உடுமலை ஏழு குளம், கரைகளில் பனை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஏழு குளங்கள் வாயிலாக 2 ஆயிரம் ஏக்கர் நேரடி பாசனம் கிடைக்கிறது. பனை மரங்களின் எண்ணிக்கை பாதிக்கும் அதிகமாக குறைந்துள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை :

உடுமலை அருகே அடுக்குத்தொடராக அமைந்துள்ள ஏழு குளங்கள் வாயிலாக 2 ஆயிரம் ஏக்கர் நேரடி பாசனமும், மறைமுகமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமும் கிடைக்கிறது. உடுமலை பகுதியிலுள்ள பழமையான பாசன திட்டங்களில் ஏழு குள பாசன திட்டமும் ஒன்றாகும்.இதில் 404 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரியகுளம் உள்ளிட்ட குளங்களில் நீர் மேலாண்மைக்காக முன்பே பல்வேறு வழிமுறைகளை பின்பற்றியுள்ளனர்.

அவ்வகையில் குளங்களின் கரைகள், மண் அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க, பனைமரங்களை பராமரித்து வந்துள்ளனர்.இவ்வாறு ஏழு குளங்களிலும் 1,700க்கும் அதிகமான பனைமரங்கள் இருந்துள்ளன. பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் பனைமரங்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது 700க்கும் குறைவான மரங்களே உள்ளன.பனை மரங்களின் எண்ணிக்கை பாதிக்கும் அதிகமாக குறைந்துள்ளது. குப்பையை குவித்து மரங்களின் வேர் பாதிக்கும்படி தீ வைத்து எரிப்பது உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான பனை மரங்கள் கருகி விட்டன.

தற்போதுள்ள மரங்களில் நுங்கு அறுவடை செய்ய, பொதுப்பணித்துறை சார்பில் ஏலம் விடப்படுகிறது. நடப்பாண்டு 27,900 ரூபாய்க்கு பனை மரங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. இது குறித்து பனை தொழிலாளர்கள் கூறுகையில், தற்போதுள்ள 600 பனைமரங்களில் 100 மரங்களில் மட்டுமே காய்ப்பு திறன் உள்ளது. இம்மரங்களிலும், இரவு நேரங்களில் மர்மநபர்கள் நுங்கை வெட்டி எடுத்து சென்று விடுகின்றனர். இதனால் பாதிப்பு ஏற்படுகிறது என்றனர்.பல்வேறு பலன்களை தரும் கற்பக தரு எனப்படும் பனைமரங்களை பாதுகாக்க பொதுப்பணித்துறை சார்பில் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மேலும் குளங்களின் கரைகளில் பனை விதை நடவுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com