என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் அருவிகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதிலும் நீரோடைகளில் குளிப்பதிலும் ஆர்வம் காட்டுவது வழக்கம்.
- சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் நீர்நிலைகள் வறண்டு காணப்படுவது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தின் காரணமாக வனப்பகுதி மட்டுமின்றி, புதர்கள், செடி கொடிகள் உள்ளிட்டவை கருகி காணப்படுகிறது.
வெயிலின் தாக்கம் தொடர்வதால் நீர் நிலைகளும் வறண்டு வருகிறது. குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி, கரடிச் சோலை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நீர்வீழ்ச்சிகளும் வறண்டு காணப்படுவதால் இதனை காண வரும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த அருவிப்பகுதிகளில் இருந்து விவசாயத்திற்கு செல்லும் தண்ணீர் குறைவாக செல்வதால் விவசாயமும் பாதிப்பு அடைய தொடங்கி உள்ளது. மேலும் மலைக் காய்கறிகளில் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் அருவிகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதிலும் நீரோடைகளில் குளிப்பதிலும் ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் நீர்நிலைகள் வறண்டு காணப்படுவது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
இதேபோல் வனப்பகுதியிலும் தண்ணீர் இல்லாததால் வன விலங்குகள், பறவைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தீ விபத்தும் ஏற்படுவதால் பாதிப்பு உண்டாகிறது. எனவே வனப்பகுதியில் உள்ள விலங்குகள், பறவைகளுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
- இந்த வருடம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இன்று நடந்த வார சந்தையில் ஆடுகள் விற்பனையானது.
- தேர்தல் நேரம் என்பதால் பறக்கும் படைக்கு பயந்து வியாபாரிகள் பணத்தை எடுத்து வருவது ஒரு பிரச்சனை மற்றும் ஆடுகளின் விலை எப்போதுமே இங்கு கூடுதலாக இருக்கும்.
செஞ்சி:
செஞ்சி வார சந்தை ஆட்டு விற்பனைக்கு மிகவும் பெயர் போனது. செஞ்சி பகுதி மலைகள் நிறைந்த பகுதி ஆகும். இப்பகுதியில் ஆடுகள் மலைகளில் உள்ள மூலிகை இலைகளை தின்று வளர்வதால் இப்பகுதி ஆடுகள் நன்றாக இருக்கும் என வெளியூர் வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
இதனால் ஒவ்வொரு வாரமும் கூடுதலாக ஆடுகள் விற்பனையாகும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிக அளவில் ஆடுகள் விற்பனையாகும்.
வழக்கம்போல் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இன்று நடந்த வார சந்தையில் ஆடுகள் விற்பனையானது. ஆனால் கடந்த காலங்களைப்போல் ஆடுகள் அமோகமாக விற்பனையாகவில்லை மந்தமாகவே இருந்தது. தேர்தல் நேரம் என்பதால் பறக்கும் படைக்கு பயந்து வியாபாரிகள் பணத்தை எடுத்து வருவது ஒரு பிரச்சனை மற்றும் ஆடுகளின் விலை எப்போதுமே இங்கு கூடுதலாக இருக்கும். இதனால் இப்போது இந்த வார சந்தையில் வியாபாரிகள் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் ரூ.2 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகியது என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
- வேட்பாளர் மற்றும் உடன் செல்பவர்களுக்கான சாப்பாடு தனி வேனில் வேட்பாளருடன் செல்கிறது.
- திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் அருணாசலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர்.
திருப்பூர்:
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற சக்கர வியூகம் வகுத்து வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் கும்பிட்ட கரங்களுடன் பிரசார வேனில் செல்கிறார். அவரது பேச்சு, அவருக்கென அமைந்த தனி பாணி தொடர்கிறது. பிரசார பயணம் காலையில் தொடங்கினாலும் மதிய வெயிலுக்கு ஏதாவது ஓரிடத்தில் முகாமிடுகின்றனர்.
