என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமகன் திடீரென மரணம் அடைந்தார்.
    • ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங் கோவனின் மகன் திருமகன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் திடீரென மரணம் அடைந்தார். இதன் மூலம் 20 மாதங்கள் எம்.எல்.ஏ. வாக இருந்த திருமகன் மறைவுக்கு பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். இவரும் சுமார் 20 மாதங்கள் மட்டுமே எம்.எல்.ஏ. பதவியில் இருந்து மரணம் அடைந்துள்ளார். இதன் மூலம் 3½ ஆண்டுகளில் 2-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டுகளே இருக்கும் நிலையில் இடைத்தேர்தலில் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. குறுகிய காலமே எம்.எல்.ஏ.வாக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி., எம்.எல்.ஏ.வாக இருப்பவர்கள் மரணம் அடைந்தால் அடுத்த 6 மாதத்துக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளனர்.

    • மெயின் அருவி பகுதிக்கு யாரும் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தொடர் மழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி ஐந்தருவி, பழைய குற்றாலம் சிற்றருவி புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    நேற்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மழை வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் 40 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

    நேற்று இரவு மழை நீடித்ததால் அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பழைய குற்றால அருவியில் நடைபாதை வரையில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

    மெயின் அருவி பகுதிக்கு யாரும் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மெயின் அருவி பகுதியை ஒட்டி அமைந்துள்ள பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் உள்ளன.

    வெளியூர்களிலிருந்து குற்றாலம் நோக்கி வரும் அய்யப்ப பக்தர்கள் அருவி பகுதிகளுக்கு செல்லாத வாறு திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றனர்.

    தொடர் மழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

    வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று காலையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி தென்காசி மாவட்டத்தில் பொது மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்திட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    • மூங்கில்காடு கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கொடைக்கானல் நகரின் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக கனமழை முதல் மிக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் வருவதை சில நாட்கள் தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

    கொடைக்கானல், பள்ளங்கி, கோம்பை, மூங்கில்காடு கிராமத்தில் பழங்குடியினர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் பெய்து வந்த மழை காரணமாக கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியிலிருந்து மூங்கில்காடு கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் அப்பகுதி கிராம மக்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற ஆபத்தான முறையில் கயிற்றை பிடித்து கொண்டு ஆற்றை கடந்து வருகின்றனர்.

    மேலும் இப்பகுதியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மூங்கில்காடு கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வர முடியாமல் கிராமத்திலேயே முடங்கியுள்ளனர். மேலும் விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் மலைக்கிராம மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.


    எனவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை மலைக்கிராமப்பகுதியில் இருந்து மூங்கில்காடு பகுதிக்கு செல்ல விரைவில் பாலம் அமைத்து தர வேண்டும்.

    பலமுறை இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை அதற்கான தீர்வு முடிவுக்கு கொண்டுவர துறை சார்ந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேல்மலை கிராம பகுதியில் கீழான வயல் செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையை கடந்து செல்வதில் பொதுமக்கள், விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் கொடைக்கானல் அப்சர்வேட்டரி செல்லும் சாலை ஓரங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு மண் சரிந்து வீடுகளில் விழுந்துள்ளது. யாருக்கும் பாதிப்பு இல்லாவிட்டாலும் முறையான சாலை பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    நள்ளிரவு மிக கனமழையாக பெய்த நிலையில் காலையிலும் மிதமான மழை பெய்து வருகிறது. கொடைக்கானல் நகரின் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதே போல் மேல்மலை கிராமங்களில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதனிடையே பேரிஜம் ஏரிக்கு செல்ல இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட், குணாகுகை, பில்லர்ராக் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட எந்த தடையும் விதிக்கப்படவில்லை. பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

    கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்லும் அடுக்கம் சாலையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற அலுவலர்கள் விழுந்த பாறைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    அப்பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாறைகள் விழும் அபாயம் இருப்பதால் வாகனங்கள் மறு உத்தரவு வரும்வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உள்ளூர் சிறு வாகனங்கள் மட்டும் எச்சரிக்கையுடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • நம்முடைய அரசியல் பயணத்தில் வழிகாட்டி ஊக்குவித்த பண்பாளர்.
    • தமிழ்நாட்டில் கட்சியை வழிநடத்துகின்ற தலைவராக உயர்ந்தவர்.

