என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தைப்பூச விழா (நாளை), குடியரசு தினம் (நாளை மறுதினம்), 27-ந் தேதி (சனிக்கிழமை), 28 (ஞாயிற்றுக்கிழமை) என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதையொட்டி சென்னையில் படிப்பு, பணி நிமித்தமாக தங்கி உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். எனவே தென்மாவட்ட ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது.

    காத்திருப்போர் பட்டியல் நீண்டுள்ளது. 'தட்கல்', பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளை பயணிகள் எதிர்நோக்கி உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தைப்பூசம், குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை தொடர் விடுமுறை நாட்கள் வருவதால், இன்றும், நாளையும் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை தினசரி இயக்க கூடிய பஸ்களுடன் கூடுதலாக 405 சிறப்பு பஸ்களும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 175 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 580 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இன்று 5 ஆயிரத்து 722 பயணிகளும், நாளை 7 ஆயிரத்து 222 பயணிகளும் சென்னையில் இருந்து பயணம் மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அன்று 15 ஆயிரத்து 669 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    இந்த சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக அப்படியே ஒளிபரப்ப இயலாது.
    • தமிழ்நாடு சட்டசபையில் நேரடி ஒளிபரப்பு செய்வதால் என்ன பிரச்சனை ஏற்படும்?

    சென்னை:

    சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி ஜெகதீஷ்வரன் என்பவர் 2012-ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார். இவரை தொடர்ந்து இதே கோரிக்கையுடன் தே.மு.தி.க. தலைவர் மறைந்த விஜயகாந்த் 2015-ம் ஆண்டும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2023-ம் ஆண்டும் பொதுநல வழக்குகளை தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வக்கீல் வி.டி.பாலாஜி, அண்மையில் மனுதாரர் விஜயகாந்த் இறந்து விட்டார். எனவே, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த சட்டப்பூர்வமான பிரதிநிதி யார்? என்று கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.

    இதையடுத்து அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, "சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப சபாநாயகர் முழு விருப்பத்துடன் உள்ளார். ஆனால், இதை பகுதி பகுதியாகத்தான் அமல்படுத்த முடியும். தற்போது சட்டசபை கேள்வி நேரம், கவனஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதங்கள், கவர்னர் உரை, பட்ஜெட் உரைகள், அமைச்சர்களின் பதிலுரைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது'' என்று கூறினார்.

    அதற்கு நீதிபதிகள், "ஆனால், சட்டசபை நிகழ்வுகளில் ஆளும் கட்சியினருக்கு பாதகமான காட்சிகள், எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான காட்சிகளை எல்லாம் வெட்டி, தணிக்கை செய்து ஒளிபரப்புவதாகத்தான் அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டு்கின்றனர். எதிர்க்கட்சியினரின் வாதங்களை காட்டுவதே இல்லை என்கின்றனர். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பினர்.

    ''இந்த வழக்கு 2012-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அப்போது அவர்கள் (அ.தி.மு.க.வினர்) நேரடி ஒளிபரப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இப்போது நேரடி ஒளிபரப்பு வேண்டும் என்கின்றனர்'' என்ற அட்வகேட் ஜெனரல் கூறினார்.

    மேலும், "சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக அப்படியே ஒளிபரப்ப இயலாது. ஏன் என்றால் உறுப்பினர்கள் ஏதாவது அவதூறாக பேசினால் அது அப்படியே ஒளிபரப்பாகிவிடும். அதை சமூக வலைத்தளங்கள் எடுத்து மறு ஒளிபரப்பு செய்து வைரலாக்கி விடுவர். அந்த பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கினால், அது பயனற்றதாகி விடும்'' என்றார்.

    மனுதாரர் ஜெகதீஷ்வரன் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கார்த்திக் சேஷாத்திரி, எலிசபெத் சேஷாத்திரி ஆகியோர், "அதுபோன்ற விவாதங்கள் நேரடி ஒளிபரப்பில் வந்தாலும், எதிர்காலத்தில் அந்த காட்சியை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிடலாம். பாராளுமன்றம் மற்றும் மக்களவையில் நேரடியாகத்தான் ஒளிபரப்பு செய்யப்படுகிறது'' என்றனர்.