வேட்பாளர் மற்றும் உடன் செல்பவர்களுக்கான சாப்பாடு தனி வேனில் வேட்பாளருடன் செல்கிறது. மத்தியில் அமையும் புதிய அரசின் மூலம் திருப்பூரின் தேவைகளை பூர்த்தி செய்யபாடுபடுவேன் என்றவாறு ஓட்டு சேகரிக்கிறார்.
திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் அருணாசலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர். கட்சி நிர்வாகிகளிடம் கோஷ்டி பாகுபாடு பாராமல் அனைவருடன் சென்று வீதி வீதியாக ஆதரவு திரட்டுகிறார். அமைதியான முகத்துடன் கரம் குவித்தபடி செல்கிறார்.
ஆரத்தி தட்டுடன் பெண்கள் நின்றால் மூத்த பெண்களின் காலில் விழுந்து வணங்குகிறார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை வேட்பாளர்கள் இல்லாமலேயே 4 அடுக்கு தேர்தல் பணி நடக்கிறது. 4 கட்ட பொறுப்பாளர் களத்தில் இறங்கியுள்ளனர். இருப்பினும் பூத் கமிட்டி மற்றும் பொறுப்பாளர்கள்தான் 40 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற வகையில் தனித்தனியே சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
பா.ஜ.க., வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மற்ற கட்சிகளை காட்டிலும் வித்தியாசமாக மக்களை சந்திப்பது, வாக்காளர்களை திரும்பி பார்க்க வைக்கிறது. தினமும் கட்சியினர் காலையிலேயே புறப்பட்டு தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் முன்பாகவே சென்று பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க.வினர் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை எடுத்து கூறி வாக்கு சேகரிக்கின்றனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஏற்கனவே சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனுபவத்தில் உற்சாகத்துடன் பிரசாரம் செய்து வருகிறார். இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்ற ஆர்வம் , அரசியலில் மாற்றம் என்ற மாற்று சிந்தனையுடன் புதிய வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் பலர் உள்ளனர். அவர்களது ஓட்டுகளை அறுவடை செய்ய வியூகம் வகுத்து செயல்படுகிறார்.
- பிரதமர் மோடி 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி நடத்தி வந்துள்ளார்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் 400 எம்.பிக்களை பெற்று மிக வலிமையுடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக அரியணை ஏறுவார்.
சூலூர்:
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை இன்று சூலூர், காங்கேயம் பாளையம், சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-
கோவை பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் மத்திய அரசின் திட்டங்களை இங்கு கொண்டு வர எந்தவித முனைப்பும் காட்டவில்லை. கோவையின் வளர்ச்சியில் அவருக்கு அக்கறை இல்லை.
பிரதமர் மோடி 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி நடத்தி வந்துள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் 400 எம்.பிக்களை பெற்று மிக வலிமையுடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக அரியணை ஏறுவார்.
இந்த முறை பிரதமர் மோடியின் ஆட்சியை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தங்களுக்கு தேவையானதை பெற்று கொள்ள இங்கு போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படப்போவது நிச்சயம். இது வருகிற 19-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது. மாற்றத்தை விரும்பும் கோவை மக்கள் மாற்றத்தின் பக்கம் நிற்பீர்கள். எனக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என நம்புகிறோம்.
இந்த பகுதியில் அரசு வேலை செய்கிறதோ இல்லையோ மக்கள் தங்கள் வேலைகளை செய்து தாங்களாகவே முன்னேறி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் விசைத்தறி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். நான் வெற்றி பெற்றதும் விசைத்தறி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். மீண்டும் பவர்டெக்ஸ் திட்டத்தை கொண்டு வருவோம்.
கோவையில் கடந்த 2 மாதங்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கு நிலவக்கூடிய குடிநீர் பிரச்சனைக்கு மாநில அரசு எந்த தீர்வும் காணவில்லை. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். கோவையின் நொய்யல் நதியை மீட்டெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறாது என்று பேசி வருகிறார்கள்.
- அ.தி.மு.க. மீது நீங்கள் கூறும் பொய்பிரசாரம் எடுபடாது.
