என் மலர்
உள்ளூர் செய்திகள்
- யார் சார் நீங்க... என்று கேட்ட போலீசாரை அந்த ஜோடி தரக்குறைவாக பேசினர்.
- நாளை காலையில உன் அட்ரஸ் எல்லாம் எடுத்து விடுவேன். ஒருத்தன் இருக்க மாட்டீங்க.
சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி தரக்குறைவாக பேசி உள்ளனர். அவர்களை கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்ததற்கு, அந்த ஜோடி கடுமையாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
உதயநிதி ஸ்டாலினை இப்போவே கூப்பிடுவேன்... பார்க்கிறாயா? என துணை முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டினார். அத்துடன் நிற்காமல் போலீசாரை கைகாட்டி மிரட்டி, அநாகரீகமாகவும் அந்த நபர் பேசினார்.
யார் சார் நீங்க... என்று கேட்ட போலீசாரை அந்த ஜோடி தரக்குறைவாக பேசினர்.
கைது செய்வோம் என்று போலீசார் கூறியதற்கு, அதற்கு அந்த நபர், இவன் எல்லாம் அள்ளக்கை. அரெஸ்ட் பண்ண போறீயா... முடிந்தால் பண்ணுடா...
போய் உன் ஆளை கூட்டிட்டு வா... இன்ஸ்பெக்டரை கூட்டிக்கொண்டு வா...
நாளை காலையில உன் அட்ரஸ் எல்லாம் எடுத்து விடுவேன். ஒருத்தன் இருக்க மாட்டீங்க என்று கெட்ட வார்த்தைகளில் வசைபாடினார். மேலும் அந்த நபர், போலீசாரின் போனை பிடுங்க வேண்டும் என்றும் சொல்கிறார்.
அதற்கு அந்த பெண் இவன் எல்லாம் ஒரு ஆளு இவனை போய்... என்று சொல்லும் வீடியோ வைரலாகி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த ஜோடி கணவன் மனைவி இல்லையென தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார்.
- சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக பூபாலன் கூறியிருந்தார்
நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர்.
நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார்.
நாம் தமிழரில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என்னுடைய இஷ்டப்படித்தான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக பூபாலன் கூறியிருந்தார்
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 2 மாவட்ட பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாநாட்டு பணிகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு திடலில் தங்கி இருந்து பார்வையிட்டு வருகிறார்.
- ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு- பகலாக மாநாட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை:
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாடு வருகிற 27-ந் தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்ற இடத்தில் நடைபெறுகிறது.
இதையொட்டி 85 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாடு நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டு நடைபெற சில தினங்களே இருப்பதால் மேடை அமைப்பு பணிகள், உணவு கூடங்கள், வாகனம் நிறுத்தும் இடங்கள், குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி கள் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை அடைந்து உள்ளது.
மாநாடு நடைபெறும் பகுதியில் திடீரென மழை பெய்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மணல் பரப்பில் ஜல்லி கற்கள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு நிலப்பரப்பின் உயரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு பணிகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு திடலில் தங்கி இருந்து பார்வையிட்டு வருகிறார்.
மாநாட்டு திடலுக்கு விஜய் வந்ததும் தொண்டர்களை நோக்கி சிறிது தூரம் நடந்து சென்று உற்சாகப்படுத்துகிறார்.
இதையொட்டி 800 மீட்டர் நீளத்துக்கு மாநாட்டு மேடையுடன் சிறப்பு பிரமாண்ட நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதால் ஏற்கனவே 4 வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
தொண்டர்களின் எண்ணிக்கை அதிகமாவதை தொடர்ந்து கூடுதலாக மாநாடு திடல் அருகே ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு என மொத்தம் 225 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
வாகனம் நிறுத்தும் இடங்கள் அனைத்திலும் மின் விளக்கு, குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மாநாடு வளாகத்தை சுற்றிலும் 20 ஆயிரம் மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாநாடு பந்தலை சுற்றிலும் ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட உள்ளன.
சுமார் 1000 பேர் அமரும் வகையில் மாநாடு மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. மாநாடு பந்தலில் சுமார் 75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட இருக்கிறது.
