என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வீட்டு வேலை முடிந்து வந்த ரெத்னம் தனது மகனை காணாதது குறித்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் ஜேக்கப். இவரது மனைவி ரெத்னம். இவர்களுக்கு ஜெனிபர் (வயது 14) என்ற மகளும், சிவராஜ்(12) என்ற மகளும் உள்ளனர்.
ஜேக்கப் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ரெத்னம் திசையன்விளையில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் சிவராஜ் சண்முகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். ஜெனிபரும் அதே பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு ரெத்னம் வீட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் பள்ளி முடிந்து சிவராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். தொடர்ந்து அவர் புத்தகப்பையை வைத்து விட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.
அவர் மாலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் வீட்டு வேலை முடிந்து வந்த ரெத்னம் தனது மகனை காணாதது குறித்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார்.
தொடர்ந்து திசையன்விளை போலீசில் புகார் அளிக்கவே, போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஊருக்கு அருகே உள்ள நந்தன் குளத்தில் சிவராஜின் சைக்கிளும், அதன்மீது அவரது சட்டையும் இருந்தது.
இதனால் அவர் குளத்தில் குளிக்க சென்ற இடத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக திசையன்விளை தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று குளத்தில் தேடிய நிலையில், நள்ளிரவில் சிவராஜ் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விலைவாசி உயர்வு காரணமாக ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
- இந்த கட்டணத்தை வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சென்னை:
தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் நடராஜன் பாரதிதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்க நிர்வாக கூட்டம் நடந்தது. இதில் நானும், செயலாளர் செல்லப்பன், பொருளாளர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர், அமைப்பு செயலாளர் சுரேஷ் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
விலைவாசி உயர்வு காரணமாக ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டணத்தை வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சேவிங்-49, கட்டிங் -99 என்று வெளியே விளம்பரம் வைத்து சாதாரண சக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செய்ய வேண்டாம் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

- மூத்த நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
- சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். இதனால் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாநிலங்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையானநிலையில், அதனை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
- மூதாட்டி கொலை தொடர்பாக மாற்றுத்திறனாளி வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
- ரெயில் நிலையத்தில் மூதாட்டி லட்சுமியும் வசித்து வந்தார்.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று காலை மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்த மூதாட்டியின் பெயர் லட்சுமி (வயது 63) என்று தெரியவந்தது. அவர் சைதாப்பேட்டை ரெயில் நிலைய பகுதியிலேயே வசித்து வந்தார். ரெயில் நிலையத்துக்கு வருவோரிடம் பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார்.
மூதாட்டி பிணமாக கிடந்த போது அதே ரெயில் நிலையத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி முத்து என்பவர் சந்தேகப்படும்படி அங்கு இருந்துள்ளார். அவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மூதாட்டியை மாற்றுத்திறனாளி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர். இந்த தகவலை அறிந்த மூதாட்டியின் உறவினர்கள் திடீரென்று அந்த மாற்றுத்திறனாளியை தாக்கினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதற்கிடையே மூதாட்டி கொலை தொடர்பாக மாற்றுத்திறனாளி வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடீர் திருப்பமாக மூதாட்டி கொலை செய்யப்படவில்லை என்றும், அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்றும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
இதுதொடர்பாக மாற்றுத்திறனாளி முத்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
நான் சைதாப்பேட்டை ரெயில் நிலைய பகுதியில் வசித்து வருகிறேன். அதே ரெயில் நிலையத்தில் மூதாட்டி லட்சுமியும் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நானும், மூதாட்டி லட்சுமியும் மது அருந்தினோம். அப்போது நாங்கள் 2 முறை பாலியல் உறவு கொண்டோம்.
இந்த நிலையில் மீண்டும் அவருடன் உறவு கொள்ளலாம் என்று சென்றேன். அப்போது மூதாட்டி லட்சுமி அசைவின்றி காணப்பட்டார். அவரை தொட்டுப் பார்த்த போது இறந்து கிடந்தார். அவரை நான் கொலை செய்து விட்டதாக கருதி அவரது உறவினர்கள் என்னை தாக்கினார்கள்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் மூதாட்டி லட்சுமி கொலை செய்யப்படவில்லை என்றும், அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
- சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
- சேலம் மாநகர் முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஏரிகள் நிரம்பியது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து கடந்த சில தினங்களாக மழை பெய்யாமல் வெயில் வாட்டியது.
தற்போது மார்கழி மாதம் என்பதால் இரவு நேரம் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்ககடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று அதிகாலை சேலம் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து இடைவிடாமல் பெய்தது. இந்த மழை 3 மணி நேரம் நீடித்தது. இதனால் மழைநீர் சாலைகளில் ஓடியது. இதையடுத்து சேலம் மாநகர் முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்பட்டது.
- கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
- கரைபுரண்டு ஓடி வரும் வைகை தண்ணீர் திடீரென அருகிலுள்ள உலக்குடி காலனி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் உலக்குடி காலனி பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வைகை அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் விரகனூர் அணைக்கட்டு வழியாக அத்திகுளம் அணையை வந்தடைந்து பின்னர் அங்கிருந்து கிருதுமால் ஆற்றின் வழியாக உலக்குடி மற்றும் மானூர் கண்மாய்களை சென்றடைகிறது.
உலக்குடி காலனி குடியிருப்பை ஒட்டியே கிருதுமால் ஆற்று குறுகிய கால்வாய் செல்வதாலும், அப்பகுதியில் பல ஆண்டுகளாக தடுப்புச் சுவர் இல்லாததாலும், கரைபுரண்டு ஓடி வரும் வைகை தண்ணீர் திடீரென அருகிலுள்ள உலக்குடி காலனி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் காலனி குடியிருப்பை சேர்ந்த பொதுமக்களின் பலரது வீடுகளை கிருதுமால் ஆற்று தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அவர்கள் தங்கள் வீட்டிற்குள் குடியிருக்க முடியாமல் வெளியேறி உள்ளனர்.
எனவே உலக்குடி-மானூர் செல்லும் கால்வாயை ஒட்டியுள்ள உலக்குடி காலனி குடியிருப்பு பகுதியில் கிருதுமால் ஆற்று கால்வாயில் விரைவில் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தண்ணீரால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து வாழ்வாதாரமின்றி தவித்து வரும் காலனி குடியிருப்பு பொதுமக்களுக்கு உரிய நிவாரணமாக இழப்பீடு தொகையும் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- சில அரசியல் இயக்கங்கள் குளிர்காய நினைத்தார்கள்.
- முதலமைச்சர் எப்போதும் விவசாயிகளின் தோழனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். கூட்டத்தில் சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யா, நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பொள்ளாச்சி அருகே மெட்டுவாவி பகுதியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதாக வதந்தியை பரப்பி, பொதுமக்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலையை உருவாக்க கூடிய வகையில் சில அரசியல் இயக்கங்கள் செயல்பட்டு வந்தன. இதுவரை சிப்காட் அமைப்பதற்கு எந்தவிதமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
அரசின் சார்பில் சட்டமன்றத்திலோ, நிதிநிலை அறிக்கையிலோ அல்லது மானிய கோரிக்கையிலோ எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் இருக்க கூடிய என்.இ.பி.சி. நிலங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் மெட்டுவாவியில் என்.இ.பி.சி. நிலங்கள் இருப்பதாக அறியப்பட்டு, அந்த கணக்கெடுப்பு பணிகள் தான் நடைபெற்று வருகிறது.
சிப்காட் அமைப்பதற்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதை மாற்றி ஏதோ இந்த பகுதியில் சிப்காட் அமைப்பதாக விவசாயிகள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, பதற்றத்தை உருவாக்கி அதன் மூலம் சில அரசியல் இயக்கங்கள் குளிர்காய நினைத்தார்கள். எனவே தமிழக முதலமைச்சர் சார்பில் விவசாயிகளை சந்தித்து, இதற்கான தெளிவான ஒரு விளக்கத்தை வழங்கி இருக்கிறோம். விவசாயிகளும் அரசுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். முதலமைச்சர் எப்போதும் விவசாயிகளின் தோழனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
குறிப்பாக அரசின் மீது குறை சொல்வதற்கு இதுபோன்ற தவறான கருத்துக்களை விவசாயிகள் மத்தியில் கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது. விவசாயிகள் பயப்பட வேண்டியதில்லை. நிச்சயம் முதலமைச்சர் துணை உங்களுடன் நிற்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மீண்டும் கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் நடைமுறைகள் இன்று தொடங்கியது.
- கேரளாவில் இருந்து 25 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்தடைந்தனர்.
நெல்லை:
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு புளியரை சோதனை சாவடி வழியாக நெல்லை மாவட்டத்தில் சுத்தமல்லி அருகே உள்ள கோடக நல்லூர், கொண்டாநகரம், சீதபற்பநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் மூட்டை மூட்டைகளாக மருத்துவக் கழிவுகளான ஊசிகள், கையுறைகள், ரத்தம் படிந்த பொருட்கள், மருந்து பாட்டில்கள் என மலைபோல் கொட்டப்பட்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த கழிவுகளால் பொது சுகாதாரத்திற்கு கேடும், நோய் தொற்று பரவும் அபாயமும், நீர் நிலைகள் மாசுபடும் அபாயமும் இருந்ததால் இது சம்பந்தமாக முக்கூடல், சீதபற்பநல்லூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது.

அதில் திருவனந்தபுரத்தில் உள்ள சில நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அங்குள்ள கழிவுகளை ஏற்றி வாகனத்தில் கொண்டு வந்து அரசு வழிமுறைகளை பின்பற்றாமல் சுத்தமல்லி பகுதிகளில் கொட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக சுத்தமல்லியை சேர்ந்த மாயாண்டி, மனோகர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கழிவுகளை கொட்டியவர்கள் யார் என்பது குறித்து அதிரடி விசாரணையில் போலீசார் இறங்கினர். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டிய சேலம் மாவட்டம், நடுபட்டி, இலத்தூர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை (37) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கேரளாவில் செயல்பட்டுவரும் தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையாளரான கேரள மாநிலம், கன்னூர், இடாவேலியை சேர்ந்த ஜித்தன் ஜேர்ச் (40) என்பவரை கைது செய்தனர்.
இதனிடையே பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த கழிவுகள் தொடர்பாக விசாரணை நடத்தி, அவை அனைத்தையும் 3 நாட்களுக்குள் கேரள அரசே அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான முழு செலவையும் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து வசூலித்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கேரளா வில் இருந்து அந்த கழிவுகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பின்னர் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனுடன் ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி கழிவுகளை மீண்டும் கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் நடைமுறைகள் இன்று காலை தொடங்கியது.
இதற்காக கேரளாவில் இருந்து சப்-கலெக்டர் ஆல்பர்ட் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்தடைந்தனர்.
பின்னர் கேரள அதிகாரிகள் ஆய்வு செய்த இடத்தில் இருந்து கழிவுகளை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. மேலும் கழிவுகளை ஏற்றி செல்வதற்காக கேரள பதிவெண் கொண்ட 16 லாரிகள் நெல்லை மாவட்டத்திற்கு புறப்பட்டன.
இதில் முதல் கட்டமாக திருவனந்தபுரம், நாகர்கோவில் நாங்குநேரி வழியாக 8 கேரளா லாரிகளும், கோட்டயம், புளியரை, செங்கோட்டை, தென்காசி வழியாக 3 கேரளா லாரிகளும் என மொத்தம் 11 லாரிகள் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது.
அதனைத்தொடர்ந்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அர்பித் ஜெயின் முன்னிலையில் நடுக்கல்லூர் அரசு பள்ளியில் வைத்து கேரள அதிகாரிகள் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் நெல்லை மாவட்ட உதவி கலெக்டர் அம்பிகா ஜெயின், திருவனந்தபுரம் மாவட்ட உதவி கலெக்டர் சாக்ஷி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அதன் பின்னர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அந்த லாரிகளில் கழிவுகள் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அவை கேரளாவுக்கு செல்வதை உறுதி செய்ய தமிழக-கேரள எல்லைகள் வரை தமிழக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
- இன்றைய முக்கியச் செய்திகள்
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- ஆம்னி பேருந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
- 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே சென்ற போது சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுக்து நின்றன. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உதவி ஜெயிலர் பாலகுருசாமி, அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அந்த மாணவியை தனியாக அழைத்துள்ளார்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின.
மதுரை:
மதுரை மத்திய சிறையில் கைதியாக இருந்து விடுதலையான ஒருவர், மதுரை பைபாஸ் சாலை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். அந்த ஓட்டலுக்கு சில தினங்களுக்கு முன்பு, மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வரும் பாலகுருசாமி என்பவர் சென்றார். அப்போது, அங்கிருந்த கைதியின் பேத்தியான 14 வயது மாணவியிடம் பேசி, அவரது செல்போன் எண்ணை வாங்கியுள்ளார்.
இதற்கிடையே, உதவி ஜெயிலர் பாலகுருசாமி, அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அந்த மாணவியை தனியாக அழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து தனது சித்தியுடன் சம்பவ இடத்திற்கு அந்த மாணவி சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பாலகுருசாமி தன்னுடன் வாகனத்தில் வருமாறு மாணவியை அழைத்தாராம்.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் சித்தி, தன் அக்காள் மகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாக கூறி உதவி ஜெயிலர் பாலகுருசாமியை நடுரோட்டில் வைத்து எட்டி உதைத்தார். பின்னர் செருப்பாலும் தர்மஅடி கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின.
இதனைத் தொடர்ந்து, பாலியல் தொல்லை அளித்த புகாரில், மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பொது இடத்தில் அரசு அதிகாரியை தாக்கியது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது.
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததை தொடர்ந்து 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை இறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டினை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.