கோவை:
கோவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து கோவை கொடிசியா அருகே உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒவ்வொரு இடமாக சென்று வருகிறேன். எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளமாக திரண்டு வருகிறார்கள். அதை பார்த்துதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. அதனால்தான் அவர் ஏதேதோ பேசிக்கொண்டு வருகிறார்.
கோவை மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை, இங்கு எந்த கட்சியினராலும் நுழைய முடியாது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்த மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். அந்த மாவட்டத்தில் போட்டியிடும் நமது வேட்பாளர் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அவருடைய வெற்றி அகில இந்திய அளவில் எதிரொலிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறாது என்று பேசி வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். அவர் கண்ட கனவு வேறு. கூட்டணி பலம் அதிகமாக இருக்கிறது, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்று நினைத்தார். அது பகல் கனவாக போனது. கூட்டணி அனைத்து கட்சிகளுக்கும் தேவைதான். ஆனால் அ.தி..மு.க.வுக்கு மக்கள் பலம் உள்ளது.
நீங்கள் கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கிறீர்கள். ஆனால் அதி.மு.க. மக்கள் பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறது. மக்கள் பலம்தான் வலிமையானது. அந்த மக்கள் பலத்தால்தான் வெற்றி பெற முடியும். அது எங்கள் பக்கம் இருக்கிறது. அ.திமு.க. உழைப்பாளிகள் அதிகமாக இருக்கும் கட்சி. நாங்கள் உழைப்பு, மக்களை நம்பி இருக்கிறோம். எனவே இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி நிச்சயம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்போடு பேச வேண்டும். எங்கள் கட்சி தொண்டன் பேச ஆரம்பித்துவிட்டால் உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. அ.தி.மு.க.வில் அனைவருமே சமம். அனைவருக்கும் பொறுப்பும், உணர்வும், லட்சியமும் இருக்கிறது.
அ.தி.மு.க. பல்வேறு திட்டங்களை அறிவித்ததால் அதன் மூலம் மக்கள் ஏராளமான பயன் பெற்றனர். நீங்கள் பொறுப்பேற்று இந்த 3 ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் போட்டோம் என்று மக்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள். நீங்கள் எந்த திட்டத்தையும் செய்யவில்லை. அதனால்தான் உங்களிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. அதி.மு.க.வை விமர்சனம் செய்கிறீர்கள்.
அ.தி.மு.க. இருண்ட ஆட்சி என்று பேசி வருகிறீர்கள். நீங்கள் ஒரு பொதுக்கூட்டத்தை போடுங்கள், உங்கள் ஆட்சியில் போடப்பட்ட திட்டம் குறித்து நீங்கள் பேசுங்கள், எங்கள் ஆட்சியில் போடப்பட்ட திட்டம் குறித்து நானே நேரில் வந்து பேசுகிறேன். எந்த இடத்துக்கும் வந்து பேச நான் தயார். 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறோம். வேண்டும் என்று திட்டமிட்டு அவதூறு பரப்பி பொய்யான குற்றத்தை சுமத்தி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறீர்கள். தமிழக மக்கள் நன்றாக கவனித்து வருகிறார்கள். அ.தி.மு.க. மீது நீங்கள் கூறும் பொய்பிரசாரம் எடுபடாது.
நாங்கள் பா.ஜனதாவை கண்டு பயப்படவில்லை. இந்தியாவில் உள்ள எந்த கட்சியை கண்டும் எங்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு மடியில் கனம் இல்லை. இதனால் யாரையும் கண்டு பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. தி.மு.க.தான் பா.ஜனதாவுடன் ரகசியமாக கூட்டணி வைத்து உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் கோ பேக் மோடி என போராட்டம் நடத்தினீர்கள். ஆளும்கட்சியான பிறகு வெல்கம் மோடி என்றீர்கள்.
பிரதமர் மோடியை தமிழகத்துக்கு 6 முறை அழைத்து வந்து, நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உதவி செய்தீர்களே.
