களிலேயே வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றி, 2022-23-ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய தி.மு.க. அரசு தவறியதால் கடந்த 4 ஆண்டுகளில் 3600 எம்.பி.பி.எஸ் இடங்களையும், 700-க்கும் கூடுதலான மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் வன்னிய மாணவர்கள் இழந்திருக்கின்றனர்.

    அதேபோல், நமக்குக் கிடைத்திருக்க வேண்டிய அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் தரவரிசையில் முதல் 25 இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 6000-க்கும் மேற்பட்ட இடங்களும், கலைக்கல்லூரிகளில் 80,000-க்கும் கூடுதலான இடங்களும், சட்டக்கல்லூரிகளில் 1000-க்கும் கூடுதலான இடங்களும் பறிபோயிருக்கின்றன.

    மேலும் அரசுத்துறைகளில் 5000-க்கும் மேற்பட்ட அரசு வேலைகளையும் வன்னியர்கள் இழந்திருக்கின்றனர். வன்னியர்களுக்கு எதிரான இவ்வளவு பெரிய சமூகநீதி துரோகத்தை செய்தது திராவிட மாடல் அரசு தான். இன்றைய நிலையில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு என்பதே சமூக அநீதி தான்.

    15 சதவீத இட ஒதுக்கீடு தான் உண்மையான சமூகநீதியாக அமையும். அதை வென்றெடுப்பதற்காக சிறைகளை நிரப்புவது உள்ளிட்ட எத்தகைய அறப்போராட்டங்களையும், தியாகங்களையும் செய்யத் தயாராகவே இருக்கிறோம். சமூகநீதிப் பயணத்தில் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் 21 ஈகியர்களின் நினைவு நாளில், நமக்கான சமூகநீதிப் போராட்டப் பயணத்தை அவர்களின் வாழ்த்துகளுடன் தொடருவோம்.

    அத்துடன் நமது சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ந் தேதியில் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • த.வெ.க. தலைவர் விஜய்க்கு திருச்சியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • விஜய் வரும் வழியெங்கும் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் இப்போதே தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் மக்களை கவர வியூகம் வகுத்து களமாடி வருகிறார்கள்.

    இத்தகைய சூழலில் நடிகர் விஜயின் அரசியல் வருகை அனைத்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் தேர்தல் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மாநாடுகளை நடத்தி தனது கொள்கைகளையும், அரசியல் நிலைப்பாட்டையும் மக்களிடம் கூறி வந்த நடிகர் விஜய், அடுத்த கட்டமாக தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தையும் தொடங்கிவிட்டார்.

    அதன்படி த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். தொடர்ந்து டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.

    இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட த.வெ.க. தலைவர் விஜய்க்கு திருச்சியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே அவர் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்கிறார்.

    திருச்சி மரக்கடை பகுதிக்கு செல்லும் வழியெங்கும் தொண்டர்கள் நெரிசல் சூழ்ந்துள்ள நிலையில் விஜய் பேசுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

    பிரசார வாகனம் செல்ல முடியாத வகையில் கூட்ட நெரிசல் சூழ்ந்துள்ளதால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விஜய் பேசுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

    விஜய் வரும் வழியெங்கும் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். வழியெங்கும் சூழ்ந்துள்ள தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி த.வெ.க. தலைவர் விஜய் உற்சாகத்துடன் வந்தார்.

    திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பேசுவதற்கு 10.30 முதல் 11 மணி வரை போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

    • முருகன் சிலை அமைய உள்ள இடத்தை சுற்றியுள்ள 2.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
    • ஆய்வின் போது கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார், தக்கார் ஜெயக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவில் பக்தர்களால் முருகப்பெருமானின் 7-ம் படைவீடு என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் உலகளவில் முருக பக்தர்களை ஈர்க்கும் வகையில், மருதமலை அடிவாரத்தில் 184 அடி உயர முருகன் சிலை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    முருகன் சிலை அமைய உள்ள இடத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. அது தவிர 2.48 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதற்காக முருகன் சிலை அமைய உள்ள இடத்தை சுற்றியுள்ள 2.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    அந்த இடங்களை கையகப்படுத்துவது தொடர்பாக கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று அங்கு ஆய்வு செய்தனர்.

    அந்த ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டு இடம் கையகப்படுத்துவது தொடர்பாக மற்ற துறைகளுக்கு கடிதம் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் இது தொடர்பாக வருகிற 22-ந்தேதி(திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டமும் நடக்கிறது.

    இந்த ஆய்வின் போது கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார், தக்கார் ஜெயக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர். 

