என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.
- வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
எழும்பூர் ரெயில் நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.
மேலும் ரெயில் நிலைய கட்டிடங்கள், பலஅடுக்கு வாகன நிறுத்துமிடம், காந்தி-இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை அருகே வணிக வளாகங்கள் அமைத்தல், புதிய பார்சல் அலுவலகம், நடை மேம்பாலம், பார்சல்களை கையாள நடைமேம்பாலம், புதிய ரெயில்வே குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வாகன நிறுத்தும் இடம் உள்ளது. தற்போது அந்த பகுதியில் நடைபெற்று வரும் ரெயில்வே பணிகளால் மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் நாளை முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் ஆகியவற்றில் தெற்கு ரெயில்வேயின் பன்முக ஒருங்கிணைப்புப் பணிகள் நடை பெற்று வருகின்றன.
இதனால் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை அனைத்து பயணிகளும் நாளை(5-ந்தேதி) முதல் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.
- பள்ளி காலத்தில் நடைபெற்ற பசுமையான நினைவுகளை சிலாகிப்புடன் அசைபோட்டனர்.
- பள்ளி ஆசிரியர்கள் மிகவும் நெகிழ்ச்சியோடு பழைய நினைவலைகளை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.
கோவை:
கோவை வின்சென்ட் ரோடு, கோட்டைமேடு பகுதியிலுள்ள நல்லஆயன் உயர்நிலைப்பள்ளியில் 1980-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புவரை படித்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி, போத்தனூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய பழைய மாணவர்கள் மீண்டும் ஒன்றுசேர்ந்தது, பலரது முகத்திலும் நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, பூரிப்பை ஏற்படுத்தியது.
மேலும் அவர்கள் தங்களுக்கான அடையாளம், நட்பு, பாசத்தை ஒருவருக்கொருவர் புதுப்பித்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள்பள்ளி காலத்தில் நடைபெற்ற பசுமையான நினைவுகளை சிலாகிப்புடன் அசைபோட்டனர். மேலும் முன்னாள் மாணவர் சந்திப்புக்காக இதே பள்ளியில் கடந்த 1990-ம் ஆண்டு படித்த ஆர்.எஸ். புரத்தை சேர்ந்த கார்த்தி (வயது 54) என்பவர், கடந்த கால நினைவுகளை நினைவு கூறும் விதமாக, அன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த காக்கி அரைக்கால் டவுசர் மற்றும் வெள்ளைநிற சட்டை அணிந்து பள்ளிக்கு வந்தி ருந்தார்.
இது அங்கு திரண்டு இருந்த பழைய நண்பர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கார்த்தி கூடலூர் பகுதியில் உள்ள கோவிலில் தலைமை குருக்களாக பணியாற்றி வருகிறார்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்ற பள்ளி ஆசிரியர்கள் மிகவும் நெகிழ்ச்சியோடு பழைய நினைவலைகளை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் பேசுகையில், இன்றைய தலைமுறை மாணவர்கள் இந்த நாட்டிற்காக தான் கற்ற கல்வியை பிறர் பயன்பட நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்வு பூர்வமாக பேசி, முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் பிள மின் மரியஜோசப் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- குமரி மாவட்டம் கல்வி அறிவு மிகுந்த மாவட்டமாகும்.
- பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர்கள் பி.டி.செல்லப்பன், எஸ்.ஏ. விக்ரமன் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
1972-ம் ஆண்டு அ.தி.மு.க. இயக்கம் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் இயக்கமாக இந்த இயக்கம் உருவாக்கப்பட்ட பிறகு புரட்சித்தலைவி அம்மா மக்கள் இயக்கமாக இந்த இயக்கத்தை மாற்றி காட்டினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு தொடங்கப்பட்ட போது 16 லட்சம் தொண்டர்களை கொண்ட இயக்கமாக இருந்த இந்த இயக்கம், ஜெயலலிதா பொதுச் செயலாளரான பிறகு ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாறியது.
எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத மாபெரும் இயக்கமாக இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. குமரி மாவட்டம் கல்வி அறிவு மிகுந்த மாவட்டமாகும். கல்வியில் முத்திரை பதித்த மாவட்டமாக இந்த மாவட்டம் விளங்கி வருகிறது. யாரும் உங்களை பேச்சு மூலமாக ஏமாற்ற முடியாது என்பதை தேர்தல் மூலமாக நிரூபித்து வருகிறீர்கள்.
பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கு சட்ட விதிகளை மாற்ற முடியாது என்று எம்ஜிஆர் கூறினார். தொண்டர்கள் மூலமாகத் தான் பொதுச்செயலாளரை நியமனம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. அதை தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாற்றிக் காட்டி உள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி கொஞ்சம் கொஞ்சமாக தனது நயவஞ்சகத்தால் இயக்கத்தை அழித்து வருகிறார். அம்மா மறைவிற்கு பிறகு கழக ஒருங்கிணைப்பாளர் என்று பதவி உருவாக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பதவி 2026 வரை சட்ட விதிப்படி செல்ல வேண்டும்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறி பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கினார். அம்மா அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் நிரந்தர பொதுச் செயலாளர் என்ற பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. சர்வாதிகாரமாக தான் தோன்றித்தனமாக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டார்.
அம்மா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதலமைச்சர் ஆன ஆனார் என்று எல்லோருக்கும் தெரியும். தவழ்ந்து தவழ்ந்து சென்று பதவியை பெற்றுக் கொண்டார். சின்னமாவை இழிவாக பேசினார். எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு ஊராட்சி தேர்தல், உள்ளாட்சி தேர்தல் , பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் மட்டும் இன்றி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்துள்ளது.
ஈரோட்டில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் முக்கிய காரணமாக இருந்தார். அவர் பொது செயலாளர் பதவியை தற்காலிக தீர்ப்பின் மூலம் தான் பெற்றுள்ளார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்ன சட்ட திருத்தத்தை கொண்டு வந்தாரோ, அதேபோல் மீண்டும் தொண்டர்களே பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்பதை கொண்டு வருவதற்காக தான் தர்ம யுத்தம் நடத்தப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. அதை காப்பாற்ற தான் போராடி வருகிறோம். தேர்தல் நேரங்களில் அம்மா இருக்கும்போது பல கட்சிகள் அவரைத் தேடி வருவார்கள். ஆனால் தற்பொழுது தலைமை கழகத்தில் 6 பேர் உட்கார்ந்து இருக்கிறார்கள். யாரும் அவர்களை தேடி வரவில்லை.
கன்னியாகுமரி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! (04-02-2024) - நேரலை
— O Panneerselvam (@OfficeOfOPS) February 4, 2024
https://t.co/fvuC2T9ZX5
அ.தி.மு.க. என்னும் கட்சியை எடப்பாடி பழனிசாமி தாத்தாவோ பன்னீர்செல்வத்தின் தாத்தாவோ உருவாக்கவில்லை. எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தொண்டர்கள் கூட முதலமைச்சராக வர வாய்ப்புள்ளது.
விருதுநகரில் நடந்த தேர்தலில் பெருந்தலைவர் காமராஜர் வெற்றி வாய்ப்பு இழந்தார். பின்னர் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காமராஜரை வெற்றி பெற வைத்த மண் இந்த மண்ணாகும். அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தீங்கு செய்து வருகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
அப்படி என்றால் வேலு மணியும் தங்கமணியும் தான் பொதுச் செயலாளராக வர முடியும். கழகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
9 முறை தோல்வியை சந்தித்த அவர்களுக்கு பத்தாவது முறையும் தோல்வியை நீங்கள் வழங்க வேண்டும். நாம் தேர்தலை சந்திக்க முழு பலத்துடன் தயாராகி வருகிறோம். பூத் கமிட்டி அமைக்க வேண்டும். தமிழகத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத்துகள் உள்ளது. ஒரு பூத்துக்கு 18 முதல் 25 பேரை அமர வைக்க வேண்டும். மீண்டும் அம்மா ஆட்சியை கொண்டுவர நான் போராட வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பன்னீர்செல்வத்திற்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் வீரவாள் பரிசு வழங்கினார்கள் .