இரட்டை வேடம் போடும் கட்சிதான் தி.மு.க. அ.தி.மு.க. அப்படி அல்ல. தமிழகத்துக்கு நலம் சார்ந்த பிரச்சனை என்றால் அதை எதிர்ப்போம். தமிழகத்துக்கு நன்மை தரும் திட்டம் என்றால் அதை வரவேற்போம். தற்போது நாங்கள் பா.ஜனதா கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டோம். நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்தது தி.மு.க.வுக்கு பிடிக்க வில்லை. அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் அதைபற்றி பேசி வருகிறார்கள்.
எங்கள் மீது குறை சொல்ல எதுவுமே இல்லை. இதனால்தான் எங்களை பற்றி மக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறாக பேசி வருகிறார். தற்போது அவர் 23-வது புலிகேசி படத்தில் வடி வேலு வருவதுபோன்று தான் செய்து வருகிறார். எனவே அவருக்கு வெள்ளை குடை பிடித்த வேந்தர் என்று பட்டம் கொடுக்கலாம்.
தற்போது கச்சத்தீவு குறித்த பா.ஜனதா கையில் எடுத்து பேசி வருகிறது. அந்த கச்சத்தீவு குறித்து பேச அ.தி.மு.க.வுக்குதான் தகுதி இருக்கிறது. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்ததில் இருந்து அதை மீட்டெடுக்க அ.தி.மு.க. போராடி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.
2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. உடனே பிரதமர் மோடிக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். ஆனால் கடந்த 10 ஆண்டுகாலமாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தேர்தல் வந்துவிட்டதால் கிடப்பில் போடப்பட்ட கச்சத்தீவை கையில் எடுத்து உள்ளனர்.
கச்சத்தீவு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருந்து வருகிறது. ஆனால் அந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. அப்படி பதில் மனு தாக்கல் செய்து, ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை மறுபரிசீலனை செய்வோம் என்ற வாக்கியத்தை சேர்த்து மனு தாக்கல் செய்தால் தானாகவே கோர்ட்டு மூலம் அந்த கச்சத்தீவை நாம் பெற முடியும்.
ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. மீனவர்களின் வாக்குகள் தேவை என்பதால் தற்போது அந்த பிரச்சினையை பா.ஜனதா கையில் எடுத்து பேசி வருகிறது. மத்தியில் 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்களே அப்போது அவர்கள் எங்கே சென்றார்கள். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. கச்சத்தீவு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருவது தொடர்பாக ஏதாவது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணினாரோ?, இல்லையே.
மத்தியில் ஆட்சி செய்த பா.ஜனதாவுக்கும், மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க.வுக்கும் மீனவ மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை. ஆனால் அ.தி.மு.க. மீனவ மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, கோர்ட்டு மூலம் கச்சத்தீவை மீட்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அந்த தீவை மீட்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம்.
தி.மு.க. ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் உடனே குழு நியமிக்கிறது. இதுவரை 52 குழுக்கள் நியமித்து இருக்கிறது. இந்தியாவிலேயே திட்டங்களுக்கு அதிக குழு அமைத்த ஒரே மாநிலம் தமிழகம்தான். எந்த திட்டமும் இதுவரை மக்களுக்கு வரவில்லை. கோவைக்கு ஏதாவது திட்டங்கள் அறிவித்தார்களா இல்லையே.
கோவை மாநகராட்சியில் 500 சாலைகளை சீரமைக்க ஒப்பந்தப்புள்ளி போடப்பட்டது. அதை தி.மு.க. ரத்து செய்துவிட்டது. மக்களுக்கு போடப்பட்ட திட்டங்களை அரசு ரத்து செய்யக்கூடாது. எனவே இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் கோவை மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கொடுத்தோம். ஆனால் தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் கிடைக்கிறது. எதுவுமே தெரியாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
தி.மு.க. தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.656 கோடி பெற்று இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தடை செய்தோம். ஆனால் அதை எதிர்த்து சூதாட்ட நிறுவனங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தபோது அந்த வழக்கை சரியாக நடத்தாமல் கோட்டை விட்டுவிட்டது. ஆன்லைன் ரம்மி நிறுவனங்களிடம் இருந்து ரூ.500 கோடிக்கும் மேல் தேர்தல் பத்திரம் வாங்கியதுதான் தி.மு.க.
தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் தடையில்லாமல் கிடைக்கிறது. அதற்கு மாணவர்கள், பொதுமக்கள் அடிமையாகி இருப்பதால்தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியவில்லை. பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு போதைப்பொருளை கடத்திய தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடன் தி.மு.க.வை சேர்ந்த பலர் தொடர்பு வைத்து உள்ளனர். எனவே அதில் தொடர்புடைய பலர் விரைவில் சிக்க போகிறார்கள். அவர்கள் தேர்தலுக்கு முன்பு சிறைக்கு செல்வார்களா அல்லது தேர்தலுக்கு பின்னர் செல்வார்களா என்றுதான் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது மக்கள் விரோத ஆட்சிதான் நடந்து வருகிறது.
அதி.மு.க. ஆட்சியி ன்போது கோவைக்கு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீரும் அ.தி.மு.க. ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்கு தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து உள்ளார். வெள்ளலூரில் ஒருங்கிணைக்கப்பட்ட பஸ்நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அந்த பணி 60 சதவீதம் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அந்த பணிகள் தொடங்கப்படும். எனவே தமிழகத்தில் திமு.க. ஆட்சியை விரட்டி அடிக்க நீங்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
- கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.85-க்கும் பார் வெள்ளி ரூ.85,000-க்கும் விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்து விற்பனையாகிறது. கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,510-க்கும் சவரன் ரூ.52,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.85-க்கும் பார் வெள்ளி ரூ.85,000-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
- தட்சிணாமூர்த்தி தனது வீட்டு தேவைக்காக கடன் வாங்கியிருந்ததாகவும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.
- மன உளைச்சலில் இருந்த வரலட்சுமி தனது தாயாரிடம் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு, மகன், மகளுடன் கோவைக்கு வந்துள்ளார்.
கோவை:
சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 50). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி வரலட்சுமி (45). இவர்களுக்கு யுவராஜ் (16)என்ற மகனும், ஜனனி (15) என்ற மகளும் இருந்தனர். வரலட்சுமி தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் யுவராஜ் 11-ம் வகுப்பும், ஜனனி 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
தட்சிணாமூர்த்தி தனது வீட்டு தேவைக்காக கடன் வாங்கியிருந்ததாகவும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த 28-ந் தேதி தட்சிணாமூர்த்தி தனது மனைவியிடம் வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு வரலட்சுமி துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
கணவர் மாயமானதில் இருந்தே வரலட்சுமியும், அவரது குழந்தைகளும் கடும் மன உளைச்சலில் இருந்தனர். அவர்களுக்கு வரலட்சுமியின் தாயார் தாராபாய் ஆறுதல் கூறி வந்தார்.
கடந்த 29-ந் தேதி வரலட்சுமி, தனது தாயாரிடம் வீட்டிலேயே இருந்தால் மிகவும் மன உளைச்சலாக உள்ளது. அதனால் நானும், குழந்தைகளும் சிங்கபெருமாள் கோவிலுக்கு சென்று வருகிறோம் என தெரிவித்தார். அவரும் போய்விட்டு வாருங்கள் என அனுப்பி வைத்தார்.
இதையடுத்து வரலட்சுமி, தனது மகன் யுவராஜ், மகள் ஜனனி ஆகியோருடன் கோவிலுக்கு சென்றார். அன்றைய தினம் முழுவதையும் அங்கேயே இருந்தார். மதியத்திற்கு பிறகு அவரது தாயார் போன் செய்து ஏன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என கேட்டார். அதற்கு வரலட்சுமி தான் கோவிலில் தங்கி விட்டு மறுநாள் வருகிறேன் என தெரிவித்தார்.
