என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
    • இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிக்க கூடாது என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகை கஸ்தூரி அளித்த பேட்டி வருமாறு:-

    ஜனநாயக நாட்டில் தேர்தலை மக்கள் புறக்கணிக்கவே கூடாது. அதற்கான விழிப்புணர்ச்சியை நாம் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டின் 2-ம் பெரிய கட்சியான அ.தி.மு.க.வே தேர்தலை புறக்கணிக்கிறது என்பது எனக்கு ஏற்புடையது இல்லை. அவர்கள் போட்டியிட வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

    இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது என்பது தமிழ்நாட்டில் இது முதல் தடவை என்று நான் நினைக்கிறேன். எனவே இது எனக்கு ஏற்க முடியாத ஒரு அறிவிப்பாக இருக்கிறது. இதை எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற பலரது விருப்பமாக இருக்கிறது.

    தி.மு.க. இருக்கும் இடத்தில் அ.தி.மு.க. அதை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் அது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கிய ஒரு அ.தி.மு.க.வாக இருக்கும். அவர்கள் ஒதுங்கிப்போவது என்பது கண்டிப்பாக பா.ஜ.க. தான் இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி, நாங்கள் 3-வது இடத்துக்கு வந்து விட்டோம் என்று அவர்களே வாக்குமூலம் கொடுப்பது போல் இருக்கிறது. என்னாலும், என்னைப்போல் இருப்பவர்களாலும் அதை ஜீரணிக்கவே முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் சுதந்திரமாக நியாயமாக நடக்காது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம்.
    • எதார்த்த நிலையை புரிந்து நாங்கள் முடிவெடுத்து இருக்கிறோம்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

    தேர்தல் சுதந்திரமாக நியாயமாக நடக்காது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம்.

    இப்போதைக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக முடிவெடுத்து இருக்கிறோம். இது பற்றி மட்டும் தான் பேச முடியும்.

    எதார்த்த நிலையை புரிந்து நாங்கள் முடிவெடுத்து இருக்கிறோம். என்டிஏ, நாம் தமிழர் கட்சியை ஒரு பெரிய கட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது. அதிமுக தான் பெரிய கட்சி.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பார் என்று கூறினார்.

    • நாம் தமிழர் கட்சி எப்போதும் போல் தனித்து போட்டியிடுகிறது.
    • தேசிய மலரான தாமரையை எப்படி பா.ஜனதா கட்சிக்கு கொடுத்தார்கள்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபரிடம் கூறியதாவது:- 

    இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்ற நிலை தமிழ்நாட்டில் உள்ளது. ஒட்டுமொத்த அரசாங்கமே அதில் செயலாற்றுகிறது. அத்தனை விதிமீறல்களும் அரங்கேறுகிறது. எனவே இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. சொல்லும் காரணங்களில் நான் உடன்படுகிறேன்.

    ஆனால் இதே அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோது நடந்த இடைத்தேர்தல்களில் என்னென்ன முறைகேடுகளை செய்ததது என்பதனை மக்கள் மறக்கவில்லை. எனவே தேர்தலை புறக்கணிப்போம் என்று அவர்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

    நாம் தமிழர் கட்சி எப்போதும் போல் தனித்து போட்டியிடுகிறது. மாநில கட்சி அந்தஸ்து கிடைத்தவுடன் நாம் தமிழர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மைக் சின்னத்தில்தான் போட்டியிட முடிவு செய்து இருக்கிறது. இந்த தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சிக்கு என்று தனி சின்னம் கேட்போம். அதில் முதலில் நாங்கள் கேட்க போவது புலி சின்னம் தான். இந்த சின்னத்தை எங்களுக்கு தர தேர்தல் ஆணையம் ஏற்கனவே மறுத்து விட்டது. புலி, தேசிய சின்னம் என்பதால் தரமுடியாது என்று கூறுகிறது. அப்படியென்றால் தேசிய மலரான தாமரையை எப்படி பா.ஜனதா கட்சிக்கு கொடுத்தார்கள்.

    ஒருவேளை புலி சின்னம் கிடைக்காத பட்சத்தில் விவசாயி சின்னம் கேட்டு பெறுவோம். ஆனால் முன்பு வைத்து இருந்த கரும்பு விவசாயி சின்னம் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டோம். எனவே வேறு ஒரு விவசாயி சின்னம் கேட்டு பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தே.மு.தி.க. தனது வேட்பாளரை நிறுத்தி, அதற்கு அ.தி.மு.க ஆதரவை கேட்கலாம்.
    • தே.மு.தி.க. எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்தே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பரபரப்பு இன்னும் கூடும்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வாக்குகள் 13-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம்தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. ஆனால் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பொது தொகுதியாகும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் மட்டும் 72 ஆயிரத்து 188 வாக்குகள் பெற்றார்.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பாக்கியராஜ் 65 ஆயிரத்து 365 வாக்குகள் பெற்றார். பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் முரளி சங்கர் 32 ஆயிரத்து 198 வாக்குகள் பெற்றார்.

    இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று இருப்பதால், இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கடும் போட்டி ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக நேற்று திடீரென்று அறிவித்தது.

    இந்த அறிவிப்பு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.விற்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

    இந்த விவகாரத்தில் தே.மு.தி.க. என்ன நிலைப்பாடு எடுக்க போகிறது என்று இன்னும் தெரியவில்லை. ஒருவேளை அங்கு தே.மு.தி.க. தனது வேட்பாளரை நிறுத்தி, அதற்கு அ.தி.மு.க ஆதரவை கேட்கலாம். அல்லது, அ.தி.மு.க. போன்று போட்டியில் இருந்து விலகி கொள்ளலாம்.

    தே.மு.தி.க. எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்தே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பரபரப்பு இன்னும் கூடும்.

    இருப்பினும் தற்போதைய நிலையில் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.தி.மு.க. கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பா.ஜனதா கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார்.

    • கோவை மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி, சில குண்டர்கள் அத்துமீறல்.
    • மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் 24 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    ஈஷா சார்பில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு மின் மயான கட்டுமான பகுதிக்குள், நீதிமன்ற உத்தரவை மீறி சமூக விரோத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, காவல்துறையினரும், கிராம மக்களும் குண்டர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

    இதுதொடர்பாக, ஈஷா சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவை ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்டகால கோரிக்கைகளின் அடிப்படையில், அவர்களின் பயன்பாட்டிற்காக முறையான அனுமதிகளோடு ஈஷா சார்பில் நவீன எரிவாயு மின் மயானம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த கட்டுமான பகுதிக்குள் நேற்று கோவை மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி, சில குண்டர்கள் அனுமதியின்றி அத்துமீறி உள்ளே நுழையவும், அங்கு ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கவும் முயற்சி செய்தனர். 

    அவர்களை ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மக்களும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

    ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள இக்கரை போளுவாம்பட்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி, முட்டத்துவயல், தாணிக்கண்டி ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் பல ஆண்டுகளாக தங்களின் பயன்பாட்டிற்காக மின் மயானம் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்தனர்.

    இந்நிலையில் இக்கிராம மக்களின் பயன்பாட்டிற்காக அரசின் உரிய அனுமதிகளான கிராம பஞ்சாயத்தின் கட்டட அனுமதியும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் Consent to Establish CTE ஆகியவைகளை பெற்ற பின்னர் ஈஷாவின் சார்பில் எரிவாயு மின் மயானம் கட்டப்பட்டுள்ளது.

    இதனை தடுக்கும் பொருட்டு தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக சிவஞானம், சுப்ரமணியன், காமராஜ் ஆகியோர் மயானக் கட்டுமானத்திற்கு எதிராக செயல்பட்டு வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஈஷா சார்பில் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மயான கட்டுமானப் பகுதிக்குள் தொடர்பில்லாத நபர்கள் யாரும் உள்ளே நுழைய கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.

    ஆனாலும் சுப்ரமணியன் மற்றும் சிவஞானம் அவர்களின் ஆட்களோடு மயான கட்டுமான பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, கட்டிட பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, அங்குப் பணியில் இருந்தவர்களை மிரட்டியும் சென்றார்.

    மேலும், இவர்களின் குழு எரிவாயு மயானத்திற்கு எதிராக கிராம மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரவச் செய்து ஊர் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனைக் குறிப்பிட்டு, இவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி 6 கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் 24 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இது தொடர்பாக கிராம மக்கள் சார்பில் பேரூர் துணை கண்கானிப்பாளரிடமும் முறையிடப்பட்டு, ஆலாந்துறை காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் இது தொடர்பான வழக்கு ஒன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. அதில் உரிய அனுமதிகளோடு மட்டுமே ஈஷா எரிவாயு மயானம் கட்டியள்ளதை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கையை கேட்டுள்ளது.

