என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சுற்றி திரியும் நாய் ஒன்று காவல் உதவி மையத்திற்குள் இருந்தது.
- நாயின் சத்ததால் அவ்வழியே சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் சுரங்க பாதை அருகே காவல் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே சுற்றி திரியும் நாய் ஒன்று காவல் உதவி மையத்திற்குள் இருந்தது. இதனை கவனிக்காமல் போலீசார் அந்த உதவி மையத்தை பூட்டி சென்று விட்டனர். இதனால் பயந்து போன அந்த நாய் இன்று காலை வரை விடிய, விடிய குரைத்தது. நாயின் சத்ததால் அவ்வழியே சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனுமதி இல்லை என்ற நாடகத்தை இனியாவது முதலமைச்சர் கைவிடவேண்டும்.
- கூல் லிப் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து கர்நாடகா வழியாக தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆந்திரா, பீகார், ஒடிசா மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது. ஜார்கண்ட், மகாராஷ்டிராவில் நடத்தப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடத்தும் நாடகம் அம்பலமாகி தி.மு.க. சொல்லும் சமூகநீதி என்ற முகமூடி கிழிந்துள்ளது. பொய்கள் மூலம் அரசு மக்களை ஏமாற்ற முடியாது. தெலுங்காவின் சாதிவாரி கணக்கெடுப்பு இம்மாதத்தின் இறுதியில் முடிகிறது. இப்பணிக்கு ரூ 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ரூ.250 கோடியில் 2 மாதத்தில் நடத்திமுடிக்கலாம். தெலுங்கானா காங்கிரஸ் அரசிடம் தி.மு.க. பாடம் கற்க வேண்டும். ஸ்டாலினின் முகமூடியை ராகுல்காந்தியும், ரேவன் ரெட்டியும் கழட்டியுள்ளனர். இதுவே தேசிய அளவில் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்புக்கு முன் மாதிரியாக இருக்கும் என்று தெலுங்கானா முதல்வர் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனுமதி இல்லை என்ற நாடகத்தை இனியாவது முதலமைச்சர் கைவிடவேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்பவேண்டும். 40 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதை மாற்றப்படவேண்டும். மருத்துவத்துறைக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்படுகிறது. இதுவே பணியிடங்களை நிரப்பாததற்கு காரணம். ரூ. 40 ஆயிரம் கோடியை வரும் ஆண்டில் நிதி ஒதுக்கவேண்டும்.
கூல் லிப் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் புகையிலை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து கர்நாடகா வழியாக தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது. நீதிமன்றம் இந்த புகையிலைக்கு மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளது. எனவே மத்திய அரசு இப்புகையிலையை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் 2500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் கற்றல் பணி பாதிக்கப்படுகிறது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நூற்பாவிற்கும், அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த நன்னூல் சூத்திரம் முழுமையாக யாருக்கும் புரியாததால் அதை முழுமையாக பதிவிட்டேன். இந்த நன்னூல் நூற்பாவின் விளக்கம் என்னவெனில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது தவறில்லை. உதாரணமாக மரத்தில் கொழுந்தாக உள்ள இலை பின் பழுத்து விழுந்தால் அது தவறில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஏன் பயப்படுகிறார் என தெரியவில்லை. கோட்டைக்கு போகாத நான் கோட்டைக்கு சென்று இக்கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினேன். இக்கணக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலினை பாராட்டுவேன். நாகரீகமாகவும், நளினமாகவும் எங்கள் செயல்பாடுகள் உள்ளது. காவல்துறையில் கருணாநிதி கூறியது போல ஈரல் மட்டுமல்ல இதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் செயலிழந்துவிட்டது. பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக சென்ற மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் உள்ளிட்டோர்மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் ஏமாளிகள். பொறுத்து பொறுத்து பார்க்கிறோம்.