இரவு தாராபாய் தனது மகளை செல்போனில் அழைத்தார். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் பதறிபோன அவர் உடனே தனது உறவினர்களுடன் கோவிலுக்கு சென்று தேடி பார்த்தார். அங்கு அவர்கள் இல்லை. எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் தாராபாய் சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வரலட்சுமி மற்றும் அவரது மகன், மகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோவை நஞ்சுண்டாபுரம் ரெயில்வே தண்டவாளம் அருகே 3 பேர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் டி.எஸ்.பி. யாஸ்மின், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் உடல்களை பார்வையிட்டு, அவர்கள் யார் என்பதை அறிய அங்கு ஏதாவது கிடக்கிறதா? என தேடி பார்த்தனர்.
அப்போது செல்போன் மற்றும் சில பொருட்கள் இருந்தன. அதனை வைத்து விசாரித்த போது, இறந்து கிடந்தது மாயமான வரலட்சுமி, அவரது மகன் யுவராஜ், மகள் ஜனனி என்பது தெரியவந்தது.
மன உளைச்சலில் இருந்த வரலட்சுமி தனது தாயாரிடம் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு, மகன், மகளுடன் கோவைக்கு வந்துள்ளார்.
கோவைக்கு வந்த அவர்கள் பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். கணவர் மாயமானதாலும், கடன் தொல்லை அதிகரித்ததாலும் இனி இந்த உலகில் வாழ்வதை விட தற்கொலை செய்து கொள்ளலாம் என வரலட்சுமி முடிவெடுத்துள்ளார். அதன்படி கோவை நஞ்சுண்டாபுரம் ரெயில்வே மேம்பாலம் பகுதிக்கு தனது குழந்தைகளுடன் வரலட்சுமி சென்றார்.
அந்த வழியாக கேரள மாநிலம் சொர்னூர் நோக்கி ஒரு ரெயில் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து வரலட்சுமி, தனது குழந்தைகளுடன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- நாங்கள் மோடிக்கும், இ.டி.க்கும் (அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம்.
- எங்களுக்கு மரியாதை கொடுத்தால் திருப்பி கொடுப்போம். இல்லையென்றால் தூக்கி மிதிப்போம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே தி.மு.க வேட்பாளர் முரசொலியை ஆதரித்து இளைஞரணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது :-
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் சேர்ந்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்துவிட்டன. இவற்றை மீட்டெடுக்க தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி , சசிகலா சிறைக்கு சென்றபோது அவர் யார் என கேட்டார். இத்தகைய குணம் கொண்ட எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு மட்டுமில்லாமல் அ.தி.மு.க.விற்கும் துரோகம் செய்து விட்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக பிரதமாக உள்ள மோடி தமிழகத்திற்கு இதுவரை எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்திடம் இருந்து பெறும் ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே மத்திய அரசு திரும்பி வழங்கி உள்ளது.
நாங்கள் மோடிக்கும், இ.டி.க்கும் (அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம். எங்களுக்கு மரியாதை கொடுத்தால் திருப்பி கொடுப்போம். இல்லையென்றால் தூக்கி மிதிப்போம். பா.ஜனதா, அ.தி.மு.க. ஆட்சியில் இழந்த தமிழக உரிமையை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். நமது தலைவர் (மு.க.ஸ்டாலின்) யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் பிரதமராக வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை 3 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், வருகையால் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் உள்ள மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை ) மாலை 5 மணிக்கு தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து அவர்களுக்கு வாக்குகள் சேகரித்து பேசுகிறார்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கணேசன் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக விழுப்புரம் வி.சாலை பகுதியில் பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை 3 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமிட்டல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பாதுகாப்பு பணியில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 8 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 15 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 30 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், வருகையால் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 6-ந் தேதி வரை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் இருக்கும்.
- கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், வரும் 8-ந் தேதி வரை தமிழகத்தில் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக மாவட்டங்களில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வரையும், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 102.2 டிகிரி வரையும், கடலோரப் பகுதிகளில் 98.6 டிகிரி வரையும் இருக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 6-ந் தேதி வரை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிக மாக வெயில் இருக்கும்.