- மருத்துவ குணம் கொண்ட பூண்டு இல்லாமல் ரசம் உள்பட எந்தவொரு சமையலும் செய்ய முடியாது.
- மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது.
போரூர்:
சமையலுக்கு தினமும் பயன்படுத்தப்படும் பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.420 வரை விற்கப்படுகிறது, வெளி மார்க்கெட்டில் உள்ள கடை களில் ஒரு கிலோ பூண்டு ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உதிரி பூண்டு ஒரு கிலோ ரூ.350-க்கு விற்கப்படுகிறது.
மருத்துவ குணம் கொண்ட பூண்டு இல்லாமல் ரசம் உள்பட எந்தவொரு சமையலும் செய்ய முடியாது. உற்பத்தியாளர்களிடம் இருந்து பூண்டுவை அதிகளவில் கொள்முதல் செய்து பின்னர் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பூண்டுவின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.50-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை 10 மடங்கு வரை அதிகரித்து உள்ளது. அத்தியாவசியப் பொருட்களான பூண்டு பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மொத்த வியாபாரிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பூண்டு உற்பத்தி அதிகளவில் நடக்கிறது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது.
மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம், சின்ன வெங்காயம் மற்றும் பச்சை காய்கறிகளான பீன்ஸ், அவரைக்காய், உஜாலா கத்தரிக்காய் ஆகிய காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.22-க்கும், சின்ன வெங்காயம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரையிலும், பீன்ஸ் மற்றும் அவரைக்காய் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ.25-க்கும், உஜாலா கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.15-க்கும், விற்கப்படுகிறது. சீசன் முடிந்து வரத்து குறைந்துள்ளதால் ஊட்டி கேரட் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.65-க்கும் விற்கப்படுகிறது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.120-க்கும் விற்கப்பட்டு வருகிறது.
- மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றது மிகவும் கண்டிக்கத்தக்கது.
- மீன்பிடித்தொழிலுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் இழப்புக்கு நிவாரணம் பெற்றுத்தரவும், சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை, படகுகளை மீட்கவும் மத்திய அரசு உரிய பேச்சுவார்த்தையை இலங்கை அரசிடம் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதும், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றதும், படகுகளை பறிமுதல் செய்ததும் மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு, தமிழக மீனவர்களின் பாதுகாப்பான மீன்பிடித்தொழிலுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு மீனவக்குடும்பங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தலைவரின் தமிழக வெற்றி கழகம் வருக வருக மிஷன் 2026 என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது.
- கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றி மக்களை நேரில் சந்தித்து தெரிவிக்குமாறு விஜய் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
நெல்லை:
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தனது கட்சி பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
கட்சியின் பெயரை அறிவித்ததை தொடர்ந்து தற்போது கட்சி கொடியை தயார் செய்யும் பணியில் நடிகர் விஜய் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து கட்சியாக மாற்றப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பல்வேறு இடங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் அட்டகாசமான சுவரொட்டிகளையும் ஒட்டி வருகின்றனர்.
மாநகர பகுதிகளில் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜகோபால் தலைமையில் திரளான இளைஞரணி நிர்வாகிகள் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் வசனங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.
அந்த வகையில் பாளை தியாகராஜ நகர் பகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூட வருகை தரும் தலைவர் தளபதியின் தமிழக வெற்றி கழகம் வருக வருக என போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
இதேபோல் அரசனுக்கே இந்த அரியாசனம். தலைவரின் தமிழக வெற்றி கழகம் வருக வருக மிஷன் 2026 என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. இதேபோல் பாளை தலைமை இளைஞர் அணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் மாற்றம் உன்னிடம் இருந்து தொடங்கட்டும். நாளைய முதல்-அமைச்சரே என்றும், நாளைய தமிழகமே என்றும் பல்வேறு வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இவ்வாறாக நெல்லை மாநகர இளைஞரணி சார்பில் பரவலாக அதிரடி வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றி மக்களை நேரில் சந்தித்து தெரிவிக்குமாறு விஜய் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதன்படி விஜய் ரசிகர்களும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், இளைஞர்கள், இளம்பெண்களை தங்கள் கட்சியில் இணைந்து பணியாற்றுவது குறித்து தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.
