என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
- வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
அந்த வகையில், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி வாக்களித்தார்.
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்களித்தார்.
தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் காலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
சிவகங்கை தொகுதியில் உள்ள கண்டனூர் வாக்குச்சாடியில் முன்னால் அமைச்சர் ப. சிதம்பரம் வாக்களித்தார்.
தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்களித்தார்.
திருச்சி தில்லைநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரேமலதா மற்றும் விருதுநகர் தேமுதிக தொகுதி வேட்பாளர் விஜயபிரபாகரன் வாக்களித்தனர்.
- நாடு முழுவதும் இன்று 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு.
- அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்லலாம்.
வாக்காளர்கள் ஓட்டுப்போட செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.
அவ்வாறு இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்லலாம். அதன் விவரம் வருமாறு:-
1. ஆதார் அட்டை
2. பான் அட்டை
3. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை
4. வங்கி மற்றும் தபால் நிலையங்களில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய புத்தகம்.
5. தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை.
6. ஓட்டுனர் உரிமம்.
7. பாஸ்போர்ட்
8. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை.
9. மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கான அட்டை.
10. மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை.
- தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- சென்னையில் மெட்ரோ ரெயில்கள் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படுகிறது.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் நாளை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் மெட்ரோ ரெயில்கள் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை 8-11 மணி வரையும், மாலை 5-8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், இரவு 8-10 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை உற்பத்தி செய்ய உள்ளது.
- ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது இது முதல் முறை ஆகும்.
சென்னை:
பிரபலமான சொகுசு கார்களில் ஜாகுவார் லேண்ட்ரோவர் காரும் ஒன்று.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை உற்பத்தி செய்ய உள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர் மாநாட்டில் டாடா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி டாடா மோட்டார்ஸ் ராணிப்பேட்டையில் ஆலை அமைக்க உள்ளது.
ராணிப்பேட்டையில் புதிதாக அமையும் டாடா மோட்டார்ஸ் ஆலையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள் தயாரிக்கப்படும். வாகன தொழிற்சாலை அமைவதன் மூலம் சொகுசு கார்களின் உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாகும்.
ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை தமிழ்நாட்டில் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இங்கு தயாராகும் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- வாக்குப்பதிவு நாளான நாளை சாதாரண நகர சேவைகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தங்கள் இருப்பிடத்தில் இருந்து வாக்குச்சாவடி உள்ள இடத்திற்கு வாகன வசதி இல்லை என்றால் 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் நாளன்று பொது போக்குவரத்தை பயன்படுத்த இலவச பயணச்சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு இலவச பயணச்சீட்டு. வாக்குப்பதிவு நாளான நாளை சாதாரண நகர சேவைகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்கள் இருப்பிடத்தில் இருந்து வாக்குச்சாவடி உள்ள இடத்திற்கு வாகன வசதி இல்லை என்றால் 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை அழைத்தால் தேர்தல் ஆணையம் வாக்களிக்க வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாக்காளர்கள் சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
- தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்கி வருகிறது.
இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக சென்னை தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து இந்த சிறப்பு ரெயில் (06007) இன்றிரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நாளை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் (06008) இயக்கப்படுகிறது.
- இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு மோடி எதிர்ப்பு அலை உருவாகி இருக்கிறது.
- இந்தியா கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுகிற வகையில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாட்டில் இதுவரை நடை பெற்ற மக்களவை தேர்தல்களிலேயே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக வருகிற மக்களவைத் தேர்தல் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் எதிர்காலத்தையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் நிர்ணயிக்கப் போகிற தேர்தலாகும்.
இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்கப் போகிறதா? சர்வாதிகாரம் நீடிக்கப் போகிறதா? என்பது குறித்து வாக்காளப் பெருமக்கள் முடிவு செய்ய வேண்டிய தேர்தல். சுதந்திர இந்தியா காணாத வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
அதனை சீர்குலைத்து புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க பாரதிய ஜனதா கட்சி தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய பேராபத்துகளில் இருந்து நாட்டை மீட்க ஜனநாயக அடிப்படையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கிற வகையில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியை அமைத்திருக்கின்றன.