சிறைக்கு செல்வது எங்களுக்கு புதிது அல்ல. அமைதியை குலைக்க நாங்கள் விரும்பவில்லை. நூற்றுக்கு மேற்பட்ட அம்பேத்கர் சிலையை நான் திறந்து வைத்தேன். அச்சிலையை சேதப்படுத்தினால் பா.ம.க., வன்னியர் சங்கம்தான் குரல் கொடுக்கும். கடலூர் காவல்துறைக்கு கற்பனை அதிகம். ஒரு சார்பு இல்லாமல் விருப்பு, வெறுப்பு இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். என்ன நடவடிக்கை எடுத்தாலும் எங்களை அடக்க முடியாது. நாங்கள் நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். கருணாநிதிதமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்பார். அதையே நானும் சொல்கிறேன்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளதால் அப்போது பொதுக்குழுகூடி கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுமானால் இந்நூற்பா பொருந்தலாம். பிராமிணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் முதலில் நான் தான் அவர்களுக்கு ஆதரவாக நிற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வன்னியர் சங்கத்தலைவர் பு. தா. அருள்மொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து உள்ளது.
- கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பால், தயிர் விற்பனை விலையை சொற்ப அளவில் மட்டும் குறைந்திருந்தனர்.
சென்னை:
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பால் கொள்முதலில் எந்த ஒரு விலை உயர்வோ, பால் உற்பத்தியில் பாதிப்போ, தட்டுப்பாடோ இல்லாத சூழலில் தமிழகத்தின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா, பால், தயிர் விற்பனை விலையை நாளை (வெள்ளிக்கிழமை) காலை முதல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக அந்நிறுவனம் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து உள்ளது.
அதன்படி நிறை கொழுப்பு பால் 500 மி.லி. பாக்கெட் ரூ.36-ல் இருந்து 37 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.65-ல் இருந்து 67 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மி.லி. பாக்கெட் ரூ.31-ல் இருந்து 32 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.58-ல் இருந்து 60 ஆகவும், 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30-ல் இருந்து 32 ஆகவும், 500 கிராம் தயிர் ரூ.37-ல் இருந்து 38 ஆகவும், 1 கிலோ தயிர் ரூ.66-ல் இருந்து 68 ஆகவும் உயர்த்துவதாகவும் தெரிவித்துள்ளது.
இது பொதுமக்கள் தலையில் பெரும்பாரத்தை சுமத்தும் செயலாகும் என்பதோடு, இந்த பால், தயிர் விற்பனை விலை உயர்வானது மற்ற தனியார் பால் நிறுவனங்களையும் விற்பனை விலையை உயர்த்த தூண்டுவது போல் ஆரோக்யா நிறுவனத்தின் செயல்பாடுகள் அமைந்து உள்ளது கண்டிக்கத்தக்கதாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பால், தயிர் விற்பனை விலையை சொற்ப அளவில் மட்டும் குறைந்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஓராண்டில் பால் கொள்முதல் விலை, மூலப்பொருட்கள், வாகன எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலைகளில் மட்டுமல்ல பால் முகவர்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்திட பால், தயிர் விற்பனைக்கான கமிஷன் தொகையிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாத சூழலில் ஆரோக்யா நிறுவனம் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்துவது என்பது ஏற்புடையதல்ல என்பதால் இந்த விற்பனை விலை உயர்வை ஆரோக்யா நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்கவிருக்கிறேன்.
- தனக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடைகளை உடைத்து 'கம்பேக்' கொடுத்திருக்கும் செந்தில் பாலாஜி.
முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்டமும் செயல்பாடுகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு முழுமையான பயன்களைத் தருவதை உறுதி செய்வதற்காக உங்களில் ஒருவனான நான் முதலமைச்சர் என்ற முறையில் மாவட்டந்தோறும் நேரில் கள ஆய்வு செய்யவிருக்கிறேன் என்பதை அக்டோபர் 22-ஆம் நாள் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அறிவித்தேன். அதனைத் தொடர்ந்து கலைஞரின் உடன்பிறப்புகளாகிய உங்களிடமும் மடல் வாயிலாகத் தெரிவித்தேன்.
"நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்கவிருக்கிறேன். மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன். கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கழகப் பணிகளையும் ஆய்வு செய்வேன். கண்மணிகளாம் உடன்பிறப்புகளையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்வேன்" என்று உங்களில் ஒருவன் மடலில் குறிப்பிட்டிருந்தேன். சொன்னதைச் செய்வோம் என்பதுதானே நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நமக்குக் கற்றுத்தந்துள்ள ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படைப் பாடம். அதன்படியே நவம்பர் 5, 6 இரண்டு நாட்களிலும் கோவை மாவட்டத்தில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளப் பயணமானேன்.
