என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கரஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
    • அணையில் தற்போது 85.58 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 11 ஆயிரத்து 736 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 10 ஆயிரத்து 706 கனஅடியாக குறைந்தது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    அணையில் தற்போது 85.58 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • போலீசார் ஆத்துக்குறிச்சி கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள ஒவ்வொரு வீடாக சல்லடைப்போட்டு தேடினார்கள்.
    • சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 36). இவருடைய மனைவி ரம்யா. இவர்களது 3 வயது ஆண் குழந்தை சஞ்சய். அங்குள்ள அங்கன்வாடிக்கு சென்று வந்தான்.

    இவர்களின் எதிர்வீட்டில் வசிப்பவர் தங்கம்மாள்(49). இந்த 2 குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே குழாயில் தண்ணீர் பிடிப்பது உள்ளிட்டவை தொடர்பாக சிறிய, சிறிய தகராறுகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று காலையில் சஞ்சய் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்தான். பின்னர் பெற்றோர் தங்களது குழந்தையை அங்கன்வாடிக்கு அழைத்து செல்வதற்காக தேடினார்கள். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து விக்னேஷ் ராதாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில், போலீசார் ஆத்துக்குறிச்சி கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்குள்ள ஒவ்வொரு வீடாக சல்லடைப்போட்டு தேடினார்கள்.

    அப்போது, தங்கம்மாள் வீட்டிற்குள் போலீசார் நுழைந்தனர். அதை அறிந்த அவர் தனது வீட்டின் பின்பக்கமாக தப்பி ஓடினார். உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை பிடித்தனர்.

    பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், வாஷிங் மெஷினை திறந்து பார்த்தனர்.

    அதில் சாக்கு மூட்டையில் கட்டி இருந்த சஞ்சயை பிணமாக மீட்டனர். அவனது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி துடித்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தங்கம்மாளின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த விபத்தில் இறந்துவிட்டார். இதனால் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. தங்கம்மாள் மகனின் துக்க நிகழ்ச்சிக்கு விக்னேஷ் குடும்பத்தினர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் தனது மகன் இறந்ததற்கு விக்னேஷ் குடும்பத்தினர் செய்வினை வைத்ததே காரணம் என்றும், இதனால் அவரது குடும்பத்தினரை பழிவாங்க தங்கம்மாள் காத்துக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    நேற்று காலையில் தங்கம்மாள் வீட்டின் முன் சஞ்சய் விளையாடிக் கொண்டு இருந்தான். அவனை வீட்டிற்கு அழைத்து சென்ற தங்கம்மாள் ஒரு சாக்கு மூட்டையில் போட்டு கட்டினார். பின்னர் வாஷிங் மெஷினில் போட்டு மூடியைக்கொண்டு மூடினார். இதில் மூச்சுத்திணறிய குழந்தை பரிதாபமாக இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த படுகொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தங்கம்மாளை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ராதாபுரம் அருகே சாக்குமூட்டையில் கட்டி வாஷிங் மெஷினில் போட்டு மூடி 3 வயது குழந்தை படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • சிலையை எடுத்துச்சென்று அருகில் உள்ள கண்மாயில் கரைத்தனர்.
    • சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலம் விடப்பட்டது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதூர்த்தியை யொட்டி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் விநாயகர் கையில் லட்டு வைத்து பூஜைகள் நடந்தன. நேற்று இந்த சிலையை எடுத்துச்சென்று அருகில் உள்ள கண்மாயில் கரைத்தனர்.

    முன்னதாக சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அதே ஊரை சேர்ந்த மூக்கன் (வயது 45) என்பவர், ஒரு லட்டை ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.

    இதனால் ஆச்சரியம் அடைந்த கிராம மக்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்படும் லட்டு ஏலம் விடப்படும் எனவும், இந்த ஆண்டு ஏலம் எடுத்த மூக்கனுக்கு அடுத்த ஆண்டு 1 பவுன் தங்க மோதிரம், 10 வேட்டி, சட்டை, 5 சேலைகள் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

    லட்டை ஏலம் எடுத்த மூக்கன் வெளியூரில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறாராம்.