    • கோவையில் அதிகளவிலான சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
    • சைபர் மோசடிக்கு ஆளாகும் பட்சத்தில் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும்.

    கோவை:

    இணைய பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு நகரங்களில் இணைய பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நாக் அவுட் டிஜிட்டல் மோசடி எனும் விழிப்புணர்வு இயக்கத்தை தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது.

    அதன்படி கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் பிரிவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    கோவையில் அதிகளவிலான சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. நகரை பொறுத்தவரை நாள்தோறும் குறைந்தபட்சம் 50 சைபர் குற்றங்கள் நிகழ்கின்றன. இதில் இருந்து தப்பிக்க எப்போதும் 1930 என்ற எண்ணை ஸ்பீடு டயலில் வைத்திருக்க வேண்டும். சைபர் மோசடிக்கு ஆளாகும் பட்சத்தில் உடனடியாக அந்த எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும்.

    கோவை நகரில் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சைபர் மோசடியால் ரூ.49 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மோசடியாளர்களிடம் இருந்து ரூ.14 கோடியை மீட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

    இதில் சைபர் குற்றப்பிரிவு காவல் துணை ஆய்வாளர் பிரவீன்குமார், ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கிருஷ்ணகுமார், ஆனந்தன், அஞ்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
    • சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சிக்கு புறப்பட்டார்.

    த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். தொடர்ந்து டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.

    இன்று காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே காலையில் பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சிக்கு புறப்பட்டார்.

    இந்நிலையில் மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்காக திருச்சி வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    விஜயை காண விமான நிலையத்தில் அதிகாலை முதல் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    கட்டுக்கடங்காத கூட்டம் வந்த காரணத்தினால் உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தொழில் பாதுகாப்பு படையினர் தடுப்பு வேலி மற்றும் கயிறு கட்டி அவர்களை கட்டுப்படுத்தினர்

    தடுப்புகளை தாண்டி விமான நிலைய வளாகத்துக்குள் தொண்டர்கள் நுழைந்தனர். விஜய், பிரசார பஸ்ஸில் ஏறி புறப்பட்டதும் அவரை ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பின் தொடர்ந்தனர்.

    மேலும் தொண்டர்கள் சூழ்ந்த காரணத்தினால் பிரசார வாகனம் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    மேலும் காவல்துறை நிபந்தனைகளை மீறி அவரது பிரசார வாகனத்தை தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்றனர்.

    • கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
    • ராமதாஸ் வருகையையொட்டி ஓசூர் நகரில் வழியெங்கும் கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் ஓசூரில் உள்ள சூடப்பா திருமண மண்டபத்தில் நடக்கிறது.

    இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் மருத்துவர் ராமதாஸ் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    இந்த கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

    ராமதாஸ் வருகையையொட்டி ஓசூர் நகரில் வழியெங்கும் கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
    • மேட்டூர் அணையில் தற்போது 93.24 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. இதன் காரணமாக மழை தீவிரம் அடைந்ததால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அங்கிருந்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

    நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் மேட்டூர் அணை இந்தாண்டில் முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. ஆனாலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைந்தது.

    பின்னர் மழை மீண்டும் பெய்ய தொடங்கியதால் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 2-வது முறையாக கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதியும், 3-வது முறையாக கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதியும், ஜூலை 25-ந் தேதி 4-வது முறையாகவும், ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி 5-வது முறையாகவும், கடந்த 2-ந் தேதி 6-வது முறையாகவும் நிரம்பியது.

    இதற்கிடையே மீண்டும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. ஆனாலும் அணைக்கு வரும் நீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

    இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.86 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரத்து 228 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் இந்தாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையில் தற்போது 93.24 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.
    • பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர்.

    கர்நாடகா, தமிழக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு நேற்றுகாலை 12 ஆயிரம் கனஅடி யாக வந்தது.

    மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இன்றுகாலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் அருவியில் குளிக்க மட்டும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    பின்னர் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    அந்த வகையில் கடந்த செவ்வாய்கிழமை இதுவரை இல்லாத உச்சமாக சவரன் ரூ.81,200-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் நேற்று சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,920-க்கு என்று புதிய உச்சத்தில் விற்பனையானது.

    இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,220-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 143 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,920

    11-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    10-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    09-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-09-2025- ஒரு கிராம் ரூ.142

    11-09-2025- ஒரு கிராம் ரூ.140

    10-09-2025- ஒரு கிராம் ரூ.140

    09-09-2025- ஒரு கிராம் ரூ.140

    08-09-2025- ஒரு கிராம் ரூ.140

    ×