இந்தியா முழுவதும் பா.ஜ.க. எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. வட மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்ற நிலையில் 9 முறை தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை நிகழ்த்த வேண்டிய பலகீனமான நிலையில் பிரதமர் மோடி இருக்கிறார். ஆனால், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு மோடி எதிர்ப்பு அலை உருவாகி இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வின் தென்மாநிலங்கள் புறக்கணிப்பு அரசியலில் தமிழகம் கடுமையாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் மீது தலைவர் ராகுல்காந்தி அளவற்ற அன்பையும், பாசத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்ட நியாய பத்திரம் என்ற தேர்தல் அறிக்கையில் சமூகநீதி, பெண்களுக்கான சமஉரிமை, சமவாய்ப்பு, விவசாயிகள் நலன், சிறுபான்மையினர் பாதுகாப்பு, மாநில உரிமைகள், கருத்து சுதந்திரம், மீனவர் நலன், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூபாய் 400 ஆக உயர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு, அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, பெண்களுக்கு ஆண்டு ரூபாய் 1 லட்சம் வழங்குகிற மகாலட்சுமி திட்டம், மீனவர்களுக்கு மீண்டும் டீசல் மானியம், 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மதிய உணவு, மூத்த குடிமக்களுக்கு ரெயில்களில் மீண்டும் கட்டண சலுகை, நாடு முழுவதும் ஒன்றிய அரசு பணியிடங்களில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், விவசாயிகளுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவுப்படி சட்டப் பாதுகாப்பு என மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
எனவே, இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க, இந்திய அரச மைப்புச் சட்டத்தை பாதுகாக்க, மோடியின் பாசிச, சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திட, இந்தியா கூட்டணி தலைமையில் ஜனநாயக ஆட்சி மீண்டும் மலர்ந்திட, மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி அமைந்திட காங்கி ரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுகிற வகையில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
20.04.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
21.04.2024 மற்றும் 22.04.2024: தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
23.04.2024 மற்றும் 24.04.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18.04.2024 முதல் 22.04.2024 வரை : அடுத்த இரண்டு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும். அதற்கு அடுத்த மூன்று தினங்களில் 2°- 3° செல்சியஸ் சற்றே குறையக்கூடும்.
18.04.2024 முதல் 22.04.2024 வரை : காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
18.04.2024 மற்றும் 19.04.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
19.04.2024 மற்றும் 20.04.2024: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
- தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும்.
- கோவை பாராளுமன்ற பாஜக தேர்தல் அலுவலகத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தற்போதும் தங்கி உள்ளனர்.
கோவை:
தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்நிலையில் கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் பத்ரி (எ) க. பழனிச்சாமி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். அதில்,
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக வாக்காளர்களுக்கு அலைபேசி மூலம் அழைத்து, தனக்கு வாக்களிக்குமாறு கேட்டு G Pay மூலம் பணம் அனுப்பி வருகிறார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக சட்டவிரோதமாக கோவை பாராளுமன்ற பாஜக தேர்தல் அலுவலகத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தற்போதும் தங்கி இருந்து வாக்காளர்களுக்கு போன் செய்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு G Pay மூலம் ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

- பதற்றமான வாக்குச் சாவடிகளில் தலா 4 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்கிறார்கள்.
- வாக்குச்சாவடிகளில் மொத்தம் 7,470 அரசு ஊழியர்கள் தேர்தல் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுகின்றனர்.
நெல்லை:
தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடை பெறுகிறது. இதையொட்டி அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை இங்குள்ள 6 தொகுதிகளிலும் மொத்தமாக 8 லட்சத்து 6 ஆயிரத்து 96 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 44 ஆயிரத்து 254 பெண் வாக்காளர்களும், 152 இதர பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 532 வாக்காளர்கள் உள்ளனர்.
