என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நிதியாண்டில் ஒன்றிய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவிகிதம் மட்டும் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.
    • வழக்கம் போல் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றும், பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை, மத்திய பாஜக அரசு வழங்க மறுத்து வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளதாவது:-

    நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளால் பெறப்படும் நிதியை ஒன்றிய அரசு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து வருகிறது. இந்த திட்டத்தின் அடிப்படையில் ஒரு நிதியாண்டில் ஒன்றிய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவிகிதம் மட்டும் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் 28 மாநிலங்களுக்கு ரூபாய் 1 லட்சத்து 73 ஆயிரம் கோடியை வரி பகிர்வாக ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

    இதில் 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 31,000 கோடியும், 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டிற்கு ரூபாய் 7,057 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, 10 கோடி மக்கள் தொகை கொண்ட பீகார் மாநிலத்திற்கு ரூபாய் 17,000 கோடியும், 9 கோடி மக்கள் தொகை கொண்ட மத்தியபிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 13,000 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போல் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    இதன்மூலம், மாநிலங்களுக்கிடையேயான வரி பகிர்வில் ஒன்றிய பா.ஜ.க. அரசு அப்பட்டமான பாரபட்ச போக்கை கடைபிடித்து வருகிறது. இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், நிதிக்குழுவின் பரிந்துரைகளுக்கு முரணாகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து பின்பற்றுவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    புயல், வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மொத்தம் ரூபாய் 36,000 கோடி நிதி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்கியதோ ரூபாய் 226 கோடி. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 2028 கோடி செலவு செய்திருக்கிறது.

    மேலும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததாலும், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தொடங்க நடவடிக்கை எடுக்காததாலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டிய ரூபாய் 2159 கோடி கடந்த பல மாதங்களாக ஒதுக்கப்படாமல் இருக்கிறது.

    இதனால், ஆசிரியர்களுக்கு கடந்த ஜூன் மாதத்திலிருந்து சம்பளம் வழங்க முடியாத நிதி நெருக்கடியில் கல்வித்துறை சிக்கியிருக்கிறது. இத்தகைய போக்கின் காரணமாக தமிழ்நாடு கல்வித்துறை கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மும்மொழி திட்டத்தை நீண்டகாலமாக ஏற்க மறுக்கிற மாநிலம் தமிழ்நாடு.

    ஆனால், அதை திணிக்கிற வகையில் அமைந்துள்ளதால் இப்புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. கல்வி என்பது பொதுப் பட்டியலில் உள்ளது. அந்த அடிப்படையில் கல்வித்துறையை பொறுத்தவரை எந்த முடிவெடுத்தாலும் மாநிலங்களை கலந்து தான் எடுக்க வேண்டும். ஆனால், மாநிலங்களை முற்றிலும் புறக்கணித்து விட்டு புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தின் மீது திணிக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசின் முயற்சியை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது.

    இதனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழகத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்க மறுத்து வருகிறது. இத்தகைய போக்குகளின் காரணமாக கூட்டாட்சி முறை மிகப்பெரும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியும், பிரதமர் மோடியும் அனைத்து மாநிலங்களையும் சமமாக கருத வேண்டும். பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்று பாரபட்சம் காட்டுமேயானால், தேசிய ஒருமைப்பாடு என்பது கேலிப் பொருளாகிவிடும் என ஒன்றிய அரசை எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.
    • 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் “சாதனை ஊக்கத்தொகை” வழங்கப்படும்.

    சென்னை:

    அரசு போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

    இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன. குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது.

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக் குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

    பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும், போக்குவரத்து கழகங்களின் பணியாளர்களில், 2024-ம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும், 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் "சாதனை ஊக்கத்தொகை" வழங்கப்படும். இந்த உத்தரவின்படி, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 105 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் 6 கோடியே 41 லட்சத்து 18 ஆயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏராளமான பக்தர்கள் தைப்பூசம் வரை பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
    • சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராஜபாளையம் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டு தோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கலுக்கு முன்பாக பாதயாத்திரையாக வந்து அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    சில பக்தர்கள் சர்ப்பகாவடி எடுத்து வந்து வழிபாடு செய்வர். தற்போது சர்ப்பகாவடி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஏராளமான பக்தர்கள் தைப்பூசம் வரை பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    தற்போது பொங்கல் திருநாள் நெருங்குவதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    • பஸ்சுக்கு ‘ஸ்டாலின் பஸ்’ என்றே பெயர் வைத்துவிட்டார்கள், இதுதான் விடியல் ஆட்சி!
    • தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலமாக மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஒரு சமூகச் சீர்திருத்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறி, ஆறாவது முறை ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறு திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான் உண்டு. நிச்சயமாகச் சொல்கிறேன்... 7-வது முறையும் ஆட்சி அமைத்து ஏற்றம் காணும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் அமையப் போகிறது.

