சொகுசு பஸ்சை ஓட்டி அசத்திய அமைச்சர் சிவசங்கர் - அதிகாரிகள் வியப்பு

அமைச்சர் பஸ் ஓட்டுவதை அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.பஸ்சின் வடிவமைப்பு, பயணிகளின் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்வதோடு, பஸ்சை இயக்கியும் பார்த்தேன்.
சொகுசு பஸ்சை ஓட்டி அசத்திய அமைச்சர் சிவசங்கர் - அதிகாரிகள் வியப்பு
Published on

தமிழ்நாடு அரசு, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 130 புதிய பஸ்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வாங்கி உள்ளது. அவற்றில் 110 குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்களும் 20 வால்வோ சொகுசு பஸ்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

படுக்கை வசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பஸ்களுக்கு பெங்களூருவில் அமைந்துள்ள வால்வோ நிறுவனத்தில் கூண்டு கட்டும் பணி நடந்து வருகிறது. இதை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வால்வோ சொகுசு பஸ்சினை அமைச்சர் சிவசங்கர் ஓட்டிப் பார்த்தார். அனுபவம் வாய்ந்த டிரைவர் போல் பஸ்சை ஓட்டினார். அமைச்சர் பஸ் ஓட்டுவதை அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

அங்கு பயிற்சி பெற்று வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கும் அமைச்சர் அறிவுரையும் வழங்கினார். வால்வோ நிறுவனத்தின் பயிற்சி ஓடுதளத்தில் பஸ்சினை சோதனை முறையில் அமைச்சர் நீண்ட நேரம் ஓட்டி பார்த்தார்.

அப்போது போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சுஞ்சோங்கம் ஜாதக் அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் மற்றும் வால்வோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதுபற்றி அமைச்சர் சிவசங்கர் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சேவையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, நவீன 'மல்டி-ஆக்சில் வால்வோ' பஸ்களை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் உள்ள வால்வோ பஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற் சாலைக்கு நேரில் சென்று, தயாரிப்பு நிலையில் இருந்த பஸ்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். பஸ்சின் வடிவமைப்பு, பயணிகளின் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்வதோடு, பஸ்சை இயக்கியும் பார்த்தேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அமைச்சர் சிவசங்கர் எந்தவித பதட்டமும் இன்றி உற்சாகத்துடன் சொகுசு பஸ்சை ஓட்டி சென்றதை பஸ்சில் பயணம் செய்த அதிகாரிகள் வியந்து பார்த்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com