    சென்னை:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கையாகவும், சமூக வலைதளத்திலும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அவர்கள் கூறி இருப்பதாவது:-


    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர்-ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறோம்.

    தந்தை பெரியாரின் பேரன். முத்தமிழறிஞர் கலைஞர் கழகத்தலைவர் மீது மாறா பற்றுக் கொண்டவர். எதையுமே வெளிப்படையாகப் பேசும் ஆற்றலுக்கு சொந்தக்காரர். நம்முடைய அரசியல் பயணத்தில் வழிகாட்டி ஊக்குவித்த பண்பாளர்.

    ஈரோடு கிழக்கு சட்ட மன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பை பெற்றோம்.

    அதேபோல, ஈரோட்டில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறையின் முன்னெடுப்பில் தந்தை பெரியாரின் பூர்வீக இடத்துக்கான பட்டாவை ஈவி.கே.எஸ். இளங்கோவனிடம் வழங்கிய போது, அதற்காக தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் , நம்மையும், அவர் வாழ்த்திப் பேசியது இன்றும் நம் மனதில் நிழலாடுகிறது.

    ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்துக்கு மட்டுமன்றி, தமிழ்நாடு அரசியல் களத்திலும் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தார் நண்பர்கள்-காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.

    அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ: தந்தை பெரியார் அவர்களின் பேரனும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு தாங்கொணா துயரத்தைத் தருகிறது.


    பெரியாரின் அண்ணன் ஈ.வி.கிருஷ்ணசாமி மகனும், அண்ணாவின் நெஞ்சங் கவர்ந்த தம்பியுமான ஈ.வெ.கி.சம்பத்தின் மகன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பழகுவதற்கு இனிய பண்பாளர். கொண்ட கொள்கையில் உறுதியானவர்.

    காங்கிரஸ் இயக்கத்தின் சுயமரியாதை தலைவர் என்று சொல்லத்தக்க அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் கட்சியை வழிநடத்துகின்ற தலைவராக உயர்ந்தவர்.

    சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றியவர். டாக்டர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பொறுப்பினை ஏற்று தனது ஆளுமைத் திறனை வெளிப்படுத்தியவர்.


    தமிழ்நாட்டில் மதசார் பர்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலிமையோடு எடுத்துச் செல்வதற்கு எவருக்கும் அஞ்சாமல் கருத்துக்களை முன்வைத்த சிறப்பு அவருக்கு உண்டு.

    கடந்த மாதம் இறுதியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எப்படியும் குணமாகி மீண்டு வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அவர் மூச்சுக்காற்று இயற்கையோடு கலந்து விட்டது.

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தகைசால் தலைவரை இழந்த காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்: காங்கிரஸ் பேரியக்கத்தின் சட்டமன்ற உறுப்பினரும் மேனாள் இந்திய ஒன்றிய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த பற்றுதலை கொண்டிருந்தவர். அவ்வப்போது தொடர்பு கொண்டு என்னை ஊக்கப்படுத்தியவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச் சென்று பேசக்கூடியவர். அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.

    அவரை இழந்து வாடும் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    • பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கின.
    • ஆச்சனூர், பாபநாசம் பகுதிகளில் வாழை பயிரிட்ட வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

    தஞ்சாவூர்:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அடைமழை பெய்தது.

    தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவையாறு அருகே கோணக்கடுங்காலாறு உடைப்பு ஏற்பட்டு 1000 ஏக்கருக்கு மேல் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மற்றும் வாழைகள் நீரில் மூழ்கின. இதேப்போல் அம்மாப்பேட்டை, புத்தூர், அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம், நரசிங்கபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கின.

