என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
    • மகாவிஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

    கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.

    இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து இரு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவமதித்தல், வதந்திகள், பொய்யான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

    செப்டம்பர் 20 ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் மகாவிஷ்ணுவை ஐந்து நாட்கள் விசாரிக்க அனுமதி அளிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    முன்னதாக இந்த விவகாரம் குறித்து விசாாரணை நடத்தி வரும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அசோக் நகர் அரசு பள்ளியில் ஆசிரியர்களிடம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர். இதோடு, அந்த பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசியிடம் கண்ணப்பன் தொலைபேசியில் விசாரணை நடத்தினார்.

    அப்போது, "மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யார்? அனுமதி வழங்கியது யார்?" என்ற இரண்டு கேள்விகளுக்கும் நாளைக்குள் எழுத்துப்பூர்வமான பதில் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

    • ஒருவர் இறந்துவிட்டால், அவர்களது உறவினர்கள் அளிக்கும் படிவம் 7ன் அடிப்படையில் பெயர் நீக்கப்படும்.
    • முகவரி மாற்றம் என்பது, வாக்குச்சாவடி அலுவர்களின் கள ஆய்வின்போது கண்டறியப்படுகிறது.

    வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை தன்னிச்சையாக நீக்க முடியாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் புகாருக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

    வாக்களார் பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்கான பெயர்களை தேர்தல் துறையால் தன்னிச்சையாக நீக்கப்பட்டதாக ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார்.

    இதற்கு, விளக்கம் அளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறுகையில், "சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் விளக்கம் கேட்ட பிறகுதான் பெயர்கள் நீக்கப்படுகிறது. முகவரி மாற்றம், மரணம் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே பெயர்கள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த நடவடிக்கைகளுக்கு சுமார் 2 வார காலம் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகே, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுகிறது.

    ஒருவர் இறந்துவிட்டால், அவர்களது உறவினர்கள் அளிக்கும் படிவம் 7ன் அடிப்படையில் பெயர் நீக்கப்படும். வீடுகளில் வாக்காளர்கள் இல்லாமல் இருப்பது, ஒவ்வொரு முறையும் வாக்குச்சாவடி அலுவலர்களால் உறுதி செய்யப்படுகிறது.

    முகவரி மாற்றம் என்பது, வாக்குச்சாவடி அலுவர்களின் கள ஆய்வின்போது கண்டறியப்படுகிறது" என்றார்.

    • அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது.
    • மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது.

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நாள்காட்டி 2018 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு (2024-25) அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு வருகிற 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன.

    பிளஸ் 1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு வருகிற 19 ஆம் தேதி துவங்கி, 27 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளன. 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு விஜய் வசந்த் நன்றி தெரிவித்தார்.
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    கன்னியாகுமரி தொகுதி எம்.பி., விஜய் வசந்த் இன்று, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நன்றி பிரச்சார பயணம் மேற்கொண்டார்.

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உண்ணாமலைக்கடை, கொல்லஞ்சி, நட்டாலம், நல்லூர், விளாத்துறை ஆகிய பகுதிகளில் இன்று வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு விஜய் வசந்த் நன்றி தெரிவித்தார்.

    இதேபோல், தோவாளை செக்கர்கிரி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் நெடுவிளை அருள்மிகு சிவ சுடலை மாடசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் பக்தர்களுடன் இன்று விஜய் வசந்த் எம்.பி கலந்து கொண்டார்.

    தொடர்நது, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள் விஜய் வசந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • முதல் மாநில மாநாடு அதன் மாநில தலைவர் கே.வி.எஸ்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் கருத்து.

    கல்பாக்கம் அடுத்த முகையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கனகபுரீஸ்வரர் கோயில் அருகில் கிராமணி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு அதன் மாநில தலைவர் கே.வி.எஸ்.சரவணன் தலைமையில் நடைபெற்றது. 

    இதில் முக்கிய கோரிக்கையாக, கள் இறக்க அனுமதி, அதை பதப்படுத்தி வைக்க குளிரூட்டும் மையம், அரசு சார்பில் ம.பொ.சிக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், ம.பொ.சி பெயரில் அரசு விருது கொடுக்க வேண்டும், கள்ளுக்கடை திறக்க வேண்டும், பதநீர் இறக்கும் பனைமர தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களை போலீசார் கைது செய்யக்கூடாது, பனை, தெண்ணை மரங்களில் இருந்து தொழிலாளி விழுந்து இறந்தால் அரசு 10லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், பதநீர் மதிப்புகூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழில் கூடங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை முன்வைத்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

    இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறுகையில், " காமராஜரும்- ம.பொ.சி யும் நாணயத்தின் இரு பக்கங்கள். விரைவில் ம.பொ.சிக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்டை மாநிலங்களில் கள் இறக்க அரசு உரிமம் வழங்கியது போல் தமிழக அரசும் கள் இறக்கும் தொழிலாளர்களுக்கு உரிமம் வழங்க வேண்டும்" என்றார்.

    தமிழ்நாடு நிலதரகர்கள் நலச்சங்க தலைவர் விருகை வி.என்.கண்ணன், முகையூர் கண்ணன், உதயகுமார், சிவகண்ணன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர் என 1000க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

    • பெரும்பாக்கம் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுகிறது.
    • 180 போலீசார் பணியில் உள்ளனர் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

    சென்னை பெரும்பாக்கம் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது தொடர்பான வழக்கில், "தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கபடவில்லை" என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    பெரும்பாக்கம் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுகிறது என மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அப்போது, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் 180 போலீசார் பணியில் உள்ளனர் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கக்கூடிய சூழலில் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    காவல்துறையினரின் அறிக்கை திருப்திகரமாக இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா வரும் செப்டம்பர் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
    • இந்த விவகாரம் சர்ச்சையானதால் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் பட்டியலில் இருந்து ராமரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் தமுக்கம் மைதானத்தில் வைத்து தமிழக அரசு சார்பில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா வரும் செப்டம்பர் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. புத்தகக் கண்காட்சியில் பார்வையாளர்களை ஈர்க்க பிரபலங்களும் மேடைப் பேச்சாளர்களும் அழைக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் மதுரையில் தற்போது நடக்கும் புத்தகத் திருவிழாவில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், மதுரை எம்பி சு. வெங்கடேசன், பேச்சாளர்கள் ஞானசம்பந்தன், ஐ லியோனி, பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் அழைக்கப்பட்டனர். அவர்களுடன் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் ராமர் அழைக்கப்பட்டிருந்தார்.

    ராமர் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். நகைச்சுவை என்ற தனித்திறமையால் அவரை அழைத்தோம், அவருக்கென்று தனி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவில்லை, பர்வீன் சுல்தானா பேசிய பிறகு சிறிது நேரம் அவர் பேசுவார் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் வாசகர்களுக்கான புத்தகக் கண்காட்சியில் புத்தகம் சார்ந்த எழுத்து சார்ந்த நபர்களை அழைக்காமல் தொலைக்காட்சி பிரபலங்களை அழைப்பதற்குப் பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது.

    இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையானதால் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் பட்டியலில் இருந்து ராமரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் புகைப்படம் இடம்பெற்ற விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் காகிதம் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிகழ்ச்சியில் ராமர் பங்கேற்கவில்லை மாட்டார் என்று கூறப்படுகிறது. 

    • இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும்.
    • செப்டம்பர் 17 ஆம் தேதி மிலாது நபி நாளில் விடுமுறை அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் மிலாது நபி பண்டிகை செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசின் காஜி அறிவுறுத்தி உள்ளார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் செப்டம்பர் 17 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளான மிலாது நபி உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிறை தெரியாததால், இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து தான் தமிழக அரசு செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 17 ஆம் தேதி மிலாது நபி நாளில் விடுமுறை அறிவித்துள்ளது. 

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
    • மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை.

    சென்னை:

    வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    அது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கே ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு தென் கிழக்கே நிலை கொண்டிருந்தது.

    இது மேலும் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் நேற்றிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை கணிப்பின் படி மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று இன்று மாலைக்குள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை ஒடிசா புரி மற்றும் சத்தீஷ்கர் இடையே கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் புயல் காலை 8 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குயதாகவும், மேலும் 11 மணி அளவில் வடகிழக்கு பகுதியை நோக்கி நகரத் தொடங்கியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் கரையை கடக்கும் வேளையில் புவனேஸ்வர் மற்றும் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயம் உள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாய் மாறி உள்ளது.

    இதனால் மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கடந்த மூன்று ஆண்டுகளாக பின்நோக்கி தள்ளிக் கொண்டிருக்கும் விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
    • திமுக அரசு இனியாவது பேணிக் காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.

    தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

    தினமும் தலைப்புச் செய்திகளை அலங்கரிக்கும் அளவிற்கு கொலைகளை மிக இயல்பாக்கியதே இந்த விடியா திமுக அரசின் மூன்றாண்டு சாதனை.

    வெளிநாட்டில் அமர்ந்தவாரே கோப்புகளில் கையெழுத்து இடுவது போல் போட்டோஷூட் நடத்திய விடியா திமுக முதல்வர், தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று ஒருமுறையாவது கேட்டறிந்தாரா?

    தனது பிரதானப் பணிகளையே மறந்துவிட்டு, வாக்களித்த மக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இன்றி, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கடந்த மூன்று ஆண்டுகளாக பின்நோக்கி தள்ளிக் கொண்டிருக்கும் விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

    விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே சீரழியும் சட்டம் ஒழுங்கை இனியாவது பேணிக் காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

      சென்னை:

      தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      2021-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இருந்தால் பா.ஜ.க. ஆட்சியில் மக்களின் வாழ்வாதார நிலை, வறுமை சூழல் ஆகியவை குறித்த முழு விவரங்களும் வெளி வந்திருக்கும். 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் 20 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டதாக கூறுகிற புள்ளி விவரம் உண்மையானதல்ல.

      தலைவர் ராகுல்காந்தி கோரிக்கையின்படி உடனடியாக மக்கள்தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனடியாக இணைத்து நடத்த வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

      இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      • முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி வருங்காலங்களில் இதுபோல் நடக்காமல் இருக்க சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
      • மீண்டும் ஒரு கும்பல் அடிமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து தமிழக அரசு விழிப்போடு செயல்பட வேண்டிய தருணம் இது

      சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூடநம்பிக்கை கருத்துக்களை பரப்பிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு பேசிய வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த வகையில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான அமீர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி வருங்காலங்களில் இதுபோல் நடக்காமல் இருக்க சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

      அமீர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது,

      சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிற்போக்குத்தனமான விஷக் கருத்துகளைப் பரப்பிய மகா விஷ்ணுவின் செயலைக் கண்டித்ததோடு அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியும் அளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும், அவரது வார்த்தைக்கேற்ப உரிய நடவடிக்கையை எடுத்த தமிழக காவல்துறைக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும்.

      சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் தாழ்த்திப் பார்க்கின்ற சனாதன கருத்திற்கு எதிராக விழித்துக் கொண்டிருக்கும் தமிழினத்தை, இப்போது ஆன்மிகம் என்கிற போர்வையில் "முற்பிறவி பாவங்கள்" என்ற சொல்லின் மூலம், வர்க்க ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மீண்டும் ஒரு கும்பல் அடிமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து தமிழக அரசு விழிப்போடு செயல்பட வேண்டிய தருணம் இது என்பதையே அசோக் நகர் அரசினர் மகளிர் பள்ளியின் நிகழ்வு நம் எல்லோருக்கும் உணர்த்துகிறது.

      தங்கள் கண் முன்னே நடைபெற்ற பிற்போக்குத்தனமான, மூட நம்பிக்கையான பேச்சுக்களை தடுக்காமல், கண்டும் காணாமல் நின்று கொண்டிருந்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கு மத்தியில் தனது ஞானக்கண் கொண்டு அநீதியை தட்டிக் கேட்ட மானமிகு தமிழாசிரியர் சங்கர் அவர்களுக்கு அமைச்சர் உள்ளிட்டோர் பாராட்டுக்களை வழங்கியதோடு நின்றுவிடாமல், அதே பள்ளியில் அவரைத் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களையும் தமிழக முதல்வர் அவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

      சமூகத்தை வழி நடத்தக்கூடிய அறிவார்ந்த நாளைய தலைமுறையை உருவாக்கும் பட்டறையாக கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்லாது சமூகப் பொறுப்புள்ள அனைவரின் கடமை என்பதை மறந்து, சமீப காலமாக தமிழ் நாட்டு கல்வி நிறுவனங்களில், இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் போன்ற சமூக வலைதளங்களிலும் யூட்யூப் போன்ற ஊடகத்திலும் பிரபலமானவர்களையும் அழைத்து மாணவர்களிடையே உரையாடச் செய்வது அதிகரித்து வருகிறது.

      எந்த விதமான கல்வித் தகுதியோ, அறிவில் தேர்ச்சியோ, ஞான முதிர்ச்சியோ, முற்போக்குச் சிந்தனையோ இல்லாதவர்களை மாணவர்களின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தி அவர்களை நாயகர்களாக சித்தரிப்பதும் மாணவர்களுக்கு அவர்களை அறிவுரை வழங்கச் சொல்வதும் மிகவும் வேதனைக்குரிய விசயமாகும்.

      அதே போல, பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்க அல்லது சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள திரைக் கலைஞர்கள் பங்கு பெறுவது ஏற்புடையதாகவே இருந்தாலும், வணிக நோக்கத்திற்காக தயாரிக்கப்படும் பிரபலமானவர்களின் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களையும் திரைப்பட அறிமுக விழாக்களையும் கல்வி நிறுவன வளாகங்களில் நடத்துவது கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியதே. திரை அரங்கங்கள் கல்விக்கூடமாக மாற வேண்டுமே, தவிர கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறி விடக்கூடாது என்பதில் மக்களும், அரசும் கவனமாக இருக்க வேண்டும்.

      மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்பதோடு கல்வி நிறுவனங்களில் திரைக் கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அவர்களை நான் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

      ×