    அதற்கு நீதிபதிகள், பாராளுமன்றத்தில் மட்டும் எப்படி நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர்? அவர்கள் செய்யும்போது, தமிழ்நாடு சட்டசபையில் நேரடி ஒளிபரப்பு செய்வதால் என்ன பிரச்சனை ஏற்படும்? சட்டசபை விவாதங்கள் அனைத்தும் அவைகுறிப்பாக புத்தகமாக வெளியிடும்போது, நேரடி ஒளிபரப்பு செய்தால் என்ன? தேவையில்லாத சம்பவம் நடக்கும்போது, அதுபோன்ற காட்சிகளை நீக்கி விட்டு சிறிது நேரம் கழித்து ஒளிபரப்பலாமே? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல், பாராளுமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு குறித்து எனக்கு தெரியவில்லை. இருந்தாலும், இதுகுறித்து அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்கிறேன்'' என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    • குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    தமிழக அரசின் சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினம் நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். 

    இந்நிலையில் காமராஜர் சாலையில் குடியரசு தின விழாவுக்கான இறுதிகட்ட ஒத்திகை இன்று நடைபெற்றது. குறிப்பாக முப்படை, தேசிய மாணவர் படை, காவல் துறை, தீயணைப்பு துறையும் அணிவகுப்பில் பங்கேற்றனர். 

    கவர்னர், முதலமைச்சர் வருவதுபோலவும், அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை நடைபெற்றது. பள்ளி மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகையும் நடைபெற்றது.

    குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடு பழனி.
    • இன்று முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற தைப்பூசத்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு தேவையான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

    தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில் தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி புறப்பாடு நடந்து வருகிறது.

    6-ம் நாளான இன்று இரவு 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை முதல் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் பழனியை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், மேளதாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக வருவதால் பழனி நகரின் அனைத்து சாலைகளும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது.

    • தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்.
    • ஆம்னி பேருந்துகள் இன்றுமுதல் கோயம்பேட்டில் இருந்து இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை புறநகரில் இருந்து இயக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து முனைமம் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தனியார் பேருந்துகள் (ஆம்னி பேருந்துகள்) மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில்தான் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும். மாநகர பகுதிகளுக்குள் வரக்கூடாது என ஆம்னி பேருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கரும் அறிவுறுத்தி இருந்தார்.

    அதேவேளையில் பயணிகளின் நலன் கருதி ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இருந்தே இயக்க அரசு அனுமதிக்க வேண்டும். ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு 90 நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றுள்ளதால் பயணம் தடைப்படாமல் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

    இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிற்குத்தான் வருகிறது.

    நாளை தைப்பூசம், அதனைத் தொடர்ந்து குடியரசு நாள் என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் முன்பதிவு செய்த பயணிகள் அவதிப்பட வாய்ப்புள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது பின்னர்தான் தெரியவரும்.

    • மைதானத்தின் மொத்த பரப்பளவு 66.80 ஏக்கர் ஆகும்.
    • ஏறுதழுவுதல் அரங்கம் மட்டும் 16 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. 4500 பேர் பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைப்பு.

    தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

    அலங்காநல்லூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குட்டிமேக்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமம் வகுத்துமலை அடிவாரத்தில் 66.80 ஏக்கர் பரப்பளவில் ஏறுதழுவுதல் அரங்கம்- 16 ஏக்கர், அரங்க கட்டிட பரப்பளவு - 77683 சதுர அடி, பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் - 4,500 என பிரமாண்ட மைதானம் கட்டப்பட்டு உள்ளது. அதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த மைதானத்திற்கு செல்வதற்கு வசதியாக புதிதாக சாலைகள் போடப்பட்டு உள்ளன.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிந்தவுடன் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி திறப்பு விழா இன்று நடக்கிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன.

    500 காளைகள் சீறிப்பாய, 300 வீரர்கள் பிடிக்க உள்ளனர்.

    • இன்றைய கூட்டத்தில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் முடிவானது.
    • தேர்தல் அறிக்கைக் குழுவின் சுற்றுப்பயண விவரங்களை தி.மு.க. இன்று வெளியிட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்தது.

    இந்த ஆலோசனையில் கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    இன்றைய கூட்டத்தில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் முடிவுசெய்யப்பட்டது. அந்தப் பட்டியல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து ஒப்புதல் பெறப்பட்டது.

    இந்நிலையில், தேர்தல் அறிக்கைக் குழுவின் சுற்றுப்பயண விவரங்களை தி.மு.க. வெளியிட்டுள்ளது.