மேற்கு மண்டலத் தி.மு.க.வில் ஓட்டை விழுந்துவிட்டதுபோல அரசியல் களத்தில் சித்தரிக்கப்படுவதற்கு மாறாக, கொள்கை உரமிக்க மூத்த நிர்வாகிகளையும், இலட்சிய நோக்கத்துடன் செயல்படும் இளைய பட்டாளத்தையும் கொண்ட கழகத்தின் கோட்டையாக மேற்கு மண்டலம் இருக்கிறது என்பதை, கோவையில் தரையிறங்கியதுமே உணர முடிந்தது. விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, களஆய்வின் முதல் நிகழ்வான எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவைத் திறந்து வைப்பதற்குச் செல்வதற்காகப் புறப்பட்டபோது, 6 கிலோமீட்டர் நெடுகிலும் சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம்.
கோவையில் உள்ள மூன்று கழக மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருடன் பொதுமக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் - இளைஞர்கள் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். வழிநெடுக மக்களின் முகம் பார்த்து எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் போலவே, தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான என்னைப் பார்த்து மக்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சி என்பது அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டு முகத்தில் பிரதிபலித்தது. புன்னகைத்து, கையசைத்து, "அடுத்ததும் உங்க ஆட்சிதான்" என்று மனதார வாழ்த்தி மகிழ்ந்தனர். தாய்மார்கள் பலரும் தங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் அழைத்து வந்து குடும்பமாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கையசைத்தனர். அந்தக் குழந்தைகளின் முகம் கண்டு நானும் மனதளவில் குழந்தையானேன்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட தி.மு.கழகம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காலத்திற்கேற்ற வளர்ச்சிக் கட்டமைப்புகளை உருவாக்குவது வழக்கம். அந்த வகையில், 2009-ஆம் ஆண்டு கோவையில் டைடல் பூங்காவை நம் உயிர்நிகர் தலைவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் என்ற முறையில் டைடல் பூங்கா அமைவதற்கான பணிகளை உங்களில் ஒருவனான நான் அக்கறையுடன் கவனித்து நிறைவேற்றினேன்.
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி ஐ.டி. காரிடார் (ஓ.எம்.ஆர். சாலை) போல கோவையில் டைடல் பூங்கா பகுதி தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த இளைஞர்களின் வாழ்வுக்கு வளமான எதிர்காலத்தைக் கட்டமைத்துத் தரும் இடமாக இன்று உருவாகியுள்ளது. ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் அங்கே உருவாகியிருப்பதையும், கோவையையும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களையும் சேர்ந்த பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதையும் கண்ட மனநிறைவுடன் எல்காட் நிறுவனத்தின் சார்பிலான புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் அந்தத் துறையின் அமைச்சரும் பன்னாட்டு அளவில் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அறிந்தவருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களுடன் பங்கேற்றேன்.
எல்காட் புதிய டைடல் பூங்காவின் கட்டமைப்பை உலகத் தரத்திற்கேற்ற வகையில் மிகச் சிறப்பான முறையில் அமைத்திடத் துணை நின்றவர் பொதுப்பணித் துறை அமைச்சரான எ.வ.வேலு அவர்கள். நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுடன் வேலுவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார். டைடல் பூங்காவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்கூட்டியே பதிவு செய்து, தங்கள் பணியினைத் தொடங்கி, இளைஞர்களுக்கு வேலைகள் வழங்க ஆயத்தமாயிருப்பதையும் அறிந்து கொண்டேன்.
