search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்
    X

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

    • குமரி மாவட்டம் கல்வி அறிவு மிகுந்த மாவட்டமாகும்.
    • பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர்கள் பி.டி.செல்லப்பன், எஸ்.ஏ. விக்ரமன் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    1972-ம் ஆண்டு அ.தி.மு.க. இயக்கம் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் இயக்கமாக இந்த இயக்கம் உருவாக்கப்பட்ட பிறகு புரட்சித்தலைவி அம்மா மக்கள் இயக்கமாக இந்த இயக்கத்தை மாற்றி காட்டினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு தொடங்கப்பட்ட போது 16 லட்சம் தொண்டர்களை கொண்ட இயக்கமாக இருந்த இந்த இயக்கம், ஜெயலலிதா பொதுச் செயலாளரான பிறகு ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாறியது.

    எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத மாபெரும் இயக்கமாக இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. குமரி மாவட்டம் கல்வி அறிவு மிகுந்த மாவட்டமாகும். கல்வியில் முத்திரை பதித்த மாவட்டமாக இந்த மாவட்டம் விளங்கி வருகிறது. யாரும் உங்களை பேச்சு மூலமாக ஏமாற்ற முடியாது என்பதை தேர்தல் மூலமாக நிரூபித்து வருகிறீர்கள்.

    பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கு சட்ட விதிகளை மாற்ற முடியாது என்று எம்ஜிஆர் கூறினார். தொண்டர்கள் மூலமாகத் தான் பொதுச்செயலாளரை நியமனம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. அதை தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாற்றிக் காட்டி உள்ளார்.

    எடப்பாடி பழனிச்சாமி கொஞ்சம் கொஞ்சமாக தனது நயவஞ்சகத்தால் இயக்கத்தை அழித்து வருகிறார். அம்மா மறைவிற்கு பிறகு கழக ஒருங்கிணைப்பாளர் என்று பதவி உருவாக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பதவி 2026 வரை சட்ட விதிப்படி செல்ல வேண்டும்.


    ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறி பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கினார். அம்மா அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் நிரந்தர பொதுச் செயலாளர் என்ற பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. சர்வாதிகாரமாக தான் தோன்றித்தனமாக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டார்.

    அம்மா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதலமைச்சர் ஆன ஆனார் என்று எல்லோருக்கும் தெரியும். தவழ்ந்து தவழ்ந்து சென்று பதவியை பெற்றுக் கொண்டார். சின்னமாவை இழிவாக பேசினார். எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு ஊராட்சி தேர்தல், உள்ளாட்சி தேர்தல் , பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் மட்டும் இன்றி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்துள்ளது.

    ஈரோட்டில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் முக்கிய காரணமாக இருந்தார். அவர் பொது செயலாளர் பதவியை தற்காலிக தீர்ப்பின் மூலம் தான் பெற்றுள்ளார்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்ன சட்ட திருத்தத்தை கொண்டு வந்தாரோ, அதேபோல் மீண்டும் தொண்டர்களே பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்பதை கொண்டு வருவதற்காக தான் தர்ம யுத்தம் நடத்தப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. அதை காப்பாற்ற தான் போராடி வருகிறோம். தேர்தல் நேரங்களில் அம்மா இருக்கும்போது பல கட்சிகள் அவரைத் தேடி வருவார்கள். ஆனால் தற்பொழுது தலைமை கழகத்தில் 6 பேர் உட்கார்ந்து இருக்கிறார்கள். யாரும் அவர்களை தேடி வரவில்லை.


    அ.தி.மு.க. என்னும் கட்சியை எடப்பாடி பழனிசாமி தாத்தாவோ பன்னீர்செல்வத்தின் தாத்தாவோ உருவாக்கவில்லை. எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தொண்டர்கள் கூட முதலமைச்சராக வர வாய்ப்புள்ளது.

    விருதுநகரில் நடந்த தேர்தலில் பெருந்தலைவர் காமராஜர் வெற்றி வாய்ப்பு இழந்தார். பின்னர் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காமராஜரை வெற்றி பெற வைத்த மண் இந்த மண்ணாகும். அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தீங்கு செய்து வருகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

    அப்படி என்றால் வேலு மணியும் தங்கமணியும் தான் பொதுச் செயலாளராக வர முடியும். கழகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    9 முறை தோல்வியை சந்தித்த அவர்களுக்கு பத்தாவது முறையும் தோல்வியை நீங்கள் வழங்க வேண்டும். நாம் தேர்தலை சந்திக்க முழு பலத்துடன் தயாராகி வருகிறோம். பூத் கமிட்டி அமைக்க வேண்டும். தமிழகத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத்துகள் உள்ளது. ஒரு பூத்துக்கு 18 முதல் 25 பேரை அமர வைக்க வேண்டும். மீண்டும் அம்மா ஆட்சியை கொண்டுவர நான் போராட வேண்டும்.

    இவ்வாறு பேசினார்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட பன்னீர்செல்வத்திற்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் வீரவாள் பரிசு வழங்கினார்கள் .

    Next Story
    ×