    • 2 ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் இந்த தொழிற்சாலை மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
    • ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்.பி. நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனம் ஜேபிஎல்.

    தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிராஸ்சிஸ்கோவில் 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அதன்பின் சிகாகோ சென்றார். அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிலையில் ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்.பி. நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜே.பி.எல். (JABIL) நிறுவனத்தின் தொழிற்சாலை திருச்சியில் அமையும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் இந்த தொழிற்சாலை மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    முன்னதாக,

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில், லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம் வெல்டிங் பொருட்கள், ஆர்க் வெல்டிங் உபகரணங்கள், வெல்டிங் பாகங்கள், பிளாஸ்மா மற்றும் ஆக்ஸி-எரிபொருள் வெட்டும் உபகரணங்கள், ரோபோடிக் வெல்டிங் பொருட்களின் உலகளாவிய உற்பத்தி நிறுவனம் ஆகும். இது பார்ச்சூன் 1000 நிறுவனங்களில் ஒன்றாகும்.

    இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் யூக்லிட்டில் அமைந்துள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    விஷய் பிரிஷிஷன் நிறுவனமானது செமிகண்டக்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களின் உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் இஸ்ரேல், ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டு உள்ளது, அங்கு ரெக்டி பையர்கள், டையோட்கள், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், மின்தடையங்கள், மின் தேக்கிகள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்க நாட்டின், பென்சில்வேனியாவின் மால்வெர்னில் அமைந்து உள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், விஷய் பிரிஷிஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 100 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டி யூசர்ஸ்உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இச்சந்திப்பின்போது, விஷய் பிரிஷிணன் நிறுவனத்தின் ஷிர்வர் ஸ்டீபன், சென்னையில் அமைந்துள்ள தங்கள் தயாரிப்பு நிறுவனத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும், இதன்மூலம் அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், தங்கள் நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

    விஸ்டியன் நிறுவனமானது போர்டு மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். அமெரிக்க நாட்டின் மிச்சிகனில் உள்ள வான் ப்யூரன் டவுன் ஷிப்பைத் தலைமையிடமாகக் கொண்டு, 17 நாடுகளில் இயங்கி வருகிறது.

    இது வாகனங்களின் காக்பிட் அனுபவத்தை மேம்படுத்தும் மின்னணு தயாரிப்புகளை வடிவமைத்தல் மற்றும் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது.

    இந்நிறுவனம் மெக்சிகோ, பிரேசில், அர்ஜென்டினா, போர்ச்சுகல், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்லோ வாக்கியா, ருமேனியா, பல்கேரியா, ஹங்கேரி, துனிசியா, இந்தியா, சீனா, தாய்லாந்து, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உற்பத்தி மற்றும் பொறியியல் மையங்களை கொண்டுள்ளது. போர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ், பி.எம்.டபிள்யூ. போன்ற உலகின் பெரும் வாகன உற்பத்தியாளர்களுக்கு வாகன மின்னனுவியல் பாகங்களை தயாரித்து அளித்து வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், விஸ்டியன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 250 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

    • சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என்ற சமீபத்திய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பிரதமர் மோடி எடுத்து சென்றுள்ளார்.

    சென்னை:

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது 'எக்ஸ்' சமூகவலைதள பக்கத்தில் பதிவில் கூறியிருப்பதாவது:-

    எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தி திணிப்பு தொடர்பாக நடைமுறையில் இல்லாத விஷயங்களை கூறுகிறார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உருவாக்கிய முதல் தேசிய கல்விக் கொள்கையில், அனைத்து இந்தியர்களுக்கும் இந்தி கட்டாயம் என கூறப்பட்டது. 2-வதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உருவாக்கி தேசியக் கல்விக் கொள்கையில் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான மொழியாக இந்தியை உருவாக்கும் வகையில், அதை கற்கவும், பயன்படுத்தவும் ஊக்க அளிக்கப்பட்டது.

    ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ல், தாய் மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நாட்டின் அனைத்து மக்கள் மீதும் இந்தியை திணித்தது யார்? பிரதமர் மோடியா அல்லது காங்கிரஸ் கட்சியா?.