- பொருளாதாரத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை கூறினார்.
- பெரிய, பெரிய வல்லுனர்களே எங்களுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், 'விரைவில் அமலாக்கத்துறை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் வீட்டு கதவை தட்டும்' என்று கூறினார்.
காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் முதல் பாலாறு இணையும் வரை உள்ள பாண்டியன் மடுவு கால்வாய் புனரமைப்பு பணிகளை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அவர்கள் ஒன்றும் எங்கள் கதவை தட்ட வேண்டாம். அந்த கஷ்டம் அவர்களுக்கு எதற்கு?. நாங்களே திறந்து வைத்திருக்கிறோம்.
பொருளாதாரத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை கூறினார். அவர் என்ன வந்து பார்த்தாரா?. பெரிய, பெரிய வல்லுனர்களே எங்களுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து எழும் வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. பிறகு துரைமுருகன் சொன்னதாக எதையாவது ஒன்னு போட்டு குட்டையை குழப்பி விடுவீர்கள். கூட்டணி குறித்து முறையாக அறிவிப்பு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும், திமுக கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிடும்.
- தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் இன்று நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும், தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிடும். அதற்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.

பின்னர் அவரிடம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளீர்களா? அவர் கூட்டணியில் இருக்கிறாரா? என்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி அதுபற்றி முதலமைச்சர்தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.
- தமிழகம் முழுவதும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
- மக்களுடன் முதல்வர் திட்டம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்று பெருமிதத்துடன் கூறி வருகிறார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகரன்.
இவர் அதே கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் கடந்த 1988-ம் ஆண்டில் 21 செண்ட் நிலத்தை கிரயம் வாங்கினார். பின்னர் இந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்யும் நடவடிக்கையில் சந்திரசேகரன் ஈடுபட்டு வந்தார். ஆனால் 35 ஆண்டுகளாக முயன்றும் பட்டா மாற்றம் நடைபெறவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் இனி நம்மால் பட்டா மாற்றம் செய்யவே முடியாது என்ற விரக்தியுடன் காணப்பட்டார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் குறைதீர்க்கும் திட்டமாக மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை செயல்படுத்தினார். ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த வட்டார தாசில்தார் தலைமையில் முகாம் நடத்தி மக்கள் குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். தமிழகம் முழுவதும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் பயன் அடைந்தனர்.
அதன்படி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வலையப்பேட்டை வருவாய் கிராமத்தை சேர்ந்த மாங்குடி கிராமத்திலும் நடைபெற்றது. இதனை அறிந்து சந்திரசேகரன் தனது 35 ஆண்டுக்கால எதிர்பார்ப்பான பட்டா மாற்றம் கோரி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தார்.
அந்த விண்ணப்பத்தின் மீது அதிகாரிகள் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து கடந்த 2-ந் தேதி சந்திரசேகரனுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டு கும்பகோணம் தாலுகா அலுவலகத்தின் இணைய சேவை மூலம் வெளியிடப்பட்டது. இந்த தகவலை இணையத்தின் மூலம் அறிந்து விவசாயி சந்திரசேகரன் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார்.
அதாவது முகாமில் வழங்கிய விண்ணப்பம் மீது அடுத்த 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து முடித்து வைக்கபட்டுள்ளது.
35 ஆண்டுக்கால பிரச்சினையை வெறும் மூன்றே நாளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் தீர்வு கண்டு முடித்து வைக்கப்பட்டுள்ளதை எண்ணி அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இதனால் அவர் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்புகள், பயன்கள் குறித்து மற்ற விவசாயிகளுக்கு எடுத்து கூறி வருகிறார். மேலும் மக்களுடன் முதல்வர் திட்டம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்று பெருமிதத்துடன் கூறி வருகிறார்.
- தமிழகத்தில் தீய சக்திக்கும் துரோக சக்திக்கும் மாற்றாக நமது இயக்கம் உருவாகி வருகிறது.