    இவ்வழக்கை தொடர்ந்த சுப்ரமணியன் என்பவரின் நிலம் முறைகேடான முறையில் வாங்கப்பட்டு உள்ளதையும், அங்கு கட்டப்பட்டு இருக்கும் குடியிருப்பும் முறையான அனுமதி பெறாமல் இருப்பதையும் சுட்டிகாட்டி அவருக்கு அபராதம் விதித்து இவ்வழக்கை தள்ளுபடி செய்ய ஈஷா சார்பில் கோரப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தாங்கள் தொடர்ந்த வழக்கு கைவிட்டு போவதையும், மேலும் அவ்வழக்கு தங்களுக்கே பாதகமாக முடிய இருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் இடத்தின் அமைதியை குலைக்கும் நோக்கிலும், வீண் சச்சரவுகளை உருவாக்கும் விதமாகவும் சில அமைப்புகளின் மூலம் சுப்ரமணியன் அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

    அதனைத் தொடர்ந்தே உண்மைக் கண்டறியும் குழு என்ற போலி பெயரில் சில உதிரி அமைப்புகளைச் சேர்ந்த விஷமிகள் ஈஷாவின் நவீன எரிவாயு மயான கட்டுமான பகுதிக்குள் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி உள்ளே நுழையவும், அங்கே ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கவும் முயற்சி செய்தனர். அவர்களை ஈஷாவின் நுழைவாயிலிலேயே காவல்துறையினரும், கிராம மக்களும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி.
    • மேடையில் இருப்பவர்கள் இடையேயான உறவு, வெறும் தேர்தல் உறவு அல்ல. கொள்கை உறவு.

    கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் திமுக முப்பெரும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த முறை நான் கலந்துக் கொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் டிரெண்டானது. 8 முறை பிரதமர் மோடி வந்து கட்டமைத்த பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் ராகுல் முறியடித்தார்.

    நாற்பதும் நமதே என முழங்கினேன். நடக்குமா என கேள்வி எழுப்பினார்கள். என் நம்பிக்கைக்கு ஆதாரம் கூட்டணி தலைவர்கள். நாற்பது தொகுதிகளிலும் வெற்றி.

    40க்கு 40க்காக உழைத்த திமுக தொண்டர்கள், இந்தியா கூட்டணி கட்சியினருக்கு நன்றி. இது சாதாரண வெற்றி அல்ல. வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. 2004ல் 40க்கு 40 வெற்றியை பெற்று தந்தார் தலைவர் கலைஞர்.

    திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி. இது சாதாரண வெற்றி அல்ல, வரலாற்று சிறப்புமிக்க வெற்றி.

    மேடையில் இருப்பவர்கள் இடையேயான உறவு, வெறும் தேர்தல் உறவு அல்ல. கொள்கை உறவு.

    பாஜக 400 இடங்களை கைப்பற்றும் என்று சொன்னார்கள். அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை தலைகுனிய வைத்துள்ளோம்.

    இந்தியா கூட்டணி கட்சிகளிடையே பிளவுகளை ஏற்படுத்த பாஜக முயற்சித்தது. இவ்வளவு செய்தும் பாஜகவுக்கு கிடைத்தது வெறும் 240 இடங்களே, இது மோடிக்கு கிடைத்த தோல்வி.

    வாயால் வடை சுடுவதெல்லாம் உங்கள் வேலை. எங்கள் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கருத்துகளால் சுடுவார்கள். 237 எம்பிக்கள் எதிர்க்கட்சியாக இருப்பதால், பாஜகவால் நினைத்ததை செய்ய முடியாது. மக்களுக்கான குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது.

    நாடாளுமன்றத்தில் 9695 கேள்விகளை எழுப்பியவர்கள் எங்கள் எம்பிக்கள்.

    நாடாளுமன்றத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக 40 எம்பிக்கள் செயல்பட வேண்டும்.

    பாஜகவை பாசிசி பாதையில் செல்ல விடாமல் எம்பிக்கள் தடுக்க வேண்டும். எப்போதும் கட்சி பற்றியே சிந்தித்த தலைவர் கலைஞருக்கு நூற்றாண்டு விழா பரிசே இந்த 40க்கு 40.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும், திமுக வேட்பாளர் தான் வெற்றி பெற போகிறார். தொடர் வெற்றி, இன்னும் உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளித்துள்ளது.

    எங்களை நம்பி பொறுப்பு கொடுத்துள்ள மக்களின் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது. சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு.
    • சாதியவாத மதவாத சக்திகள் பிடித்துவிடக் கூடாது என்பதே தமிழ்நாட்டின் விருப்பம்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அரசியலில் ஒதுங்குவதும் ஓய்வெடுப்பதும் தற்கொலைக்கு சமம் என்று நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    திமுக Vs அதிமுக என்ற களத்தை சாதியவாத மதவாத சக்திகள் பிடித்துவிடக் கூடாது என்பதே தமிழ்நாட்டின் விருப்பம். அதற்கு முரணாகவே நடக்கிறது அதிமுக.

    பாஜகவுக்கு வலு சேர்த்து அன்றும், பாமகவுக்கு வாய்ப்பளித்து இன்றும் களத்தை இழக்கிறது. அரசியலில் ஒதுங்குவதும் ஓய்வெடுப்பதும் தற்கொலைக்கு சமம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறை, உக்திகளே வெற்றிக்கு காரணம்.
    • கூட்டணி கட்சிகளுக்காக திமுக வென்ற தொகுதிகளை விட்டுக் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

    எனவே 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, வரலாற்று வெற்றி தேடி தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் இன்று மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் தொடங்கியது. 