    பிரதமர் மோடி தாய் மொழிக்கு என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பலாம். என்னுடைய தாய் மொழி தமிழ் மொழிக்கு பிரதமர் மோடி பல்வேறு பெருமைகளை சேர்த்துள்ளார். ஐ.நா. சபையில் முதல் முறையாக தமிழ் மொழியில் பேசிய பிரதமர் என்ற பெயரை பெற்றவர் மோடி. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என ஐ.நா சபையில் உரையாற்றினார். மேலும், பாரதியாரின் நினைவாக அவரது பிறந்த நாள், டிசம்பர் 11-ந்தேதியை தேசிய மொழிகள் தினமாக அறிவித்தார்.

    காசி தமிழ் சங்கம் மற்றும் சவுராஷ்டிர தமிழ் சங்கம் ஆகிய இரண்டு கலாச்சாரங்களின் சங்கமத்தை உருவாக்கினார். திருக்குறளை குறைந்தது 100 மொழிகளில் வெளியிட வேண்டும் என்ற லட்சியத்தின் ஒரு பகுதியாக 13 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார். செங்கோலை பாராளுமன்றத்தில் நிறுவினார். முன்பு எப்போதும் இல்லாத வகையில், தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பிரதமர் மோடி எடுத்து சென்றுள்ளார்.

    தமிழ் மொழியின் செம்மொழி அந்தஸ்தை மேம்படுத்துவதற்காக, ரூ.24 கோடி செலவில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் (CICT) புதிய வளாகத்தை நமது பிரதமர் திறந்து வைத்தார். வட இலங்கையில் தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பாதுகாக்க, நமது பிரதமர் அவர்கள் ரூ.120 கோடியில் யாழ்ப்பாணக் கலாச்சார மையத்தை நிர்மாணிக்க அனுமதித்தார்.

    நமது பிரதமர் 2023ம் ஆண்டு ஜூலை மாதம் தனது சுற்றுப்பயணத்தின்போது பிரான்சின் செர்ஜி நகரில் புனித திருவள்ளுவருக்கு ஒரு சிலையை அறிவித்தார், அது டிசம்பர் 2023 இல் நிறுவப்பட்டது. சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என்ற சமீபத்திய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி பிராந்திய மொழிகளை வளர்க்க மேற்கொண்ட நடவடிக்கைகளில் 10 சதவீதம் கூட காங்கிரஸ் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொது இடங்களில் 'நோ பார்க்கிங்' பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் அமைக்கக் கூடாது.
    • கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    சென்னை:

    சென்னையில் மோட்டார் வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் 'நோ பார்க்கிங்' பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் அமைக்கக் கூடாது என தனியார் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சென்னையில் வீடுகளின் முன் அனுமதியின்றி 'நோ பார்க்கிங் ' போர்டுகள், தடுப்புகளை வைத்திருப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்த விதிமுறைகளை பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையதளம் வழியே வெளியிடவும் காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னையில் பல வீடுகளின் முன் அனுமதியின்றி வைத்துள்ள நோ பார்க்கிங் போர்டுகள், பூந்தொட்டிகளையும் அகற்ற கோரி நந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
    • அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    • பெண்ணுக்கு தான் தாய், தந்தை எங்கு இருந்தாலும், எங்கு போனாலும் பாசம்.
    • நாமும் பாசமாக இருந்தால் குடும்பம் மட்டுமல்ல, நாடும் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 1-ந்தேதி முப்பெரும் விழா நடந்தது.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    போன ஜென்மத்தில் நிறைய பாவம் செய்திருந்தால் மகன்களாகவே பிறப்பார்கள், யாராவது புண்ணியம் செய்து இருந்தால் பெண் குழந்தைகள் பிறக்கும்.

    பெண்ணுக்கு தான் தாய், தந்தை எங்கு இருந்தாலும், எங்கு போனாலும் பாசம்.

    இதை பொதுவாக கூறுகிறேன், தப்பாக கூறவில்லை, இது இயல்பு.