நெல்லை சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குச் சாவடிகளும், பாளையில் 270 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில் 306 வாக்குச் சாவடிகளும், ராதாபுரத்தில் 307 வாக்குச்சாவடிகளும், ஆலங்குளத்தில் 319 வாக்குச் சாவடிகளும், அம்பையில் 294 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,810 வாக்குச் சாவடிகள் உள்ளன.
இதில் 333 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அந்த வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 13 மிக பதற்றமான வாக்குச் சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பதற்றமான வாக்குச் சாவடிகளில் தலா 4 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்கிறார்கள்.
நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள், தலா ஒரு கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் வீதம் மொத்தம் 4,354 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2177 கட்டுப்பாட்டு எந்திரங்களும், அதே எண்ணிக்கையில் வி.வி.பேட் எந்திரங்களும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவை அனைத்தும் இன்று போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவை 249 வாகனங்களில் இன்று எடுத்துச்செல்லப்படுகிறது. மொத்தம் உள்ள 1,810 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு பணியில் 9,236 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 13 ஆயிரத்து 388 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 44 ஆயிரத்து 826 பெண் வாக்காளர்கள், 216 பேர் 3-ம் பாலினத்தவர்கள் என மொத்தம் 14 லட்சத்து 58 ஆயிரத்து 430 பேர் வாக்களிக்க தயாராக உள்ளனர்.
இதற்காக தொகுதி முழுவதும் மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை முழுவதுமாக போலீசாரின் தீவிர கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக 8,026 அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், இன்று அவை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
இதற்காக துணை தாசில்தார் தலைமையில் 136 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 136 வாகனங்கள் மூலமாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
தென்காசி(தனி) பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 158 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 73 ஆயிரத்து 822 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர்கள் 203 பேர் என மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1,743 வாக்குச்சாவடிகள் உள்ளன.
இதில் 106 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 14 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டு உள்ளது. அந்த வாக்குச் சாவடிகளில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும் சி.சி.டி.வி. கேமிராக்களும் பொருத்தப்பட்டு போலீசாரின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் மொத்தம் 7,470 அரசு ஊழி யர்கள் தேர்தல் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுகின்றனர்.
நாளை வாக்குப்பதிவையொட்டி இன்று தாலுகா அலுவலகங்களில் இருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு போலீசாரின் பாதுகாப்புடன் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லப்படுகிறது.
- உளவுத்துறையினர் ஒட்டு கேட்டு ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
- உளவு அமைப்பை போதை பொருட்கள் நடமாட்டம், ரவுடிகளை பிடிப்பதில் கவனம் செலுத்தாமல் அடியாட்கள் போல பயன்படுத்தி வருகின்றனர்.
நெல்லை:
அ.தி.மு.க மாநில வக்கீல் பிரிவு செயலாளர் இன்ப துரை நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக உளவுத்துறையினர் அ.தி.மு.க தலைவர்கள் முதல் வட்ட செயலாளர்கள் வரை செல்போனில் பேசுவதை ஒட்டு கேட்கும் விவகாரம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்காக ரூ. 40 கோடி மதிப்பில் உளவு சாதனம் ஒன்றை இறக்குமதி செய்து நாங்கள் பேசுவதை கண்காணித்து ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து 5 நாட்கள் ஆகிவிட்டது. தேர்தல் ஆணையமோ, உள்துறை செயலாளரோ, தமிழக முதலமைச்சரோ யாரும் இதுவரை பதில் அளிக்கவில்லை.
எனது புகார் மனு மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் தேர்தல் சமயத்தில் எங்களது வெற்றிக்கு பல்வேறு வியூகங்கள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் உரையாடல் நடத்துவோம். அதனை உளவுத்துறையினர் ஒட்டு கேட்டு ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
உளவு அமைப்பை போதை பொருட்கள் நடமாட்டம், ரவுடிகளை பிடிப்பதில் கவனம் செலுத்தாமல் அடியாட்கள் போல பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய அதிகாரியிடம் செல்போனில் இன்று காலை தொடர்பு கொண்டு கேட்டபோது இன்று மாலைக்குள் தமிழக தேர்தல் ஆணையம் பதில் தெரிவிப்பதாக கூறியுள்ளார்கள்.