அடுத்த நிகழ்வாக, கோவை மக்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களையும் சார்ந்த மக்கள் சட்டமன்றத் தேர்தலின்போது முன்வைத்த முக்கியமான கோரிக்கையை நிறைவேற்றும் நிகழ்வாக, மக்களின் நெஞ்சில் பால் வார்க்கும் நிகழ்வாக அமைந்தது. தமிழ்நாடு வீட்டு வசதித் திட்டத்திற்கான நிலமெடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்ட பகுதிகளில், அதற்கான விலக்களிக்கும் ஆணைகள் கிடைக்கப் பெறாமல் இருந்தவர்கள் தங்களின் நீண்டகால பரிதவிப்பை மனுக்களாக அளித்து வந்தனர். அவர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்த உங்களில் ஒருவனான நான், முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சிறப்புப் புகார் பெட்டிகள் அமைத்து, மனுக்களைப் பரிசீலித்து நடவடிக்கை எடுத்திட, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் மூலம் நில நிர்வாக ஆணையர் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து, 4-10-2024 அன்று உரிய அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு முழுவதுமிருந்தும் கோரிக்கை வைத்த மக்களுக்குப் பெரும் நிம்மதி ஏற்படும் வகையிலான இந்த அரசாணையின்படி, கோவை மாவட்டம் வடக்கு வட்டத்திலும், தெற்கு வட்டத்திலும் 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, 5,386 குடும்பங்கள் பயனடையும் வாய்ப்பு உருவானது. தங்களுக்குரிய நிலத்தை விற்கவும் வாங்கவும் முடியாமல் பல ஆண்டுகளாகத் தவித்த மக்களுக்குத் திராவிட மாடல் அரசு வழங்கிய நிம்மதிப் பரிசுதான் இந்த நில எடுப்பு விலக்களிப்பு ஆணை. அதனை வழங்குகிற விழாவில் துறையின் அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும் பங்கேற்று, எவ்வளவு அக்கறையுடன் இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து, உரிய சட்டமுறைகளின்படி நிறைவேற்றினோம் என்பதை விளக்கினார். விலக்களிப்பு ஆணைகளைப் பெற்றுக் கொண்ட மக்களின் நன்றி அவர்களின் கண்களில் துளிர்த்ததைக் கண்டேன்.
காலை நிகழ்வுகளை முடித்துக் கொண்டு மதிய உணவுக்காக சர்க்யூட் ஹவுஸ் செல்லும்போது, கோவையைச் சேர்ந்த தங்க நகை உற்பத்தியாளர்கள் கோரிக்கை மனு ஒன்றை நம்பிக்கையுடன் அளித்தனர். அதைப் படித்துப் பார்த்த பிறகு, மாலையில் தங்க நகை உற்பத்தியாளர்கள் பணி செய்யும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களின் பட்டறைகளைப் பார்வையிட்டேன். விலை உயர்ந்த பொருளான தங்கத்தை, திறன்மிகுந்த வேலைப்பாடுகளுடன் மிகச் சிறந்த அணிகலன்களாக மாற்றும் திறமை பெற்ற அவர்களின் பணியிடங்கள் மிக மிக எளிமையானதாக - நெருக்கடி மிகுந்ததாக இருப்பதைக் கண்டேன். தங்கள் தொழிலுக்கேற்ற நவீன வசதியான இடம் வேண்டும் என்பது அவர்களின் முக்கியமான கோரிக்கையாக இருந்தது. அது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து உலக அளவில் தங்க நகைகள் தயாரிப்பில் முக்கிய மையமாக விளங்கும் கோவைக்குக் குறிச்சியில் உள்ள தொழிற்பேட்டையில் 126 கோடி ரூபாய் செலவில் தொழில் வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டேன். குறிச்சி தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்குவதற்காக விடுதிகளையும் நேரில் ஆய்வு செய்தேன்.
அரசு சார்ந்த திட்டங்கள் குறித்த ஆய்வுப் பணிகளுடன், இந்த ஆட்சி அமைவதற்கு அயராத உழைப்பைத் தந்த கழகத்தினரைச் சந்தித்து அவர்களுடைய செயல்பாடுகளை ஆய்வு செய்யும் பணி நவம்பர் 6 அன்று மாலையில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கழகத்தின் உள்கட்சித் தேர்தல் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், மாநகர - நகரச் செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் எனக் கோவையின் 10 தொகுதிகளை உள்ளடக்கிய நிர்வாகிகளுடனான கலந்தாய்வினை உங்களால் கழகத் தலைவர் பொறுப்பைச் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான் நடத்தினேன்.