    இதை நாம், நானும் மாற்றிக்கொள்ள வேண்டும் . நாமும் பாசமாக இருந்தால் குடும்பம் மட்டுமல்ல, நாடும் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

    அரசு பள்ளியில் கடந்த கால ஜென்மம் குறித்து பேசிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்காந்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற விழாவில் பேசிய பேச்சு மீண்டும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வேர்களையும் விழுதுகளையும் போற்றி மேருமலையென உயர்ந்து நிற்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
    • மு.க.ஸ்டாலின் விருது தஞ்சை எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் வழங்கப்படுகிறது.

    திமுக முப்பெரும் விருது வழங்கும் விழாவில் நடப்பாண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் புதிய விருது வழங்க உள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

    திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேர்களையும் விழுதுகளையும் போற்றி மேருமலையென உயர்ந்து நிற்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். உயர்விலும் தாழ்விலும் தோளோடு தோள் நின்று கழகம் காத்த தீரர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி நன்றியின் அடையாளத்தைக் காட்டும் செயலை தலைவர் கலைஞர் அவர்கள் 1985-ம் ஆண்டு முதல் துவக்கி வைத்தார்கள்.

    பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் பெயரிலான விருதுகள் கழகக் காப்பாளர்களுக்கு 1985 முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2008-ம் ஆண்டு முதல் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் விருதும், 2018-ம் ஆண்டு முதல் இனமானப் பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

    திராவிட முன்னேற்றக் கழகம் தனது 75-வது ஆண்டு பவளவிழாவைக் கொண்டாடும் சிறப்புமிகு காலத்தில் கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சியில் அமரவைத்து இந்தியாவே போற்றிவரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவரும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரிலான பெருமைமிகு விருதை இந்த ஆண்டு முதல் வழங்குவதில் தலைமைக் கழகம் பெருமை அடைகிறது.

    இந்த ஆண்டுக்கான "மு.க.ஸ்டாலின் விருது" தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
    • மகாவிஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

    கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.

    இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து இரு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவமதித்தல், வதந்திகள், பொய்யான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

    செப்டம்பர் 20 ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் மகாவிஷ்ணுவை ஐந்து நாட்கள் விசாரிக்க அனுமதி அளிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    முன்னதாக இந்த விவகாரம் குறித்து விசாாரணை நடத்தி வரும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அசோக் நகர் அரசு பள்ளியில் ஆசிரியர்களிடம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர். இதோடு, அந்த பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசியிடம் கண்ணப்பன் தொலைபேசியில் விசாரணை நடத்தினார்.

    அப்போது, "மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யார்? அனுமதி வழங்கியது யார்?" என்ற இரண்டு கேள்விகளுக்கும் நாளைக்குள் எழுத்துப்பூர்வமான பதில் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

    • ஒருவர் இறந்துவிட்டால், அவர்களது உறவினர்கள் அளிக்கும் படிவம் 7ன் அடிப்படையில் பெயர் நீக்கப்படும்.
    • முகவரி மாற்றம் என்பது, வாக்குச்சாவடி அலுவர்களின் கள ஆய்வின்போது கண்டறியப்படுகிறது.

    வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை தன்னிச்சையாக நீக்க முடியாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் புகாருக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

    வாக்களார் பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்கான பெயர்களை தேர்தல் துறையால் தன்னிச்சையாக நீக்கப்பட்டதாக ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார்.

    இதற்கு, விளக்கம் அளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறுகையில், "சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் விளக்கம் கேட்ட பிறகுதான் பெயர்கள் நீக்கப்படுகிறது. முகவரி மாற்றம், மரணம் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே பெயர்கள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த நடவடிக்கைகளுக்கு சுமார் 2 வார காலம் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகே, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுகிறது.

    ஒருவர் இறந்துவிட்டால், அவர்களது உறவினர்கள் அளிக்கும் படிவம் 7ன் அடிப்படையில் பெயர் நீக்கப்படும். வீடுகளில் வாக்காளர்கள் இல்லாமல் இருப்பது, ஒவ்வொரு முறையும் வாக்குச்சாவடி அலுவலர்களால் உறுதி செய்யப்படுகிறது.

    முகவரி மாற்றம் என்பது, வாக்குச்சாவடி அலுவர்களின் கள ஆய்வின்போது கண்டறியப்படுகிறது" என்றார்.

    ×