தமிழகத்தில் நேற்று பதிவான வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்): ஈரோடு-106.52 , சேலம்-105.08, பரமத்திவேலூா்-104.9, திருப்பத்தூா்-104.36, தருமபுரி-104 , திருச்சி-103.82, நாமக்கல்-103.1 , வேலூா்-103.1, மதுரை நகரம்-102.56, திருத்தணி-102.56, கோவை-101.84, மதுரை விமான நிலையம்-101.84 , தஞ்சாவூா்-101.3, சென்னை மீனம்பாக்கம்-100.58, பாளையங்கோட்டை-100.4.
இதற்கிடையே வருகிற 8, 10 ஆகிய தேதிகள் வரை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இலக்கியத் துறையில் பல ஆண்டுகளாகப் பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
- விருது பெறவுள்ள பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் முதுபெரும் தமிழறிஞரான மு.வரதராசனாரின் மாணவர் ஆவார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாக இருப்பவர் ஆர்.மகாதேவன். இவரது தந்தை மா.அரங்கநாதன் மிகப்பெரிய எழுத்தாளர். பல்லாயிரம் ஆண்டு தமிழ் கலாசாரத்தை தன்னுடைய கவிதை, சிறுகதை, நாவல் மூலம் வெளிப்படுத்தியவர்.
இவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16-ந்தேதி, 'மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகளை, முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
அதாவது, இலக்கியத் துறையில் பல ஆண்டுகளாகப் பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு, இந்த விருதை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், எழுத்தாளர் கு.வெ.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் வருகிற 16-ந்தேதி நடக்கிறது. அப்போது, நீதிபதி ஆர்.மகாதேவன் விருதுகளை வழங்குகிறார். அதைத்தொடர்ந்து, 'மா.அரங்கநாதன் படைப்புகள்', 'பொருளின் பொருள் கவிதை' ஆகிய நூல்களையும் வெளியிட உள்ளார்.
விருது பெறவுள்ள பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் முதுபெரும் தமிழறிஞரான மு.வரதராசனாரின் மாணவர் ஆவார். "வைணவ உரைவளம்" என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றிய இவர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித் துறையிலும் பணியாற்றியுள்ளார். தமிழ் மொழியை வளர்ப்பதற்காக 37 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
எழுத்தாளர் கு.வெ.பா என்கிற கும்பகோணம் வெங்கடாசலம் பாலசுப்பிரமணியன் கவிதை, கதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, கற்பித்தல் எனப் பல துறைகளிலும் தடம் பதித்தவர். 100-க்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை இவர் எழுதியுள்ளார். கு.வெ.பாலசுப்பிரமணியன் எழுதிய பக்தி நூல்கள் பல இலங்கை மற்றும் பிரான்சில் உள்ள கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே பூத் சிலிப் வழங்கப்படுகிறது.
- ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், போலீஸ் டி.ஜி.பி.க்கள், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், உள்துறைச் செயலாளர்கள் மற்றும் முக்கிய அலுவலர்களுடன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பக்கத்து மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை செய்வது பற்றியும், தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றியும் ஆலோசனை வழங்கினார்.
வேட்பாளர்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு அனுமதிகளை 'சுவிதா செயலி' மூலம் பெற்றுக்கொள்ள முடியும். 'ரோடு ஷோ' நிகழ்ச்சிகளுக்கான அனுமதிகளை, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பெற வேண்டும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமருக்கு மட்டும் சில விதிவிலக்கு உள்ளது. அது தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே உள்ள நடைமுறையே பின்பற்றப்படுகிறது. ரோடு ஷோவுக்கு நட்சத்திர பேச்சாளர்கள் பயன்படுத்தும் வீடியோ வகை வாகனங்களுக்கான அனுமதியை தேர்தல் கமிஷன் வழங்கும். மற்ற வாகனங்களுக்கான அனுமதியை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம்தான் பெறவேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே பூத் சிலிப் வழங்கப்படுகிறது. இதுவரை 13.08 லட்சம் பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். இதில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதில் அதிகபட்சம் 50 ஓட்டுக்களை பதிவு செய்யலாம்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக விழிப்புணர்வு பாடல் அடங்கிய ஆடியோ கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டப்பட்டது. தற்போது அதே பாடல், வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.