கழகத்தின் இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை முன்கூட்டியே கோவைக்குச் சென்று கழகத்தினருடனான கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்ததுடன், நிர்வாகிகள் அனைவரையும் மினிட்ஸ் புத்தகங்களையும் எடுத்துவரச் செய்திருந்தார். இந்தக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றியவர் கோவை மாவட்டத்தைக் கழகத்தின் இரும்புக் கோட்டையாக வைத்திருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள். கோவை மாவட்டத்தின் இரண்டு நாள் நிகழ்வுகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னின்று ஏற்பாடு செய்திருந்த விதம், எடுத்துக்கொண்ட அக்கறை, செயலாற்றலில் வெளிப்பட்ட துல்லியம் இவை அனைத்தும் நமக்கு எந்தளவு மகிழ்ச்சி தருகிறதோ, அதே அளவுக்கு அரசியல் எதிரிகளுக்கு அதிர்ச்சியையும் தருகிறது. அதனால்தான் அவரை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் எனச் சதிவலை விரித்தனர். சட்டப்போராட்டத்தில் வென்று, சிறை மீண்ட சிங்கமெனக் களம் கண்டு, கழகத்தினர் வியந்திட - களத்தில் எதிர் நிற்போர் வியர்த்திடச் செயல் புயலாகத் தன் பணியினைச் சிறப்பாகச் செய்திருந்தார், தனக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடைகளை உடைத்து 'கம்பேக்' கொடுத்திருக்கும் செந்தில் பாலாஜி.
கழக நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் கோரிக்கைகள், களநிலவரங்கள் குறித்த விவரங்கள் பெறப்பட்டதுடன், அவரவர் பகுதியில் ஆற்றிய செயல்பாடுகளை மினிட்ஸ் புத்தகங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை நடத்தி, கழகத்தினரை அன்புடன் ஒருங்கிணைத்து, மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் உறுதுணையாக நிற்கும்போது அங்கே கழகமும் வலிமையாக இருக்கிறது, களத்தில் வெற்றியும் உறுதியாக அமைகிறது. இதற்குச் சாட்சியமாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வடக்கு நகரக் கழகச் செயலாளர் முகமது யூனுஸ் அவர்கள் என்னிடம் வழங்கிய மினிட்ஸ் புத்தகம் இருந்தது.
46 நிகழ்ச்சிகளை அவர் நடத்தியிருப்பதைப் பதிவு செய்திருந்தார். அந்த ஒன்றியத்தில் தி.மு.கழகம் தொடர்ச்சியாக எல்லாத் தேர்தல்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல, சூலூர் பேரூர் கழகச் செயலாளார் கௌதமன் அவர்கள் 57 நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து, மாவட்ட - ஒன்றிய மற்றுமுள்ள அமைப்புகள் குறிப்பிட்ட கால அளவில் அமைப்புக் கூட்டம், செயற்குழுக் கூட்டம், பொதுஉறுப்பினர்கள் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களை நடத்தவேண்டும் என்பதை ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழக நிர்வாகிகளிடம் வலியுறுத்தி, களப்பணிகளை முடுக்கிவிட்டேன்.
கலந்துரையாடல் போல அமைந்த இந்த கலந்தாய்வுக் கூட்டம் கழக நிர்வாகிகளுக்கு உற்சாகத்தைத் தந்த நிலையில், உங்களில் ஒருவனான என்னுடன் ஒவ்வொருவரும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தனர். என்னுடைய விருப்பமும் அதுதான். அதனால், ஒவ்வொருவருடனும் படம் எடுத்துக் கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தினேன். ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகளிடம் புது உத்வேகம் உருவாகியிருப்பதை உணர முடிந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.கழக கூட்டணி வெற்றி என்கிற இலக்கை அடைவதற்கு கோவையின் 10 தொகுதிகளும் உத்தரவாதம் அளித்திருப்பதாகவே கருதுகிறேன். மக்கள் பணியை இலட்சியமாகக் கொண்டிருப்பதால் மறுபடியும் கழக ஆட்சி நிச்சயம்.