இன்று மாலைக்குள் பதில் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் நேற்று நெல்லையில் இருந்து நாங்குநேரி வழியாக ராதாபுரம் தொகுதிக்கு ஒரு கோடி ரூபாய் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ராதாபுரத்தை சேர்ந்த ஒரு முக்கிய நிர்வாகிக்கு இந்த பணம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதனை பறக்கும் படையினர் சோதனை செய்யவில்லை.
அதே நேரத்தில் நாங்குநேரி போலீசில் பிடிபட்ட அந்த பணத்தின் மதிப்பு ரூ. 28 லட்சம் வரை மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த பணம் யாருடையது? எதற்காக கொண்டு செல்லப்பட்டது? என்பது குறித்து விரிவான விசாரணை தேவை. அந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் முறையான விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை தெரிவிக்க வேண்டும்.
அ.தி.மு.க.வினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் கெடு விதிக்கிறேன். நான் கொடுத்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை செயலாளரும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சின்னமலையூரில் ஆண் வாக்காளர்கள் 116 பேர், பெண் வாக்காளர்கள் 109 பேர் என மொத்தம் 225 வாக்காளர்கள் உள்ளனர்.
- வாக்குப்பெட்டிகள் தாசில்தார் சுகந்தி மேற்பார்வையில் மலைக்கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் 327 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் மலைப்பகுதி கிராமங்களான எல்லைப்பாறை மலை அடிவாரத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் லிங்கவாடி-மலையூர் மலை உச்சியில் உள்ளது. இங்கு வருடந்தோறும் பாதை வசதி இல்லாமல் கரடு முரடான கற்கள் நிறைந்த பாதையை கடந்து செல்ல வேண்டும். அதன்படி நாளை நடைபெறும் தேர்தலுக்காக இன்று காலை குதிரைகளில் 2 ஓட்டுப்பெட்டிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், எழுதுபொருட்கள் அடங்கிய பெட்டிகளும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 3 குதிரைகளில் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இந்த மலையூரில் ஒரே ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. 4 தேர்தல் உதவி அலுவலர்களும், 4 காவல்துறையை சேர்ந்தவர்களும் இதற்காக சென்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர் 237 பேரும், பெண் வாக்காளர்கள் 247 பேரும் மொத்தம் 484 வாக்காளர்களும் உள்ளனர். இதைபோலவே நத்தம் அருகே குட்டுப்பட்டி அருகில் கரந்தமலை மலை உச்சியில் அடிவாரத்திலிருந்து சுமார் 10கி.மீ தொலைவில் பெரிய மலையூர், சின்னமலையூர் மற்றும் வலசு ஆகிய 3 மலை கிராமங்கள் உள்ளது. இங்கு 3 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் பெரிய மலையூரில் ஆண் வாக்காளர்கள் 340 பேர், பெண் வாக்காளர்கள் 320 பேர் என மொத்தம் 660 வாக்காளர்கள் உள்ளனர்.
சின்னமலையூரில் ஆண் வாக்காளர்கள் 116 பேர், பெண் வாக்காளர்கள் 109 பேர் என மொத்தம் 225 வாக்காளர்கள் உள்ளனர். வலசையில் ஆண் வாக்காளர்கள் 181 பேர், பெண் வாக்காளர்கள் 179 பேர் என மொத்தம் 360 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு மினி பிக்-அப் வேனில் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மலை கிராமங்களுக்கு ஓட்டுப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டது. இதில் 4 காவல்துறை அதிகாரிகள், தேர்தல் உதவி அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 25 பேர் குழுவினர் 3 வாக்குச்சாவடிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த வாக்குப்பெட்டிகள் தாசில்தார் சுகந்தி மேற்பார்வையில் மலைக்கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் டி.எஸ்.பி. உதயகுமார், நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