மாநாடு பாதுகாப்பில் போலீசாருடன் இணைந்து துபாயில் இருந்து வந்துள்ள சிறப்பு தனியார் பாதுகாப்பு படையினர் ஈடுபட இருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்பு காரணங்களுக்காக மாநாடு திடல் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது.
திடலுக்கு வரும் பணியாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என யார் வந்தாலும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாநாட்டுக்கு விஜய் வருவதற்காக சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டு அவரது பாதுகாப்புக்கு என்று சிறப்பு தனிக்குழுவை துபாய் பாதுகாப்பு படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மாநாடு பணிகள் பற்றி கட்சி தலைவர் விஜய், மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு மாநாடு பணியை வேகப்படுத்தி வருகிறார்.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு- பகலாக மாநாட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் 2 நாட்களில் மாநாடு பந்தல் பணிகள் உள்பட அனைத்து பணிகளும் நிறைவு பெற இருக்கிறது.
- காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
- மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
மேலும் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் நேற்று தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று 9-வது மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
- இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவ்யூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.
யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும்போது, துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்தார். இர்பான், தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தார்.
பாலினத்தை அறிவித்தது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய இருந்த நிலையில், மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தவறு. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- டெல்டா மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அங்கு தண்ணீர் தேவை குறைந்து உள்ளது.
- மேட்டூர் அணையில் தற்போது 62.14 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
மேலும் டெல்டா மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் அங்கு தண்ணீர் தேவை குறைந்து உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வந்த தண்ணீரும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு விடிய விடிய தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று வினாடிக்கு 15 ஆயிரத்து 929 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 18 ஆயிரத்து 94 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. இதே போல் காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.89 அடியாக உயர்ந்தது. அணையில் தற்போது 62.14 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர்!
- மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீர வணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளைப் பாதுகாப்பவர்கள் காவல்துறையினர்!
தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர்!
அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீர வணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.
மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீர வணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.
- மைதானம் சரி செய்யும் பணியினையும் தொடங்கி வைத்தார்.
- தியாகி கொடிகால் ஷேக் அப்துல்லாவை சந்தித்து நலம் விசாரித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மைதானத்தை சீரமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
அதாவது பல ஊர் மற்றும் ஊர் மக்களின் தேவைகளுக்காக சொந்த செலவில் JCB எந்திரம் ஒன்றினை இயக்கி வந்தனர்.
அவர்களுக்கு விஜய் வசந்த் எம்பி தனது சொந்த செலவில் JCB எந்திரம் ஒன்றை வாங்கி மக்களின் தேவைகளுக்காக வழங்கி அர்பணித்துள்ளார்.

மேலும் கோணம் அரசு கல்லூரியில் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க மைதானம் சரி செய்யும் பணியினையும் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து எல்லைப் போராட்ட தியாகி கொடிகால் ஷேக் அப்துல்லா குந்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த விஜய் வசந்த் எம்பி அவரையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
- வெண்ணமலையில் பொதுமக்களை சீமான் சந்திக்க இருக்கிறார்.
- சீமான் தங்கியிருக்கும் ஓட்டல் முன் போலீசார் குவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதம்.
வெண்ணமலை கோவில் நில பிரச்சனை சம்பந்தமாக மக்களை சந்திக்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்தார். இதற்கான கரூர் சென்ற அவர் ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இந்த ஓட்டல் முன் திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்களை சீமான் சந்திப்பதை தடுத்து நிறுத்துவதற்காக போலீசார் குவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த தகவல் அறிந்ததும் சீமான் தங்கியுள்ள ஓட்டல் முன்பு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குவியத் தொடங்கினர். சீமானை இவர்கள் சந்திக்க சென்றதையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே வாக்குவாத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் பால சுப்ரமணிய திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள், கோவிலுக்கு சொந்தமான இடங்கள் எனக்கூறி அதனை மீட்கும் நடவடிக்கைகளில் அறிநிலைத்துறை ஈடுபட்டுள்ளது. இதன் தொடர்பாக வீடுகள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் கடந்த மாதம் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வியாபாரிகளை சந்திப்பதற்காக சீமான் கரூர் சென்றுள்ளார். சீமானை சந்திக்க பொதுமக்களும் கூடியிருந்தனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் கூடியிருந்தனர். இந்த நிலையில்தான் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- சென்னையில் இருந்து 11,176 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
- இந்த ஆண்டு தாம்பரத்தில் இருந்து பஸ்கள் புறப்படாது.
சென்னை:
தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட வசதியாக தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை கிடைப்பதால் வெளியூர் பயணம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டு இருப்பதால் இந்த ஆண்டு சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட செல்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.
தீபாவளிக்கு இன்னும் 9 நாட்களே இருப்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து இன்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்குவது மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன், 4,900 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 11,176 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 2,910 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 14,086 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிற நவம்பர் 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரையில் தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 3,165 சிறப்பு பஸ்களும் 3 நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,441 பஸ்கள் ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,165 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 12,606 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
மேலும் பஸ் நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பஸ் மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு வசதியினை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும்.
பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மேற்கூறிய 2 பஸ் நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இணைப்பு பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.
சென்னையில் இருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 28-ந்தேதி வழக்கமாக செல்லும் 2092 பஸ்களுடன் 700 சிறப்பு பஸ்களும் 29-ந் தேதி 2125 சிறப்பு பஸ்களும், 30-ந்தேதி 2075 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. 3 நாட்களும் 6,276 வழக்கமான பஸ்களும் 4,900 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 7 முன்பதிவு மையங்கள் கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்கள் செயல்படும்.
கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.
கோயம்பேட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.
மாதவரத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அரசு பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக 94450 14436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151, 044-24749002, 044-26260445, 044-26281611 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இது தவிர பயணிகள் நலன் கருதி கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.
கூடுதலாக பஸ் தேவைப்பட்டால் தனியார் பஸ்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். அரசு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் அவை இயக்கப்படும்.
ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் உரிமையாளர்களுடன் 24-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
கடந்த ஆண்டை விட இந்த வருடம் கூடுதலாக மக்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் 5.50 லட்சம் பேர் பயணம் செய்தனர். இந்த ஆண்டு 5.83 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்கு வரத்து துறை ஆணையர் போலீஸ் உயர் அதிகாரிகள் அரசு அலுவலர்கள், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை.
- திருமாவளவனை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இந்து அறநிலை துறை சார்பாக 3 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை. எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண ஆரம்பித்துவிட்டார். வேறு வேலையில்லாததால். தி.மு.க. கூட்டணியை அவர் உடைக்கவும் முடியாது, கொளுத்தவும் முடியாது, பிரிக்கவும் முடியாது, நசுக்கவும் முடியாது.
இது அனைத்தும் அவர் சார்ந்திருக்கக்கூடிய கட்சிக்கு வேண்டுமென்றால் ஏற்படுமே தவிர, தி.மு.க.வுக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் எந்த ஒரு சிறு பாதிப்பும் ஏற்படாது. தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்பது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்தாக இருக்கலாம்.
தமிழ் தாய் வாழ்த்து என்பது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை மக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவராலும் பாடப்பட்டு வருகிறது. சீமான் அதில் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். தமிழ்நாடு, திராவிடம் இதை இரண்டையும் தமிழ் மண்ணில் இருந்து பிரிக்க முடியாத சொற்கள்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் திராவிடம் என்ற பெயரோடு தான் இருக்கிறது. இங்கு உள்ள கட்சிகள் திராவிடம் சார்ந்த கட்சிகள் தானே தவிர திராவிடம் சாராத கட்சிகள் இல்லை. யாரும் கட்சி ஆரம்பித்தால் கூட திராவிடம் சார்ந்து தான் கட்சியை ஆரம்பிக்கின்றனர். திராவிடம் என்பது தமிழ் மண்ணிலே ஊறிப்போன ஒன்று. அதை திராவிட கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் முன்னெடுத்துச் செல்லும்.
ஒரு இயக்கத்தை நாங்கள் அழிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அந்த இயக்கத்தின் தலைமை பலவீனமாக இருந்துவிட்டால் அந்த இயக்கம் தானாகவே அழிந்து விடும். இன்று எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை பலவீனமாக உள்ளது. அதனுடைய எடுத்துக்காட்டு தான் இந்த குழப்பம்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை. நம்பிக்கைக்குரிய இணையாக அ.தி.மு.க.வை ஏற்றுக்கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை. அவரும் என்னென்னமோ எண்ணி வலைவீசி பார்க்கிறார். யாரும் அவர் பக்கம் செல்வதற்கு தயாராக இல்லை. அவரை திரும்பி கூட பார்க்கவில்லை. அதுதான் உண்மை.
சீமான் கற்பனையில் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகலாம். ஏதாவது குட்டி கலாட்டா செய்ய வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். திருமாவளவனை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார். தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் அரசு அமைவதில் அவர் உறுதியோடு இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், முத்துராஜா எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் தவ. பாஞ்சாலன், மாமன்ற உறுப்பினர் கனக அம்மன் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
- பட்டாசு உற்பத்திக்கு பெயர் போன சிவகாசியில், 2500-க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன
- சிவகாசியில் விதவிதமான பேன்சி பட்டாசுகள் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
சிவகாசி:
தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தற்போதே அதற்கான பரபரப்புகள் ஆரம்பமாகி விட்டன. புத்தாடைகள் வாங்க தமிழகத்தின் ஒவ்வொரு நகரத்திலும், மக்கள் ஜவுளிக்கடைகளை மொய்த்து வருகின்றனர். இதனால், சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், ஏனைய ஊர்களிலும் கடை வீதிகள் திருவிழா கோலம் பூண்டுள்ளன.
தீபாவளி என்றாலே பட்டாசு தான். குழந்தைகள் மட்டுமல்லாமல், இளைஞர்களும், பெரியவர்களும் பட்டாசு மற்றும் மத்தாப்பு வெடித்து மகிழாதவர்களே இருக்க மாட்டார்கள். தற்போது சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், பட்டாசுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பட்டாசு உற்பத்திக்கு பெயர் போன சிவகாசியில், 2500-க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் சிவகாசி, திருத்தங்கல் பகுதிகள், சாத்தூர், விருதுநகர் சாலை, சங்கரன்கோவில் சாலைகளில் அதிகளவிலான பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன. பட்டாசு நிறுவனங்களின் நேரடி விற்பனை கடைகளும் ஏராளமாக உள்ளது.
இதனால் சிவகாசியில் பட்டாசுகளின் விலை ஓரளவு குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பட்டாசு பிரியர்கள் குவிந்து வருகின்றனர். பட்டாசு விற்பனை கடைகளில் அனைத்து விதமான பட்டாசு ரகங்கள், மத்தாப்பு வகைகள், நவீன ரக வெடிகள், வாண வெடிகள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட வகையிலான பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் விதவிதமான பேன்சி பட்டாசுகள் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதே போல், பட்டாசு தயாரிப்பு விதிமுறைகள் காரணமாகவும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணம் போன்றவற்றால் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இதைக் கருத்தில் கொண்டு, பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படும் சிவகாசிக்கு வெளி மாவட்டம் மற்றும் இன்றி, அண்டை மாநில மக்களும் நேரடியாக வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் விலை குறைவு, 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை மற்றும் வெடித்துப் பார்த்து வாங்கலாம் என்பதே இவர்களின் வருகைக்கு முக்கிய காரணம். இதனால் சிவகாசியின் ஒவ்வொரு பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதுகுறித்து, பட்டாசு மொத்த விற்பனனயாளர் ஒருவர் கூறுகையில், தொடக்கத்தில் ஆர்டர்கள் குறைவாக வந்தாலும், தற்போது நவராத்திரி விழாவைத் தொடர்ந்து விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் நேரடியாக சிவகாசி வந்து தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.
இன்னும் தீபாவளிக்கு 10 நாட்களே உள்ளதால், வார இறுதி நாட்களான வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.






