என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான்.
- 242 மீன்பிடிப் படகுகளும், 74 மீனவர்களும் இலங்கைக் காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மீனவர்கள் கைது சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள், இன்று (09.10.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்துத் தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இன்று (09.10.2025) அதிகாலை, ஐந்து இந்திய மீன்பிடிப் படகுகள் மற்றும் 47 மீனவர்கள் (30 தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் 17 காரைக்கால் மீனவர்கள்) இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை மத்திய வெளியுறவுத்துறை மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள முதல்-அமைச்சர், சிறைபிடிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டின் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 30 மீனவர்களும், நான்கு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளும் அடங்கும் என்று கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கைது சம்பவம் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கடலோர மாவட்ட மக்களிடையே அச்சம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் 2025-ம் ஆண்டில், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான் என தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தங்களது பாரம்பரிய தொழிலைத் தொடர்வதில் உள்ள மன உறுதியையும், நம்பிக்கையையும் வெகுவாக பாதிப்பதாகவும் உள்ளது என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 242 மீன்பிடிப் படகுகளும், 74 மீனவர்களும் இலங்கைக் காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்திட உரிய அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ளவும், கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை?
- திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன்.
ராணிப்பேட்டை போல் திருச்சியிலும் அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனின் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, ஒரு நாளில் ஒன்றும் ஆகிவிடாது என அவர் கூறியதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இது என்ன மாதிரியான மனநிலை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர், சூரை, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளிலும், குமணந்தாங்கல் அரசுப்பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி மீண்டும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு.
ஏற்கனவே, திருச்சியிலும் இதே போல அரசுப்பள்ளியில் முகாம் நடத்தப்பட்டதை மாணவர்களும், பெற்றோரும் கண்டித்த நிலையில், தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற துஷ்பிரயோகங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்களிடம், "ஒருநாளில் பாடத்தை எடுக்கப்போவதில்லை. மாணவர்களுக்கு எந்த இடையூறும் இல்லை" என கூச்சமின்றி பதிலளித்துள்ளார் அமைச்சர் திரு. துரைமுருகன்.
உங்களின் சுய விளம்பரத்திற்காக முகாம்களை நடத்தவேண்டும் என்றால் உங்கள் கட்சி அலுவலகங்களில் நடத்தலாமே அமைச்சரே. மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை?
ஏற்கனவே, திருபுவனத்தில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததை அனைவரும் அறிவார்கள். இதுதான் நீங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் லட்சணம். இப்படியிருக்க, ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்து கெடுக்கிறீர்கள்? மாணவர்களின் கல்வியை தடுத்து அரசுப்பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- உயர்மட்ட பாலத்துக்கு விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் பெயரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்டியுள்ளார்.
- கோவை வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஜி.டி.நாயுடு குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.
கோவை அவினாசி சாலையில் 10.1 கிலோ மீட்டர் நீளத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்துக்கு கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் பெயரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்டியுள்ளார். தொடர்ந்து மேம்பாலத்தை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதற்காக கோவை வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஜி.டி.நாயுடு குடும்பத்தினர் சந்தித்து பேசினர். அப்போது விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் பெயரை மேம்பாலத்துக்கு சூட்டியதற்காக அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
- அ.தி.மு.க., விஜய் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
- அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.
விஜய்யின் அரசியல் வருகை 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் இருந்தது.
அதே நேரம் அவருடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் சில கட்சிகள் ஈடுபட்டன. ஆனால் தி.மு.க. மற்றும் பா.ஜனதா மீது அவர் வைத்த கடுமையான விமர்ச னங்கள் மூலம் தனித்து போட்டியிடும் முடிவைத் தான் விஜய் தேர்வு செய்வார் என்று நினைக்க வைத்தது.
இந்த சூழ்நிலையில் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அரசியல் போக்கையே மாற்றியது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விஜய் மீதான அணுகுமுறை த.வெ.க.வினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்களில் த.வெ.க.வினர் தங்கள் கட்சி கொடிகளுடன் கலந்து கொள்ள தொடங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி, விஜய் ஆகியோர் படங்களுடன் சுவரொட்டிகளையும் த.வெ.க.வினர் ஒட்டினார்கள்.
இந்த இணக்கமான போக்கு அ.தி.மு.க., விஜய் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க.வினர் கொடிகளுடன் கலந்து கொண்டதை சுட்டிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.
இந்நிலையில், கூட்டத்தில் தவெக கொடிகளை வைத்திருந்தவர்கள் தவெகவினர் இல்லை. அதிமுக இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அதிமுக டி-ஷர்ட் அணிந்தபடி தவெக கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.
அந்த இளைஞர்களைப் பார்த்து "கொடி பறக்குது பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என இபிஎஸ் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாஜகவிற்கு புது அடிமைகள் நிச்சயம் கிடைப்பார்கள்.
- திமுகவின் கடைசி தொண்டன் இருக்கும் வரை பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் பேசினார். பின்னர் தனியார் விடுதியில் நேற்று தங்கினார்.
இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, "பாஜகவிற்கு புது அடிமைகள் நிச்சயம் கிடைப்பார்கள். ஆனால் எத்தனை அடிமைகள் ஒன்றுசேர்ந்து வந்தாலும், திமுக-வின் கடைசி தொண்டன் இருக்கும் வரை அவர்களால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது.
உங்கள் எழுச்சி, அன்பை பார்க்கையில், முழுதாக மேடை ஏறுவோமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. என்றைக்கும் 'கை' நம்மைவிட்டு போகாது. நான் என் கையையும், உங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையையும் சொன்னேன்" என்று கூறினார்.