    தூத்துக்குடியில் பிப்ரவரி 5, கன்னியாகுமரியில் பிப்ரவரி 6, மதுரை பிப்ரவரி 7, தஞ்சாவூர் பிப்ரவரி 8, சேலம் பிப்ரவரி 9, கோயம்புத்தூர் பிப்ரவரி 10, திருப்பூர் பிப்ரவரி 11, ஓசூர் பிப்ரவரி 16, வேலூர் 17, ஆரணி பிப்ரவரி 18, விழுப்புரம் பிப்ரவரி 20 மற்றும் சென்னையில் பிப்ரவரி 21, 22 ,23 ஆகிய தேதிகளில் தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கு இருக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து அதன்பின் தேர்தல் அறிக்கை குழு கூடி அறிக்கை தயார் செய்யப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

    • தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல்கள் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
    • வரும் பாராளுமன்ற தேர்தல் யார் ஆட்சியில் அமரக்கூடாது என்பதற்காக நடைபெறவுள்ள தேர்தல் என்றார்.

    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    தற்போது தி.மு.க. பொருளாளராக உள்ள டி.ஆர்.பாலு, ஒரே கொடி, ஒரே கட்சி என்ற கொள்கையை கடைப்பிடித்து வருபவர்.

    கருணாநிதியின் பேச்சைக் கேட்டு அரசியலுக்கு வந்தவர். இது பாலுவின் வரலாற்றுப் புத்தகம் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வழிகாட்டும் புத்தகம்.

    பா.ஜ.க.வை வீழ்த்தக் கூடிய இந்தியா கூட்டணியின் உருவாக்கத்தில் டி.ஆர்.பாலுவுக்கு முக்கிய பங்கு உள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தல் யார் ஆட்சியில் அமரக்கூடாது என்பதற்காக நடைபெறவுள்ள தேர்தல்.

    கடந்த 10 ஆண்டு காலமாக மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், பேரிடர் நிவாரண நிதி ஒதுக்காமல் இறுதிக்காலத்தில் ஒரு கோவிலை கட்டி பா.ஜ.க. தலைமை மக்களை திசைதிருப்ப பார்க்கிறது.

    தேர்தலைச் சந்திக்கும் பா.ஜ.க.வுக்கு தங்கள் சாதனைகளை மக்களிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அதனால் முழுவதுமாக கட்டி முடிக்காத கோவிலை அவசரமாக திறந்து சாதித்துவிட்டதாக காட்டுகின்றனர்.

    இதுபோன்ற திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இது உறுதி என தெரிவித்தார்.

    • கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது .
    • ரதம் மதுரையை அடுத்து விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளது.

    மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவையிலிருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் மதுரை வந்தடைந்தது. இந்த ரதம் வரும் 26 - ஆம் தேதி வரை மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வர உள்ளது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு மதுரை செய்தியாளர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் தினேஷ்வர் பங்கேற்று கூறியதாவது:-

    கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இதையொட்டி தென்கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான யாத்திரை கோவையிலிருந்து நான்கு ஆதியோகி ரதங்களுடன் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கியது.

    அங்கிருந்து புறப்பட்ட ஒரு ஆதியோகி ரதம் பல்வேறு ஊர்களை கடந்து, 21 ஆம் தேதி இரவு மதுரையை வந்தடைந்தது. இந்த ரதம் திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம், திருமங்கலம், கூடல் நகர், அலங்காநல்லூர், அழகர் கோவில், மாட்டுத் தாவணி, பிபி குளம், மாசி வீதிகள் மற்றும் தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 26 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது.

    கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத மக்கள் தங்கள் ஊர்களிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளைப் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.

    இந்த ரதம் மதுரையை அடுத்து விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளது.

    கோவையில் இருந்து புறப்பட்ட நான்கு ரதங்களும் ஒவ்வொரு திசையில் பயணித்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வலம் வந்த பின்னர் மஹா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய உள்ளது. ஆதியோகி திருமேனியுடன் கூடிய இந்த ரதங்கள் தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் கி.மீ தூரம் பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு மஹாசிவராத்திரி விழா பொது மக்கள் கலந்து கொள்ளும் வகையில் மதுரையிலும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு பத்திரப்பதிவு முடிந்த பின்னரும், சார்பதிவாளரின் உதவியாளர் வெளியில் வந்தபடியே இருந்தார்.
    • திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே நாகம்மாபுதூரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தினமும் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில், அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மூலமாக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவுகள் நடந்து வருவதாக கடந்த ஒரு மாத காலமாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதையடுத்து கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. திவ்யா தலைமையிலான போலீசார் நேற்று காலை அன்னூர் நாகம்மாபுதூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, திறப்பதற்கு முன்பே சாதாரண உடையில், சாதாரண காரில் சென்றனர்.

    காலை 10 மணிக்கு சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை கண்காணித்த படியே இருந்தனர்.

    அப்போது ஒவ்வொரு பத்திரப்பதிவு முடிந்த பின்னரும், சார்பதிவாளரின் உதவியாளர் வெளியில் வந்தபடியே இருந்தார்.