கோவை பா.ஜனதா வேட்பாளர் அண்ணாமலை, ஆரத்திக்கு பணம் கொடுத்ததாக வந்த வீடியோ, கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த பழைய சம்பவம் என்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இருந்து வந்த புகார் மீது விசாரணை நடைபெறுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக இதுவரை வேறு புகார்கள் இல்லை.
தமிழகத்தில் மொத்தம் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியபட்டுள்ளது.
அதிகபட்சமாக மதுரை தொகுதியில் 511 வாக்குச்சாவடிகளும், தென் சென்னையில் 456 வாக்குச்சாவடிகளும், தேனியில் 381 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. திருவள்ளூர் தொகுதியில் 170, வடசென்னையில் 254, மத்திய சென்னையில் 192, ஸ்ரீபெரும்புதூரில் 337, காஞ்சிபுரத்தில் 371 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறியப்பட்டுள்ளன.
பதற்றமான ஓட்டு சாவடிகளுக்கு, வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாகேவே துணை ராணுவம் அனுப்பி வைக்கப்படும். மேலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
பதற்றம் குறைந்த ஓட்டு சாவடிகள் உள்ள தொகுதிகளாக பெரம்பலுார் (55 ஓட்டு சாவடிகள்), விழுப்புரம் (76 ஓட்டு சாவடிகள்), திருச்சி (84 ஓட்டு சாவடிகள்) அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடந்த தேர்தலில் 90 சதவீதத்துக்கு மேல் ஓட்டுப் பதிவாகி, அதில் 75 சதவீத ஓட்டுகள் ஒரு வாக்காளருக்கு சென்றிருந்தால், அதுபோன்ற வாக்குச்சாவடிகள் மிகப்பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் 181 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.
அதில் அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதியில் 39 வாக்குச்சாவடிகளும், வடசென்னையில் 18 வாக்குச்சாவடிகளும், அரக்கோணம் தொகுதியில் 15 வாக்குச்சாவடிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
திருவள்ளூர் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 6.23 கோடி வாக்காளர்களில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் உள்ளனர். மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 4 லட்சத்து 61 ஆயிரத்து 771 பேர் உள்ளனனர். அவர்கள் 12-டி படிவத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடி தபால் ஓட்டு போடுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்திருந்தது.
அதற்கு விருப்பம் தெரிவித்து 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 4.30 லட்சம் பேரும், மாற்றுத் திறனாளிகள் 3.66 லட்சம் பேரும் விண்ணப்பம் பெற்றனர். பூர்த்தி செய்த படிவங்களை 85 வயதுக்கு மேற்பட்ட 77 ஆயிரத்து 455 பேரும், மாற்றுத் திறனாளிகள் 50 ஆயிரத்து 676 பேரும் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் வீட்டில் இருந்தே வாக்குப்பதிவு செய்யலாம்.
அந்த வகையில் முதியவர்களிடம் வீடுகளுக்கு சென்று ஓட்டுகளை பெறும் நடவடிக்கை, திருச்சி, ஈரோடு, கோவை தொகுதிகளில் தொடங்கியுள்ளது. அவர்கள் வீடுகளுக்கு ஒரு போலீஸ் அதிகாரி, கட்சி பிரதிநிதிகள், வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் சென்று வாக்குகளை பெற்று வருகின்றனர்.
அதற்காக அவர்கள் வீட்டிலேயே தற்காலிக வாக்குசாவடி உருவாக்கப்பட்டு, அதில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு வாக்கு செலுத்துகின்றனர்.
அலுவலர்கள் எண்ணிக்கை அதிகமாக இல்லை என்பதால் ஒரே நாளில் தொகுதி முழுவதும் இப்படி வாக்கைப்பெற முடியாது. முதல் முறை வீட்டுக்கு அலுவலர்கள் செல்லும்போது, வாக்காளர் இல்லையென்றால் மேலும் ஒருமுறை ஓட்டுப்பதிவு அலுவலர்கள் செல்வார்கள். அதற்கு மேல் வாய்ப்பு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.