கை' நம்மைவிட்டு போகாது என்று கூறியதன் மூலம் சூசகமாக திமுக - காங்கிரஸ் கூட்டணி பலத்தை துணை முதல்வர் உதயநிதி உறுதிசெய்தார்.
- அமைச்சர் பஸ் ஓட்டுவதை அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
- பஸ்சின் வடிவமைப்பு, பயணிகளின் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்வதோடு, பஸ்சை இயக்கியும் பார்த்தேன்.
தமிழ்நாடு அரசு, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 130 புதிய பஸ்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வாங்கி உள்ளது. அவற்றில் 110 குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்களும் 20 வால்வோ சொகுசு பஸ்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
படுக்கை வசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பஸ்களுக்கு பெங்களூருவில் அமைந்துள்ள வால்வோ நிறுவனத்தில் கூண்டு கட்டும் பணி நடந்து வருகிறது. இதை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வால்வோ சொகுசு பஸ்சினை அமைச்சர் சிவசங்கர் ஓட்டிப் பார்த்தார். அனுபவம் வாய்ந்த டிரைவர் போல் பஸ்சை ஓட்டினார். அமைச்சர் பஸ் ஓட்டுவதை அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அங்கு பயிற்சி பெற்று வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கும் அமைச்சர் அறிவுரையும் வழங்கினார். வால்வோ நிறுவனத்தின் பயிற்சி ஓடுதளத்தில் பஸ்சினை சோதனை முறையில் அமைச்சர் நீண்ட நேரம் ஓட்டி பார்த்தார்.
அப்போது போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சுஞ்சோங்கம் ஜாதக் அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் மற்றும் வால்வோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதுபற்றி அமைச்சர் சிவசங்கர் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சேவையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, நவீன 'மல்டி-ஆக்சில் வால்வோ' பஸ்களை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் உள்ள வால்வோ பஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற் சாலைக்கு நேரில் சென்று, தயாரிப்பு நிலையில் இருந்த பஸ்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். பஸ்சின் வடிவமைப்பு, பயணிகளின் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்வதோடு, பஸ்சை இயக்கியும் பார்த்தேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அமைச்சர் சிவசங்கர் எந்தவித பதட்டமும் இன்றி உற்சாகத்துடன் சொகுசு பஸ்சை ஓட்டி சென்றதை பஸ்சில் பயணம் செய்த அதிகாரிகள் வியந்து பார்த்தனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை திரும்புகிறார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை குடும்பத்துடன் தனி விமானத்தில் பெங்களூரு செல்கிறார்.
சென்னை:
கோவையில் நடைபெற்ற உலகப் புத்தொழில் மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை திரும்புகிறார். முதலமைச்சரின் மைத்துனர் செல்வம், கடந்த ஆண்டு இறந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி பெங்களூருவில் உள்ள செல்வம் வீட்டில் நடக்கும் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை குடும்பத்துடன் தனி விமானத்தில் பெங்களூரு செல்கிறார்.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 6,500 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்றுகாலை 8 மணி நிலவரப்படி நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
- ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.ரால் தோற்றுவிக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மாவால் வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாம் 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 54-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17-ந்தேதி, 18-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்' கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சிகளை சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்து இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், வருகிற 17-ந்தேதியன்றும் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஆகியோரது உருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும், ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன்படி எடப்பாடி பழனிசாமி 17-ந்தேதி சேலம் புறநகர் மாவட்டத்தில் பேசுகிறார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
11-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
12-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
13-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
15-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 13-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி சற்று குறைந்து இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பழனி மலை கோவில் தங்கரதம் நிலையம் அருகே தங்கத் தொட்டில் அறை செயல்பட்டு வந்தது.
- அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற பிறகு இன்று காலை சிறப்பு பூஜையுடன் தங்கத் தொட்டில் அறை திறக்கப்பட்டது.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து முருகனை தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் குழந்தைகளை தங்கத் தொட்டிலில் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதற்காக பழனி மலை கோவில் தங்கரதம் நிலையம் அருகே தங்கத் தொட்டில் அறை செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் அறையை புதுப்பிக்க கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 45 லட்சம் மதிப்பில் உபயதாரர் மூலம் புதுப்பிக்கும் பணியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற பிறகு இன்று காலை சிறப்பு பூஜையுடன் தங்கத் தொட்டில் அறை திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், அன்னபூரணி மற்றும் பொறியாளர்கள் குமார், முத்துராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் தங்கத் தொட்டிலில் போடும் குழந்தைகளுக்கு ரூ. 300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்த குழந்தைக்கு 2 பஞ்சாமிர்த டப்பாக்காள், விபூதி, முருகன் படம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
- எல்லாருக்கும் எல்லாம் எனும் நம் பயணத்தில் சமத்துவத்துக்கான அவரது போராட்டங்கள் தொடர்ந்து வழிகாட்டும்.
சென்னை:
தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதி வரை போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்.
இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என நமது திராவிட மாடல் அரசின் சார்பில் அவரது நூற்றாண்டையொட்டி அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இமானுவேல் சேகரனாருக்குப் பரமக்குடியில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற நமது அரசின் மற்றொரு அறிவிப்பும் செயல்வடிவம் பெற்று, இம்மாத இறுதிக்குள் முழுமையடையத் தயாராக உள்ளது.
எல்லாருக்கும் எல்லாம் எனும் நம் பயணத்தில் சமத்துவத்துக்கான அவரது போராட்டங்கள் தொடர்ந்து வழிகாட்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