    திருவையாறு, வளப்பக்குடி, ஆச்சனூர், பாபநாசம் பகுதிகளில் வாழை பயிரிட்ட வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நீரை தொடர்ந்து தோட்டத்தில் நின்றால் வேர் அழுகல் நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் வாலை இலை அறுவடை செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வாழை இலைகள் அறுக்க முடியாமல் மரத்திலேயே கிழிந்து வீணாகி வருவதாக விவசாயி மதியழகன் வேதனை தெரிவித்தார்.

    இதேப்போல் மழையால் நிலக்கடலை, உளுந்து, செங்கரும்பு போன்ற பல பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

    பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மொத்தம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 375 ஏக்கரில் நெல், கடலை, உளுந்து, வாழைப்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இன்று காலையில் இருந்து மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை இன்றி காணப்பட்டது. இதனால் வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீர் வடிந்து வருகிறது. மேலும் விளைநிலங்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும்.

    நேற்று லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும்.

    தென்தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 16-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 17-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 18-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 19-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 20-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிளியனூர் அக்ரகாரம் முனியப்பன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்தப் பகுதியில் முனியப்பன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இது விளங்குகிறது.

    இந்நிலையில் இந்த கோவில் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது .

    அதனை இக்கோவிலில் பணிபுரியும் செயல் அலுவலர் மற்றும் பூசாரி ஆகியோர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட நபர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.

    அப்போது அவர்கள், கோவில் பகுதியில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும். அதற்கான செலவினங்களை ஊர் பொது மக்களே தருகிறோம் என கோரிக்கை விடுத்தும், அதை செயல்படுத்தவில்லை.


    மேலும், பூசாரி உண்டியலில் பணம் போடுவதை தடுத்து, காணிக்கையாக பணங்களைப் பெற்று வருகிறார் எனவும் குற்றம் சாட்டுகின்றனர். உண்டியல் பணத்தை எண்ணும் பொழுது வழக்கமான நடைமுறைகளை கடைபிடிக்காமல், முறைகேடாகவும், முறையாக கணக்கு காட்டுவதில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

    செயல் அலுவலர் மற்றும் பூசாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்களை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்து பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மேலும், அந்த பகுதியில் அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க 30-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது உடல் மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.

    அவரைத்தொடர்ந்து இளங்கோவன் உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    • நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்து எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
    • வெள்ளத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இன்று கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை.

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

    இது மேலும் வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும்.

    நேற்று லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும்.

    இதுன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆறு செல்லும் இடங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில் திருச்செந்தூருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
    • கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழுக்கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும்.

    இன்று காலை நீர் இருப்பு 22.76 அடியாகவும், கொள்ளளவு 3315 மில்லியன் கன அடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 2450 கன அடியாகவும் உள்ளது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.

    எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை அடையாற்றின் வெள்ள தணிப்புக்காக ஏரியிலிருந்து நேற்று வினாடிக்கு 4500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், மேலும் இன்று பிற்பகல் 12.00 மணி அளவில் வினாடிக்கு 6,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படும்.


    செம்பரம்பாக்கம் ஏரியை தொடர்ந்து புழல் ஏரியிலும் இன்று காலை நீர் இருப்பு 19.72 அடியாகவும், கொள்ளளவு 2956 மில்லியன் கனஅடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 709 கன அடியாகவும் உள்ளது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.

    எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் ஏரியின் மீகைநீர் கால்வாயின் வெள்ள தணிப்புக்காக ஏரியிலிருந்து நேற்று வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், மேலும் இன்று பிற்பகல் வினாடிக்கு 1,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படும்.

    எனவே செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் புழல் ஏரி தண்ணீர் திறக்கப்படுவதால் ஆற்றங்கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • இளங்கோவனை பிரிந்து வாடும் குடும்பத்தினர், காங்கிரஸ் கட்சியினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று காலமானார். அவரது மறைவையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

    அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

    கடந்த சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    மேலும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. முக்கானி, ஏரல் பகுதிகளில் உள்ள பாலங்களில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுவதால் அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை, நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று மற்றும் நாளையும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ×