search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palm trees"

    • சாலை விஸ்தரிப்பு பணியின்போது ஏராளமான பனை மரங்கள் இடையூறாக இருந்தது.
    • பனை மரத்தை மாற்று இடத்தில் நட்ட செயல் அந்த வழியாக சென்றவர்களை வியக்க செய்தது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியா புரத்தில் இருந்து கேசவனேரி வரை சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை ஓரங்களில் விஸ்தரிப்பு பணியின்போது இடையூறாக ஏராளமான பனை மரங்கள் இருந்தது.

    இதனை பிடுங்கி அப்புறப்ப டுத்தாமல் ஒப்பந்தக்காரர்கள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு பனைமரத்தை வேருடன் எடுத்து மாற்று இடத்தில் நட்டனர். ஆங்காங்கே பனை மரங்கள் அழிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் ரோடு போடுவதற்கு இடையூறுகளாக உள்ள பனை மரத்தை அழிக்காமல் மாற்று இடத்தில் பிடுங்கி நட்ட செயல் அந்த வழியாக சென்றவர்களை வியக்க செய்தது.

    இந்த நிகழ்வில் கிரீன் கேர் மாவட்ட பசுமை குழு உறுப்பினர் சையது, வள்ளியூர் உதவி பொறியாளர் முத்து முருகன், ராதாபுரம் உதவி கோட்ட பொறியாளர் சேகர் மற்றும் ஏர்வாடி அறம் செய் பசுமை இயக்கம் சேக் முகமது, வள்ளியூர் பசுமை கரங்கள் சித்திரவேல், பணகுடி மூக்க மாணிக்கம், ரோஸ் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தற்போது தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அகரக்கட்டு பகுதியில் பனை மரங்கள் அதிக அளவு பட்டுப் போய்க் கொண்டிருக்கிறது.
    • தண்ணீர் இல்லாமல் தென்காசி மாவட்டம் மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. எனவே தென்காசி மாவட்டம் முழுவதும் வறட்சி மாவட்ட மாக அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

    தென்காசி:

    தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து மனு கொடுத்த னர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    தென்காசி மாவட்டத்தில் தற்போது மழை இல்லாத காரணத்தால் மாவட்டம் முழுவதும் பனை மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பட்டுப் போய் கொண்டு இருக்கிறது.

    குறிப்பாக 50 முதல் 60 ஆண்டு காலம் வரை வளர்க்கப்பட்ட பனை மரங்கள் கருகி வருகின்றன. பனை மரங்கள் பட்டுப்போனால் வறட்சி அதிகரிக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

    அதன்படி தற்போது தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அகரக்கட்டு பகுதியில் பனை மரங்கள் அதிக அளவு பட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் பனைத் தொழிலாளர்கள் மிகவும் வேதனையோடு இருக்கிறார்கள். மீண்டும் இந்த இடத்தில் பனை விதை வைத்து வளர்த்து பலன் தருவதற்கு சுமார் 25 ஆண்டு காலம் ஆகும்.

    அதனால் பட்டுப்போன பனை மரங்களை கணக்கெடுத்து நிவாரணமாக ஒரு பனை மரத்திற்கு ரூ.25 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மேலும் ஆறு, குளங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதனால் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் .

    சிறுதானியங்கள் விவசாயம் செய்த விவசாயிகள் பயிர்கள் கருகி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி தண்ணீர் இல்லாமல் தென்காசி மாவட்டம் மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. எனவே தென்காசி மாவட்டம் முழுவதும் வறட்சி மாவட்ட மாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது மாநில துணைத் செயலாளர் ஜாண் டேவிட், தென்காசி மாவட்ட தலைவர் ராஜ்நயினார் சாம்பவர்வடகரை கிளை செயலாளர் விஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்

    • ஏழு குளங்கள் வாயிலாக 2 ஆயிரம் ஏக்கர் நேரடி பாசனம் கிடைக்கிறது.
    • பனை மரங்களின் எண்ணிக்கை பாதிக்கும் அதிகமாக குறைந்துள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே அடுக்குத்தொடராக அமைந்துள்ள ஏழு குளங்கள் வாயிலாக 2 ஆயிரம் ஏக்கர் நேரடி பாசனமும், மறைமுகமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமும் கிடைக்கிறது. உடுமலை பகுதியிலுள்ள பழமையான பாசன திட்டங்களில் ஏழு குள பாசன திட்டமும் ஒன்றாகும்.இதில் 404 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரியகுளம் உள்ளிட்ட குளங்களில் நீர் மேலாண்மைக்காக முன்பே பல்வேறு வழிமுறைகளை பின்பற்றியுள்ளனர்.

    அவ்வகையில் குளங்களின் கரைகள், மண் அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க, பனைமரங்களை பராமரித்து வந்துள்ளனர்.இவ்வாறு ஏழு குளங்களிலும் 1,700க்கும் அதிகமான பனைமரங்கள் இருந்துள்ளன. பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் பனைமரங்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது 700க்கும் குறைவான மரங்களே உள்ளன.பனை மரங்களின் எண்ணிக்கை பாதிக்கும் அதிகமாக குறைந்துள்ளது. குப்பையை குவித்து மரங்களின் வேர் பாதிக்கும்படி தீ வைத்து எரிப்பது உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான பனை மரங்கள் கருகி விட்டன.

    தற்போதுள்ள மரங்களில் நுங்கு அறுவடை செய்ய, பொதுப்பணித்துறை சார்பில் ஏலம் விடப்படுகிறது. நடப்பாண்டு 27,900 ரூபாய்க்கு பனை மரங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. இது குறித்து பனை தொழிலாளர்கள் கூறுகையில், தற்போதுள்ள 600 பனைமரங்களில் 100 மரங்களில் மட்டுமே காய்ப்பு திறன் உள்ளது. இம்மரங்களிலும், இரவு நேரங்களில் மர்மநபர்கள் நுங்கை வெட்டி எடுத்து சென்று விடுகின்றனர். இதனால் பாதிப்பு ஏற்படுகிறது என்றனர்.பல்வேறு பலன்களை தரும் கற்பக தரு எனப்படும் பனைமரங்களை பாதுகாக்க பொதுப்பணித்துறை சார்பில் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மேலும் குளங்களின் கரைகளில் பனை விதை நடவுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    • 40 மரங்கள் வேருடன் வெட்டி சாய்க்க ப்பட்டன.
    • வெட்டப்பட்ட பனை மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது

    திருப்பூர்:

    பல்லடம் அடுத்த, மாதப்பூரை சேர்ந்தவர் வடிவேல், (42)விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகே, 80 ஆண்டுகள் பழமையான பனை மரங்கள் இருந்தன. இவருக்கும், இவரது உறவினருக்கும் இடையே வழித்தட பிரச்னையை தொடர்ந்து, 40 மரங்கள் வேருடன் வெட்டி சாய்க்க ப்பட்டன. இது குறித்து வடிவேல் அளித்த புகார் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, வெட்டப்பட்ட பனை மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அண்ணாதுரை தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, வடிவேல் மற்றும் இவரது உறவினர்கள் பங்கேற்றனர். முன்னதாக, வெட்டப்பட்ட பனை மரங்களுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பெண்கள் ஒப்பாரி வைத்தனர். 'மண்ணைக் காக்கும் பனை மரங்களை அழிக்காதே', 'பனை மரத்துக்கு அஞ்சலி' என்பது உள்ளிட்ட பல்வேறு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

    பொதுமக்கள் கூறுகையில், '80 ஆண்டுகளாக இருந்த பனை மரங்களை, வழித்தட பிரச்னைக்காக வெட்டி வீழ்த்தியுள்ளனர். இன்றைய சூழலில், பெற்ற குழந்தைகள் போல் மரங்களை வளர்க்க வேண்டியுள்ளது. வெட்ட ப்பட்ட பனை மரங்களுக்கு இணையாக மரங்கள் நட வேண்டும். மரங்களை வெட்டியவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறதுஸ என்றனர்.

    • பெரியாரிபட்டி பகுதியில் சுமார் 20 பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
    • வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    பல்லடம் :

    பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதனுக்கு பயன் தரக்கூடியது. நாளுக்கு நாள் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பனை மரங்களை வெட்ட தடை விதித்துள்ளது. மிகவும் அத்தியாவசிய தேவை கருதி வெட்ட கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு அனுமதி பெற்ற பின்பு பனை மரங்களை வெட்ட வேண்டும். இந்த நிலையில் பல்லடம் அருகே கண்டியன் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாரிபட்டி பகுதியில் சுமார் 20 பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. குறிப்பாக நீரோடையில் இருந்த பனை மரங்களும் வெட்டப்பட்டுள்ளது. அருகில் இருந்த காட்டுப் பகுதியில் சுமார் 15 பனைமரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

    இது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உரிய அனுமதியின்றி மரம் வெட்டப்பட்டது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
    • துணை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குமார் தலைமை தாங்கி, ெபாதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார்.

    இதில் பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் அளித்த மனுவில், எனது நிலத்தில் 6 பனை மரங்கள் இருந்தன. இந்நிலையில் சிலர் அந்த மரங்களை வெட்டியுள்ளனர். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பனை மரங்களை வெட்டக்கூடாது என்று அரசு வலியுறுத்துகிறது. ஆனால் அதை மீறி பனை மரங்களை வெட்டியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

    • தூரிப்பாலம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
    • கூந்தல் பனை இப்போது அதிகளவில் விற்பனை நோக்கில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் கல்லார் மற்றும் தூரிப்பாலம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் வனத்தில் இருந்து காட்டு யானை, காட்டுப்பன்றி, மான், காட்டெருமை, சிறுத்தை, குரங்கு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்கு கள் இங்குள்ள விளைநிலங்க ளுக்குள் நுழைந்து பொதும க்களையும், விவசாயி களையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன.

    கல்லாறு பகுதியில் வாழை, பாக்கு, பலாப்பழங்கள் அதிக அளவில் உள்ளதால் காட்டு யானைகள் இதனை ருசிக்க தொடர்ந்து வனத்தில் இருந்து வெளியேறி வருகின்றன.

    இதுமட்டுமல்லாமல் திருமண மண்டபங்களில் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் கூந்தல் பனை இப்போது அதிகளவில் விற்பனை நோக்கில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை யானைகள் விரும்பி சாப்பிடுவதால் யானைகள் இதே பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக நடமாடி வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் கல்லாறு பகுதியில் உள்ள தோட்டத்தில் நின்றிருந்த 100 தென்னை மரங்கள், 60 பாக்கு மரங்கள் மற்றும் ஏராளமான கூந்தல் பனை மரங்களை சேதப்படுத்தி அட்டகா–சத்தில் ஈடுபட்டுள்ளன.

    இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துள்ளனர்.

    • பனை மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நடந்தது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பனை மரங்கள், தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாக பயண குழுவினர் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தினர் விழுப்புரத்தில் பனை மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி 38 நாட்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு உள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், வைஷ்ணவி உள்பட 7 பேர் கொண்ட குழுவினர் 34-வது நாளான நேற்று ராமநாதபுரம் வந்தனர். இவர்களை த.மு.மு.க., மாநில செயலாளர் சலிமுல்லாகான் ஆலோசனையின் பேரில், நகர் தலைவர் முகமது அமீன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    தொடர்ந்து தொண்டி வழியாக புதுக்கோட்டை, திருச்சி சென்று சென்னையில் சைக்கிள் ஊர்வலத்தை நிறைவு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பனை மரங்கள், அதனை சார்ந்து உள்ள தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாக பயண குழுவினர் தெரிவித்தனர்.

    • வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஒற்றை காட்டு யானை களக்காடு அருகே சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் தஞ்சமடைந்துள்ளது.
    • விளைநிலங்களுக்குள் புகும் யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    களக்காடு:

    வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஒற்றை காட்டு யானை களக்காடு அருகே சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் தஞ்ச மடைந்துள்ளது. இந்த யானை இரவு நேரங்களில் உணவுக்காக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    நேற்று இரவில் சத்திரங்காட்டில் நுழைந்த காட்டு யானை விவசாயி சந்திரசேகருக்கு சொந்தமான விளைநிலத்தில் 3-க்கும் மேற்பட்ட பனைமரங்களை சாய்த்து அட்டகாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். யானை நடமாட்டத்தால் விளைநிலங்களுக்கு செல்ல அச்சமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    பொதுவாக களக்காடு மலையடிவாரத்தில் செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை யானைகள் நடமாட்டம் காணப்படும். தற்போது செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் யானைகள் அட்டகாசமும் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    விளைநிலங்களுக்குள் புகும் யானைகளை விரட்டவும், யானைகள் நாசம் செய்த பனை மரங்களுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 30 அடி உயரமுள்ள பனை மரங்களும் உள்ளன.
    • 4 கூலித் தொழிலாளர்களின் வீடுகளும் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்து விட்டன.

    பல்லடம் :

    பல்லடம் பனப்பாளையம் ஏ.டி. காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்தநிலையில் அங்கு சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட சுமார் 30 அடி உயரமுள்ள பனை மரங்களும் உள்ளன.

    இந்நிலையில் நேற்று வீசிய பலத்த காற்றின் காரணமாக 30 அடி உயரமுள்ள பனைமரம் ஒன்று அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்தது இதில் ரமேஷ்,சரவணகுமார்,உள்ளிட்ட 4 கூலித் தொழிலாளர்களின் வீடுகளும் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்து விட்டன.மேலும் வீட்டினுள் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன.இந்த சம்பவம் நடந்தபோது வீடுகளில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

    ×