    அதற்கு அடித்தளமான இந்த 6-வது முறை ஆட்சி அமைந்தபோது, "இது விடியல் ஆட்சியாக அமை யும்" என்று சொன்னோம். மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருட்டில் கிடக்கும் எதிர்க்கட்சிகள் "விடியல் எங்கே" என்று கேட்கிறார்கள். விடியலை தரப்போவதாக சொன்னது மக்களுக்குத்தானே தவிர, மக்களுக்கு எதிரானவர்களுக்கு இல்லை. விடியலைப் பார்த்தால் அவர்களுக்கு கண்கள் கூசத்தான் செய்யும்.

    விடியலின் அடையாளம் எது தெரியுமா? நான் செல்கின்ற இடமெல்லாம் கூடுகின்ற மக்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சிதான் விடியலின் அடையாளம்!

    மாதந்தோறும் ஒரு கோடியே 14 லட்சம் சகோதரிகள் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகிறார்களே... அப்போது அவர்கள் முகங்களைப் பாருங்கள்... அதில் தெரியும் மகிழ்ச்சி தான் விடியல் ஆட்சி! "தாய் வீட்டுச் சீர் போன்று எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் மாதாந்திரச் சீர்" என்று என்னரும் தமிழ்ச் சகோதரிகள் மனம் மகிழச் சொல்கிறார்களே... அதுதான் விடியல் ஆட்சி! ஆட்சிப் பொறுப்பேற்றதும் கோட்டைக்குச் சென்று நான் இட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்துக்குத்தான்! இந்த விடியல் பயணமானது மகளிரின் சேமிப்பை அதிகரித்திருக்கிறது. மாதந்தோறும் 600 முதல் 1200 ரூபாய் வரை அவர்களுக்கு மிச்சமாகிறது; அதை சேமிக்க முடிகிறது என்று சொல்கிறார்கள்.

    சமூகத்தில் மகளிரின் பங்களிப்பை இது அதிகரித்திருக்கிறது. அந்த பஸ்சுக்கு 'ஸ்டாலின் பஸ்' என்றே பெயர் வைத்துவிட்டார்கள், இதுதான் விடியல் ஆட்சி!

    அடுத்து, என்னுடைய கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டம். "எத்தனையோ தொழில்களைத் தொடங்குகின்றீர்கள், அதில் பணியாற்ற திறமைசாலிகளாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கித் தாருங்கள்" என்று சொன்னதை வைத்துத்தான் இந்தத் திட்டத்தை உருவாக்கினேன்.

    இந்தத் திட்டத்தில் இதுவரை 22 லட்சத்து 56 ஆயிரம் மாணவர்களுக்குப் பயிற்சி தரப்பட்டிருக்கிறது. பயிற்சி பெற்ற பல லட்சம் மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லோரையும் ஒவ்வொரு துறையில் இந்தத் திட்டம் முதல்வனாக ஆக்கி வருகிறது, இதுதான் விடியல் ஆட்சி.

    அரசுப் பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் பலர் கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலையை மாற்றி உயர்கல்வி பயில உருவாக்கின திட்டம்தான் 'புதுமைப் பெண் திட்டம்'. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் இந்தத் திட்டம் மூலமாக மாணவிகள் கல்லூரிக்கு வருவது 30 விழுக்காடு அதிகமாகி இருக்கிறது.

    இதேபோல, தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலமாக மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். மாதந்தோறும் 2 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவியர் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்தியிருக்கின்றோம். அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமல்ல, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்களுக்கும் புதுமைப் பெண் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறோம்.

    தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் ஒரு மாணவி பேசினார்-"என் குடும்ப வறுமை காரணமாகக் கல்லூரிக்குப் போய் படிக்க முடியுமா? என்று சந்தேகமாக இருந்தது, பணம் இல்லை, அதனால் வேண்டாமென்று என் அம்மா சொல்லிவிட்டார்.

    புதுமைப் பெண் திட்டத்தைக் கேள்விப்பட்டு, என் கல்லூரிச் செலவை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதும் என் அம்மா சம்மதம் தெரிவித்து விட்டார். ஆனால், தினமும் பஸ்சில் போக வேண்டுமே என்று அவர் சொன்னார். அதற்குத்தான் விடியல் பயணம் இருக்கின்றதே என்று நான் சொன்னேன்.