நவம்பர் 6-ஆம் நாள் அரசு திட்டங்கள் தொடர்பான கலந்தாய்வு நிகழ்வாக கோவையில் புதிய நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. 2021-இல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கோவைக்குப் பல முறை வந்துள்ளேன். நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக மூன்று முறை வந்துள்ளேன். சில நாட்களுக்கு முன், மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் கோவையில்தான் தொடங்கி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்டந்தோறும் கள ஆய்வுப் பணி என்பதும் கோவையில்தான் தொடங்கியுள்ளது என்பதை அந்த நிகழ்வில் குறிப்பிட்டு, கோவைக்கு அறிவிக்கப்பட்டுள்ள மேலும் ஒரு தகவல்தொழில்நுட்பப் பூங்கா, உயர்மட்ட மேம்பாலச் சாலை நீட்டிப்பு, யானைகளால் பயிர்ச்சேதங்களைத் தவிர்த்திட நவீன வேலி, கூட்டக் குடிநீர்த் திட்டங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு விளக்கமாக உரையாற்றினேன்.
சென்னையில் அண்ணா பெயரில் நூலகமும், மதுரையில் கலைஞர் பெயரில் நூலகமும் அமைந்திருப்பதுபோல, கோவையில் அமையும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் பெரியார் பெயரில் அமையும் என்பதைத் தெரிவித்து, 2026 ஜனவரியில் நூலகமும் அறிவியல் மையமும் திறக்கப்படும் என்பதையும் காலக்கெடுவுடன் அறிவித்தேன்.
கோவையில் பொதுமக்களின் மகிழ்ச்சியையும் உடன்பிறப்புகளாம் உங்களின் உற்சாகத்தையும் கண்டேன். நெஞ்சம் நிறைந்தேன். மக்களின் பேரன்பில் கோவை மாவட்டக் களஆய்வு மகிழ்வாக அமைந்தது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவோம் என்ற உறுதியை வழங்கி, நவம்பர் 9, 10 தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப் பணியினை மேற்கொள்கிறேன்.
கோவையில் தொடங்கினேன்! தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வருவேன்! என்று தெரிவித்துள்ளார்.
- அதிமுக அணி தற்போது பல்வேறு அணியாக பிரிந்துள்ளது.
- திமுக கூட்டணியில் விரிசல் விழாத என அதிமுக, பாஜக துண்டை விரித்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சைக்கு சென்றுள்ளார். அங்கு
தஞ்சை மத்திய மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு அவர்களின் மகளின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் சிறிது நேரம் உரையாற்றினார். அதில் திமுக-வை அழிப்பேன் என்று பலர் கிளம்பி உள்ளனர். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவர்களுக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உள்ளனர். இதுதான் நம் எதிரிகளுக்கு எரிச்சலை தருகிறது. தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நாம் பெருகின்ற தொடர் வெற்றிதான் அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலை தருகிறது.
அதிமுக அணி தற்போது பல்வேறு அணியாக பிரிந்துள்ளது. இப்படி தனித்தனியாக நிற்கும் அதிமுகவும் யாருமே சீண்டாத பாஜவும், எப்படியாவது திமுக கூட்டணியில் விரிசல் விழாத என துண்டை விரித்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வலுவாக உள்ளது என்று நம் தலைவரும் கூட்டணி கட்சி தலைவர்களும் கூறியுள்ளனர்.
2026-ல் கழகம் மீண்டும் வென்றது. கழக தலைவர் 2-வது முறையாக முதலமைச்சர் ஆனார். திமுக 7-வது முறையாக ஆட்சியை அமைக்கிறது என்ற வரலாற்றை உருவாக்குவோம் என கூறினார்.
- கட்சியில் புதிதாக இணைவதற்கு ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
- அடுத்த மாநாட்டை இன்னும் சிறப்பாக நடத்துவோம் என கூறி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.
சென்னை:
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அவர் முதல் அரசியல் மாநாட்டை கடந்த மாதம் 27-ந் தேதி விக்கரவாண்டி வி சாலையில் நடத்தினார்.
மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றதுடன் மாநாட்டு மேடையில் விஜய் தனது முதல் அரசியல் பேச்சை அதிரடியாக பேசி அரசியல் அரங்கை அதிர வைத்தார்.
கட்சி கொள்கை, திட்டங்கள் திராவிட அரசியல் இரு மொழி கொள்கை மற்றும் பல்வேறு அரசியல் சார்ந்த விஷயங்களை அவரது பாணியில் விஜய் பேசியது தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் அமைந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 3-ந் தேதி (ஞாயிறு) அன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து பேசி அவர்களை உற்சாகப்படுத்தியதுடன் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி விரைவில் வெளியிடுவேன் என்றார். முதல் மாநாட்டை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு தந்து வெற்றி மாநாடாக மாற்றிக் காட்டினீர்கள். அடுத்த மாநாட்டை இன்னும் சிறப்பாக நடத்துவோம் என கூறி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.
செயற்குழு கூட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து விஜய் தனது 69-வது படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். 2-வது கட்டமாக நடந்து வரும் படத்தின் படப்பிடிப்பில் 15 நாட்கள் தொடர்ந்து விஜய் பங்கேற்ற பின்னர் மீண்டும் அரசியல் பணியில் சில நாட்கள் ஈடுபட இருக்கிறார்.
கட்சி வளர்ச்சி மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பற்றி கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் விஜய் மாதந்தோறும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
மேலும் கட்சியில் புதிதாக இணைவதற்கு ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இணைப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
- கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் புதிய இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- மாநகராட்சி பகுதியில் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்தடை சிகிச்சை செய்வது, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது தினமும் சராசரியாக 65 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 19,640 நாய்கள் பிடிக்கப்பட்டு 14,885 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சமீபத்தில் நடத்தப்பட்ட நாய்கள் கணக்கெடுப்பில் சென்னை மாநகராட்சி பகுதியில் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் புதிய இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
நாட்டில் முதல் முறையாக நாய்களுக்கென பிரத்யேக இனக்கட்டுப்பாட்டு மையம் சென்னை விலங்குகள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் கட்டப்பட்டுள்ளன. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த மையங்களில் தினமும் தலா 30 நாய்களுக்கு என ஆண்டுக்கு 9,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் சென்னையில் நாய் கருத்தடை சிகிச்சை ஆண்டுக்கு 27,000-ஆக அதிகரிக்கும். புதிதாக அமைக்கப்பட்ட கருத்தடை மையங்களில் 100 நாய்களைப் பராமரிக்கும் வகையில் 40 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
09.11.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10.11.2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
11.11.2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை நாதபுரம்,
12.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான- கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சாலையோரம் நீண்ட தூரத்திற்கு அந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
- சுற்றுலா வேன், பஸ்கள் கடந்த ஒரு மாதமாக திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வந்து சென்றன.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள சுற்றுலா வாகனங்களுக்கு திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதி சான்று, அனுமதி சான்று, சாலை வரி உள்ளிட்டவையை வழங்கப்படுகிறது. தற்போது ஏராளமான பக்தர்கள் சபரிமலை யாத்திரை செல்ல சுற்றுலா வாகனங்களை முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் பெற தொடர்ந்து சுற்றுலா வேன், பஸ்கள் கடந்த ஒரு மாதமாக திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வந்து சென்றன.
அப்போது விதிகளை மீறி அகலம், வண்ணம் உயரம் ஒலிபெருக்கி மின்விளக்கு பல்வேறு காரணங்களுக்காக மோட்டர் வாகன ஆய்வாளர் நிராகரித்ததாக தெரிகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மோட்டார் வாகன ஆய்வாளர் விடுப்பில் சென்றுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் தகுதி சான்றிதழ் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலத்தில் குவிந்தன. இதனால் அதிகாரிகள் திணறினர். சாலையோரம் நீண்ட தூரத்திற்கு அந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொறுப்பு மோட்டார் வாகன ஆய்வாளர் அந்த வாகனங்களுக்கு தகுதிச் சான்று அளிக்காமல் திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள்.
- தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணிக்குப் பிறகு சென்யைில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:-
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான- கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25- 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
- வக்கீலான கிறிஸ்டோபர் சோபி, இசக்கிமுத்துவின் சொத்து தொடர்பான வழக்கை நடத்தி வருகிறார்.
ஆரல்வாய்மொழி:
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பீமநகரி விதை ஆராய்ச்சி மையம் அருகே சந்தியான் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் இன்று காலை வாலிபர் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அவரை யாரோ கொன்று உடலை எரித்துள்ளனர். இறந்து கிடந்தவரின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்த நிலையில் கிடந்ததால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் முதலில் தெரியவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது திருப்பதி சாரம் கீழூர் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 21) என்பவர் ஒருவரை அழைத்து செல்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீசார் இசக்கிமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவரை இசக்கிமுத்து கொன்றதும், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தக்கலை குமாரபுரம் சரல்விளை பகுதியை சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் சோபி(50) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பிணமாக கிடந்த கிறிஸ்டோபர் சோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வக்கீல் கிறிஸ்டோபர் சோபியை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து இசக்கி முத்துவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிறிஸ்டோபர் சோபி கொலைக்கான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
வக்கீலான கிறிஸ்டோபர் சோபி, இசக்கிமுத்துவின் சொத்து தொடர்பான வழக்கை நடத்தி வருகிறார். அந்த வழக்கை விரைந்து முடிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் இசக்கி முத்து தனது சொத்து பத்திரங்களை தன்னிடம் தருமாறு கிறிஸ்டோபர் சோபியிடம் கூறியுள்ளார்.
ஆனால் பத்திரங்களை கொடுக்க அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் வக்கீல் கிறிஸ்டோபர் சோபியை தீர்த்துக்கட்ட இசக்கிமுத்து முடிவு செய்துள்ளார் . இந்த நிலையில் நேற்று கிறிஸ்டோபர் சோபி தனக்கு வாழைக் கன்றுகள் வேண்டுமென்று இசக்கிமுத்துவிடம் கேட்டுள்ளார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிறிஸ்டோபர் சோபியை தீர்த்துக்கட்ட இசக்கிமுத்து திட்டமிட்டுள்ளார். தங்களது ஊரில் வாழைக்கன்றுகள் இருப்பதாகவும், அங்கு வருமாறும் கிறிஸ்டோபர் சோபியிடம் கூறியுள்ளார். அதனை நம்பி அவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் இசக்கிமுத்து வீட்டிற்கு வந்துள்ளார்.
சந்தியான் குளக்கரை பகுதியில் உள்ள தோட்டத்தில் வாழைக்கன்று இருப்பதாக கூறி அங்கு கிறிஸ்டோபர் சோபியை தனது மோட்டார் சைக்கிளில் இசக்கிமுத்து அழைத்து சென்றார். அங்கு வைத்து கிறிஸ்டோபர் சோபியை தன்னிடம் இருந்த அரிவாளால் இசக்கிமுத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். கொலை செய்யப்பட்ட கிறிஸ்டோபர் சோபியை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை எரித்துவிட முடிவு செய்தார். அதற்காக தனது மோட்டார் சைக்கிளில் இருந்தே பெட்ரோலை எடுத்து, கிறிஸ்டோபர் சோபி உடலில் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.
பின்பு அங்கிருந்து இசக்கிமுத்து அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததால் இசக்கிமுத்து சிக்கினார். கைது செய்யப்பட்ட இசக்கி முத்துமிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வக்கீல் வெட்டிக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தால் ஆரல்வாய்மொழி மற்றும் தக்கலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிறுவர்களையும், மாணவ-மாணவிகளையும் நாய்கள் கடிக்க பாய்ந்து அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
- நாய்கள் குறுக்கே வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த தட பெரும்பாக்கம் ஊராட்சியில் தெருநாய்கள் அதிகரித்து உள்ளது. தெருக்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித் திரிவதால் நடந்து செல்லவே அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.
சிறுவர்களையும், மாணவ-மாணவிகளையும் நாய்கள் கடிக்க பாய்ந்து அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலம் வாகனங்களில் செல்லும்போது திடீரென நாய்கள் குறுக்கே வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