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., பங்கேற்றுள்ளனர்.

    மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

    இவ்விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பாஜகவை தமிழகத்தில் கால்பதிக்க விமாமல் சாதித்து காட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் போன்ற தலைமை அரசியலில் அபூர்வம், அற்புதம்.

    கேரளாவில் ஒரு நடிகரை வைத்து, ஒரு இடத்தை பாஜக கைப்பற்றியுள்ளது. ஆனால், எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் பாஜகவால் தமிழகத்தில் வேரூன்ற முடியாது.

    ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு, பவன் கல்யானை வளைத்துப்போட்டு சில இடங்களில் பாஜக வென்றுள்ளது.

    இந்திய கூட்டணி தலைவர்களே, முதல்வர் ஸ்டாலினை வியந்து பார்க்கிறேன்றனர். சோனியா உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.

    முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறை, உக்திகளே வெற்றிக்கு காரணம்.

    2019க்கு முன் காவிரியை வைத்து முதல்வர் ஸ்டாலின் உருவாக்கிய கூட்டணி இன்றும் தொடர்கிறது.

    மழைக்கால தவளை போல் ஒருவர் தாமரை மலரும் மலரும் என்று கத்திக் கொண்டே இருக்கிறார். கூட்டணி கட்சிகளுக்காக திமுக வென்ற தொகுதிகளை விட்டுக் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு.
    • 690 நாட்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம்.

    பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட மறுத்து நிலம் எடுப்பு பணிகளை மேற்கொள்வதாக கிராம மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மேலும், அண்டை மாநிலமான ஆந்திரா அரசிடம் தஞ்சம் கேட்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

    தஞ்சம் கேட்டு, வரும் திங்கட்கிழமை சித்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம், ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு போராட்ட குழு அறிவித்துள்ளது.

    பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து 690 நாட்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறாது என்பதால் புறக்கணிப்பு.
    • மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அதிமுக, மீண்டும் ஆட்சியில் அமரும்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தேர்தலை கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கமல்ல அதிமுக.

    கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின்போது வாக்காளர்களை அடைத்து வைத்து ஜனநாயக படுகொலை அரங்கேற்றப்பட்டது.

    மக்களை அடைத்து வைத்தால், அந்த இடத்திற்கே சென்று மக்களை சந்திப்பேன் என நான் எச்சரித்தேன். மக்களவை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள், வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள்.

    ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள் என்பதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிக்கிறோம். இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறாது என்பதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்.

    மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அதிமுக, மீண்டும் ஆட்சியில் அமரும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்.
    • அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான, அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வந்தார்.

    இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது.

    இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதற்கிடையே, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

    இந்நிலையில், ஆலோசனை கூட்டத்தின் முடிவில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
    • கொள்ளை தொடர்பாக அண்ணன் சீமான் அவர்களுக்கும் எங்களுக்கும் பல வேறுபாடு இருக்கலாம்.

    கோவை:

    கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. கூறியதாவது:

    தமிழகத்தை பொறுத்தவரை பாஜக வாஷ் அவுட். கிட்டத்தட்ட 11 இடங்களில் பாஜக டெபாசிட் இழந்துள்ளனர்.

    உத்தர பிரதேசத்தில் அயோத்தி கோவிலை வைத்தே இந்த தேர்தலை அவர்கள் சந்தித்தார்கள். அயோத்தி கோவில் அமைந்துள்ள இடத்திலேயே தேர்தலில் தோற்று இருக்கிறார்கள்.

    மதவாத அரசியலுக்கு தமிழ்நாடு மட்டுமல்ல உத்தரபிரதேசத்திலேயே அவர்களுக்கு இடமில்லை என்று மக்கள் காண்பித்து உள்ளனர்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

    அடுத்து வரும் தேர்தலிலும் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும். எங்களை பொறுத்தவரை நாங்கள் தனி இயக்கம். எங்களுக்கு என்று ஒரு சின்னம் உள்ளது. அந்த சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம்.

    நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை அவர்கள் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று 8 விழுக்காடு வாக்குகளை பெற்று இருக்கிறார்கள்.

    8 விழுக்காடு என்பது அண்ணன் சீமானின் விடாமுயற்சி, பல வருட உழைப்பு, இயக்க தோழர்களின் உழைப்பால் கிடைத்துள்ளது.

    கொள்ளை தொடர்பாக அண்ணன் சீமான் அவர்களுக்கும் எங்களுக்கும் பல வேறுபாடு இருக்கலாம். கொள்கைகள், சித்தாந்தங்கள்படி நாங்கள் வேறுபடுகிறோம். தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்று கூறினார்.

    ×