    ஆக, இரண்டு திட்டங்களையும் பயன்படுத்திக் கொண்டு இன்று நான் படித்து வருகிறேன்" என்று அந்த மாணவி சொன்ன சொற்கள்தான் விடியலுக்கான சாட்சி! அதனால்தான் தமிழ்நாடு மாணவ, மாணவிகள் என்னை "அப்பா, அப்பா" என்று வாய் நிறைய அழைக்கும்போது அள வில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

    தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நேரடியாக பலனடையும் வகையிலான திட்டங்களைத் தீட்டும் ஆட்சிதான் உதயசூரியனின் ஆட்சி. இந்த ஆட்சி உருவானபோது இதை திராவிட மாடல் ஆட்சி என்று நான் சொன்னேன். திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு வயிறு எரிகிறது. "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்று சொல்வது போன்று, திராவிடம் என்ற சொல்லைப் பார்த்துச் சிலர் பயப்படுகின்றார்கள்.

    திராவிட கருத்தியல் கொள்கை யால்தான் தமிழ்நாடு இன்று வளர்ந்த மாநிலமாக இருக்கின்றது. தமிழ்நாடு இந்திய நாட்டின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக இருக்கிறது.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • ரூ.1லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    • ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    திருச்சி:

    திருச்சி வயலூர் ரோட்டில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமானுஜம் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

    பின்னர் போதை பொருள் விற்பனை கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 4 பேர் பிடிபட்டனர்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் திருச்சி கனரா பேங்க் காலனி சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்த பூஜித் (வயது 24), ஈரோடு டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த ஆல்வின்(23).

    இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்எஸ்சி படித்து வருகிறார்.

    திருச்சி ராஜா காலனி பகுதியை சேர்ந்தவர் நகுல் தேவ் (21). இவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் நவீன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து ரூ.1லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

    கைதான போதைப்பொருள் விற்பனை கும்பலுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் செயல்பட்டு வருகிறார்.

    மேலும் கடத்தலுக்கு கோவையை சேர்ந்த ஒருவர் ஏஜென்டாக செயல்பட்டதும் தெரியவந்தது.

    இவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். மேற்கண்ட போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பல்கள் மற்றும் படகுகள் மூலமாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக கூறப்பட்டது.

    கைதான இந்த நபர்கள் பெங்களூரில் இருந்து இந்த போதை பொருளை வாங்கி வந்து திருச்சி மாநகரில் விற்பனை செய்துள்ளனர்.

    • எங்கும் அமைதி நிலை நாட்டப்பட்டு வருகிறது.
    • குற்றம் பெருமளவு தடுக்கப்பட்டிருக்கிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    போராட்டம் நடத்துகின்ற உரிமையில்லையென்று சிலர் தவறான வாதங்களை வைக்கின்றார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், "அளவுக்கு மீறிய ஜனநாயகவாதியாக இருக்கின்றீர்கள்" என்று தான் என்னை சிலர் விமர்சித்திருக்கின்றார்களே தவிர, நான் சர்வாதிகாரியாக இருப்பதாக யாரும் சொல்ல மாட்டார்கள்; அது என்னுடைய இயல்பும் இல்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளும் போராட்டம் நடத்தலாம் என்று சொல்பவன் நான்.

    போராடலாம், தவறு இல்லை; போராட வேண்டிய இடத்தில் போராடலாம், போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் போராடலாம், தவறில்லை. இத்தகைய போராட்டங்களுக்கு உரிய காலத்தில் அனுமதி கேட்டால் நாங்கள் கொடுத்திருக்கின்றோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டில் இதுவரை சுமார் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கின்றோம்.

    சட்டம்-ஒழுங்கைப் பற்றி சிலர் இங்கே குறிப்பிட்டார்கள். என் தலைமையிலான அரசில் காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுகின்றது. ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்கள் மேல் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதனால் கொலைகள், ரவுடிகள் சம்பந்தப்பட்ட கொலைச்சம்பவங்கள் மற்றும் ரவுடிகள் தொடர்புடைய சாதிய கொலைச் சம்பவங்கள் குறைந்திருக்கிறது. எங்கும் அமைதி நிலை நாட்டப்பட்டு வருகிறது. குற்றம் பெருமளவு தடுக்கப்பட்டிருக்கிறது.

    அதனை மீறியும் குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாகக் குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றார்கள். எந்தக் குற்றவாளியையும் யாரும் காப்பாற்றுவதுமில்லை. உரிய தண்டனை, கடுமையான தண்டனை பெற்றுத் தரப்பட்டிருக்கிறது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதில் யாருக்கும் எந்தச் சலுகையும் கிடையாது.

    பெரும்பாலான கொலைகள் குடும்பப் பிரச்சனை, காதல் விவகாரம், பணம் கொடுக்கல்-வாங்கல், நிலப்பிரச்சனை, தனிப்பட்ட முன் விரோதம், வாய்த்தகராறு போன்ற காரணங்களுக்காகவே நடந்திருக்கின்றன. அரசியல் காரணங்கள், சாதிய கொலைகள், மதரீதியான கொலைகள், ரவுடி கொலைகள் தி.மு.க. ஆட்சியில் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே பாதுகாப்புமிக்க முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினர்.

    • பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் அடைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து காவலர்கள் செல்போன், சார்ஜரை பறிமுதல் செய்தனர்.
    • காயமடைந்த சிறைக்காவலர்கள் மணிகண்டன், சாந்தகுமார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    சென்னை புழல் சிறையில் பயங்கரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் அடைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து காவலர்கள் செல்போன், சார்ஜரை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இன்று மீண்டும் சோதனை செய்ய முயன்றபோது காவலர்கள் மீது கைதிகள் தாக்குதல் நடத்தினர்.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியதில் சிறைக்காவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்.

    காயமடைந்த சிறைக்காவலர்கள் மணிகண்டன், சாந்தகுமார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிறையில் கைதிகள் காவலர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    • விலைவாசி கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
    • போதைப் பொருட்களின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டை விடியலை நோக்கி அழைத்துச் சொல்கிறோம் என்றுகூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 42 மாத காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என்று சொல்லும் அளவுக்கு ஒரு மோசமான ஆட்சியாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

    ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்றால், அந்த நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு இளைஞர்கள் அறிவுத் திறன் உயர்த்தப்பட வேண்டும், அரசுப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும், விலைவாசி கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

    ஆனால், இவையெல்லாம் கடந்த 42 மாத கால தி.மு.க. ஆட்சியில் நடைபெறவில்லை. மாறாக, போதைப் பொருட்களின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கடந்த 4-ந்தேதி முதல் கண்ணாடி பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
    • இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அதைத்தொடர்ந்து கடந்த 4-ந்தேதி முதல் கண்ணாடி பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று இந்த கண்ணாடி பாலத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ள கைப்பிடி சுவரில் "திடீர்" என்று சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகும் கண்ணாடி பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இதனால் சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. சார்பில் கருப்புச் சட்டை அணிந்து வந்தபோது எனக்கு கோபம் வரவில்லை.
    • ஆளுநரை கண்டித்து கருப்புச் சட்டை அணியும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை? என்பதுதான் என்னுடைய கேள்வி.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. சார்பில் கருப்புச் சட்டை அணிந்து வந்தபோது எனக்கு கோபம் வரவில்லை. சிரிப்புதான் வந்தது. இப்படியாவது கருப்புச் சட்டை போடுகிறார்களே என்று மகிழ்ச்சியடைகிறேன். கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு வரலாம். அது உங்கள் உரிமை, அதில் நான் தலையிட விரும்பவில்லை. என்னோட கேள்வியெல்லாம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில சட்டமன்றத்தை மதிக்காமல் ஓர் ஆளுநர் நடந்து கொள்கிறார். அவரைக் கண்டித்து கருப்புச் சட்டை அணியும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை? என்பதுதான் என்னுடைய கேள்வி.

    இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியைகூட தர மறுத்து, இரக்கமில்லாமல் நடந்துகொள்கிற ஓர் ஒன்றிய அரசினைக் கண்டித்து, நீங்கள் கருப்புச் சட்டை அணிந்திருந்தால் நான் உங்களை வாழ்த்தியிருப்பேன், மகிழ்ச்சியடைந்திருப்பேன். தேசிய கல்விக் கொள்கை மூலமாக பள்ளிக் கல்வியையும், யு.ஜி.சி. மூலமாக கல்லூரிக் கல்வியையும் சிதைக்க நினைக்கிற, பாசிசக் கல்விக் கொள்கையை கண்டித்து கருப்புச் சட்டையை நீங்கள் அணிந்திருந்தால், மனதார உங்களைப் பாராட்டியிருப்பேன். ஆட்சியில் இருந்த காலம் முதல் பா.ஜ.க.வுக்கு நீங்கள் துணையாக நின்றிருக்கிறீர்கள். இருட்டு அரசியல் நடத்துகிறவர்களுக்கு கருப்புச் சட்டை அணிய எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    13-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    14-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும் வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    15-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    16 மற்றும் 17-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று மற்றும் நாளை தென்தமிழகம் , தென்மேற்கு வங்கக்கடல் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • விடுமுறை இன்று முதல் தொடங்குவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் நேற்றே படையெடுத்துள்ளனர்.
    • வாகனங்கள் பல மணி நேரமாக காத்திருந்து மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

    பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், பொங்கல் பண்டிகைக்கு தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

    வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் விடுப்பு எடுத்தால் அதற்கு முந்தைய நாட்களான 11, 12-ந்தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் ஆகும். அதன்படி அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்து விடும்.

    இதனால், விடுமுறை இன்று முதல் தொடங்குவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் நேற்றே படையெடுத்துள்ளனர். இதனால், சென்னையின் முக்கிய சாலைகளான கிண்டி, தாம்பரம், கூடுவாஞ்சேரி, போரூர் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் வாகனங்களால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    வாகனங்கள் பல மணி நேரமாக காத்திருந்து மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

    ×