- சொத்து வரி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தீய சக்திக்கும் துரோக சக்திக்கும் மாற்றாக நமது இயக்கம் உருவாகி வருகிறது. எம்.ஜி.ஆர். உருவாக்கி ஜெயலலிதா வளர்த்தெடுத்த அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம். சில வியாபாரிகளுக்கு நான் அமைச்சர் பதவி பெற்றுத்தந்தேன். ஆனால் அவர்கள் துரோகிகளாக மாறி விட்டனர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பண பலத்தால் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறலாம் என கனவு காண்கிறார். ஆனால் இதில் நாங்கள் அவருக்கு பதிலடி கொடுப்போம். மின் கட்டணம், சொத்து வரி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதற்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். தி.மு.க.வினர் ரூ.1000 கொடுத்து மக்களின் ஓட்டை விலைக்கு வாங்க பார்க்கின்றனர். அதற்கான பதிலை மக்கள் தேர்தலில் அளிப்பார்கள். குக்கர் சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே இயக்கத்தை மீட்டெடுக்க முடியும் என்பதால் வருகிற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புதுச்சேரி மாநில விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
- நடிகர் விஜய்யை போல், இன்னும் பல புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.
ஆலந்தூர்:
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லியில் மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் டெல்லி சென்றது, அவசரப் பயணம் அல்ல. ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பயணம் தான். எனது டெல்லி பயணத்திற்கும், பஞ்சாப் மாநில கவர்னரின் திடீர் ராஜினாமாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதைப்போல் டெல்லியில் மத்தியமந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசியதும், திடீர் சந்திப்பு அல்ல. ஏற்கனவே திட்டமிட்ட சந்திப்புதான்.
அவரிடம் புதுச்சேரி மாநில சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதுச்சேரி மாநில விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
மேலும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆலோசனை நடத்தினேன்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை, நான் முழு மனதுடன் வரவேற்று, அவரை வாழ்த்துகிறேன். நமது நாடு, ஜனநாயக நாடு. இங்கு இவர் தான் அரசியலுக்கு வரவேண்டும், அவர் வரக்கூடாது என்று எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.
நடிகர் விஜய்யை போல், இன்னும் பல புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்போதுதான் அரசியலில் ஆரோக்கியமான போட்டிகள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- லிங்கராஜன் வழக்கம் போல தனது பிளக்ஸ் கடையில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார்.
- போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை அடுத்த வீரசோழன் அருகேயுள்ள ஏ.தரைக்குடி பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜன் (வயது 28). இவர் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் வீரசோழன் தொடக்கப்பள்ளி அருகே டிஜிட்டல் பிளக்ஸ் மற்றும் ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். தற்போது டி.புனவாசல் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் லிங்கராஜன் வழக்கம் போல நேற்று தனது பிளக்ஸ் கடையில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம வாலிபர்கள் இவரது கடை மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில் லிங்கராஜன் காயமின்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து வீரசோழன் போலீஸ் நிலையத்தில் லிங்க பாண்டியன் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் மாலை லிங்கராஜனின் ஊரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் வீரசோழன் அரசுப்பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் பள்ளி முடிந்து பஸ் ஏற வந்தபோது அங்குள்ள கடையில் பாணி பூரி சாப்பிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த வீரசோழன் தெற்குத்தெருவை சேர்ந்த கொங்குசெல்வம் (19) என்பவர் தான் சப்பிட்டதற்கும் பணம் தருமாறு கூறியுள்ளார்.
ஆனால் மாணவர்கள் பணம் கொடுக்க மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த கொங்குசெல்வம், சசிகுமார் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன பள்ளி மாணவர்கள் லிங்கராஜனிடம் சென்று அழுதுகொண்டே நடந்ததை கூறியுள்ளனர். இதற்கிடையில் கொங்கு செல்வமும் மாணவர்களை பின் தொடர்ந்து பிளக்ஸ் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை லிங்கராஜன் கண்டித்து அனுப்பியுள்ளார். இந்தநிலையில் தான் கொங்குசெல்வம் தனது கூட்டாளியுடன் சேர்ந்து லிங்கராஜனுக்கு சொந்தமான பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டை வீசி தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
எந்நேரமும் ஆள் நடமாட்டமுள்ள வீரசோழன்-அபிராமம் சாலையில் பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வீரசோழன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.