    அப்படி வரும் அவர், அங்கு தனியார் இ-சேவை மையம் நடத்தி வருபர்களிடம் ஏதோ பேசி கொண்டும், அதனை தொடர்ந்து கையில் பையுடனும் உள்ளே சென்ற வண்ணம் இருந்தார்.

    இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக கண்காணித்தபடி இருந்தனர்.

    மாலை 4 மணிக்கு எல்லாம் பத்திரப்பதிவுகள் முடிந்து விடும். ஆனால் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் மாலை 6.30 மணியை தாண்டியும் பத்திரப்பதிவுகள் நடந்த வண்ணம் இருந்தது.

    இரவாகியும் யாரும் வீட்டிற்கு செல்லவில்லை. இதையடுத்து காலை முதல் இரவு வரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்க கூடியவற்றை கண்காணித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு 8.30 மணிக்கு ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையில், சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

    அப்போது அங்கு அதிகாரிகள் பணத்தை பங்கு போடுவதற்கு தயாராக இருந்தனர்.

    திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தின் கதவுகளை மூடினர்.

    மேலும் அங்கிருந்தவர்கள் யாரையும் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அவர்கள் வைத்திருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து அலுவலகம் முழுவதும் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அலுவலகத்தில் கடந்த 6 மாத காலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களையும் சரிபார்த்தனர். முக்கிய ஆவணங்களையும் எடுத்து கொண்டனர். அங்கிருந்த அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதேபோல், சார்பதிவாளர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் இ-சேவை மையத்திலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கிருந்து ரூ.49 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்ததால் அந்த பணத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இரவு 8.30 மணிக்கு தொடங்கிய சோதனையானது இன்று காலை 9 மணிக்கு தான் நிறைவு பெற்றது. 12 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனையானது நீடித்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களையும், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இது சம்பந்தமாக , லஞ்சம் வாங்கியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவுத்துறைக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.

    சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையானது அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரு அரங்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூணையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    சென்னை:

    இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயரை கொண்ட வீரமாமுனிவர், கிறித்தவ சமயத் தொண்டாற்றுவதற்காக மதுரை வந்து தமது சமயப்பணிக்கு தமிழ் மொழியறிவு மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, தமிழ் கற்கத் தொடங்கி தமிழராகவே மாறி, தமிழ் மேதையாக உருவெடுத்தார்.

    "தமிழ் அகராதியின் தந்தை" எனப் போற்றப்படும் வீரமாமுனிவர் , திருக்குறள் அறத்துப் பாலையும். பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தது, "குட்டி தொல்காப்பியம்" என்று புகழப்படும் தொன்னூல் விளக்கத்தை படைத்தது, இயேசு நாதரின் வரலாற்றைத் தேம்பாவணி எனும் காவியமாக உருவாக்கியது, திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களை படைத்தது, என தமிழ் மொழிக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள மாபெரும் தொண்டுகளைப் போற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி கிராமம், புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரமா முனிவரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவை போற்றிடும் வகையில், நாமக்கல் நகரில் உள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள அவரது மார்பளவுச் சிலையினையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், மகிபாலன்பட்டியில் 276.75 சதுர அடி பரப்பளவில் 23.26 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூணையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    புதிதாக நிறுவப்படவுள்ள 3 சுதந்திர போராட்ட வீராங்கனை வீரத்தாய் குயிலி திருவுருவச் சிலை, சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் திருவுருவச்சிலை, சுதந்திர போராட்ட வீரர் வெண்ணி காலாடி திருவுருவச் சிலை, அண்ணல் காந்தியடிகள் மற்றும் தோழர் ஜீவா சந்திப்பின் நினைவாக அரங்கம் என மொத்தம் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள 3 திருவுருவச் சிலைகள் மற்றும் ஒரு அரங்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், பி. கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, செய்தித்துறை செயலாளர் இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, எம்.பி., சிறப்புரையாற்ற உள்ளார்.
    • மாவட்ட, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற 29-ந்தேதி திங்கட்கிழமை, காலை 10.00 மணியளவில், கோவை பீளமேடு, காளப்பட்டி சாலை "சுகுணா கலையரங்கில்", எனது தலைமையில், கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, எம்.பி., சிறப்புரையாற்றிட, மாநில மாணவர் அணித் தலைவர் இரா.ராஜீவ்காந்தி இணைச் செயலாளர்கள் பூவை ஜெரால்டு, எஸ்.மோகன் மற்றும் துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், திருமதி பூரணசங்கீதாசின்னமுத்து, திருமதி ஜெ. வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.

    அதுபோது மாவட்ட, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ×